valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 9 February 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


முப்பத்துநான்காவது சுலோகத்தில் நானாவின் பாராயணம் நின்றது. ஒருகேள்வியைக் கேட்டு நானாவுக்கு போதனை அளிக்கவேண்டுமென்று பாபாவுக்குத் தோன்றியது.

பாபா கேட்டார், "நானா, நீர் என்ன முணுமுணுக்கிறீர்? நீர் மெல்லிய குரலில் ஓதுவதைத் தெளிவாகவும் உரத்த குரலிலும் ஓதி என் காதுகளுக்குக் கேட்குமாறு செய்வீராக."

பாபாவின் ஆக்ஞயைப் பிரமாணமாக ஏற்றுக்கொண்டு நானா சுலோகம் (34 ஆவது) முழுவதையும் ஒப்பித்தார். அதன் பிறகு, அந்த சுலோகத்தின் பொருளைத் தெளிவாக விவரிக்கும்படி பாபா நானாவைக் கேட்டார்.

மிகுந்த விநயத்துடன் கைகளைக் கூப்பிக்கொண்டு, அந்த சுலோகத்தின் மூலம் ஸ்ரீகிருஷ்ணர் (அர்ஜுனனுக்கு )என்ன அறிவுரை தந்தார் என்பதை நானா மிக்க மகிழ்ச்சியுடன் விவரித்தார்.

சாயி-நானா உரையாடல் எல்லாருக்கும் நன்கு விளங்குமாறு கீதையிலிருந்து எடுத்து மூலசுலோகத்தைப் பதம் பதமாக அளிப்போமாக.

ஞானிகளின் மனோதர்மத்தையும் இக் கேள்வியின் சூக்குமத்தையும் ஐயம் திரிபின்றி எல்லாரும் புரிந்துகொள்ளும்படி தத்துவத்தை விளக்கும் முறையை நான் கையாள வேண்டும் என்பதை நன்கு உணர்கிறேன்.

"சம்ஸ்கிருத மொழி இயல்பாகவே கடினமானது. சாயி பாபாவுக்கு அம்மொழி எப்படி சுலபமாகியது ? எப்படி அவ்வளவு நுணுக்கமான கேள்வியொன்றை கேட்டார்? சாதுக்களின் ஞானம் அளவிடற்கரியது!" என்று எல்லாரும் ஆச்சரியம் அடைந்தனர்.

"அவர் எப்பொழுது சம்ஸ்கிருதத்தை அத்தியயனம் செய்தார்? கீதையை எப்பொழுது வாசித்தார்? கீதையை கரைத்துக் குடித்தவர்போல்  கேள்வி கேட்டாரே?"

கேட்பவர்கள் தெளிவும் திருப்தியும் அடையுமாறு ஸ்ரீகிருஷ்ண பகவானின் திருவாய்மொழியான மூலசுலோகத்தை ஓரெழுத்தும் பிசகாமல் இங்கு அளிக்கிறேன். விளக்குவதற்கும் எளிதாக இருக்கும்.

"தத்வித்தி ப்ரணிபாதனே பரிப்ரச்னேன சேவையா! உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வத்ஸனாஹா !" (பணிந்தும், கேட்டும், பணிவிடைசெய்தும் நீ அதை அறிக.உண்மையை யுணர்ந்த ஞானிகள் உனக்கு அந்த ஞானத்தை உபதேசிப்பார்கள் - சுவாமி சித்பவானந்தர் பொழிப்புரை)

இதுவே கீதையின் மூலசுலோகம். கீதைக்கு எத்தனையோ மஹான்கள் பாஷ்யம் (விரிவுரை) எழுதியிருக்கின்றனர்.  அனைவருமே இந்த சுலோகத்திற்கு வேறுபாடு ஏதுமின்றி ஒரேவிதமாக பதவுரை செய்திருக்கின்றனர்.

நானாவும் கல்விகேள்விகளில் சிறந்தவர். கீதையின் வியாக்கியானங்கள் பலவற்றைப் பல ஆண்டுகள் ஆழமாகப் படித்தவர். சுலோகத்தின் பொருளை பதம் பிரித்து  விளக்கினார்.

சுலோகத்தை செய்யுள் உருவிலிருந்து வசன நடைக்கு கவனமாகக் கொண்டு வந்து, மிக்க மரியாதையாகவும் பணிவுடனும் ரசம் ததும்பும் இனிமையான குரலில் அர்த்தம் சொல்லத் தயாரானார்.



Thursday, 2 February 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சாயியின் கதைகள் எண்ணற்றவை. அவையனைத்தையும் பாடினால், பெரியதாக புராணம் ஆகிவிடும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்று சங்கற்பம் செய்துகொண்டேனினும், கதை கட்டுப்படாமல் விரிந்துகொண்டே போகிறது.

கேட்பவர்களின் உற்சாகம் எப்படிப் பெருகுகிறதோ அப்படியே கதைசொல்பவரின் ஆர்வமும். ஆகவே, நாம் பரஸ்பரம் ஆவலைத் தணித்துக்கொண்டு உண்மையான ஆன்மீக முன்னேற்றம் அடைவோம்.

இங்கு சாயியே கப்பலின் தலைவர். ஒருமுனைப்பட்ட கேள்வியே பயணக் கட்டணம். இக் கதையைப் பயபக்தியுடன் சிரத்தையாக கேட்பவர் தாமதமின்றி அக்கரை சேர்ந்துவிடுவார்.

சென்ற அத்தியாயத்தில் ஹண்டி வர்ணனை சுருக்கமாகச் சொல்லப்பட்டது. தத்தாத்திரேய பக்தி வலுப்படுத்தப்பட்ட விவரமும் நைவேத்தியம் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட விவரமும் சொல்லப்பட்டன.

கதை சொல்லும் திட்டத்தில், ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அடுத்த அத்தியாயத்தின் விஷயம் பற்றி குறிப்பளிக்கப்படுவது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால், சென்ற அத்தியாயத்தை முடிக்கும் தறுவாயில், அடுத்துச் சொல்லவேண்டிய கதை எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை. ஆகவே, சாயி எதை ஞாபகப்படுத்துகிறாரோ  அதை எழுதலாம் என்று நினைத்தேன்.

ஏற்கெனவே தெளிவாக அறிவித்தவாறு, சாயியின் கிருபையால் எது ஞாபகப்படுத்தப்பட்டதோ அதை விவரிக்கிறேன்.

ஆகவே, இடைஞ்சல்களை தூரமாகத் தள்ளிவைத்துவிட்டு சாந்தமான மனத்துடன் முழுகவனத்துடனும் கேட்கும் படி கதைகேட்பவர்களை பிரார்த்தனை செய்கிறேன். உங்களுடைய மனம் ஆனந்தமடையும்.

ஒருசமயம், சிறந்த பக்தரான நானா சாந்தோர்கர் மசூதியில் உட்கார்ந்துகொண்டு பாபவின் பாதங்களை பிடித்துவிட்டுக்கொண்டே,ஸ்ரீ மத் பகவத் கீதையின் சுலோகங்களை மெல்லிய குரலில் ஓதிக்கொண்டிருந்தார்.

பாபாவின் பாதங்களை பிடித்துவிட்டுக்கொன்டே கீதையின் நான்காவது அத்தியாயத்தை மெல்லிய குரலில் ஓதிக்கொண்டிருந்தார். அப்பொழுது என்ன அற்புதம் நடந்ததென்று பார்க்கலாம்!

நடந்தது, நடந்துகொண்டிருப்பது, நடக்கப்போவது; அனைத்தையும் அறிந்த சமர்த்த சாயி, நானாவுக்கு கீதையின் அர்த்தத்தை விளக்கவேண்டுமென்று எண்ணம் கொண்டார்.

கீதையில் 'ஞானகர்மசந்யாச யோகம்' என்ற தலைப்பில் அமைந்த நான்காவது அத்தியாயத்தை தமக்குள்ளேயே நானா முணுமுணுத்துக் கொண்டிருந்ததை ஒரு சாக்குபோக்காக உபயோகித்து பாபா அவரை ஒரு கேள்வி கேட்டார்.

'ஓ பார்த்தனே, எல்லாச் செயல்களும் மொத்தமாக ஞானத்தில் முடிகின்றன' என்று முடியும் முப்பத்துமூன்றாவது சுலோகத்தை முடித்துவிட்டு, 'பணிவுடனும் வணக்கமாகவும் அறிவாயாக' என்று ஆரம்பிக்கும் முப்பத்துநான்காவது சுலோகத்தை நானா தொடர்ந்தார். 




Thursday, 26 January 2023

 ஷீர்டி சாயி சரிதம்


சாந்த்பாய் பாடீலின் மனைவியின் மருமகன் திருமணப் பிராயத்தை எட்டியது, மணமகள் ஷிர்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. கல்யாண கோஷ்டி மணமகளின் கிராமத்திற்கு வந்தது,-

இந்த விவரங்களை ஏற்கனேவே கேட்டுவிடீர்கள் (5 ஆவது அத்தியாயம்). அது இந்த சமயத்தில் எனக்கு ஞாபகம் வந்தது; அவ்வளவே. அதை இங்கே மறுபடியும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

சாந்த் பாடீல் என்னவோ, ஒரு நிமித்தகாரணமே. பக்தர்களை உத்தாரணம் செய்ய அத்தியந்தமான ஆர்வம் கொண்டதால் சாயி பூலோகத்தில் அவதரித்தார். தம்மிச்சையாகவே ஷிர்டிக்கு வந்தார்!

ஜடம் போன்ற மக்களையும் மூடர்களையும் பலவீனர்களையும் ஏழைஎளியவர்களையும் கள்ளங்கபடமற்ற ஏதுமறியா ஜனங்களையும் பிறப்பால் விரதம், தவம், வைதீகச் சடங்குகள் ஆகியவற்றால் பயனடைய முடியாதவர்களையும் இந்த சாயியைத் தவிர வேறு எவர் கைதூக்கிவிடுவார்?

பதினெட்டு வயதான இளைஞன் அந்தப் பருவத்திலிருந்தே தனிமையை நாடினான். இரவில் நிர்பயமாக (பயமேயின்றி) எங்கும் படுத்து உறங்கினான். அவனுடைய கண்களுக்கு எல்லாமே ஈசுவரமயமாக தெரிந்தன!

முன்னர் ஒரு பெரிய பள்ளம் இருந்த இடத்தில் கிராமமக்கள் குப்பைகளைக் கொட்டினர். பகலெல்லாம் எங்கெங்கோ அலைந்து திரிந்த பையன் இரவில் அங்கு உறங்கினான்.

இவ்விதமாகப் பல ஆண்டுகள் கழிந்தன. அந்தப் பள்ளத்திற்கும் விடிவுகாலம் வந்தது. தீனதயாளரான சாயியால் அவ்விடத்தில் ஒரு விசாலமான மாளிகை எழுந்தது.

முடிவில், அந்தப் பள்ளம் இருந்த இடமே சாயியின் பூதவுடல் சமாதி செய்யப்பட்ட மூலஸ்தானம் ஆயிற்று, அதைத்தான் அவர் என்றும் உறையும் இடமாக ஏற்றுக்கொண்டார்; சமாதியும் கட்டப்பட்டது.

வணங்கியவர்களைப் பாலிக்கும் இந்த சமர்த்த ஸாயிதான் தம் பக்தர்களின் நலன் கருதி, கடத்தற்கரிய சம்சார சாகரத்தை பக்தர்கள் எளிதாக கடக்க உதவும் படகான தம்முடைய வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதியிருக்கிறார்.

"கடத்தற்கரிய பிறவிகடலைக் குருடர்களும் முடவர்களும் பக்த பரிவாரமும் எங்ஙனம் கடக்கபோகின்றனர்?" இந்த மனப்பூர்வமான ஆதங்கத்தால் உந்தப்பட்டு சாயி அவ்வாறு செய்தார்.

எல்லாரும் அவசியம் பிறவிக்கடலைக் குருடர்களும் முடவர்களும் பக்த பரிவாரமும் எங்ஙனம் கடக்கபோகின்றனர்?" இந்த மணிப்பூர்வாமன ஆதங்கத்தால் உந்தப்பட்டு சாயி அவ்வாறு செய்தார்.

எல்லாரும் அவசியம் பிறவிக்கடலைக் கடந்தே ஆகவேண்டும். அதன் பொருட்டு நாம் அந்தக்கரண சுத்தம் பெறவேண்டும். இதற்கு மனத்தைத் தூய்மை செய்துகொள்வதே முக்கிய சாதனம். இறைவனிடம்  பக்தியே அனைத்திற்கும் மூலம்.

கேள்வி (காதால் கேட்டல்)  இல்லாது பக்தி இல்லை. கேள்வி சகஜமாகவே குருவின்பால் அன்பைத் தூண்டுகிறது. அன்பிலிருந்து ஆன்மிகம் பிறக்கிறது!

 


 

Thursday, 19 January 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


39 . கீதை சுலோகத்திற்கு விசேஷ விளக்கம் - சமாதி கோயில் நிர்மாணம்


---------------------------------------------------------------------------------------------------------------------------


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி! குலதேவைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும், என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

ஷீர்டி ஒரு பாக்யம் பெற்ற கிராமம். புண்ணியபாவரான ஸ்ரீ சாயி நிர்வாணம் (முக்தி) அடையும்வரை வசித்த துவாரகமாயி பவனம், மஹா பாக்கியம் பெற்ற ஸ்தானம் (இருப்பிடம்) அன்றோ!

ஷிர்டியில் வாழ்ந்த மக்கள் அனைவரும் தன்னியர்கள். எக்காரணம்பற்றியோ அவர்களுக்காக சாயி நெடுந்தூரம் வந்தார். ஷீர்டி மக்களை அவருக்கு என்றென்றும் கடமைப்பட்டவர்களாகச் செய்துவிட்டார்.

ஷீர்டி ஆதியில் ஒரு குக்கிராமமாக இருந்தது. சாயியின் சகவாசத்தால் மகத்துவம் அடைந்தது. பின்னர் புனிதம் பெற்று க்ஷேத்திரமாக மாறியது.

ஷீர்டி வாழ் பெண்மணிகள் தன்னியர்கள் (எல்லாப் பேறுகளையும் பெற்றவர்கள்). அவர்களுடைய அனன்னியமான சிரத்தையால், மாவரைக்கும்போதும் உரலில் தானியங்களை குற்றும்போதும் குளிக்கும்போதும் சாயியின் பெருமையைப் பாடினர்.

அவர்களுடைய பிரேமை பேறு பெற்றது. அவர்கள் பாடிய கீதங்கள் மிக உன்னதமானவை. ஈடிணையற்ற அந்தப் பாட்டுகளைக் கேட்டால் மனம் பற்றுகளிலிருந்து விடுபெறும்.

கதைகேட்பவர்களின் ஆர்வத்தைத் தணிக்கும் வகையில் மனத்திற்கு விச்ராந்தி அளிக்கும் சில பாடல்களைக் கதையுடன் கலந்து தகுந்த சமயத்தில் அளிக்கிறேன்.

சாயி, நிஜாம் ராஜ்யத்தில் சாலையோரத்திலிருந்த ஒரு மாமரத்தினடியில் காணப்பட்டார். பின்னர், சற்றும் எதிர்பாராதவிதமாக தூப்கேடாவிலிருந்து ஒரு கல்யாண கோஷ்டியுடன் ஷிர்டிக்கு வந்துசேர்ந்தார்.

அந்த கிராமத்தை சேர்ந்த சாந்த்பாய் பாடீல் என்ற பெயர் கொண்ட புண்ணியவான்தான் முதன்முதலாக இந்தப் புதையலைக் கண்டுபிடித்தார். அவர்மூலம் மற்றவர்களும் சாயிதரிசனம் பெற்றனர்.

பாடீல் குதிரையை தொலைத்தது, சாயி அவருக்குப் புகைகுடிக்கச் சிலீம் கொடுத்தது, குதிரையைக் கண்டுபிடித்துக்கொடுத்தது, 






Thursday, 12 January 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"ஏற்கெனவே பல உணவுப்பண்டங்களைச் சாப்பிட்டதால் வயிறு நிரம்பிவிட்டது. இந்த முறையும் எப்படிக் குடிக்கப்போகிறேன்?" இந்த வக்கிரமான சந்தேகம் என் மனத்தில் உதித்தபோது, முதல் மிடறே மிகச் சுவையுள்ளதாக இருந்தது.

நான் சங்கோசப்பட்டுத் தயங்குவதைக் கண்டா பாபா மனப்பூர்வமாக கேட்டுக்கொண்டார், "அதை முழுக்கக் குடித்துவிடும்." மறுபடியும் அந்த நல்வாய்ப்பு எனக்குக் கிடைக்காதென்பதை மறைமுகமாகச் சொன்னார் போலும்!

பின்னர் அவ்வாறே நடந்தது! அன்றிலிருந்து இரண்டு மாதங்களில் பாபா தம்முடைய அவதாரத்தை முடித்துக்கொண்டு நிர்வாணம் (முக்தி) அடைந்தார்.

இப்பொழுது, அந்த மோருக்கு ஏற்படும் தாகத்தைத் தனித்துக்கொள்ளும் வழி, சாயி கதாமிருதத்தை குடிப்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. கைகொடுப்பதற்கு வேறெதுவுமே இல்லை!

ஹேமாட் சாயிநாதரை சரணடைகிறேன்! சாயிநாதரே எந்தக் கதையை ஞாபகப்படுத்துகிறாரோ அதை அடுத்தபடியாகச் சொல்கிறேன். கதை கேட்பவர்கள் தங்களுடைய கவனத்தை நீடிக்கட்டும். 


எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாய்பக்தன் ஹேமட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'ஹண்டி வர்ணனை' என்னும் முப்பத்தெட்டாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

க்ஷேமம் உண்டாகட்டும்.

 


 

Thursday, 5 January 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

அதை உண்டவர்கள் அனைவரும் ஒவ்வொரு கவளத்திற்கும் சாயி நாமத்தை சொல்லிக்கொண்டே அக்கினியில் ஆஹுதி (படையல்) இடுவதுபோல் வாயிலிட்டனர். ஆயினும், பாத்திரம் காலியானதே இல்லை. எப்பொழுதும் நிரம்பியே இருந்தது.

யாருக்கு எந்த உணவில் ஆசை அதிகமாக இருந்ததோ, அவருக்கு அந்த உணவு பிரேமையுடன் மறுபடியும் பரிமாறப்பட்டது. பலர் மாம்பழச் சாற்றை விரும்பினர். அவர்களுக்கு மாம்பழச் சாறு பிரிதியுடன் அளிக்கப்பட்டது.

இந்த உணவைப் பரிமாற நானா நிமோன்கரையோ மாதவராவ் தேஷ்பாண்டேவையோ பாபா தினமும் ஆணையிட்டார்.

அவர்களும் நைவேத்தியத்தை அனைவருக்கும் பரிமாறும் பணியை நித்திய நியமமாக ஏற்றுக்கொண்டனர். சிரமமான செயலாக இருந்தபோதிலும் மிகுந்த அன்புடன் அப்பணியைச் செய்தனர்.

ஒவ்வொரு பருக்கையும் மல்லிகை மொட்டுபோல் இருந்த 'ஜிரேசா' அரிசிச்சோறு அதன்மீதாக பொன்னிறத்தில் துவரம் பருப்பு சூப்பு, அதற்கும் மேல் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றப்பட்டு எல்லாருக்கும் அளிக்கப்பட்டது.

பரிமாறப்படும்போதே இவ்வுணவின் நறுமணம் காற்றை நிரப்பும். பலவித சட்டினிகளுடன்- சேர்த்து உண்ணும்போது இவ்வுணவு காரசாரமாக இருக்கும். எந்த உணவும் அரைவேக்காடாகவோ சுவை குறைவானதாகவோ இருந்ததில்லை. எல்லோரும் யதேஷ்டமாக (திருத்தியாகும் வரை) உண்டனர்.

ஆத்மானந்தமாகிய தட்டில் சேமியா - பிரேமபக்தியாகிய தட்டில் இடியாப்பம் - இவ்வுணவை ஏற்க சாந்தியையும் சுகத்தையும் ஆத்மானந்தத்தையும் அனுபவிப்பர்களைத் தவிர வேறு எவர் வருவார்!

 அன்னமும் அன்னத்தின் சுவையும் அதை உண்பவரும் ஹரியே. அன்னத்தைப் பரிமாறுபவர் தன்யர். அன்னத்தை உண்பவர், அளிப்பவர், இருவருமே தன்யர்கள்.

இந்த இனிப்புக்கெல்லாம் மூலம் குருபாதங்களில் பலமான நிட்டை. இனிப்பது சர்க்கரையோ வெல்லமோ அன்று. இனிப்பது, ஆழமாக வேர்விட்ட சிரத்தையே !

அங்கிருந்த நித்யஸ்ரீயும் (எப்பொழுதும் உறையும் செல்வம்) நித்திய மங்களமும் அவ்வாறே! பாயசமும் ரவாகேசரியும் பல உணவுப்பண்டங்களின் கூட்டுக்கலவையும் ஏராளமாக இருந்த இடத்தில், தட்டை எதிரில் வைத்துக்கொண்டு உட்கார்ந்த பிறகு, தயக்கம் காட்டுவதோ முன்னும் பின்னும் பார்ப்பதோ முட்டாள்தனமான காரியம்.

நானாவிதமான உணவுப்பண்டங்களை உண்டபிறகும் மக்களுக்கு கொஞ்சம் தயிர்சாதம் சாப்பிடவில்லையென்றால் வயிறு நிரம்பிய திருப்தி ஏற்படாது. குடிப்பதற்கு கொஞ்சம் மோராவது கேட்பார்கள்!

ஒருசமயம் ஒரு லோட்டா சுத்தமான மோர் குருராயரின் கையாலேயே நிரப்பப்பட்டு பிரேமையுடன் எனக்கு அளிக்கப்பட்டது. லோட்டாவை என் உதடுகளுக்கிடையில் வைத்தபோது,

வெள்ளைவெளேரென்றிருந்த மோரைக் கண்ணால் கண்டு நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். லோட்டாவை உதடுகளில் வைத்தபோதே ஆத்மானந்த புஷ்டியை அடைந்தேன். 




Thursday, 29 December 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


உள்ளே, சுவரிலிருந்த மாடத்தில் சாய்ந்துகொண்டு பாபா உட்கார்ந்திருப்பார். சாப்பிடுபவர்கள் அவருக்கு இரண்டு பக்கங்களிலும் கண்கவர் பந்தியாக உட்கார்ந்திருப்பர். சகலரும் ஆனந்தத்தின் உச்சியில் இருப்பார்கள்.

எல்லாரும் தம் தம் நைவேத்தியத்தை சமர்த்த சாயியின் முன்பு நகர்த்துவர், சாயியும் ஒரு பெரிய தட்டில் எல்லாப் பிரசாதங்களையும் தம்முடைய கைகளாலேயே ஒன்றாகக் கலப்பார்.

பாபாவின் கையிலிருந்து ஒரு பருக்கை சோறு பெறுவது மகா பாக்கியம். உண்பவரின் உள்ளும் புறமும் புனிதமாகும்; வாழ்க்கை பயனுள்ளதாக ஆகும்.

வடை, அப்பம், பூரி, சான்ஜோரி - சில சமயங்களில் சிகரண், கர்கா, பேணி, பலவித பாயசங்கள் - பாபா இவையனைத்தையும் ஒன்றாக கலந்துவிடுவார்.

இந்தக் கூட்டுக்கலவையை பாபா இறைவனுக்கு அர்ப்பணம் செய்வார். பின்னர், சாமாவையும் நிமோன்கரையும் தட்டுத் தட்டாக நிரப்பிப் பரிமாறச் சொல்வார்.

பக்தர்களை ஒவ்வொருவராக கூப்பிட்டுத் தம்மருகில் உட்காரவைத்து பரமானந்தத்துடனும் பிரீதியுடனும் தொண்டைவரை நிரம்புமாறு போஜனம் செய்விப்பார்.

சப்பாத்திகளையும் பருப்பு சூப்பையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, நெய் கலந்து சுவையூட்டி எல்லாருக்கும் தாமே பரிமாறுவார்.

அந்தப் பிரேமையின் கலவையைச் சுவைத்தபோது - ஆஹா! அந்த பிரமானந்தத்தை யாரால் வர்ணிக்க முடியும்! அதை உண்டவர்கள் வயிறு நிரம்பிய பிறகும் விரலை நக்கிக் கொண்டே போவார்கள்!

சில சமயங்களில் மாண்டாவும் பூரணப் போளியும் - சில சமயங்களில் சர்க்கரை ஜீராவில் தோய்த்த பூரி - சில சமயங்களில் பாஸந்தி, ரவாகேசரி, சான்ஜோரி - சில சமயங்களில் வெள்ளம் கலந்து செய்த சப்பாத்தி - இத்தனை வகைகளில், சுவையான உணவை பாபா அளித்தார்.

சில சமயங்களில், வெண்மையான அம்பேமொஹொர் அரிசிச்சாதம், அதன்மேல் பருப்பு சூப்பு, அதற்கும் மேல் சுவை மிகுந்த நெய், சுற்றிலும் பலவிதமான காய்கறிகள் பரிமாறப்படும்.

ஊறுகாய், அப்பளம், ரைத்தா, பலவித பஜ்ஜிகள் - புளித்த தயிர், மோர், பஞ்சாமிருதம் - இவையும் எப்பொழுதாவது இருந்தன. இந்த திவ்வியமான அன்னத்தை உண்டவர் தன்யராவார் (எல்லாப் பேறுகளையும் பெற்றவராவார்).

எங்கே சாயிநாதரே பரிமாறினாரோ அங்கே சாப்படைப் பற்றி என்ன சொல்ல முடியும்! பக்தர்கள் அங்கே வயிறு புடைக்கும்வரை உண்டு திருப்தியுடன் ஏப்பம் விட்டனர்.

ஒவ்வொரு கவளமும் சுவையாகவும் பசியைத் தீர்ப்பதாகவும் திருப்தியளிப்பதாகவும் புஷ்டியளிப்பதாகவும் அமைந்தது. பிரேமையுடன் அளிக்கப்பட்ட புனிதமான இவ்வுணவு மிகச் சுவையாக இருந்தது.