valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 8 November 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

புராதனமான கோயில்களைப் புதுப்பிப்பதில் பாபா எவ்வளவு பிரீதியுடையவராக இருந்தார் என்ற முந்தய காதையின் தொடர்ச்சியை நினைவு கூர்வோம்.

பரோபகார ரீதியில் பாபா எவ்வாறு சிரமங்களை மேற்கொண்டார் என்பது பற்றியும், பக்தர்களுடைய துக்கங்களையும் உபாதிகளையும்  தம்முடலில் ஏற்றுக் கொண்டு அவர்களுக்காகத் தம்முடலை வருத்திக் கொண்டு எவ்வாறு அவர்களைக் காத்தருளினார் என்பது பற்றியும்,

சமாதி நிலையில் எவ்வாறு கண்டயோகம், தோதி - போதி, இத்யாதி பிரயோகங்களை செய்தார் என்பது பற்றியும், சில சமயங்களில் உடம்பிலிருந்து தலை, கை, கால் ஆகிய அவயங்களை பிரித்தெடுத்து வைத்து, மறுபடியும் அவற்றை முன்போலவே எப்படி ஒன்று கூறினார் என்பது பற்றியும் இப்பொழுது சொல்கிறேன்.

ஹிந்து என்று கருதினால் அவர் பார்வைக்கு ஒரு முஸ்லீமைப்  போல இருந்தார். முஸ்லீம் என்று நினைத்தால் அவர் ஒரு ஹிந்துவின் லக்ஷணங்களுடன் விளங்கினார். இந்த அபூர்வமான  அவதாரத்தை எந்தப் பேரறிக்னரால் விளக்க முடியும். ?

அவர் ஹிந்துவா, முஸ்லீமா என்று எவராலும் அணுப்  பிரமாணமும் கண்டு பிடிக்க முடியவில்லை. இரண்டு வர்க்கத்தினரை யும் அவர் ஒன்று போலவே நடத்தினார்.

ஸ்ரீ ராம நவமி ஒரு ஹிந்துப் பண்டிகை. ஆனால், அவர்தான் அதைக் கொண்டாட வைத்தார். சபா மண்டபத்தில் தொட்டில் கட்டிக் கதாகாலட் சேபமும்  நடக்கும்படி செய்தார்.

மசூதியின் எதிரிலிருந்த சவுக்கதில் தொட்டில் கட்டப்படும். ஸ்ரீ ராம் ஜனன கதா காலத்செபமும்  செய்ய வைப்பார். அன்றிரவே முஸ்லீம்களுக்குச் சந்தக் கூடு ஊர்வலம் நடத்தவும் அனுமதி தந்தார்.

முஸ்லீம்கள் எவ்வளவு பேர்களைச் சேர்க்க முடியுமோ அவ்வளவு பேர்களையும் சேர்த்து, சந்தனக் கூடு ஊர்வலம் மரியாதையுடன் நடத்தப்பட்டது. இவ்விதமாக அவர் இரண்டு பண்டிகைகளையும் மகிழ்ச்சியுடன் சரிசமமாகக் கொண்டாட வைத்தார்.

ஸ்ரீ ராம நவமி உற்சவ சமயத்தில் மல்யுத்தப் போட்டிகள் நடத்துவதிலும் குதிரைகள், தோடாக்கள் , தலைப் பாகைகள் போன்ற பொருள்களைப் பரிசாக அளிப்பதிலும் மிக மகிழ்ச்சியடைந்தார். 


Thursday, 1 November 2012

ஷிர்டி சாய் சத் சரிதம்

தக்ஷிணை கேட்டு வாங்கிய பணம் பழைய கோயில்களைப் புதிப்பிக்க எவ்வாறு செலவிடப் பட்டது என்பது பற்றியும் தோதீ - போதீ, கண்ட யோகம் போன்ற யோகப் பயிற்சிகளில் பாபா தம் உடலை வருத்திக் கொண்ட விவரமும் -

எவ்வாறு பாபா மற்றவர்களின் நல்வாழ்வுக்காக கஷ்டப் பட்டார் என்பது பற்றியும் பக்தர்களின் சங்கடங்களை எவ்வாறு நிவாரணம் செய்தார் என்பது பற்றியும் - இவையனைத்தும் அடுத்த அத்தியாயத்தில் தெளிவாகச் சொல்லப் பட்டு கதை கேட்பவர்களைத் திருப்தி செய்யும்.

எல்லாருக்கும் சேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப் பட்டு, சாயி பக்தன் ஹெமாத் பந்தால் இயற்றப் பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்" என்னும் காவியத்தில், 'ஸ்ரீராம ஜன்ம உற்சவம்" என்னும் ஆறாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


Thursday, 25 October 2012

ஸ்ரீ சாயி சத் சரிதம்

மக்களனைவரும் செயலற்றுப் போனார்கள்! 'இன்று என்ன என்றுமில்லாதவாறு துர்ச்சகுணம்? தாத்யா பாடீலை இந்த ஆபத்திலிருந்து விடுவிப்பது எப்படி?" என்று மக்கள் வியந்தனர்.

பாகோஜி சிந்தே (பாபாவுக்கு பணியால் போல் சேவை செய்த அடியவர்.) தைரியமாகவும் உஷாராகவும் முன்னேறினார். பாபாவிடம் சுலபமாக மாட்டிக்கொண்டு அவருடைய கோபத்திற்கு இரையானார். பாபாவால் இஷ்டம் போல் துவம்சம் செய்யப் பட்டார்.

மாதவராவும் பாபாவிடம் மாட்டிக்கொண்டார். பாபா அவர்மீது சில செங்கற்களை எறிந்தார். தாத்யாவை விடுவிக்க முயன்றவர்கள் அனைவரும் அதே போன்று செங்கற்களால் தாக்கப் பட்டார்கள்.

'இந்நிலையில் யார் பாபாவை தைரியமாக நெருங்கித் தாத்யாவை விடுவிக்க முடியும்?" என்று மக்கள் யோசித்துக் கொண்டிருந்த போதே பாபாவின் கோபம் தணிய ஆரம்பித்தது.  கடைசியில் பாபா அமைதியடைந்தார்.

உடனே ஒரு ஜவுளிக்கடைக்காரர் அழைக்கப் பட்டு, தங்கச் சரிகை போட்ட தலைப் பாகை கொண்டு வரச் செய்யப் பட்டது. ஓர் அரசரிடமிருந்து வரும் மரியாதையைப் போன்று பாபாவே அத் தலைப் பாகையைத் தாத்யாவுக்கு கட்டி விட்டார்.

இந்த திடீர்க் கோபத்திற்கும் வசவுகளுக்கும் தாத்யாவின்மீது நடந்த தாக்குதலுக்கும் என்ன காரணம் என்பது மக்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே இருந்தது.

எக்காரணம் பற்றி அவர் கடும் கோபமடைந்தார்? எப்படிக் காண நேரத்தில் சாந்தியடைந்து சந்தோசம் ஆகிவிட்டார்? இதற்கெல்லாம் காரணம் என்ன என்பது ஒருவருக்கமே புரியவில்லை.

சில சமயங்களில் பாபாவினுடைய மனம் சாந்தமாக இருக்கும்; எல்லாருடனும் பிரீதியுடன் பேசுவார். சில சமயங்களில் திடீரென்று எக்காரணமும் இல்லாமல் அவருடைய மனம் கொந்தளிக்கும்.

பாபாவினுடைய காதைகள் இம்மாதிரியானவை; ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இன்னொன்று மனதில் தோன்றுகிறது; எதை முதலில் சொல்வது, எதைப் பிறகு சொல்வது என்று பிரவசனம் செய்பவரின் மனம் திக்கு முக்காடுகிறது. இந்தத் தேர்வில் பாரபட்சம் காட்டுவது முறையாகாது.

எந்நாளும் பாரபட்சம் காட்ட முடியவில்லை. செவிமடுப்பவர்களின், கதை கேட்க வேண்டுமென்ற ஆவலைத் திருப்தி செய்யும் வகையில், எக்காதை எச்சமயத்திற்கு பொருத்தமாக இருக்கிறதோ, அக்காதை அச்சமயத்தில் அவர்களுக்கு வந்து சேரும்.

அடுத்த அத்தியாயத்தில், பாபா ஹிந்துவா முஸ்லீமா என்பது பற்றிய வாய்மொழி விவரங்களையும் முதியோர்களிடம் நான் கேட்டவாறு ஆதிகாலக் கதைகளையும் என்னுடைய சக்தி அனுமதிக்கும் அளவில் சொல்கிறேன்; கேளுங்கள். 


Thursday, 18 October 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

எப்படியிருப்பினும், இந்த வேலையும் பக்தர்களின் கடுமையான உழைப்பால் அம்முறையிலேயே (மசூதி தளம் பரவிய) அந்தச் சூழ்நிலையிலேயே இரவோடு இரவாக முடிக்கப்பட்டது.

பெருமுயற்சி எடுத்து பதர்கள் இரவில் இரும்புதூண்களை நட்டு நிலைப் படுத்துவார்கள். அடுத்த நாள் காலையில் பாபா தூண்களைப் பிடுங்க முயல்வார். நல்ல சமயமாகப் பார்த்து, பக்தர்கள் மறுபடியும் தூண்களை நிலைப் படுத்துவார்கள். இத் தொடர்முயற்சிகளே  அவர்களைச் சோர்வடையச் செய்தன.

எல்லாரும் கீழ்ப்பாய்ச்சியை இழுத்துக் கட்டிக் கொண்டு, இரவைப் பகலாக்கி, அவர்களுடைய இதயத்திலிருந்த ஒரு பெரும் ஆவலை தீர்த்துக் கொள்ளக் கடுமையாக உழைத்தனர்.

முதலில் இவ்விடம் (மசூதியின் எதிரில்) ஒரு சிறு முற்றம் அடங்கிய திறந்த வெளியாகவே இருந்தது. ஒரு கொட்டகை கட்டுவதற்குத் தகுதியான இடம் என்று தீட்சிதர் கருதினார்.

எவ்வளவு பணம் செலவானாலும் சரி, என்று தீர்மானம் செய்துகொண்டு இருப்புத் தூண்களையும் இரும்புக் கோணச் சட்டங்களையும் வாங்கினார்கள். இரவு படுத்துக் கொள்வதற்கு பாபா சாவடிக்குச் சென்றுவிட்டார் என்று தெரிந்த பிறகு, அவர்கள் வேலையை முடித்தார்கள்.

இரவு முழுவதும் பெருமுயற்சி செய்து  பக்தர்கள் இரும்புத் தூண்களை நட்டு நிலைப் படுத்துவார்கள். காலையில் சாவடியிலிருந்து திரும்பிவந்தவுடனே பாபா கம்பங்களை பிடுங்க ஆரம்பிப்பார்.

ஒருநாள் பாபா கடுங்கோபம் கொண்டார். ஒரு கையால் தாத்யாவின் கழுத்தை நெரித்துக் கொண்டே மறுகையால் ஒரு கம்பத்தை பிடுங்க முயற்சி செய்தார்.

இரும்புத் தூணை பலமாக ஆட்டி அதைப் பிடுங்கி விட்டார். பிறகு அவர் தாத்யாவினுடைய தலைப்பாகையை பறித்து, ஒரு தீக்குச்சியால் அதைக் கொளுத்தி கோபம் பொங்கக் குழிக்குள் விட்டெறிந்தார்.

அந்த சமயத்தில் அவருடைய கண்கள் நெருப்புக் கோலங்கள் போல ஜொலித்தன. அவருடைய முகத்தை நேருக்கு நேராக யாரால் பார்க்க முடிந்தது. எல்லாருமே நாடு நடுங்கி போனார்கள்.

சட்டென்று தம்முடைய பாக்கெட்டில் கையைவிட்டு, ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து, சுப காரியம் என்று குறிப்பளிப்பது போலக் குழியில் வீசி எறிந்தார்.

சாபங்களும் திட்டுகளும் வசையும் சரமாரியாக பொழிந்தன. தாத்யா மனதளவில் பயந்து நடுநடுங்கி போனார். ஓர் இக்கட்டான நிலைமை உருவாகிட்டது. இது எங்கனம் நடந்தது?


Thursday, 11 October 2012

ஷிர்டி சாய் சத் சரிதம் 

பாலபுவாவும் தம்மைப் பொறுத்தவரை எண்ணம் நிறைவேறியது பற்றி மிக்க மகிழ்ச்சியடைந்தார். பாபா வுக்கும் சந்தோசம். எல்லாருடைய மனோரதமும் நிறைவேறியது.

புவாவுக்கு கனத்த சம்பாவனை கிடைத்தது. பாபாவின் ஆணைப்படி அவருக்கு நூற்றைம்பது ரூபாய் அளிக்கப்பட்டது. புவாவினுடைய மகிழ்ச்சி கரைபுரண்டது.

கவடேயில் ஐந்து வருடங்களில் கிடைக்ககூடிய வருமானத்தை பாபா ஒரே வருடத்தில் கொடுத்துவிட்டார். பாலபுவாவுக்கு ஏன் சந்தோசம் பொங்கி பாபாவிடம் விசுவாசம் அதிகரிக்காது?

ஆயினும், பின்னர் தாசகனு ஷீரடிக்கு ஒருமுறை வந்தபோது, ஸ்ரீ ராம நவமி கதாகாலட் ஷேபப் பொறுப்பு பாபாவின் அனுமதியுடன் அவரிடம் ஒப்படைக்கப் பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை ஸ்ரீ ராம ஜன்மோர்சவம் கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. ஏழையிலும் ஏழைகள் உட்பட அனைவரும் ஆனந்தம் அடையுமாறு எல்லாருக்கும் அன்னதானம் செய்யப் படுகிறது.

அச்சமயத்தில் சமாதி மந்திரின் பிரதான வாயிலுக்கேதிரே மங்கள வாத்தியங்களின் முழக்கங்களுக்கு நடுவில் சாயி நாமம் வானைப் பிளக்குமாறு எழுந்து, அவர்களுடைய மனத்தில் ஆனந்த அலைகளை எழுப்புகிறது.

உருஸ் திருவிழா கொண்டாட்டம் ஆரம்பித்ததைப் போலவே, கோபால் குண்டுக்கு மசூதியை புனருத்தாரணம் செய்து அழகுபடுத்த வேண்டும் என்னும் யோசனையும் மனதில் உதித்தது.

மசூதி புனருத்தானம் செய்யப்பட வேண்டுமென்றும் அதையும் தம் கைப் படச் செய்யவேண்டுமென்றும்  கோபால் குன் தீர்மானம் செய்தார். வேலைக்கு வேண்டிய கற்களை தயார் செய்தார்.

ஆனால் கோபால் குண்டுக்கு இந்த சேவையை செய்யக் கொடுத்து வைக்க வில்லை என்று தெரிகிறது. பிறகு, பாபாவின் விருப்பப்படி இந்த வேலையைச் செய்து முடிக்க ஒரு நல்வாய்ப்பு அமைந்தது.

நானா சாஹேப் சாந்தோர்கர் இப்பணியை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் காகா சாஹேப் தீட்சிதர் தளம் பரவும் பணியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் பாபா விரும்பியதாக இப்பொழுது தெரிகிறது.

சிறிது காலம் கழித்து அது அவ்வாறே நடந்தது. முதலில், பக்தர்கள் சோர்ந்து போகும் வரை திரும்பத் திரும்ப அனுமதி கேட்டும் பிரயோஜனமில்லாமல் போயிற்று. மஹால் சாபதி பரிந்துரை செய்யுமாறு வேண்டிக் கொள்ளப் பட்டார். இதன் பிறகே பாபா அனுமதி தந்தார்.

இரவோடு இரவாக தளம் போடப் பட்டது. அடுத்த நாளிலிருந்தே பாபா ஆசனமாக ஒரு சிறு மெத்தையை உபயோகிக்க ஆரம்பித்தார்.

1911  ஆம் வருடம் ஒரு சபா மண்டபம் கட்டப் பட்டது. ஆனால், ஓ! அது என்னே பகீரதப் பிரயத்தனம்.! என்ன உழைப்பு! எத்தனை தொந்தரவுகள்! இது போதாதென்று இவ்வேலை அவர்களுடைய பயத்தால் நடுங்க வைத்தது. 


Thursday, 4 October 2012

ஷிர்டி சாயி சத் சரிதம் 

பாலபுவாவுக்கு இவ்விரண்டு உற்சவங்களுக்கு முப்பது ரூபாய் சன்மானமாக அளிக்கப்பட்டது. ஆனால், அவ்வருடம் கவடேயில் காலரா நோய் கண்டு, கிராம மக்கள் அவதிப் பட்டனர்.

அதனால், ஸ்ரீ ராம நவமி உற்சவம் கொண்டாட முடியவில்லை. மக்கள் கிராமத்தைக் காலி செய்து விட்டு வெளியில் போய் விட்டதாகவும் அடுத்த வருடம் வரச் சொல்லியும் புவாவுக்கு கடிதம் வந்தது.

சுருங்கச் சொன்னால், ஸ்ரீ ராமனுக்கு சேவை செய்யும் பாக்கியமும் சன்மானமும் புவாவிற்கு அவ்வர்டம் கிடைக்காமல் போய்விட்டன. ஆனால், அது அவருக்கு  ஷிர்டி செல்வதற்கு ஒரு நல் வாய்ப்பாக அமைந்தது. ஆகவே, புவா ஹரி சீதாரம் தீஷிதரை சந்தித்தார்.

தீஷிதர் பாபாவின் பரம பக்தராதலால், அவர் மனது வைத்தால் ஷிர்டிக்குப் போகும் விருப்பம் நிறைவேறும்; சொந்தக் காரியமும் நடக்கும். சுவாமி காரியுமும் நடக்கும் என்று அவர் நினைத்தார்.

அவர் தீஷிதரிடம் கூறினார், "இந்த வருடம் எனக்கு சன்மானம் கிடைக்காமல் போய் விட்டது. ஆகவே, நான் பாபாவை தரிசனம் செய்வதற்காகவும் கதாகாலட்ஷேபம் செய்வதற்காகவும் ஷிர்டி செல்லவேண்டுமென்று நினைக்கிறேன்".

தீஷிதர் பதில் கூறினார். "சன்மானம் கிடைக்குமென்று நிச்சயமாக சொல்லமுடியாது. கொடுப்பதோ இல்லையோ  பாபாவின் கையில்தான் இருக்கிறது. கதாகாலட்ஷேபம்  செய்வதற்கும் பாபாவின் சம்மதம் தேவை!".

இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதே காகா மகா ஜனி அங்கு வந்தார். சற்றும் எதிர்பாராமலேயே அங்கிருந்த அனைவருக்கும் ஷீரடியின் உதி பிரசாதத்தை அளித்தார். இது சுப சகுனமாக கருதப் பட்டது.

மகாஜனி அப்பொழுதுதான் ஷிர்டியிலிருந்து திரும்பி இருந்தார்; ஷீரடியில் அனைவரும் நலம் என்று தெரிவிப்பதற்காக அப்பொழுது அங்கு வந்தார்; சிறிது நேரத்தில் வீட்டிற்குத் திரும்பிவிட்டார்.

தாம் பாபாவை அனுமதி கேட்பதாகவும் அனுமதி கிடைத்தால் நிச்சயமாக அவருக்குத் தெரிவிப்பதாகவும் தீஷிதர் புவாவிடம் பரம பிரீதியுடன் சொன்னார்.

யாத்திரைச் செலவைப் பற்றிக் கவலைப் படாமல் ஷீரடிக்கு வரச் சொல்லி புவாவுக்கு ஒரு கடிதம் வந்தது; இதற்காக ஒருவர் மனத்தில் சந்தேகங்களை எழும்பிக் கொண்டு தொந்தரவுபடக் கூடாது என்ற குறிப்பும் இருந்தது.

சில நாள்களுக்குப் பிறகு தீஷிதர் ஷிர்டிக்குச் சென்றார்; பாபா தம்முடைய அனுமதியை அளித்தார். பாலபுவா ஷீரடிக்கு வந்தார்; யதேஷ்டமாக (மனம் திருப்தி அடையும் வரை) சாயி தரிசனம் செய்தார்.

பாபாவும் மிகுந்த பிரேமையுடன் ஸ்ரீ ராம நவமி உற்சவத்தை கோலாகலமாக கதாகாலட்சேபத்துடனும் பண்டிகைக் குதூகலத்துடனும் பாலபுவாவை வைத்துத் தம்முடைய முன்னிலையில் நடத்திக் கொண்டார். 


Thursday, 27 September 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

'இன்னும் என்ன தேவை இருக்க முடியும்? ஆனால், சாயியின் திருவாய் மொழி என்றுமே சோடை போனதில்லையே?' என்று நான் யோசித்தேன். உற்சவம் இன்னும் சம்பூரணமாகவில்லை என்று என் மனத்துள் அப்போதுதான் உதித்தது.

அன்றைய உற்சவம் நடந்துவிட்டது; ஆனால், மறுநாள் 'கோபாலகாலா' நடக்காமல் உற்சவம் முடிந்துவிட்டது என்று எவ்வாறு சொல்ல முடியும்?

இப்படியாக, பஜனை, கோபால கலா எல்லாம் அடுத்த நாள் கொண்டாடப் பட்டன. இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு பாபா தொட்டிலை அவிழ்த்துவிட அனுமதியளித்தார்.

அடுத்த வருடம் காலட்சேபம் செய்ய பீஷ்மா கிடைக்கவில்லை. ஆகவே, பாலபுவா சாதார்கர் காலட்சேபம் செய்வதற்கு அணுகப்பட்டார். ஆனால், அவரோ 'பிர்ஹாட் சித்த கவடே' என்னும் ஊருக்கு காலத்ஷேபதிர்காகப்  போக வேண்டியிருந்ததால் அவரும் கிடைக்கவில்லை.

ஆகவே, காகா மகா ஜனி, நவீன துகாராம் என்று பிரசித்தி பெற்ற பால புவா பஜணியை அழைத்துக்கொண்டு வந்தார். ஸ்ரீ ராம் ஜன்ம உற்சவத்தை பாலபுவா பஜனி நடத்தி வைத்தார்.

அவர் கிடைக்காமல் போயிருந்தாலும் காக மஹா ஜனியே காலட்சேபம் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பார். அவருக்கு தாச கணு இயற்றிய ஸ்ரீராம சனனக் காதைச் செய்யுள்கள் மனப்பாடம்.

மூன்றாவது வருடம் பாலபுவா சாதார்கரே சரியான சந்தர்ப்பத்தில் ஷீரடிக்கு வந்து சேர்ந்தார். இது எப்படி நடந்தது என்பதை கவனமாக கேளுங்கள்.

சாயி பாபாவின் கீர்த்தியைக் கேள்விப்பட்ட பிறகு பாபாவை தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆவல் அவர் மனத் தெழுந்தது. அவருக்கு வழித்துணைக்கு ஒருவர் தேவை; துணை எப்படிக் கிடைக்கும் என்பதே அவருடைய சிந்தனையாக இருந்தது.

பாலபுவா ஒரு ஹரிதாசர்; சாதாரா என்னும் ஊரில் பிறந்தவர். ஆனால், அச்சமயத்தில் அவர் பம்பாய் நகரத்திலுள்ள பரேலில் வசித்து வந்தார்.

சாதாரா ஜில்லாவில் பிர்ஹாட் சித்த கவடே என்னும் தேவஸ்தானம் ஒன்று இருந்தது. ஸ்ரீ ராமநவமியன்று அங்கே கதாகாலட்சேபம் செய்வதற்காக சாதர்கர் வருடாந்திரமாக ஒரு மானியம் பெற்றுக் கொண்டிருந்தார்.

அந்த தேவஸ்தானத்துடன் அவருக்கு வருடாந்திரமாக இரண்டு உற்சவங்களுக்கு சம்பந்தம் இருந்தது; ஒன்று ஆடி மாத ஏகாதசி, இரண்டாவது சித்திரை மாதத்தின் ஸ்ரீ ராமநவமி;

மொகலாய சக்கரவர்த்தி (அக்பர்) ஏற்படுத்திய சாசனத்தின்படி நூற்று இருபது நான்கு ரூபாய், செலவுகளுக்காக அங்கீகாரம் செய்யப் பட்டிருந்தது. மூல சமஸ்தானத் திலிருந்து முறைப் படி இத்தொகை இந்தக் கோயிலின் குறிப்பிட்ட செலவுகளுக்காகப் பிரித்தளிக்கப்பட்டு இருந்தது.