valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Tuesday 6 August 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

சாயி அனுப்பிய நற்செய்தியைக் கேட்டு உற்சாகமடைந்த பாபு பரீட்சைக்குச் சென்றான். கேள்வித்தாள்களில் இருந்த எல்லாக் கேள்விகளையும் நேரத்தோடு எழுதி முடித்தான்.

எழுதும் பரீட்சைகள் நடந்து முடிந்தன. பாபு எல்லாக் கேள்விகளுக்குமே நன்கு பதிலெழுதியிருந்தான். ஆயினும், அதுவரை இருந்த தன்னம்பிக்கை தளர்ந்தது. திடசித்தம் கலைந்தது; மனம் அலைபாய ஆரம்பித்தது;

வெற்றி கிட்டுமளவிற்கு கேள்விகளுக்குச் செம்மையாகவே விடையளித்திருந்தான். ஆயினும் எழுதியது தேவைக்கு குறைவு என்று நினைத்து நம்பிக்கை இழந்துவிட்டான்.

வாஸ்தவத்தில் அவன் 'எழுதும் பரீட்சைகளில்' தேர்ச்சி பெற்றிருந்தான். ஆனால், தான் எழுதியது தேவைக்குக் குறைவு என்று நினைக்க ஆரம்பித்தான். உள்ளம் சோர்ந்துபோய் வாய்மொழிப் பரீட்சைக்குப் போகாமல் விட்டுவிட்டான்.

வாய்மொழிப் பரீட்சை ஆரம்பித்தது. முதல் நாள், மனம் சோர்வடைந்த நிலையிலேயே கழிந்தது. இரண்டாவது நாள், நண்பன் ஒருவன், வீட்டிற்கு வந்தபோது பாபு சாப்பிடுவதற்கு உட்கார்ந்திருந்ததை பார்த்தான்.

நண்பன் கேட்டான், "என்ன ஆச்சரியம்! பரீட்சாதிகாரியே உன்மேல் அக்கறை காட்டுகிறாரென்பது உனக்குத் தெரியுமா? "தெண்டுல்கர் நேற்று ஏன் ஆஜராகவில்லை? போய்ப் பார்த்துக்கொண்டு வா' என்று என்னிடம் சொன்னார்.-

"எழுதும் பரீட்சைகளில் தோல்வியடைந்துவிட்டேன், வாய்மொழிப் பரீட்சைக்கு ஆஜராகி எதற்காக சிரமப்பட வேண்டும்' என்று நினைத்து அவன் மனமுடைந்து வீட்டிலேயே உட்கார்ந்துவிட்டான், என்று நான் அவரிடம் தெளிவாகச் சொன்னேன்.-

"உடனே பரீட்சாதிகாரி, "நீ போய் அவனைக் கையுடன் அழைத்துக்கொண்டு வா. எழுதும் பரீட்சைகளில் அவன் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்ற சந்தோஷமான செய்தியை அவனிடம் சொல்' என்று சொன்னார்."

இந்தச் செய்தி எழுப்பிய ஆனந்தத்தை யாரால் விவரிக்க முடியும்! ஒரு கணமும் தாமதியாது, சாயி மஹாராஜின் அருளை வேண்டிக்கொண்டே ஆர்வத்துடன் வாய்மொழிப் பரீட்சைக்கு ஓடினான்.

பின்னர், எல்லாமே அவனுக்கு சாதகமாக அமைந்தன. பரீட்சையில் வெற்றி பெற்றுவிட்டான். இவ்வாறாக, வேண்டுகோளை பூர்த்தி செய்துவைத்ததால் அவனுடைய தன்னம்பிக்கையை திடப்படுத்தினார் சாயி; அவ்வளவே.

மாவு அரைக்கும் எந்திரத்தின் அச்சைக் கெட்டிப்படுத்த, அதை லேசாகச் சுழற்றிச் சுழற்றி இறுக்குகிறோம். குரு பாதங்களில் நிட்டையும் இது போலவேதான். சாயி அதைச் சுழற்றிச் சுழற்றி இறுக்கிப்  பலப்படுத்தினார்.

இதயத்தை தொட்டுச் சிந்தனையை மேம்படுத்தாத வார்த்தை எதையுமே அவர் சொன்னதில்லை. பாபாவினுடைய வழிமுறை எப்பொழுதும் அவ்வாறே. இந்த ரீதியில்தான் பக்தர்களின் நிட்டையை திடப்படுத்தினார். 


No comments:

Post a Comment