ஷிர்டி சாயி சத்சரிதம்
பாபாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியாதவர்கள் திரும்பும் வழியில் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. பலர் திருடர்களால் கொள்ளையடிக்கப் பட்டார்கள்; அவ்வனுபவம் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு ஞாபகம் இருந்தது.
உணவுண்ட பிறகே செல்லும்படி சொல்லப் பட்ட பின்னும், பசியுடன் அவசரமாக ஊருக்குக் கிளம்பியவர்கள் ரயிலைக் கோட்டை விட்டதுமல்லாமல், பசியாலும் எரிச்சலாலும் வருந்தினார்கள். இது பல பக்தர்கள் தாங்களே அனுபவித்தவாறு. (மூல நூல் ஆசிரியரும் ஒருமுறை இவ்வனுபவம் பெற்றார் ).
ஒரு முறை தாத்யா கோதே பாடீல் கோபர்கங்வ் வரச்சந்தைக்குப் போக விரும்பினார்; ஆகவே, மசூதிக்கு வந்தார்
குதிரைவண்டியை வெளியே நிறுத்திவிட்டு வந்து, பாபாவை தரிசனம் செய்தார் அனுமதி பெரும் பாவனையில் பாபாவின் பாதங்களுக்கு வணக்கம் செளுதிவிட்டுக் கிளம்ப முயன்றார்.
திரும்பத் திரும்ப பக்தர்கள் பாபாவிடம் அனுமதி பெறுவதைத் தவிர்க்க முயன்றார்கள், அல்லது தள்ளிப் போட்டார்கள். ஆனால், பாபாவுக்கு நல்ல நேரம் எது, கேட்ட நேரம் எது என்பது தெரியும் தாத்யா வெளியேற அவசரப் பட்டதை கண்ட பாபா கூறினார், "கொஞ்சம் பொறு! -
"சந்தைக்குப் போவது இருக்கட்டும்; பிறகு பார்த்துக் கொள்ளலாம். கிராமத்தை விட்டு வெளியே போக வேண்டா". ஆயினும், தாத்யா கட்டாயப் படுத்துவதைக் கண்டு அவர் சொன்னார், "சாமாவைக் கூட்டிக் கொண்டு போ".
'சாமாவை எதற்காகக் கூட்டிக்கொண்டு போகவேண்டும்" என்று தமக்குள்ளேயே நினைத்துக் கொண்டு, பபவினுடைய பரிந்துரையை அலட்சியம் செய்துவிட்டு, தாத்யா சந்தைக்குப் போவதற்காகப் போய் வண்டியில் உட்கார்ந்தார்.
இரண்டு குதிரைகளில் ஒன்று அதிவேகமானது; முன்னூறு ரூபாய் விலை. சாவூல் விஹிர் கிராமத்தை (ஷிர்டியிலிருந்து 3 மைல் ) நெருங்கியபோது கட்டுக் கடங்காமல் நாலுகால் பாய்ச்சலாக ஓடியது.
சந்தைக்குச் சடுதியில் செல்லக் கூடிய, சவுக்கையே அறியாத குதிரை, கால்தடுக்கிக் கீழே விழுந்தது. குதிரை வண்டி தடாலென்று சாய்ந்தது தாத்யா கீழே விழுந்ததால் இடுப்புக்கு மேல் சுளுக்கிக் கொண்டது
அய்யோ! என்ன சந்தை! என்ன சரக்குகள் வாங்குதல்! தாத்யாவுக்கு உடனே தம் அன்னை சாயியின் ஞாபகம் வந்தது 'சாயியினுடைய வார்த்தைகளுக்கு மதிப்பளிதிருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம்; நடந்தது நடந்துவிட்டது; இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாது' என்று தாத்யா வருத்தப் பட்டார்.
இன்னொரு சமயத்தில் இதேபோன்ற நிகழ்ச்சி நடந்தது. இம்முறை கோல்ஹார் கிராமத்திற்குச் செல்ல ஆயத்தம் செய்தார். குதிரைகளை வண்டியில் பூட்டிக் கொண்டு முழுத் தயார் நிலையில் பாபாவிடம் அனுமதி பெறுவதற்காக பாபாவின் பாதங்களை வணங்கினார் .
No comments:
Post a Comment