valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 29 May 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

சுருங்கச்சொன்னால், நாமெல்லோருமே திட்டங்கள் தீட்டுகிறோம். ஆனால், நமக்கு ஆதியும் தெரிவதில்லை. அந்தமும் தெரிவதில்லை. நமக்கு எது நன்மை, எது தீமை என்பது ஞானிகளுக்கே தெரியும். அவர்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை. 

நடந்தது, நடப்பது, நடக்கப் போவது அனைத்தும் அவர்களுக்கு உள்ளங்கை நெல்லிகனிப் போல் தெரியும். அவர்களுடைய ஆக்கைக்கு கீழ்ப்படிந்து நடந்து கொண்டால், பக்தர்கள் சுகத்தையும் சாந்தியையும் பெறுவார். 

ஏற்கெனவே சொல்லப்பட்டதை தொடரும் வகையில், நான் முக்கிய காதையை மேற்கொண்டு சொல்கிறேன். சாயி, முலே சாஸ்திரிக்கு அவர்தம் குருவின் தரிசனத்தையே கொடுத்து அருள்செய்த காதையை கேளுங்கள். 

முலே, ஸ்ரீமான் புட்டியை சந்தித்துவிட்டு உடனே திரும்பிவிடும் எண்ணத்துடன் ஷீரடிக்கு வந்தார். 

அவருடைய நோக்கம் அவ்வாறு இருந்த போதிலும், பாபா இவ்விஜயத்திற்கு வேறு திட்டம் வைத்திருந்தார். அந்த ரஹசியமான திட்டம் என்ன என்பதை கவனமாக கேளுங்கள். 

முலே சாஸ்திரி தாம் திட்டமிட்டவாறு ஸ்ரீமான் புட்டியை சந்தித்து முடித்தார். அதன் பிறகு, ஸ்ரீமான் புட்டியும் இன்னும் சிலரும் மசூதிக்கு போவதற்காக எழுந்தனர். இதைப் பார்த்த முலே சாஸ்திரிக்கு அவர்களுடன் செல்ல வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. அவர்களுடன்கூடச் சென்றார். 

முலே சாஸ்திரி ஆறு சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்தவர்; ஜோதிட சாஸ்திர விற்பன்னர்; சாமுத்திரிக்கா லக்ஷணமும் பூரணமாக அறிந்தவர்; பாபாவை தரிசனம் செய்ததில் மனம் மகிழ்ந்து போனார். 

அன்புள்ள பக்தர்கள் ஆத்துமார்த்தமாக பாபாவுக்கு பழவகைகள், தூத்பேடா, பர்பி, தேங்காய்  போன்ற தின்பண்டங்களை அர்ப்பணம் செய்தனர். 

மேலும், கொய்யாப் பழம், வாழைப் பழம், கரும்பு போன்ற பொருள்களை விற்பதற்காக கிராமப் பெண்கள் மசூதியின் வாயிலுக்கு வந்தனர். பாபா விருப்பப் பட்டபோது, தாமே பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்து இப்பொருள்களை வாங்குவார். 

தம்முடைய பணத்தை செலவு செய்து கூடை கூடையாக மாம்பழங்களோ அல்லது குலை குலையாக வாழைப் பழங்களோ வாங்கி, அவருடைய ஆசை தீருமட்டும் பக்தர்களுக்கு விநியோகம் செய்வார். 

ஒவ்வொரு மாம்பழமாக கையில் எடுத்துக் கொள்வார். இரு உள்ளைங்கைகளாலும் அழுத்திக் தேய்த்து கொளகொள வென்று செய்து விடுவார். அதன்பிறகு ரசத்தை உறிஞ்சுவதற்காக பக்தர்களிடம் கொடுப்பார். 

இவ்வாறு பாபாவால் கொளகொளவென்று ஆக்கப் பட்ட மாம்பழத்தை வாயில் வைத்து ரசத்தைஎல்லாம் ஒரு பாத்திரத்திலிருந்து குடிப்பது போலக் குடித்துவிடலாம். தோலையும் கோட்டையும் மாத்திரம் எறிந்து விடலாம். 

No comments:

Post a Comment