valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 14 September 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

சுவரில் இறங்கத் துரிதமான முயற்சியொன்று செய்திருந்தால், நேராக என்னுடைய படுக்கைக்குள் புகுந்து கொண்டிருக்கும். எனக்குப் பெரும் இக்கட்டை விளைவித்திருக்கும்.

அடிகள் உடலின் மர்மப் பகுதிகளில் விழாது தப்பியிருந்தால், பாம்பு வஞ்சம் வைத்துக்கொண்டு, பிற்பாடு பெரும் சேதத்தை விளைவித்திருக்கும். அது எங்கே பதுங்கிக்கொண்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு பாம்பு தப்பித்துக்கொண்டது.

அதற்கு ஆயுள் முடியவில்லை; எங்களுக்கும் தெய்வபலம் இருந்தது. நேரம் மிகக் கெட்டதாக இருந்தபோதிலும், பாபாவால் காப்பாற்றப் பட்டோம். தானும் பயப்படாது, எங்களையும் பயமுறுத்தாது, இருதரப்பினரும் நிம்மதி பெருமூச்சு விடும் வகையில் பாம்பு துரிதமாக, வந்த வழியே நழுவி விட்டது.

முக்தாராம், 'ஐயோ பாவம் பாம்பு! பிழைத்தது விசேஷம்; துவாரத்தில் இருந்து நழுவி ஓடியிராவிட்டால் உயிர் இழந்திருக்கும்' என்று  சொல்லிக்கொண்டே எழுந்தார்.

முக்தாராமினுடைய தயை மிகுந்த நோக்கு என் மனத்தை உறுத்தியது. துஷ்ட ஜந்துவின் மேல் என்ன கருணை வேண்டிக் கிடக்கிறது? இப்படியிருந்தால் உலகம் எவ்வாறு இயங்கும்?

முக்தாராம் என்றோ ஒருநாள்தான் இங்கு வருகிறார். நாமோ தினமும் காலையிலும் மாலையிலும் இங்கேதான் உட்காருகிறோம். என்னுடைய  படுக்கை பாம்பு வந்த ஜன்னலுக்கருகில் இருந்தது. ஆகவே, நான் முக்தாராம் சொன்னதை விரும்பவில்லை.

அவர் தம்முடைய வாதத்தை முன்வைத்தார்; நான் எதிர்வாதம் செய்தேன். வாக்குவாதம் சூடேறியது; முடிவொன்றையும் காணமுடியவில்லை.

'பாம்புகள் ஒருகணங்கூடத் தாமதியாது கொல்லப்பட வேண்டும்' என்று ஒருவர் சொன்னார். 'நிரபராதியான ஜீவனை எதற்காக வெறுக்க வேண்டும்?' என்று மற்றவர் கேட்டார்.

ஒரு கட்சி முக்தாராமின் வாதத்தைக் கோபத்துடனும் வெறுப்புடனும் எதிர்த்தது. ஒரு கட்சி என்னுடைய வாதத்தை எதிர்த்தது. பரஸ்பரம் வாதபிரதிவாதம் பலத்தது; முடிவேதும் ஏற்படவில்லை.

முக்தாரம் மாடியில் இருந்து கீழே இறங்கிப் போனார். நான் பாம்பு தோன்றிய துவாரத்தை அடைத்துவிட்டு இடத்தை மாற்றி படுக்கையை விரித்தேன்.

தூக்கம் என் கண்களை செருகியது; மற்றவர்களும் தூங்கப் போயினர். நான் கொட்டாவி விட ஆரம்பித்தேன். விவாதம் தானாகவே முடிவுற்றது.

இரவு கழிந்தது; பொழுது புலர்ந்தது. நாங்கள் காலைக்கடன்களை முடித்தோம். பாபாவும் லெண்டியிலிருந்து திரும்பினார். மசூதியில் மக்கள் நிறைந்திருந்தனர்.

தினமும் காலையில் மசூதிக்குப் போகும் நேரத்தில் நான் போய்ச் சேர்ந்தேன். முக்தாராம் மற்றவர்களும் வந்து அவரவர்கள் இடங்களில் உட்கார்ந்தனர். 


No comments:

Post a Comment