valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 25 October 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபாவின் மனத்தில் எழுந்த எண்ணம் இதுவே. ராமதாசியைத் தம்மிடம் கூப்பிட்டுச் சொன்னார், "எனக்குத் தாங்க முடியாத வயிற்றுவலி வந்துவிட்டது; குடலே வெடித்துவிடும்போல் இருக்கிறது. -

"இந்த வயிற்றுவலி நிற்கப் போவதில்லை. போம், சீக்கிரமாகச் சென்று கொஞ்சம் சோனாமுகி சூரணம் (பேதி மருந்து) வாங்கி வாரும். ஒரு சிட்டிகை வாயில் போடாவிட்டால் இந்தப் பிடிவாதமான வயிற்றுவலி போகாது".

அப்பாவி ராமதாசி இதை நம்பிவிட்டார்! உடனே தாம் படித்துக்கொண்டிருந்த போதியில் பக்க அடையாளம் வைத்துவிட்டு பாபாவின் ஆணைக்கு கீழ்ப்படிந்து பஜாருக்கு ஓடினார்.

ராமதாசி படியிறங்கியவுடனே பாபா என்ன செய்தாரென்றால், தம்முடைய இருக்கையில் இருந்து எழுந்து வந்து பாராயணப் புத்தகக்கட்டுக்கு அருகே சென்றார்.

பல புத்தகங்களுக்கிடையில் விஷ்ணு சஹஸ்ர நாம போதி அதில் இருந்தது. அதைக் கையிலெடுத்திக்கொண்டு தம்முடைய இருக்கைக்கு  திரும்பி வந்தார்.

பாபா சொன்னார், "சாமா, உனக்குத் தெரியுமா? இந்த போதி பரம மங்களத்தை அளிக்கக் கூடியது. ஆகவே, நான் இதை உனக்குத் தருகிறேன். நீ இதை இன்றிலிந்து வாசிக்க ஆரம்பி.-

"ஒருசமயம் நான் பெருந்துன்பத்தால் பீடிக்கப்பட்டேன். அமைதியிழந்து கொதிப்படைந்த நிலையில் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கையை இழந்தேன். -

"அந்த நேரத்தில், ஓ! உனக்கெப்படிச் சொல்லுவேன் சாமா! இந்தப் போதி மிகவும் உபயோகமாக இருந்தது; இது இல்லாமல் நான் உயிர்பிழைத்திருக்க மாட்டேன்! இதுவே என்னுயிரைக் காத்தது!-

"போதியை ஒருகணம் மார்பின் மேல் வைத்துக்கொண்டேன். ஆஹா! உடனே என்னுடைய இதயத்தின் படபடப்பு அடங்கியது. அல்லாவே போதியுனுள் இறங்கியிருப்பது போல் உணர்ந்தேன். நான் உயிர்பிழைத்தது போதியினாலேயே!-

"ஆகவே, சாமா, இதை உன்னுடையதாக எடுத்துக்கொள். மெதுவாகக் கொஞ்சம் கொஞ்சமாக தினமும் வாசிக்க ஆரம்பி. ஒரு நாளைக்கு ஒரு நாமாவின் மீது மனதை ஈடுபடுத்தினாலும் இது உனக்கு மிகுந்த ஆனந்தத்தை அளிக்கும்."

 சாமா பதில் கூறினார், "பாபா, எனக்கு இந்தப் போதி வேண்டா! அந்த ராமதாசி என்மீது கடுங்கோபம் கொள்வார். அவர் இல்லாமலிருந்த நேரத்தில் நான்தான் இந்தத் தகாத செயலைச் செய்து விட்டதாக நினைப்பார்.-

" அவர் இயற்கையாகவே துஷ்டர்; முன்கோபி; பிடிவாதக்காரர்; சுலபமாகத் தன் வயமிழக்கக் கூடியவர். அனாவசியாமாக ஏன் ஒரு சண்டையைக் கிளப்ப வேண்டும்? வேண்டா, வேண்டா, எனக்கு எந்தச் சச்சரவும் வேண்டவே வேண்டா !-


Thursday, 18 October 2018

ஷீர்டி சாயி சத் சரிதம்

அந்தக் காலத்தில்தான் இப்புத்தகங்கள் உபயோகத்திற்கு வரும். நாம் அப்பொழுது மேலுலகத்தில் இருப்போம். ஆயினும், சாமா தம்முடைய புத்தக சம்மேளனத்தில் இருந்து (குவிப்பதிலிருந்து) எடுத்துக் கொடுப்பார். இயற்றிய ஆசிரியர்களின் பிரதிநிதிகளாகப் புத்தகங்கள் அப்பொழுதும் இயங்கும்!

இந்நூல்கள் பரம பவித்திரமானவை. ஷிர்டியிலோ அல்லது மற்ற இடங்களிலோ பக்தர்கள் இப் புராணநூல்களை வாசிக்க வேண்டும் என்பதே பாபாவினுடைய விருப்பமாக இருந்திருக்க வேண்டும். பத்திரமாக பாதுகாக்கச் சொன்னது அதற்காகவே.

ராமனுடைய சரித்திரமான ராமாயணத்தையோ, கிருஷ்ணனுடைய சரித்திரமான பாகவதத்தையோ வாசிக்கிறோம். அப்பொழுதும் முன்னும் பின்னும் சாயியே கண்ணுக்குத் தெரிகிறார்.

இந்நூல்களின் கதாநாயகர்கள், வேறு உருவம் ஏற்றுக்கொண்ட சாயியே என்று உணர்ந்த நிலையில், கதையை பிரவசனம் செய்பவரும் காதுகொடுத்துக் கேட்பவர்களும் சாயியின் உருவத்தையே கண்முன் காண்கிறார்கள்.

புத்தகங்கள் குருவுக்கு அர்ப்பணம் செய்யப்படுகின்றன; அல்லது பிராமணர்களுக்கு தானமாக அளிக்கப்படுக்கின்றன. இச் செய்கை, கொடுத்தவர்களுக்கு மங்களைத்தை விளைவிக்கின்றது என்பது சாஸ்த்திர பிரமாணம்.

"இப் புத்தகங்களை நீ வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய், உன்னுடைய தொகுப்பில் சேர்த்து சம்ரட்சணம் செய்" என்று சாமாவுக்கு பாபா இட்ட ஆக்கினையின்பின், ஒரு மிகவும் முக்கியமான நோக்கம் இருந்தது.

சாமாவின் பக்தி எவ்வாறு ஒப்பில்லாததோ, அவ்வாறே பாபாவுக்கு சாமாவின் மீது இருந்த பிரேமை கரைகடந்தது. ஆகவே, அவரை ஓர் ஆன்மீக நியமத்துக்கு உட்படுத்தவேண்டுமென்ற விருப்பம் சாயியின் மனதில் எழுந்தது.

இதனால் பாபா என்ன செய்தாரென்று பாருங்கள்! சாமாவுக்கு இச்சையே இல்லாத போதிலும், அவருக்குச் சிறந்ததொரு அனுக்கிரத்தை செய்தார். சந்தர்ப்பச் சூழ்நிலையைப் பற்றிக் கேளுங்கள்!

ஒருநாள் மசூதிக்கு ராமதாசி புவா ஒருவர் வந்துசேர்ந்தார். ராமாயண பாராயணம் செய்வது அவருடைய நித்திய நியமம். (தினப்படி வழிபாட்டு ஒழுக்கம்).

விடியற்காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்தபின் ஸ்நானம் செய்துவிட்டு, விபூதி தாரணம் செய்துகொண்டு காவியாடை தரித்து அனுஷ்டானத்துக்கு அமர்ந்துவிடுவார்.

பரிபூரணமான சிரத்தையுடன் அத்யாத்ம ராமாயணத்தை நெடுநேரம் வாசித்த பிறகு விஷ்ணு சஹஸ்ர நாமாவளியை பாராயணம் செய்வார்.

இவ்வாறு பலநாள்கள் நித்திய அனுஷ்டானம் நடந்து வந்தது. மாதவராவுக்கு நல்ல காலம் பிறந்தது; சமர்த்த சாயியின் மனதில் அவருக்கு அருள் செய்யவேண்டுமென்ற எண்ணம் உதித்தது. அதுபற்றிய விவரம் கேளுங்கள்.

மாதவராவின் சேவைக்குப் பலன் பழுக்கும் நேரம் வந்துவிட்டது. 'மாதவராவ் சமயாசார (மத ஒழுக்க) நியமம் ஒன்றைக் கடைப்பிடித்து பக்திமார்க்கத்தின் பிரசாதத்தை பெறவேண்டும். இவ்வழியாக உலகியல் வாழ்வின் தொல்லைகளில் இருந்து விடுபட்டு, சாந்தியடைய வேண்டும்.'-


Thursday, 11 October 2018

ஷீர்டி சாயி சத் சரிதம்

ஒரு சமயம், பாகவத பாராயணம் செய்வதில் பேரார்வம் கொண்ட சாயி பக்தரொருவர், காகா மஹாஜனி என்ற பெயர் கொண்டவர், பாகவத புத்தகப் பிரதியொன்றை எடுத்துக்கொண்டு ஷிர்டிக்கு வந்தார்.

அவரை சந்திப்பதற்கு வந்த மாதவ்ராவ், தற்செயலாக அப் புத்தகத்தைப் படிப்பதற்காக எடுத்தார். மசூதிக்கு சென்ற போதும் கையில் புத்தகம் இருந்தது. பாபா அவரைக் கேட்டார். -

"சாமா, இதென்ன புத்தகம் உன் கையில்?" சாமா பதில் சொன்னார். பாபா புத்தகத்தை தம் கையில் எடுத்துப் புரட்டி பார்த்துவிட்டுத் திருப்பித் கொடுத்தார்.

ஒரு காலத்தில் காகா மஹாஜனி பாபாவிடம் இருந்து பிரசாதமாக பெற்றுக்கொண்ட ஏகநாத பாகவதத்தின் பிரதியே அப்புத்தகம்.

மாதவராவ், புத்தகம் தம்முடையதில்லையென்றும் காகா மஹாஜனி யினுடையது என்றும் பாபாவுக்குத் தெளிவுபடுத்தினார். படிக்க வேண்டுமென்ற ஆவல் யதேச்சையாக தோன்றியதால், கையிலெடுத்திக்கொண்டு வந்ததாகவும் விளக்காமாகச் சொன்னார்.

இருந்தபோதிலும் பாபா சாமாவிடம் கூறினார், "நான் இதை உனக்கு கொடுக்க நேர்ந்ததால் உன்னுடைய சேகரிப்பில் இதை வைத்துக்கொள். உனக்கு உபயோகப்படும்".

இவ்வாறு நடந்ததால், சிலகாலம் கழித்துக் காகா மஹாஜனி ஷிர்டிக்கு மறுபடியும் விஜயம் செய்தபோது, தாம் வாங்கிக்கொண்டு வந்த புதியதொரு ஏகநாத பாகவதப் பிரதியை சாயியின் கரங்களில் வைத்தார்.

பாபா அவருக்கு அதை பிரசாதமாகத் திருப்பிக் கொடுத்தார். கொடுக்கும்போது ஆக்கினையாகச் சொன்னார், "இதை மிக பத்திரமாக வைத்துக்கொள்ளும். இது உமக்கு உண்மையாகவே மிகவும் உபயோகமாக இருக்கும்". இவ்வாறு காகா மஹாஜனி ஆறுதல் அளிக்கப்பட்டார்.

பாபா மிகவும் மனம் கனிந்து மேலும் கூறினார், "இதுதான் உமக்கு நன்கு பணி புரியும்; இதை வேறு யாரிடமும் கொடுக்காதீர்". இதைக் கேட்ட காகா மஹாஜனி பிரேமையுடன் வந்தனம் செய்தார்.

பாபா எல்லா விருப்பங்களும் நிறைவேறியவர் ஆதலால், முழுக்க முழுக்க விருப்பமேதுமில்லாதவர். இயற்கையாகவே துறவு தர்மத்தை அனுசரித்த பாபா, உலகியல் பொருள்களை (புத்தகங்களை) சேகரிப்பதில் ஏன் சிரமம் எடுத்துக்கொண்டார்?

பாபாவின் மனதில் இருப்பதை யார் அறிவார்? நடைமுறை ரீதியில் பார்த்தால், இப் புத்தக வங்கி பக்தர்கள் புராணங்களைக் காதால் கேட்டு  இன்புறவும் பயனடையவும் உதவியாக இருந்தது.

ஷீர்டி இப்பொழுது ஒரு பவித்திரமான தலமாக ஆகிவிட்டது. பாபாவின் சிஷ்யர்கள் பல தேசங்களில் இருந்து வந்து இங்கே திரும்பத் திரும்ப கூடுவர்; ஆன்மீக விஷயங்களை பற்றிக் கலந்து ஆலோசிப்பர். 


Thursday, 4 October 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

பக்தர் எவருக்காவது ஒரு குறிப்பிட்ட நூலை வாசிக்கவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டால், முதலில் அதை பாபாவிடம் கொடுத்து, அவர் கைகளில் இருந்து பிரசாதமாக திரும்பப் பெற்றுக்கொள்வது வழக்கமாக இருந்தது.

அந்நூலைப் பாராயணம் செய்யும் காலத்தில், செய்பவருக்கு அபாரமான புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இவ்வாறு செய்யப்பட்டது. அவ்வாறே, அப்புத்தகத்தை போதியாகப் படித்து விரிவுரை சொல்பவருக்கும் கதை கேட்பவர்களுக்கும் பூரணமான பிரசாதமாக பரம மங்களம் விளையும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

சிலர் பாபாவிடம் பெருமாளின் தசாவதாரச் (பத்து அவதாரங்கள்) சித்திரத்தைக் கொணர்ந்தனர்; சிலர் தசாவதாரத் தோத்திரப் புத்தகங்களை கொணர்ந்தனர். மேலும் சிலர், பஞ்சரத்தினி கீதை போன்ற புனிதமான நூல்களையும் புண்ணிய சரித்திரங்களையும் அர்ப்பணம் செய்தனர்.

சிலர் தாசகணு இயற்றிய சந்தலீலாமிருதம், பக்தலீலாமிருதம் ஆகிய புத்தகங்களை கூட அர்ப்பணம் செய்தனர். வேறு சிலர் 'விவேக சிந்து' என்னும் நூலைக் கொண்டுவந்தனர். பாபா இவையனைத்தும் சாமாவிடம் ஒப்படைத்தார்.

பாபா அப்பொழுது கூறுவார், "சாமா, இந்தப் புத்தகங்களெல்லாம் உன்னிடம் இருக்கட்டும். வீட்டில் பத்திரமாக வைத்துக் காப்பாற்று." சாமா இந்த ஆணையைச் சிரமேற்கொண்டு, புத்தகங்களை ஜாக்கிரதையாக பாதுகாத்துவந்தார்.

பக்தர்கள் கடைகளில் இருந்து இம்மாதிரியான புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து, பிரசாதமாகத் திரும்ப பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் பாபாவின் கைகளில் வைப்பர்.

சுபாவத்தில் பாபா உதாரகுணம் படைத்தவரெனினும், இதைச் செய்வதற்கு தைரியம் தேவைப்பட்டது. ஆகவே, பக்தர்கள் தங்களுடைய ஆசையைத் தெரிவிப்பதற்கு மாதவராவை உடன் அழைத்துச் சென்றனர்.

ஆகவே, அவர் மூலமாகத்தான் பாபாவின் கைகளில் தக்க தருணத்தில் புத்தகங்கள் வைக்கப்பட்டன. பாபாவுக்குப் புத்தகத்தின் மஹிமையை மட்டுமின்றி, பக்தரின் ஆன்மீகப் பரிணாமநிலையும் தெரிந்திருந்தது.

பக்தர்கள் புத்தகங்ளை பாபாவின் கைகளில் வைப்பர். பாபா புத்தகங்களை மேலிருந்த வாரியாகப் புரட்டுவார். அதன் பிறகு, பக்தர்கள் புத்தகங்ளை திரும்பப் பெற்றுக்கொள்வதற்காகக் கைநீட்டுவர்.

ஆனால், பாபா பல சந்தர்ப்பங்களில் புத்தகங்களை பக்தர்களிடம் திருப்பிக் கொடுக்கமாட்டார். மாறாக, புத்தகங்களை மாதவராவிடம் கொடுத்து, "சாமா, இந்தப் பிரதிகளை வைத்துக்கொள். தற்சமயம் இவை உன்னிடமே இருக்கட்டும்" என்று சொல்லிவிடுவார்.

சாமா பட்டவர்த்தனமாகவே (வெளிப்படையாகவே )வினவுவார், "ஆர்வத்துடன் கை நீட்டிய இவர்களுடைய புத்தகங்களை திருப்தியளித்து விடட்டுமா?" அப்பொழுதும் பாபா சொல்வார், "நீயே வைத்துக்கொள்."


Wednesday, 26 September 2018

                                                                 ஷீர்டி சாயி சத்சரிதம்

மற்றொரு பக்தருடைய தற்கொலை முயற்சி சாமர்த்தியமான திட்டமொன்றால் முறியடிக்கப்பட்டது. அவரைக் கடைசி நிமிடத்தில், எதிர்பாராதவிதமாக, மரணத்தின் வாயிலில் இருந்து வெளியே இழுத்து நல்வாழ்வளித்தார் பாபா. இது எவ்வாறு நிகழ்ந்ததென்று விவரமும் கடந்த அத்தியாயத்தில் அளிக்கப்பட்டது.

இந்த அத்தியாயத்தில், பக்தர்களுக்கு அருள் செய்வதிலும் அவர்களுக்கு சந்தோஷமும், திருப்தியும் அளிப்பதிலும் அவர்களை மேன்மையுறச் செய்வதிலும் பாபா பிரீதியடைந்த விவரம் சொல்லப்படும்.

பாபா அருள் செய்த பாணியே அலாதியானது. பலனைடையும் பக்தருக்கு தீட்ச்சை (மந்திர உபதேசம்) பெறுகிறோம் என்று தெரியாமற்கூடப் போகலாம். சிலருக்கு கேலிக்கும் சிரிப்பிற்கும் இடையே தீட்சை அளிக்கப்பட்டது. கேட்பவர்கள் இதை நுணுக்கமாக கவனியுங்கள்.

உபதேசம் அளித்ததும் அருள்மழை பொழிந்ததும் அநேக ரீதிகளில் நடந்தன. இதை ஏற்கனேவே இந்நூலில் விவரித்திருக்கிறேன். யாரால் எதை கிரகிக்க (சாரம் வாங்க) முடிந்ததோ, அந்த வழி அவருக்கு உபதேசிக்கப்பட்டது.

வைத்தியர்தான் நோயின் தன்மையையும் மருந்தின் குணத்தையும் அறிவார். இவ்விரண்டையுமே அறியாத நோயாளியோ வெல்லம் தின்னவேண்டுமென்று விரும்புகிறார்.

வெல்லம் இனிப்புதான்; சந்தேகமில்லை. ஆனால், அது நோயாளியின் உடல்நலத்துக்கு கெடுதல் விளைவிக்கும். உண்மை இவ்வாறிருப்பினும், நோயாளி வெல்லம் பெறாமல் கஷாயாத்தை குடிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார். கையில் முதலில் வெல்லக் கட்டி வைக்கப்பட வேண்டும்!

நோயாளியிடம் பலாத்காரம் செல்லுபடியாகாது. ஆகவே, வைத்தியர் ஒரு யுக்தி செய்து, முதலில் வெல்லக்கட்டியையும் பிறகு கஷாயத்தையும் கொடுக்கிறார். இவ்வாறு வைத்தியர் காரியத்தை சாதித்து விடுகிறார்.

வெல்லத்தின் தோஷத்தை முறியடிக்கும் வகையில், கஷாயத்தில் முறிவுமருந்தையும் சேர்த்துக் கஷாயத்தின் குணப்படுத்தும் சக்தி குறையாதவாறு வைத்தியர் செய்துவிடுகிறார். பாபாவின் வழிமுறையும் இவ்வாறே!

ஆயினும், இப்படித்தான் ஒவ்வொருமுறையும் செய்தாரென்றில்லை. அவருடைய தீட்சை அளிக்கும் முறையைக் குறிப்பிட்ட பக்தரின் மனோதர்மம், பக்தி, சேவை, பிரேமை, விசேஷ குணம் இவற்றுக்கேற்றவாறு தேர்ந்தெடுத்தார்.

பாபாவின் அற்புதமான லீலைகள் திகைப்பூட்டக் கூடியவை! யாரிடமாவது பிரயமேற்பட்டால், அவருக்கு தீட்சை அளித்து அனுக்கிரகம் செய்வார். அவ்வாறு செய்த சந்தர்ப்பச் சூழ்நிலைகளை பற்றிக் கேளுங்கள்.

யாருக்காவது அனுக்கிரஹம் செய்யவேண்டுமென்று அவருக்குத் தோன்றிவிட்டால், சம்பத்தப்பட்ட பக்தர் அதுபற்றி கனவிலும் நினைத்திருக்கவிட்டாலும் சரி, அவருக்கு வாழ்க்கையில் நிறையுணர்வையும் சாதனைகளால் ஏற்படும் திருப்தியையும் அளித்துவிடுவார். இதுவும் அதிகப் பிரயாசையின்றி நகைச்சுவைக்கும் கேலிக்கும் இடையே நடந்துவிடும். 


Thursday, 20 September 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

குருவினிடத்தில் பக்தி பாவமும் கரைகாணாத அன்பும் அசையாத நிட்டையும் இல்லையெனில், ஆறு உல் எதிரிகளை (காமம், கோபம், லோபம், மோகம், மதம், மாச்சரியம்) வெல்ல முடியாது. அஷ்டபாவங்களை அடையவும் முடியாது.

பக்தனுடைய ஆத்மசுகம் குருவுக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. பக்தன் எவ்வெளவுக்கு எவ்வளவு ஆன்மீக முன்னேற்றம் அடைகிறானோ அவ்வவளக்கு அவ்வளவு குரு குதூகலம் அடைகிறார்; பக்தனைக் கொண்டாடுகிறார்.

'தேகம், வீடு, மனைவி, மக்கள் - இவையனைத்தும் என்னுடையவை' என்று நினைப்பது விவேகமற்ற செயல். இவையனைத்தும் பிற்பகல் நிழலைப் போல் வேகமாய் இடம் மாறும் தன்மையுடையவை; கணநேரத்தில் மறையக்கூடிய மாயை.

இந்த மாயையின் சுழலில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று விரும்புவர் வேறெதிலும் நாட்டமில்லாது சாயியிடம் சரணடைந்துவிட வேண்டும்.

மாயையின் மர்மத்தை முடிச்சவிழ்க்க முயன்ற வேத சாஸ்திரங்கள் கையை விரித்துவிட்டன. சிருஷ்டி அனைத்திலும் இறைவனை காண முடிந்தவரே மாயையை வெல்ல முடியும்.

நிஜாம் ராஜ்யத்தில் இருந்து பக்கீர் சாயியைத் தம்முடன் முதலில் நெவாஸாவுக்கு அழைத்துவந்த சாந்த் பாய் பாடீல் பாக்கியசாலி.

அங்கே பக்கீர் சாயி கிட்டத்தட்ட ஓராண்டு காலம் வாசம் செய்தார். அங்கேதான் அவர் காணட் கிராமவாசியான கமா என்பவருடன் சகவாசமாக இருந்தார்.

இருந்தபோதிலும், சிறிதுகாலம் கழித்து, கமாவும் பிரசித்தி பெற்ற டாக்ளீ கிராமத்தைச் சேந்த தகடூ தாம்போலியும் (தாம்பூல வியாபாரியும்) பாபுவுடன் நெவாஸாவில் இருந்து ஷிர்டிக்கு வந்துசேர்ந்தனர்.

நாடெங்கும் புண்ணியத் தலங்களும் புண்ணிய தீர்த்தங்களும் அபரிதமாக இருக்கின்றன. ஆயினும், சாயி பக்தர்களுக்கு ஷிர்டியே மிக பவித்திரமானது.

இந்த யோகம் நேர்ந்திராவிட்டால் (பாபாவின் ஷீர்டி வருகை) தீனர்களாகிய நமக்கு அவருடைய கூட்டுறவு எப்படிக் கிடைத்திருக்கும்? இது நம்முடைய கிடைத்ததற்கரிய பெரும் பேறன்றோ!

பக்தர்களில் எவரெல்லாம் முழுமையாக சரணடைகிறார்களோ, அவர்கள் எல்லாருடைய நன்மையையும் கருதி சாயி அவர்களை சன்மார்க்கத்தில் செலுத்துகிறார்.

ஆகவே, கதை கேட்பவர்களே! ஊன்றிய மனதுடன் சத் சரித்திரத்தை படியுங்கள். சாயியின் புண்ணிய சரித்திரமே அவரருளை பெறச் சிறந்த வழியாகும்.

கடந்த அத்தியாயத்தில், ஒரு பக்தருக்கு குலகுருவினிடம் இருந்த விசுவாசம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதும் மற்றொருவருக்கு அக்கல்கோட் சுவாமியை பற்றிய சூசகம் அளிக்கப்பட்டு அவருடைய நம்பிக்கையும் விசுவாசமும் மறுமலர்ச்சி செய்யப்பட்டதும் விவரிக்கப்பட்டது. 

Thursday, 13 September 2018

                                                    ஷீர்டி சாயி சத்சரிதம்

                                          27 . அருட்பெருக்கு - உபதேசம்

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

சத் குருவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளும்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பாதங்களையே நாம் வணங்குகிறோம்; கண்கூடாகப் பர ப்ரம்மத்தையே வந்தனம் செய்கிறோம்; பரமானந்தம் அடைகிறோம்.

சமுத்திரத்தில் ஒருமுறை முழுகிவிட்டால், எல்லாப் புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியம் கிடைக்கிறதன்றோ! அதுபோலவே, குருவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டால், சகல தேவதைகளையும் அங்கு அடையலாம்.

ஜய ஜய சத் குரு சாயி! சாயுஜ்ஜிய முக்தி (இறையுடன் ஒன்றிய நிலை) அளிக்கும் கல்பதருவே ஜய ஜய! சத்திய ஞானக் கடலே ஜய ஜய! கதை கேட்பவர்களுக்கு பயபக்தியுடன் கேட்க வேண்டுமென்ற உணர்வை ஊட்டுமாறு வேண்டுகிறேன்.

சாதகப்பட்சி மேகத்தில் இருந்து விழும் நீர்துளிகளாகக் காத்திருப்பதுபோல, ஆன்மீக நாட்டமுள்ள பக்தர்கள் இந்த அமிருத மயமான கதைக்காக காத்திருக்கின்றனர். சகலமான பாபா பக்தர்களுக்கும் இந்த அமிருதத்தை அருந்தி எக்காலத்திலும் சுகத்தை அனுபவிப்பார்களாக !

தங்களுடைய நிர்மலமான கதையைக் கேட்பதால் அவர்களுக்கு உடல் முழுவதும் வியர்த்து கொட்டட்டும். பிரேமையால் விழிகளில் கண்ணீர் ததும்பட்டும்; பிராணன் உமது பாதாரவிந்தங்களில் லயிக்கட்டும்;-

அபரிமிதமான அன்பினால் மனம் கனியட்டும்; பெருமகிழ்ச்சியால் திரும்பத் திரும்ப மெய்சிலிர்க்கட்டும். குடும்பத்துடன் கதை கேட்பவர்கள் உணச்சிவசப்பட்டு விம்மி விம்மி ஆனந்தக்கண்ணீர் பெருக்கட்டும்;-

(கதை கேட்பவர்களுடைய) பரஸ்பர விரோதங்கள் ஒழியட்டும்; பேதங்கள் நலியட்டும். தமக்குள்ளே சோதனை செய்து பார்த்தால், இதுதான் குருவின் கிருபை உண்டாக்கும் எழுச்சியும் விழிப்பும் என்று அவர்கள் நன்கு அறிவர்.

குருவின் கிருபையால் ஏற்படும் எழுச்சியும் விழிப்பும் கண்களுக்கு புலப்படாது. ஏனெனில், அது எல்லா இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டது. மூவுலகங்களிலும் தேடினாலும் சத் குருவை தவிர இதை அளிக்கக்கூடியவர் வேறெவரையும் காண முடியாது.