ஷிர்டி சாயி சத்சரிதம்
வாழைப் பழங்களை அவர் கையாண்ட விதம் அபூர்வமானது. பக்தர்களுக்கு உள்ளிருக்கும் பழத்தை கொடுத்துவிட்டுத் தாம் தோலைத் தின்பார். ஓ, அவருடைய விளையாட்டுகள் அற்புதமானவை!
பழங்களைஎல்லாம் தம்முடைய கைகளாலேயே பக்தர்களுக்கு விநியோகம் செய்துவிடுவார். அவர் உண்பதென்னவோ எப்போதோ ஒரே ஒரு பழம்.
எப்பொழுதும் போல, பாபா அன்று கூடை கூடையாக வாழைப் பழங்கள் வாங்கி விநியோகம் செய்து கொண்டிருந்தார்.
முலே சாஸ்திரி பாபாவினுடைய திருவடிகளை கண்டு ஆச்சரியமடைந்து, கொடி, வஜ்ராயுதம், அங்குசம் போன்ற ரேகைகள் இருக்கின்றனவா என்று பார்த்தறிய விரும்பினார்.
காக சாஹேப் தீட்சிதர் அப்பொழுது அருகிலிருந்தார்; நான்கு வாழைப் பழங்களை எடுத்து பாபாவின் கைகளில் வைத்தார்.
"பாபா, இவர் புண்ணிய ஷேத்திரமாகிய நாசிக்கில் வசிக்கும் முலே சாஸ்திரி, புண்ணிய பலத்தால் உம்முடைய திருவடிகளை தொழுவதற்கு இங்கு வந்திருக்கிறார். இந்தப் பழங்களை அவருக்குப் பிரசாதமாகக் கொடுங்கள்" என்று சொல்லி, யாரோ ஒருவர் பாபாவை உந்தினார்.
யார் கெஞ்சினாலும் கெஞ்சா விட்டாலும், தமக்கு விருப்பமில்லை என்றால் பாபா யாருக்கும் எதுவும் தரமாட்டார்! ஆகவே, அவர்களால் என்ன செய்ய முடிந்தது?
மேலும், முலே சாஸ்திரிக்கு வாழைப் பழம் வேண்டா; பாபவினுடைய கைரேகைகளை பார்க்கவே விரும்பினார். இதற்காகவே அவர் தம்முடைய கையை நீட்டினார். பாபா இதைக் கண்டு கொள்ள வில்லை; பிரசாதம் விநியோகிப்பதிலேயே கவனம் செலுத்தினார்.
முலே பாபாவிடம் வேண்டினார், "எனக்கு பழம் வேண்டா; உங்களுடைய கையைக் காட்டுங்கள். சாமுத்திரிகா (லக்ஷனத்தின்படி) பலன் சொல்கிறேன்". ஆனால், பாபா கையைக் காட்ட அடியோடு மறுத்துவிட்டார்.
ஆயினும், முலே சாஸ்திரி தம்முடைய கரத்தை நீட்டிக் கொண்டே சாமுதிரிக்கா பலன்கள் சொல்வதற்காக பாபாவின் கரத்தை நாடி முன்னேறினார். அம்மாதிரி அவர் முன்னேறியதை தாம் பார்க்கவே இல்லாதது போல பாபா அதைக் கண்டு கொள்ளவில்லை.
முலே சாஸ்திரியின் நீட்டிய கரங்களில் நான்கு வாழைப் பழங்களை வைத்துவிட்டு அவரை அமரும்படி சொன்னாரே தவிர, கையைக் காட்ட மறுத்து விட்டார்.
இறைவனின் சேவையில் வாழ்நாள் முழுவதும் உடம்பை தேய்த்தவருக்கு சாமுதிரிக்கா லக்ஷன சாஸ்திரம் என்ன பலன் தரும்! பக்தர்களுக்கு தாயும் தந்தையும் ஆன சாயி, சகல் விருப்பங்களும் நிறைவேறியவர் அல்லரோ!
பாபாவினுடைய விருப்பமற்ற நிலையையும் சாமுதிரிக்கா லக்ஷண சாஸ்திரத்தை உதாசீனம் செய்ததையும் பார்த்த முலே சாஸ்திரி, இது வீண் முயற்சி என்று தீர்மானித்து, மேலும் முயற்சி செய்வதை நிறுத்திக் கொண்டார்.
No comments:
Post a Comment