valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 6 April 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


மாதவராவை, "நீர் என் அழுதீர்?" என்று புட்டி கேட்டபோது, அவர் பதில் கூறினார். "ஸ்ரீ சாயியின் அன்பு ததும்பிய வார்த்தைகளைக் கேட்டவுடன் நான் பிரமாவேசம் கொண்டேன்.-

"எனக்குத் தொண்டையை அடைத்தது.  கண்களில் ஆனந்த பாஷ்பம் பெருகியது. என்னுடைய இதயத்தில் பொங்கிய அன்பு எனக்கு கட்டுப்படாமல் அழுகையாக வெடித்தது. -

"பாபா என்னருகில் வந்து தெளிவாக ஆணையிட்டார், "வாடாவும் தேவாலயமும் திடமான உருவம் பெறட்டும். நான் எல்லோருடைய தீவிரமான விருப்பங்களையும் நிறைவேற்றுகிறேன்."

இருவரும் ஒரேவிதமான கனவுக்காட்சி பெற்றது பற்றி பாபுசாஹெப் மனம் வியந்தார். மனத்திலிருந்த சந்தேகம் விலகியது. வேலையை ஆரம்பித்துவிடுவது என்று தீர்மானம் செய்தார்.

புட்டி, தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே பணக்காரர்! கோயிலுடன் வாடா கட்டுவதற்குண்டான வசதி படைத்திருந்தார். மாதவராவுக்கு நடுத்தர வசதிதான் இருந்தது. ஆயினும் இருவருக்கும் ஒரேவிதமான காட்சி கிடைத்தது.

பரஸ்பரம் கனவுக் காட்சிகள் ஒத்துப்போயின. இருவருமே பரமானந்தத்தால் நிறைந்தனர். கட்டடத்திற்கு ஒரு வரை படம் தயாரித்தனர். இந்த வரைபடத்தைக் காகா (ஹரி சீதாராம் தீக்ஷிதர்) ஆமோதித்தார்.

அடுத்த நாள் காலையில் இம் மூவரும் பாபாவுடன் இருந்தபோது எப்பொழுதும்போல் பாபா சாமாவின் முகத்தைப் பிரேமையுடன் உற்றுப்பார்த்தார்.

அப்பொழுது சாமா கேட்டார், "ஓ, தேவா! இதென்ன உம்முடைய புரிந்துகொள்ளமுடியாத விளையாட்டு! எங்களை நிம்மதியாக தூங்கவும் விடமாட்டேன் என்கிறீர்கள். தூக்கத்திலும் எங்களை உணர்ச்சிவசப்படுத்தி அழவைக்கிறீர்கள்."

இதைக் கேட்டவுடனே பாபா தம் காதுகளைக் கைகளால் மூடிக்கொண்டு, "யார் என்ன சொன்னாலும் சரி, நாம் உம்மிடத்திற்கு வந்திருந்தோம்" என்று சொன்னார்.

பிறகு, ஏற்கெனவே விவரிக்கப்பட்ட யோசனை-வரைபடம் பாபாவின் முன்னால் வைக்கப்பட்டது. கோயிலை உள்ளடக்கி வீட்டைக் காட்டும் யோசனைக்கு பாபா உடனே அனுமதியளித்தார்.

மாதவராவ் வரிந்துகட்டிக்கொண்டு செயலில் இறங்கினார். நிலவறையும் முதல் தளமும் அவருடைய நேரடி மேற்பார்வையில் கட்டப்பட்டன கிணறும் அவருடைய கைகளால் கட்டப்பட்டது! கட்டுமான வேலை இதுவரை முன்னேற்றியது.

லெண்டிக்குப் போகும்போதும் திரும்பிவரும்போதும் கதவுகளும், ஜன்னல்களும் பொருத்தப்படும்போதும் பாபா ஆர்வத்துடன் கட்டுமான வேலையின் முன்னேற்றத்தை கவனிப்பார்.  



Thursday, 30 March 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


தேகத்துடன் வாழும்போது பக்தர்களுக்காகப் பிரீதியுடன் உழைப்பால் உடலைத் தேய்க்கின்றனர். தேகவியோகம் அடைந்த பிறகும் தேகம் விழுந்த இடத்தை பக்தர்களைக் கைதூக்கிவிடுவதற்காக உபயோகிக்கின்றனர்.

இவ்வாறாக, சில ஞானிகள் தேகவியோகம் அடையுமுன்பே தங்கள் சமாதியைக் கட்டும்படி செய்கின்றனர். காலம் வரும்போது, தாங்கள் விரும்பிய இடத்திலேயே தங்கள் உடல் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கம்.

பாபாவும் அவ்வாறே செய்தார். ஆனால், அது யாருக்கும் அப்பொழுது தெரியாது. தம்முடைய சமாதி கோயிலைக் கட்டிக்கொண்டார். அவருடைய லீலை அற்புதமானது!

பாபுசாஹேப் புட்டி என்ற பெயர் கொண்டவர் நாக்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரர். பாபா அவருடைய கைகளால் தம்முடைய நினைவுச் சின்னத்தை எழுப்பிக்கொண்டார்.

பாபுசாஹேப் ஒரு பரமபக்தர். சாயி பாதங்களில் சதா மூழ்கியவர். தம் பரிவாரத்துடன் ஷிர்டிக்கு வந்து பாபாவுக்கு சேவை செய்வதற்காக அங்கேயே தங்கினார்.

சாயிபாதங்களின் மீதிருந்த அன்பினால் திரும்பத் திரும்ப ஷிர்டிக்கு வந்து தங்கினார். ஒரு காலகட்டத்தில், ஷிர்டியிலே நிரந்தரமாக வசிக்கவேண்டுமென்று விரும்பினார்.

ஓர் இடத்தை விலைக்கு வாங்கி அங்கு ஒரு சிறிய வீட்டை கட்டிக்கொண்டு சுதந்திரமாக வாழவேண்டுமென்று நினைத்தார்.

இன்று நாம் பார்க்கும் சமாதி மந்திர் (கோயில்) என்னும் பெரிய விருட்சத்திற்கு அப்பொழுதுதான் விதை விதைக்கப்பட்டது. சாயிமஹாராஜுக்குப் பக்தர்களின்பால் இருந்த அன்பின் நினைவுச் சின்னமாக சமாதி கோயில் விளங்குகிறது.

இந்த வேலை எவ்வழியாக ஆரம்பிக்கப்பட்டது ? எப்படிக் கொஞ்சங்கொஞ்சமாக எழுப்பப்பட்டது? எவ்வாறு தற்பொழுது நாம் பார்க்கும் பரிமாணத்திற்கு வந்தது? முழு விருத்தாந்தத்தையும் இப்பொழுது கேளுங்கள்.

ஷிர்டியில் சிறிய வீடொன்றை கட்டவேண்டுமென்ற சிந்தனை எழுந்தபோதே, தீக்ஷித் வாடா மாடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது பாபுசாஹேப் புட்டிக்கு ஒரு சுவாரசியமான காட்சி கிடைத்தது.

மாதவரவும் அப்பொழுது அங்கு உறங்கிக்கொண்டிருந்தார். அவருக்கும் அதே காட்சி தோன்றியது. இருவரும் பெருவியப்படைந்தனர்.

"உம்முடைய வாடாவை நிச்சயமாக கட்டும்; தேவாலயத்தையும் உள்ளடக்கி கட்டும்" என்று பாபா ஆணையிடுவதுபோல் பாபுசாஹேப் புட்டி கனவொன்று கண்டார்.

இந்தக் காட்சியைக் கனவில் கண்டவுடன் பாபுசாஹேப் விழித்துக்கொண்டார். ஆரம்பத்திலிருந்து கனவை விரிவாக ஞாபகப்படுத்திக்கொள்வதற்காகப் படுக்கையிலேயே அரைவிழிப்பு நிலையில் படுத்திருந்தார்.

இங்கு இது இவ்வாறு நடந்து கொண்டிருந்தபொழுது மாதவராவ் திடீரென்று அழும் சத்தம் கேட்டது. புட்டி அவரை எழுப்ப முயன்றபோது, நித்திரை முழுவதுமாக கலைந்தது. 



Thursday, 23 March 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"உலகவிஷய பாசங்களால் பிணைக்கப்பட்டிருக்கிறேனே; எப்பொழுது நான் அவற்றிலிருந்து விடுதலை பெறுவேன்?" என்று சொல்லித் துடிக்கும் முமுக்ஷுக்களைக் கரையேற்றுவதற்காகவே சாஸ்திரங்கள் ஏற்பட்டன.

அவ்வகையான உண்மையான பக்தரைக் கண்டதும் ஞானியர் இரக்கத்தால் உந்தப்பட்டு ஏதாவதொரு சாக்குபோக்கைக் கண்டுபிடித்து அவருக்கு சுலபமாக உபதேசம் செய்வர்.

இறைவனும் குருவும் பக்தனுடைய ஆளுமையில் இருக்கின்றனர். பக்தனுடைய மங்களைத்தையே சிந்தையிர்கொண்டு அவனுடைய சங்கடங்களையெல்லாம் தம் தலைமேல் ஏற்றுக்கொள்கின்றனர்.

சாயியின் விசித்திரமான செயல்முறைப்பற்றிய கதை இன்னொன்றை இப்பொழுது சுருக்கமாகச் சொல்கிறேன். எவரும் அறியாதவாறு ஒரு பெரிய நிர்மாணத் திட்டத்தை ஆரம்பித்துவைத்தார் சாயி!

வேலை சிறியதோ, பெரியதோ, காரணம் எப்பொழுதுமே சொல்லப்படவில்லை. வேலை மாத்திரம் கொஞ்சங்கொஞ்சமாக முன்னேறும். ஒரு வார்த்தையும் யாருக்கும் சொல்லப்படவில்லை.

திட்டம் இயல்பாக நேர்ந்ததுபோல் ஆரம்பிக்கப்படும். திட்டத்தின் மூலகாரணமோ பெயரோ எவருக்கும் தெரியாது. அதற்கு நேர்மாறாக , எல்லார் மனத்திலும் சம்பந்தமேயில்லாத காரணம் பதியவைக்கப்படும்.

"வாய்ப்பேச்சு வீரன் இதைச் சாதிப்பான்? வெறும் கர்ஜனை செய்யும் மேகம் என்ன மழையைக் கொடுக்கும்"? இப் பழமொழிக்கு நேரிடை அனுபவத்தை அளிப்பதுபோலவே பாபா செயல்பட்டார் என்பதில் சந்தேகமேயில்லை.

பாபாவைப் போன்ற அவதார புருஷர்கள் மக்களுக்கு நன்மை விளைவிக்கவே தோன்றுகிறார்கள். அவர்கள் விரும்பிய காரியம் முடிந்தவுடன் கடைசியில் உருவமில்லாத நிலையில் ஒன்றிவிடுகின்றனர்.

ஆனால், நாமோ, ஏன் பிறந்தோம்? - எங்கிருந்து வந்தோம்? - எங்கே செல்கிறோம்?- பிறவிக்கு மூலகாரணம் என்ன? - பிறவியின் பிரயோஜனம் என்ன? என்பதையெல்லாம் அறியமாட்டோம்.

விரும்பியதுபோல் வாழ்க்கை நடத்துகிறோம். இத்திரியங்களெல்லாம் சக்தியிழந்து போகின்றன. அந்நிலையிலும் ஒரு நல்ல எண்ணம் தோன்றுவதில்லை. என்றோ ஒருநாள் மரணம் வருகிறது.

அன்னை, தந்தை, மனைவி, மக்கள், உடன் பிறந்தவர்கள், இஷ்டமித்திர பந்துக்கள் ஆகியவர்கள் இறந்துபோவதை கண்களால் பார்த்தபிறகும் நமக்கு மனத்தில் நல்ல சிந்தனைகள் தோன்றுவதில்லை.

ஆனால், சாதுக்களும் ஞானிகளும் இவ்வாறல்லர். அவர்கள் தங்களுடைய அந்திமகாலம் எப்பொழுது என்பதை நன்கு அறிந்தவர்கள். கடைசிவரை ஒருமுக மனம் பெற்றவர்கள். நிர்வாண (முக்தி) நேரத்தையும் அறிந்தவர்கள். 




Thursday, 16 March 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"சாராம்சம் என்னவென்றால், அஞ்ஞானத்தை வேருடன் பிடுங்கி எறிந்துவிட்டால், எஞ்சியிருப்பது தன்னிறைவு பெட்ரா ஞானமே! ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இந்த சுலோகத்தின்மூலம் குறிப்பால் உணர்த்திய அறிவுரை இதுவே."

(பாபா அளித்த விசேஷ விளக்கம் இங்கு முடிகிறது)

இயல்பாகவே நானா அடக்கம் மிகுந்தவர். இந்தச் சிறப்புமிக்க வியாக்கியானத்தை கேட்டவுடன் பாபாவின் பாதங்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு இருகைகளையும் கூப்பிக்கொண்டார்.

பிறகு, சிரத்தையுடனும் நிட்டையுடனும் பிரார்த்தனை செய்தார், "பாபா, என்னுடைய அஞ்ஞானத்தை விலக்குங்கள். யதார்த்தமான கல்வியை அளித்து என்னுடைய கெட்ட அகம்பாவத்தை ஒழித்துகொட்டுங்கள்.-

"வெளித்தோற்றத்திற்கு சாத்விகளைப்போல் நடிப்பதில் பிரியம் கொண்டு உள்ளுக்குள் அகண்டமான விகற்பங்களை வைத்துக்கொண்டு ஒரு கணமும் அவமானத்தைப் பொறுத்துகொள்ளச் சக்தியில்லாத வாழ்க்கை - இது அஞ்ஞானமில்லாமல் வேறென்ன?-

"உள்ளுக்குள்ளே கௌரவத்தையும் புகழையும் நாடுதல், காமமும் குரோதமும் உள்ளே பொங்கிக்கொண்டிருக்கும்போது வெளிப்பார்வைக்கு தியானத்தில் மூழ்கியவன்போல் நடித்தல் - இது அஞ்ஞானமில்லாமல் வேறென்ன?-

"உள்ளே ஆத்ம நஷ்டத்தைத் தரும் செயல்கள் நிரம்பியிருப்பதால், நற்செயல்களுக்கும் ஆத்ம விசாரத்திற்கும் மனத்தில் இடமில்லாத ஒழுக்கமற்ற வாழ்க்கை, வெளியுலகத்திற்கு பிரம்ம நிட்டையுள்ளவன்போல் நடிப்பு - இது சந்தேகத்துக்கு இடமில்லாத அஞ்ஞானம் அன்றோ?-

"பாபா, கிருபையால் கனக்கும் மேகமாகிய தேவரீர் தங்களுடைய அருள்மழையை பொழிந்து என்னுடைய அஞ்ஞானத் தீயை அணைத்துவிடுங்கள்.  நான் அவ்விதம், அவ்விதந்தான் தன்னியனாவேன்! -

"எனக்கு ஞானத்தைப் பற்றிய உபந்நியாசம் தேவையில்லை. என்னுடைய இமாலய அஞ்ஞானத்தை அழித்து என்னைக் கிருபையுடன் நோக்குங்கள். அந்த கடைக்கண் பார்வையில்தான் என்னுடைய சுகமும் பூரணமான திருப்தியும் இருக்கின்றன."

சாயி, பிரேமையும் கருணையும் நிரம்பியவர். நானாவை நிமித்தமாக வைத்து உங்களுக்கும் எனக்கும் எல்லாருக்கும் கீதையின் விசேஷ அர்த்தத்தை அளித்தார்.

கீதை பகவானின் திருவாய்மொழி; ஆகவே, அது முக்காலத்திற்கும் பிராம்மணமான சாத்திரம். அதை ஒருபோதும் லேசாக எடுத்துக்கொள்ளலாகாது.

உலகியல் வாழ்வில் மூழ்கிப்போனவர்களுக்கும் ஜீவன்முத்தர்களுக்கும் இருவகையினருக்குமே சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பது தேவையில்லை. சாஸ்திரங்கள் முழுக்ஷுக்களுக்காகவே (முக்தியை நாடுபவர்களுக்காகவே) உண்டாக்கப்பட்டிருக்கின்றன. 




Thursday, 9 March 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"தேரோட்டுபவன் திறமைசாலியாக இருக்கும்போது தேரில் அமர்ந்திருப்பவர் ஏன் சஞ்சலப்படவேண்டும்? உலக விவகாரங்களை அமைதியான மனத்துடன் நடத்த வேண்டியதுதானே!-

"தேகத்தின் நடத்தையை மேற்பார்வையை செய்யவேண்டியது புத்தி செய்யவேண்டிய வேலைதான். மனம் இதற்குப் பழகிவிட்டால் எல்லா முயற்சிகளும் விவகாரங்களும் நற்பலன்களை அளிக்கும். -

"கேள்வி, தொடுமுணர்வு, பார்வை போன்ற விஷயங்களை (ஐம்புல ருசிகளை) இந்திரியங்கள் நாடும்போது வீணாக்கச் சக்தியிழப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு படியிலும், விழுந்துவிடுவோமோ என்ற பயமும் ஏற்படுகிறது. -

"ஐம்புலன்களால் தேடும் சுகங்கள் அனைத்தும் கடைசியில் சுகமின்மையில் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. அஞ்ஞானம் பரம துக்கம்!-

"செவி இனிமையில் (வேடன் ஊதும் குழல்) மயங்கும் மான், கடைசியில் தன் உயிரை இழக்கிறது. யானை தொடுமுணர்வு (சிற்றின்ப) சுகத்தில் மயங்கி மாட்டிக்கொண்டு அங்குசத்தின் குத்தலை அனுபவிக்கிறது. -

"ஒளியைக் கண்டு மயங்கும் விட்டில் பூச்சி நெருப்பில் எரிந்துபோகிறது. நாக்கின் சுவைக்கு அடிமையாகும் மீன் உடனே உயிரை இழக்கிறது. -

"வாசனையால் கவர்ந்திழுக்கப்படும் வந்து தாமரையினுள்ளே மாட்டிக்கொள்கிறது. ஒவ்வொரு புலனுமே இவ்வாறு பயங்கரமான விளைவை உண்டாக்கும்போது ஐம்புலன்களும் ஒன்று சேர்ந்தால் எப்படிப்பட்ட பயங்கரமான விளைவுகளை உண்டாக்கும்?-

"மேற்கூறியவையோ மிருகங்களும் பட்சிகளும் நீர்வாழ்ப் பிராணிகளுமே. இவற்றின் துக்கநிலையைத் திரும்பத் திரும்ப பார்த்தபிறகும் விவேகமுள்ள மனிதன் ஐம்புலன்களின் பின்னால் ஓட வேண்டுமா! அய்யகோ! இதுவன்றி வேறு எது அஞ்ஞானம்?-

"அஞ்ஞானத்தை நாசம் செய்து புலனின்பங்களுக்குக் கடுமுகம் காட்டினால், குழப்பமடைந்த மனம் மாயையிலிருந்து விடுபடும். ஜீவன் ஞான சொரூபத்தை நோக்கித் திரும்பும்; அளவிடமுடியாத சுகம் கிடைக்கும். -

"இதயத்தால் ஹரி-குரு சிந்தனையைச் செய்யும். காதுகளால் அவருடைய சரித்திரத்தை கேளும். மனத்தால் இடைவிடாது அவருடைய உருவத்தை தியானம் செய்யும். நாக்கால் நாமஸ்மரணம் செய்யும்.-

"ஹரி-குருவின் கிராமத்திற்குக் கால்களால் நடந்து செல்லும். அர்ச்சனை செய்யப்பட்ட மலர்களின் நறுமணத்தை மூக்கால் நுகர்ந்து பாரும். இரு கைகளையும் கூப்பி அவருடைய பாதங்களுக்கு வந்தனம் செய்யும். கண்களால் அவரை தரிசனம் செய்யும். -

"இவ்விதமாக ஐம்புலன்களின் நாட்டங்களும் பிரீதியுடன் அவரை நோக்கிச் செலுத்தப்படும்போது பக்தர்களின் நிலை பெரும்பேறு பெறுகிறது. இது கடவுள் - பக்தி இல்லையெனில் வேறு எது கடவுள்-பக்தி!-

 


 

Thursday, 2 March 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"உள்ளே இருப்பது பொன்; ஆனால், அது அழுக்கால் மூடப்பட்டிருக்கிறது. அழுக்கின் உள்ளே பொன் ஜொலித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அதை வெளிக்கொண்டுவர நெருப்பு தேவைப்படுகிறது.

"தேகம் ஜனனமாவது மாயாமூலம். தேகத்தின் ஓட்டம் விதிவசப்பட்டது. வாழ்கியின் இரட்டைச் சுழல்களும் (இன்பம்/துன்பம்) ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டவை. ஆகவே, தேகாபிமானம் அஞ்ஞானம். -

"தேகாபிமானத்தை துறந்தவர்களுக்கு சுகமும் இல்லை, துக்கமும் இல்லை. 'நான்' என்ற நினைவின் சுழல்கள் முற்றும் அடங்கிய பிறகுதான் அஞ்ஞானம் விலகும். -

"மனிதன் தன் சுயரூபத்தை அறியாமலிருப்பதே மாயையின் ஜன்மஸ்தானம் (பிறப்பிடம்). குருவருளால் மாயை விலக்கப்படும்போது இயல்பாகவே சுயரூபஞானம் வெளிப்படுகிறது. -

"இறைவனிடத்தில் பக்தியின்றி இதர சாதனைகளில் சிரமப்படுவதில் அர்த்தம் என்ன இருக்கிறது?  படைக்கும் கடவுளான பிரம்மதேவரும் மாயையால் ஆளப்படுபவரே. அவருக்கும் பக்திதான் விடிமோட்சம்!-

"பிரம்மலோகத்தை அடைந்தபின்னரும், பக்தியின்றி முக்தியில்லை! அங்கே சென்றபிறகும் பகவானின்மீது பக்தி இல்லாமற்போனால், மறுபடியும் மனிதன் ஜனனமரண சுழலில் மாட்டிக்கொள்கிறான்.-

"ஆகவே, மாயையை விரட்டுவதற்கான ஒரே உபாயம் இறைவனைத் தொழுவதே. இறைவனைத் தொழுபவருக்கு வீழ்ச்சியென்பதே இல்லை; பிறவி பந்தமும் இல்லை. -

"மாயை ஒரு பிரமை என்று ஜனங்கள் சொல்கின்றனர். ஆனால், மாயை, ஞானிகளையும் ஒவ்வொரு படியிலும் ஏமாற்றவல்ல சூனியக்காரி. மாறாக, இறையடியார்களோ, அவளை ஒவ்வொரு சொடக்குக்கும் நடனமாடவைக்கின்றனர்!-

"பண்டிதர்களே ஏமாந்துபோகும் சந்தர்ப்பங்களிலும் எளிய பக்தர்கள் நிலைகுலையாது நிற்கின்றனர். ஏனெனில், அவர்கள் எப்பொழுதும் ஹரிபாதங்களில் மூழ்கியிருக்கின்றனர். பண்டிதர்களோ வித்யாகர்வத்தால் தோல்வியுறுகின்றனர். -

"ஆகவே, மாயையைக் கடப்பதற்கு சத்குருவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும். அவரிடம் அனன்னியமாக சரணடைந்துவிடும். உலகவாழ்வின் பயங்கள் உடனே மறைந்துபோகும். -

"மரணம் தவிர்க்கமுடியாதது; அது வரும்போது வரட்டும். ஆனால், ஹரியின் நினைவை விட்டுவிடாதீர். உடலின் இந்திரியங்கள் வர்ணாசிரம தர்மத்தின்படி (குலம்- வாழ்க்கைப்படிநிலை விதிகளின்படி) செயல்படட்டும். மனம் மட்டும் ஹரிபாதங்களில் மூழ்கியிருக்கட்டும். -

"குதிரைகளைத் தேரில் பூட்டிரியிருப்பதைப்போலவே சரீரம் இந்திரியங்களால் பூட்டப்பட்டிருக்கிறது. திடமான லகான்களின்  மூலம் புத்தியால் இந்தத் தேர் செலுத்தப்படுகிறது.-

"மனம் சங்கற்ப விகற்பங்களால் நிறைந்து சுயேச்சையாக எங்கெங்கோ திரிகிறது. புத்தியே லகான்களைப் பிடித்திழுத்து மனத்தை அடங்குகிறது.-

 


 

Thursday, 23 February 2023

ஷீர்டி சாயி சத்சரிதம்

"கற்பத்திலிருக்கும் சிசுவைப் பனிக்குடமும், முகம் பார்க்கும் கண்ணாடியைத் தூசியும், நெருப்பைச் சாம்பலும் மூடியிருக்கின்றன அல்லவோ?  அதுபோலவே ஞானத்தை அஞ்ஞானம் மூடியிருக்கிறது.-

"பகவான் ஸ்ரீகிருஷ்ணர், கீதையிலேயே வேறிடங்களில் ஞானத்தை அஞ்ஞானம் மூடியிருக்கிறது எனச் சொல்லியிருக்கிறார். ஆகவே, அஞ்ஞானத்தை எடுத்துவிட்டால், ஞானம் இயல்பாகவே பிரகாசிக்கும்.-

"ஞானம் சுயமாகவே நிறைவுபெற்றதாயினும், பாசி மூடிய சுத்தமான நீர் போன்று இருக்கிறது. பாசியை அகற்றும் விழிப்புணர்வு பெற்றவனே சுத்தநீரைப் பெறுகிறான். -

"இது சூரிய, சந்திர கிரஹணங்களைப் போன்றது. அவையென்னவோ எப்பொழுதும் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றன. ராகுவும் கேதுவும் அவற்றின் பாதையில் குறுக்கிட்டு நம்முடைய பார்வையை மறைக்கின்றன.-

"சூரியனுக்கும் சந்திரனுக்கும் எக் கெடுதலும் ஏற்படுவதில்லை. கெடுவது நம்முடைய பார்க்கும் சக்தியே. அதுபோலவே, ஞானமும் எந்த உபாதையும் இன்றித் தானிருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு ஒளிர்கிறது.-

"கண்களின் பார்க்கும் சக்தி ஞானம். கண்களில் வளரும் புரை அஞ்ஞானம். அதை அவசியம் எடுத்துவிடவேண்டும். -

"கையின் திறமையால் புரையையோ திரையையோ விலக்கித் தூர எறிந்து, பார்க்கும் சக்தியைத் திரும்பப் பெற வேண்டும். அஞ்ஞான இருளை விலக்கவேண்டும்.-

"இவ்வுலகில் கண்களால் பார்த்தறிவதனைத்தும் விவரிக்கமுடியாத மாயையால் நிரம்பியிருக்கிறது. மாயை அனாதி; அவித்யை; வெளிப்படாதது. இது, இதுவே அஞ்ஞானத்தின் விளையாட்டு!-

"ஞானம் உணர்வுபூர்வமானது; உபதேசிக்கக்கூடிய விஷயம் அன்று. குருவைத் தொழுவதும் அவருக்கு சேவை செய்வதும் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்டு விளக்கம் பெறுவதும் குருவின் கிருபையைப் பெரும் சாதனங்கள். -

"உலகை சத்தியம் என்று நினைப்பது பெரிய பிரமை. இதுவே, முதலாவதாக எடுத்தெறியப்படவேண்டிய, ஞானத்தை மூடியிருக்கும் இருள். அப்பொழுதுதான் பேரறிவாகிய முழுமுதற்பொருள் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். -

"உலகவாழ்வின் விதை அஞ்ஞானம். குருவின் கிருபையாகிய மையைக்  கண்களில் இட்டுகொண்டால் கண்களை மூடியிருக்கும் மாயையாகிய திரை விலகும். சுபாவமான ஞானம் எஞ்சி நிற்கும். -

"ஞானம் என்பது அடைய வேண்டிய பொருளன்று. அது ஏற்கெனவே அடையப்படும் பிரகாசித்துக்கொண்டு விளங்குகிறது. வழியிலிருக்கும் தடங்கல் அஞ்ஞானமே.-

"இறைவனையும் பக்தர்களையும் வெவ்வேறாகக் கருதுவது அஞ்ஞானத்தின் மூலம், இந்த அஞ்ஞானத்தை எடுத்தெறிந்துவிட்டால் எஞ்சியிருப்பது பூரண ஞானம். -

"பழுதையில் பாம்பு தெரிவது அஞ்ஞானத்தின் தூய உதாரணம். உண்மையில் அப் பொருள் என்னவென்று அறிந்துகொள்வது அஞ்ஞானத்தை விலக்கிவிடுகிறது. எஞ்சி நிற்பது அப் பொருள் பழுதையென்று ஞானமே.-