ஷீர்டி சாயி சத்சரிதம்
இக் கேள்விக்கு நானா தெளிவாகப் பதிலுரைத்தார், "நான் கீதை பாடம் ஓதுகிறேன். மற்றவர்களுக்கு உபத்திரவமாக இல்லாமல் இருப்பதற்காக சன்னமாக ஓதுகிறேன்."
"சரி சரி; அதே இங்கே கூடியிருப்பவர்களுக்காக. ஆனால் , எனக்குக் கேட்கும்படியாக தெளிவாக ஓதும். நீர் பாடத்தைச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறீரா என்று பார்க்கிறேன்" என்று சாயி சொன்னார்.
நானா பாபாவுக்கு வந்தனம் செலுத்திவிட்டுத் 'தத்வித்தி ப்ரணிப்பாதென' என ஆரம்பிக்கும் முப்பத்துநான்காவது சுலோகத்தை உரத்த குரலில் ஓதினார். அதைக் கேட்டு பாபா திருப்தியடைந்தார்.
பின்னர், அந்த சுலோகத்தின் அர்த்தமென்ன என்ற கேள்விக்கு நானா விரிவாக்கப் பதிலுரைத்தார். நானாவின் விளக்கம் பூர்வாச்சார்யார்கள் (பண்டைய குருமார்கள் ) அளித்திருந்த பாதையிலேயே அமைந்தது. பாபாவும் தலையசைத்து அங்கீகரித்தார்.
பாபா நானாவை மறுபடியும் கேட்டார், "நானா, இந்தச் செய்யுளின் இரண்டாவது அடியின் முதற்பகுதியை பாரும். 'உபதேக்ஷ்யந்தி தே ஞானம்' என்னும் சொற்களின் பொருள் பற்றிச் சிந்தனை செய்யும்.-
"ஞானம் என்னும் சொல்லுக்கு முன்பாக, 'அ ' எழுத்து தொக்கி நிற்கும் குறியைச் சேர்த்துக் கொள்ளலாமா என்று பாரும். இவ்வாறு செய்தால், இச் சொல் 'அஞ்ஞானம்' என மாறுபடும். சுலோகத்தின் பொருள் எதிர்மறை ஆகிவிடுமா என்றும் யோசியும். -
"சங்கரானந்தர், ஞானேச்வரர் , ஆனந்தகிரி, ஸ்ரீதரர் , மதுஸூதனர் போன்ற பாஷ்யகாரர்கள் (பேருரையாளர்கள்) 'ஞானம்' என்னும் சொல்லுக்கு அளித்திருக்கும் விளக்கம்.
"அதை சகலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதை நானும் அறிவேன். ஆயினும், 'அ ' எழுத்து தொக்கி நிற்கும் குறியைச் சேர்த்துக்கொள்வதால் விளையும் அற்புதத்தை தெரிந்துகொண்டே நாம் ஏன் அதைக் கோட்டை விடவேண்டும்?"
இவ்வாறு கூறியபின், கருணாமேகமான சாயி, சகோரபட்சிகளும் சாதகப்பட்சிகளுமான தம் பக்தர்களுக்காகப் பொழிந்த போதனாமிருதம் ஏற்கெனவே விவரிக்கப்பட்டுவிட்டது. (அத்தியாயம் 39 )
ஆனால் , சாயி லீலா பத்திரிக்கை வாசகர்களில் சிலர் அந்த விளக்கத்தை மெச்சவில்லை என்பதும், சந்தேகப்படுகிறார்கள் என்பதும் ஆச்சரியத்தை அளிக்கிறது.
ஆகவே, சில பிரமாணங்களால் , 'அஞ்ஞானம்' என்னும் சொல் இங்கு நன்கு பொருந்துவதை நிரூபிக்கும் வகையில் சந்தேகிகளைத் திருப்தி செய்வதற்காக melum ஒரு சிறிய முயற்சி செய்கிறேன்.

No comments:
Post a Comment