ஷீர்டி சாய் சத்சரிதம்
நித்தியம் எது, அநித்தியம் எது? இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும்; செவிகளால் கேட்க வேண்டும்; இடைவிடாது தியானம் செய்ய வேண்டும். சமம், தமம் ஆகிய ஆறு சாதனைகளில் வெற்றிபெற வேண்டும். அப்பொழுதுதான் அஞ்ஞானத்திலிருந்து நிவிர்த்தி அடைய முடியும்.
'இவ்வுலகம் என்னிடமிருந்து வேறுபட்டது - ஓர் அளவுக்கு உட்பட்டவன் நான் - இனத்திலிருந்து ஒதுக்கப்பட்ட தனியன் நான் - இந்த உடலே நான்'; ஈதனைத்தும் கலப்படமற்ற அஞ்ஞானம்.
ஞானத்தைப்பற்றி எடுத்துக்கூறி விவரித்திருக்கும் பரம கருணாமூர்த்திகளான வேதாந்த சாஸ்திர பாஷ்யகாரர்கள், அனுபந்த சதுஷ்டத்தின் பிரகாரம் விஸ்தாரமாக விவரித்திருக்கின்றனர்.
அதிகாரி, விஷயம், சம்பந்தம் ஆகியவை முதல் மூன்று அனுபந்தங்கள். நான்காவது அனுபந்தம், பிரயோஜனம். பிரயோஜனம் குறித்த விரிவுரையில் 'அஞ்ஞான நிவிர்த்தியே பிரயோஜனம்' என்று அவர்கள் விளக்கம் அளித்திருக்கின்றனர்.
வேதாந்தத்தின் முக்கிய விஷயம் 'ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே' என்பதுதான். இந்த ஐக்கிய தத்துவத்தின் உள்ளே எப்படியோ புகுந்துவிட்ட ஐயமே அஞ்ஞானம். அதிலிருந்து நிவிர்த்தி பெறுவதே பிரயோஜனம்.
மூலமான இந்த அஞ்ஞானத்திலிருந்து நிவிர்த்தி அடைவதே தன்னை உணர்வதால் பெறும் ஆனந்தம். ஆதலால், ஏதாவதொரு யுக்தியை உபயோகித்து அஞ்ஞானத்தை நாசம் செய்வது அவசியமாகிறது.
பேத சிந்தனையைக் கைவிடாத மனிதரை ஞானியென்று கருதமுடியாது. தேகாபிமானம் உள்ளவரின் ஞானம் பூரணமான அஞ்ஞானமே.
தம்மை ஞானமுள்ளவர் என்று பகட்டிக்கொண்டு அயோக்கியச் செயல்களில் ஈடுபடுவர், சபிக்கப்பட்ட உணர்வு நிலையில் வாழ்கிறார். அவர் கும்பகர்ணனைப் போல் நித்திரையில் ஆழ்ந்திருக்கிறார்.
வேதங்களின்படி வாழ்க்கை நடத்த இயலாமலும், வருணாசிரம தர்மத்தை அனுஷ்டிக்க முடியாமலும் வாழ்பவருக்கு, சித்தத்தை தூய்மைப்படுத்த அஞ்ஞானத்தை அகற்றுவதுதான் ஒரேவழி.
சத்துவம், ராஜஸம், தாமஸம் ஆகிய முக்குணங்களாலும், ஒலி முதலாகிய இன்ப நுகர்ச்சிகளாலும், பிறவி உறுப்பு மற்றும் வாய் போன்ற துவாரங்களின் மூலமாகவும், படைக்கும் தெய்வமாகிய பிரம்மதேவர் உட்பட அனைவரும் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்.

No comments:
Post a Comment