valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 26 December 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


குருவின் திருவாய்மொழியாக வெளிவந்த சொற்களை மனத்தில் நிலைநிறுத்துங்கள்; அறிவுரையை எப்பொழுதும் சிந்தனை செய்து கொண்டிருங்கள். அதுவே, உங்களுடைய ஆன்மீக ஏற்றத்திற்குக் காரணமாக அமையும்.  இக் கருத்தை நிரந்தரமாக மனத்தில்  இருத்துங்கள்.

குருவின் சொற்களே போதியும் புராணமும்; அவையே அவற்றுக்குத் தெளிவுரையும் விரிவுரையும் ஆகும். முக்கியமான உபதேசத்தை தியானம் செய்யவேண்டும். ஏனெனில், அதுவே நம்முடைய வேதஞானம்.

எந்த ஞானியின் சொற்களையும் அவமதியாதீர்!  நம்முடைய தாய் நம்மைக் கவனித்துக் காப்பாற்றுவது போல, வேறு எவர் நம்மைக் காப்பாற்றுவார்?

தாயன்பு பரிசுத்தமானது. குழைந்தையைப் போஷிப்பதில் அவள் அடையும் மகிழ்ச்சி குழந்தைக்கு தெரியாது. குழந்தை ஆசைப்பட்டு விரும்புவதையெல்லாம் நிறைவேற்றிச் செல்லங்கொடுக்கிறாள்.

உலகில் எத்தனையோ ஞானிகள் இருக்கின்றனர்.  ஆயினும், கருணையால் வெளிப்பட்ட, "நம்முடைய பிதாவே (குருவே) நம்முடைய பிதா (குரு)" என்னும் சாயியின் திருவாய்மொழியை நம்முடைய இதயத்தில் ஆழமாகப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

சொல்கிறேன்; சாயியின் வாயிலிருந்து வெளிவந்த வசனங்களை அனுசந்தானம் செய்யுங்கள் (இடையாறது சிந்தியுங்கள்). காரணம், கிருபாநிதியான அவர்தான் நம்முடைய நுதாபங்களையும் தணிக்கக்கூடியவர்.

அவருடைய கலைகளை அவர்தான் அறிவார்! அவருடைய லீலைகளின் அற்புதத்தையும் அவை சகஜமாக (இயல்பாக) வெளிப்படுவதையும் குதூகலத்துடன் கண்டு களிக்கத்தான் நம்மால் முடியும்.

யார் எதைச் சொன்னாலும் சொல்லட்டும்.  அவையனைத்தையும் நாம் கேட்டுக்கொள்ளலாம். ஆனால், நம்முடைய லட்சியப் பாதையிலிருந்து தடம்புரளக்கூடாது. நம் குருவின் வார்த்தைகளை மறந்துவிடக்கூடாது.

அதுதான் (குருவின் திருவாய்மொழிதான்) நமக்குப் பரம மங்களைங்களை விளைவிக்கும். அதன் மூலமாகத்தான் நாம் பிறவி பயத்தை வெல்லமுடியும். அதுதான் நம் போதியும் புராணமும் அனுஷ்டானமும் ஜபமும் தவமும் - அனைத்தும் ஆகும்.

சாராம்சம் என்னவென்றால், பரமகுருவைப் பிரேமை செய்யுங்கள். அனன்னிய பாவத்துடன் நமஸ்காரம் செய்யுங்கள். சூரியனுக்கு எதிரில் இருட்டு எப்படி இருக்கமுடியும்? அதுபோலவே, பிறவிக்கடலும் இல்லாதுபோகும்.

சிருஷ்டியின்  எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்.  கிட்டவோ எட்டவோ ஏழுகடல் தாண்டியோ செல்லுங்கள். குருவுக்கு பக்தர்களின்மேல் உண்டான பிரேமை எல்லை அறியாதது. ஆகவே, கவலையின்றி எங்கும் செல்லுங்கள்.

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே இன்னுமொரு காதை ஞாபகத்திற்கு வருகிறது. ஒருவரைக் காப்பியடித்து மற்றொருவர் அதே காரியத்தைச் செய்ய முயலும்போது, ஆபத்துக்கு உள்ளாகலாம் என்பது இக்காதையின் சாரம். 



Thursday, 19 December 2024

ஷீர்டி சாயி சத்சரிதம்


பாபாவின் மேற்கண்ட ஆசீர்வாதத் திருவாய்மொழி எழுத்துக்கு எழுத்து உண்மையாகியது. காகா சாஹேப் தீக்ஷிதர் அமரரான அபூர்வமான வழிவகை சாயிலீலா மாதப்பத்திரிகை வாசகர்களுக்கு ஏற்கெனவே தெரியும்.

அவர் மரணமடைந்த சூழ்நிலையை நினைத்துப்பார்த்தால், அது ஆகாயவிமான பயணமின்றி வேறென்ன? குருவின் நாமத்தை இடைவிடாது  ஜபம் செய்து கொண்டே மரணம். ஆஹா! எவ்வளவு ஆனந்தமான முடிவு!

இவ்வாறாக, தீக்ஷிதர் ஒரு திடசித்தம் வாய்ந்த மனிதர்; நிரந்தரமாக சாயி பாதங்களில் மூழ்கியவர். பிரியமான நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அதே அறிவரையை வழங்கினார். கடைசியில் குருபாதங்களுடன் கலந்துவிட்டார்.

இப்பொழுது கதையை விட்ட இடத்திலிருந்து தொடர்வோம். இருவருமே காகா தீக்ஷிதரின் மேல் பிரியம் வைத்திருந்தவர்கள். ஆதலால், திருவுளசீட்டு யுக்தியை இருவரும் ஒப்புக்கொண்டனர். தாமதமின்றிச் சீட்டுகள் எழுதப்பட்டன.

ஒரு சீட்டில் 'வேஷ்டியை ஏற்றுக்கொள்வோம்' என்று எழுதப்பட்டது. மற்றொரு சீட்டில் 'வேஷ்டியை நிராகரிக்கவும்' என்று எழுதப்பட்டது. இவ்வாறு  எழுதப்பட்ட சீட்டுகள் பாபாவின் புகைப்படத்தின் காலடியில் இடப்பட்டன.

அங்கிருந்த சிறுவன் ஒருவன் ஏதாவது ஒரு சீட்டை எடுக்கும்படி வேண்டப்பட்டான். சிறுவன் திருவுளசீட்டை எடுத்தான்.  எடுக்கப்பட்ட சீட்டிலிருந்து 'வேஷ்டியை ஏற்றுக்கொள்ளவும்' என்று மாதவராவுக்கு ஆக்கினை கிடைத்தது.

கனவு எப்படியோ அப்படியே சீட்டும் அமைந்தது. எல்லாரும் அகமகிழ்ச்சி அடைந்தனர். பட்டுக்கரை வேஷ்டி சாமாவின் கரங்களில் இடப்பட்டது.

ஆனந்தராவின் சொப்பனமும் மாதவராவின் சீட்டும் பரஸ்பரம் ஒத்துபோனபோது மகிழ்ச்சி கட்டுக்கடங்கவில்லை! திருவுளசீட்டு இருவருக்குமே ஆனந்தத்தையும் திருப்தியையும் கொண்டுவந்தது.

மாதவராவ் உள்ளத்தில் குஷியடைந்தார். ஆனந்தராவும் சந்தோஷமடைந்தார். காகா சாஹிபின் சந்தேகம் நிவிர்த்தியடைந்தது. சாயீ பக்தி மேலோங்கியது.

எல்லாரும் சிந்திக்கவேண்டிய விஷயம் ஒன்று இங்கு உண்டு. குருபாதங்களில் சிரம் தாழ்த்துபவர் குருவின் திருவாய்மொழியின்படி கண்ணுங்கருத்துமாய்ச் செயல்பட வேண்டும். இதுவே இக் கதையின் சாரம்.

நம்முடைய நிலைமை, உலகெனும் நாடகமேடையில் நாம் நடிக்கவேண்டிய வேஷம், மனச்சாயல்கள், எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றை நகத்திலிருந்து சிகைவரை முழுமையாக குருவே அறிவார். நம்மைக் கைதூக்கி உயர்த்திவிடும் வழிமுறைகளையும் அவரே அறிவார்.

வியாதி என்னவோ அதற்கேற்ற சிகிச்சை, சிகிச்சைக்கேற்ற பானம் (மருந்து), பானத்துக்கேற்ற அனுபானம் (துணைமருந்து) இந்த முறையில்தான் சத்குரு சிஷ்யனின் பிறவியெனும் நோயை நிவாரணம் செய்கிறார்.

குரு செய்யும் செயல்களை நாம் காப்பியடிக்கக்கூடாது. அவருடைய திருவாய்மொழியைத்தான் பயபக்தியுடன் பின்பற்ற வேண்டும். 



Thursday, 12 December 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"பாபா மேலும் கூறினார், 'என்னுடைய சாம்யாவுக்குப் (மாதாராவுக்குப் ) பட்டுக்கரை வேஷ்டி ஒன்று அளிப்பீராக. நீர் சுகங்கள் நிறைந்தவராக ஆவீர்.'-

"அவருடைய ஆணையை சிரமேற்கொண்டு நான் ஒரு பட்டுக்கரை வேஷ்டி கொண்டுவந்திருக்கிறேன். காகா சாஹேப் அவர்களே, இதை உங்களுடைய கைகளால் அளித்து மாதவராவை ஏற்றுகொள்ளச் செய்யுங்கள்.-

"என்னுடைய விநயமான வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள். மாதவராவ் இதை அணிந்துகொண்டால் நான் ஆனந்தமடைவேன். நீங்கள் எனக்குப் பெரிய உபகாரம் செய்தவர் ஆவீர்கள். "

ஆனந்தராவின் இந்த வேண்டுகோளை மாதவராவும் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆயினும், காகா சாஹேப் வேஷ்டியை அளிக்க முயன்றபோது மாதவராவ் அந்த வஸ்திரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவர் மனத்தில் நினைத்தார், 'இது ஒரு கனவுதான். நான் ஒப்புக்கொள்வதற்குமுன், எனக்கு ஒரு சூசகம் கிடைக்கவேண்டும். எனக்கு ஒரு காட்சி கிடைக்காமல் நான் அந்த வேஷ்டியை ஏற்றுக்கொள்ளக்கூடாது. '

காகா சாஹேப் அப்பொழுது சொன்னார், "நாம் இப்பொழுது திருவுளச்சீட்டுப் போட்டுப்பார்ப்போம்.  வேஷ்டியை ஏற்றுக்கொள்ளுதல் உசிதமா (மேன்மையா) இல்லையா என்று தெரிந்துகொள்வோம். பாபாவின் திருவாய்மொழியை இந்த அனுபவத்தால் உணர்வோம்.-

"எந்தச் சீட்டை பாபா நமக்கு அளிக்கிறாரோ அதையே அவருடைய ஆணையாக ஏற்றுக்கொள்வோம் ." ஆகவே, அவர்கள் பாபாவின் ஆணையின்படி நடப்பது என்று தீர்மானம் செய்துகொண்டு பாபாவின் பாதங்களில் திருவுளச்சீட்டு போட்டனர்.

எந்த விஷயமாக இருப்பினும் முதலில் பாபாவின் எண்ணத்தை அறிந்த பிறகே செயல்படுவது என்பது காகா சாஹேபின் பழக்கமாக இருந்தது. தம்முடைய பாரமனைத்தையும் பாபாவின்மீது போட்டுவிட்ட பெருமகன் அவர்.

பாபா ஜீவிதமாக இருந்தபோதும் இதே பழக்கந்தான். பாபா நிர்யாணம் அடைந்த பிறகு, திருவுளச்சீட்டு போட்டு அவருடைய ஆக்ஞயை அறிந்த பின்னரே அதன்படி உறுதியுடன் செயலில் இறங்குவார்.

செய்யவேண்டிய காரியம் சிறியதானாலும் பெரியதானாலும், திருவுளச்சீட்டு போட்டுப் பார்க்காமல் எக் காரியத்தையும் தொடங்கமாட்டார்; தம் உயிரே போவதானாலும் சரி.

தேகமே தம்முடையதில்லை என்று ஒருவர் நிர்ணயித்து அதை சாயி பாதங்களில் கிடத்தியபிறகு, அதனுடைய சலனவளனங்களின்மீது அவருக்கு ஏது அதிகாரம்?

இந்த விரதத்தை வரித்ததால், லக்ஷக்கணக்கான ரூபாய் வருமானத்தை வேண்டாவென்று ஆர் ஒதுக்கியத்தைப்பற்றி நினைத்துப்பாருங்கள்! மரணப்பரியந்தம் அவர் இந்த விரதத்தை திடமாகக் கடைப்பிடித்தார்.

"உம்முடைய நம்பிக்கையும் விசுவாசமும் பலன் அளிக்கும். நான் உமக்கு ஓர் ஆகாயவிமானம் அனுப்பி, அதில் உம்மை அரவணைத்துக்கொண்டு செல்வேன்! நீர் நிச்சிந்தையான (கவலையற்ற) மனத்துடன் இரும்".





Thursday, 5 December 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


அதற்கு மாதவ்ராவ் பதில் சொன்னார், "நேற்றுதான் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதற்கு விளக்கம் உடனே கையோடு கிடைத்துவிட்டது! பக்தியின் கரைசேர்க்கும் லக்ஷணத்தை (சிறப்பியல்பைப்) பாருங்கள். -

"பாகாடேவின் சொப்பன விளக்கத்தை கேளுங்கள். பாபா எவ்வாறு தரிசனம் தந்தார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய சந்தேகம் நிவர்த்தியாகும். நீங்கள் குருபாதங்களில் கொண்ட பக்தி பரிபூரணமானது என்றும் அறிவீர்கள்."

இந்தக் கட்டத்தில், சொப்பனத்தில் என்ன நடந்ததென்று அறிந்துகொள்ள எல்லாருமே ஆர்வமுற்றனர். குறிப்பாகக் காகா சாஹேப் மிகுந்த ஆர்வம் காட்டினார். சந்தேகம் எழுந்ததே அவருக்குத்தானே?

எல்லாருடைய ஆர்வத்தையும் கண்ட ஆனந்தராவ், தம்முடைய கனவை விவரித்தார். கூடியிருந்தவர்கள் ஸத்பாவம் நிறைந்த பக்தர்கள்; கேட்டு வியப்பிலாழ்ந்தனர்.

"ஒரு மஹாசமுத்திரத்தில் நான் இடுப்பளவு நீரில் நின்றுகொண்டிருந்தேன். சற்றும் எதிர்பாராதவிதமாக ஸ்ரீ சமர்த்த சாயீ என் கண்பார்வையில் படும்படி அங்கே தோன்றினார்.-

"ரத்தினங்கள் பதிக்கப்பட்ட சிம்மாசனத்தில் சாயீ அமர்ந்திருந்தார். அவருடைய பாதங்கள் நீரில் மூழ்கியிருந்தன.  இதுவே நான் கண்ட காட்சி.-

"அந்த மனோஹரமான உருவத்தைப் பார்த்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். அது ஒரு கனவு என்பது அப்பொழுது யாருக்கு ஞாபகமிருக்கிறது? தரிசனம் கண்டு மனம் ஆனந்தமடைந்தது. -

"மாதவ்ராவ் அப்பொழுது பக்கத்தில் நின்றுகொண்டிருந்தது எவ்வளவு அற்புதமான யோகம்! அவர் என்னிடம் உணர்ச்சி ததும்பக் கூறினார், "ஆனந்தராவ், சாயியின் பாதங்களில் விழுந்து வணங்கும்'.-

"நான் அவருக்குப் பதிலுரைத்தேன், 'ஆஹா! எனக்கும் மிகுந்த ஆசைதான்.  ஆனால், அவருடைய பாதங்கள் நீரில் மூழ்கிருக்கின்றனவே; என் கைகளுக்கு எப்படி எட்டும்?-

"பாதங்கள் நீரில் மூழ்கியிருக்கும்போது, நான் எப்படி என் தலையைப் பாதங்களின்மீது வைத்து வணங்க முடியும்? நான் இப்பொழுது செய்யவேண்டியது என்ன? இது என்ன தத்துவம் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லையே!"-

"இதைக் கேட்ட மாதவ்ராவ் பாபாவிடம் என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள், 'தேவரே, தண்ணீரில் மூழ்கியிருக்கும் பாதங்களை வெளியே எடுப்பீர்களாக."-

'இவ்வாறு மாதவ்ராவ் கேட்டுக்கொண்ட கணமே பாபா பாதங்களை நீரிலிருந்து வெளியே எடுத்தார். உடனே நான் பாதங்களைப் பற்றிக்கொண்டு பாபாவுக்கு வந்தனம் செய்தேன். -

"நான் பாபாவின் பாதங்களை இவ்வாறு கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தபோது பாபா ஓர் ஆசீர்வாதம் அருளினார், 'உமக்கு எல்லா மங்களங்களும் விளையுமய்யா! பீதியடைவதற்கு காரணம் ஏதுமில்லை.'-







Thursday, 28 November 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சாமா பதில் கூறினார், "சாயியைப் போன்ற ஓர் ஆபரணத்தை அணியும் பாக்கியம் பெற்றவர் எக்காரணத்துக்காக முகம் கவிழ வேண்டும்? அவர்  உயிரோடிருப்பதே வீண்!-

"சாயிபாதங்களில் அமோகமாக (மிகுந்த) சிரத்தை இருக்கும்போது, மனத்தில் ஏன் இந்தக் கலக்கம்? நவநாதர்களுடைய பக்தி பிரபலமாக இருக்கலாம். நம்முடைய பக்தியும் பிரேமையை அடித்தளமாக கொண்டது அன்றோ?-

"ஏக நாதரின் விரிவுரையுடன் சேர்த்து பாகவதத்தின் பதினொன்றாவது அத்தியாயத்தையும், பாவார்த்த ராமாயணத்தையும் தினமும் நீங்கள் வாசிக்கவேண்டும் என்பது உங்களுக்கு இடைப்பட்ட உறுதியான ஆணை அன்றோ?-

"அதுபோலவே, ஹரியின் நாமத்தையும் குருவின் நாமத்தையும் ஸ்மரணம் செய்யவேண்டும் என்பது பாபாவின் ஆணையும் பிரமாணமும் அன்றோ? அதுவே உங்களைப் பிறவிகடலைக் கடக்கவைக்கும். நீங்கள் கவலைப்படுவதன் காரணந்தான் என்னவோ?" இதைக் கேட்ட காகா சிறிது ஆறுதலடைந்தார்.

இருந்தபோதிலும், கத்திமுனையில் நடப்பது போன்ற, நவயோகிகளின் வாழ்நெறியையும் விரதங்களையும் சிறிதளவாவது கடைபிடிக்க முடியுமா என்பதே காகாவின் இடைவிடாத விசாரமாக இருந்துவந்தது.

'நவயோகிகளின் பக்தியே உயர்ந்தது; மிகச் சிறந்தது. எந்த உபாயத்தால் எனக்கு அது சித்திக்கும்? அப்பொழுதுதான் இறைவன் என் அருகில் வருவான்.' இந்த எண்ணமே அவருடைய மனத்தை வாட்டி வதைத்தது.

ஆகவே, உட்கார்ந்திருந்தபோதும் படுத்திருந்தபோதும் இவ்வெண்ணமே அவருடைய மனத்தைக் குடைந்தது; அடுத்த நாள் ஓர் அற்புதம் நிகழ்ந்தது! கதைகேட்பவர்களே, அதைப்பற்றி விரிவாகக் கேளுங்கள்.

அந்த நிகழ்ச்சியின் அற்புதத்தைப் பாருங்கள். அன்று அதிகாலையில் பாகாடே என்னும் குடும்பப் பெயர் கொண்ட ஆனந்தராவ் என்பவர் (முழுப்பெயர் ஆனந்தராவ் பாகாடே) மாதவராவை தேடிக்கொண்டு வந்தார்.

அவர் வந்தது காகா தீக்ஷித் பாகவதம் வாசிக்கும் காலை நேரம். ஆனந்தராவ் மாதவராவின் அருகில் அமர்ந்து தமது கனவின் விசித்திரத்தை விவரிக்க ஆரம்பித்தார்.

இங்கு, போதி வாசிப்பு நடந்துகொண்டிருந்தது. அங்கு, இருவரும் பரஸ்பரம் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தனர்.  இதன் விளைவாக, வாசிப்பவர், கேட்பவர்கள் இரு சாராரின் கவனமும் சிதறியது.

ஆனந்தராவ் சஞ்சலபுத்திக்காரர். அவர் மாதவராவிடம் சொப்பனத்தை விளக்கிக் கொண்டிருந்தார். இருவரும் இவ்வாறு பாகவதம் கேட்டுக்கொண்டே குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தனர். பாகவத வாசிப்பு ஒருகணம் நின்றது.

காகா சாஹேப் அவர்களை வினவினார், "இப்பொழுது என்ன அற்புதம் நடந்துவிட்டது? நீங்கள் இருவர் மட்டும் மகிழ்ச்சி காட்டுகிறீர்கள். விஷயம் என்னவென்று விவரமாக எங்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாதா?"


 

Thursday, 21 November 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


கர்மம் (செயல் புரிதல்), அகர்மம் (பற்றின்றி செயல் புரிதல்), விகர்மம் (விலக்கப்பட்ட செயல்களைச் செய்தல்) - இவை எல்லாவற்றின் மருமழும் ஒன்றே. குருவே பரமாத்ம ரூபம். குருவழிபாடே  பாகவத தர்மம்.

ஒவ்வொரு அவதாரத்தின் விசேஷ குணங்களை விவரித்து, மஹாவிஷ்ணுவின் சரித்திரத்தை த்ரமிள நாதர் பிரவசனம் (சமயச் சொற்பொழிவு ) செய்தார். நாராயணர், புருஷர் என்னும் பெயரைப் பெட்ரா சூக்குமத்தையும் விளக்கினார்.

பின்னர், பகவானை வழிபடாதவர்களின் கதையைச் சமச நாதர் ஜனகருக்கு விவரித்தார். வேதங்களில் விதிக்கப்பட்ட கர்மாக்களை செய்யாமல் தூக்கியெறிந்தவர்களை சர்வநாசம் தொடரும் என்றும் எடுத்துரைத்தார்.

எல்லாருடைய அந்தரங்கத்திலும் ஹரி வாசம் செய்கிறார். ஆகவே, எவரையும் வெறுக்கக்கூடாது. ஒவ்வொரு பிண்டத்திலும் இறைவனை காணுதல் வேண்டும். ஏனெனில், அவன் இல்லாத இடமேயில்லை!

ஒன்பதாவது சகோதரராகிய கரபாஜனர் கடைசியாக, கிருதயுகத்திலும் திரேதாயுகத்திலும் துவாபரயுகத்திலும் எந்தெந்த மூர்த்திகளை தியானம் செய்யவேண்டும் என்பதைச் சொல்லி ஆன்மீகப் பேருரையை முடித்தார்.

கலியுகத்தில் ஒரே சாதனைதான் உண்டு; ஹரிபாதத்தையும் குரு பாதத்தையும் மனத்தில் இருத்துவது.  அச் செய்கையே பிறவி பயத்தை அழித்துவிடும். சரணாகதி அடைந்தவர்களுக்கு உண்மையான அடைக்கலம் ஹரிபாதமும் குருபாதமுமே!

போதி வாசிப்பில்  இப் பகுதி முடிந்தபிறகு காகசாஹெப் உரக்கக் கூவினார், 'நவநாதர்களின் செயல்கள் எவ்வளவு அற்புதமானவை! அவர்களுடைய மனோபாவம் கற்பனைக்கெட்டாதது அன்றோ?"

பின்னர் அவர் மாதவராவிடம் கூறினார், "அத்தகைய பக்தி எவ்வளவு கடினமானது! மூடர்களாகிய நாம் எவ்வாறு அந்த சக்தியைப் பெறுவோம்? ஓ! எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இது நிறைவேறப்போவதில்லை !-

"மஹா பிரதாபிகளாகிய (புகழ் பெற்றவர்களாகிய ) நவநாதர்கள் எங்கே? பிறவிப் பாபிகளாகிய நாம் எங்கே? அத்தகைய பக்தி சுலபமா என்ன? சத்தியமும் ஞானமும் சேர்ந்து உருவெடுத்தாற்போன்ற நவநாதர்கள் பாக்கியவான்கள்.-

"அத்தகைய பக்தியை நாம் என்றாவது பெறுவோமா? அதை அடைவதற்குண்டான உபாயந்தான் என்னவோ? எனக்கென்னவோ நம்பிக்கை இல்லை; மனோதிடத்தையும் இழந்துவிட்டேன். ஜென்மம் எடுத்து என்ன பிரயோஜனம்!"

'காகா சாஹேப் ஒரு பிரேமையுள்ள பக்தர். அவர் எதற்காக இவ்வாறு பச்சாதாபப்பட வேண்டும்? அவருடைய உறுதியான மனம் ஏன் சஞ்சலப்பட வேண்டும்?' இவ்விதம் சிந்தித்த சாமா மனக்கலக்கம் அடைந்தார்.

சாமா என்பது மாதவராவின் செல்லப்பெயர். காகா சாஹேபிடம் மிகுந்த நல்லிணக்கம் கொண்டவர் சாமா.  ஆகவே, அவருக்குக் காகாவின் மனோநிலை பிடிக்கவில்லை. கழிவிரக்கமும் இழிநிலை உணர்வும் காகா சாஹிபை ஆட்கொண்டதை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. 

 


 



Thursday, 14 November 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


உன் குருவின் நாமத்தை இடைவிடாது ஜபித்துக்கொண்டே இரு. அதிலிருந்து பரமானந்தம் பிறக்கும். உயிரினங்கள் அனைத்திலும் இறைவனை தரிசனம் செய்வாய். நாமத்தின் மஹிமை இதைவிட வேறென்னவாக இருக்கமுடியும்?

எவருடைய நாமம் இந்த மஹிமையை உடையதோ, அவரை நான் சத் பாவத்துடன் வணங்குகிறேன். உடலாலும் வாக்காலும் மனத்தாலும் ஒன்றி, அனன்னியகதியாக  (வேறெந்த வழியையும் நாடாது) அவரிடம் நான் சரணடைகிறேன்.

இந்த சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கதையொன்றை கேட்பவர்களுக்குச் சொல்லுகிறேன். உங்களுடைய நன்மையை கருத்தில் கொண்டு, ஒரு முனைப்பட்ட சித்தத்துடன் கேளுங்கள்.

கைலாசவாசி ஆகிவிட்ட காகா தீக்ஷிதர் சமர்த்த சாயியின் ஆக்கினைப்படி நித்திய நியாயமாக பாகவதம் வாசித்துவந்தது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்.

ஒருநாள், சைலாபாடியில் இருந்த காகா மஹாஜனியின் இல்லத்தில் போஜனம் செய்த பிறகு, தீக்ஷிதர் நித்திய நியமத்தின்படி போதியை (யேசுநாத பாகவதம்) வாசித்தார்.

கூடியிருந்தவர்கள் ஒப்பில்லாத யேசுநாத பாகவதத்தின் சுவை மிகுந்த இரண்டாவது அத்தியாயத்தைச் செவிமடுத்தனர். கேட்டவர்களின் அந்தரங்கம் சாந்தியாலும் களிப்பாலும் நிரம்பியது.

காகா மஹாஜனி, மாதவ்ராவ் (சாமா) என்ற மற்றொரு பாபா பக்தருடன் அமர்ந்து யேசுநாத பாகவதத்தை ஒருமுனைப்பட்ட மனத்துடன் கேட்டார்.

பாக்கியவசமாக, கதையும், கேட்பவர்களின் ஆசையைத் திருப்திசெய்யும் விதமாகவும், பகவானை வளப்படுவதில் ஆர்வம் விளைவிக்கும்படியாகவும் சுவாரசியமாக அமைந்தது.

விரித்துரைக்கப்பட்ட கதை ரிஷப குலத்தின் ஒன்பது ஒளிவிளக்குகளான கவி, ஹரி, அந்தரிக்ஷர் ஆகியவர்களை பற்றியது. ஆனந்தத்தை விளைவித்து ஆன்மீக போதனையையும் அளிக்கக்கூடிய கதை.

அவர்கள் ஒன்பது பேர்களும் இறைவடிவானவர்கள். எல்லையற்ற பக்தியும் மன்னிக்கும் குணமும் நிரம்பியர்வகள். ஒருசமயம் அவர்கள் பாகவத தர்மத்தின் பிரதாபத்தை வர்ணித்தனர். அதைக் கேட்ட ஜனக மகாராஜா ஆச்சரியத்தால் பேச்சிழந்துபோனார்.

எது அத்தியந்த க்ஷேமம்? ஹரிபக்தியில் உயர்ந்தது எது? ஹரியின் மாயையை சுலபமாக கடப்பது எப்படி? குருவின் திருவடியே சிரேயசு (மேன்மை) அளிப்பவற்றில் மிக உத்தமமானது. 




Thursday, 7 November 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


உலகியல் வாழ்க்கைக்கே  சகாயம் (உதவி) செய்யமுடியாதவர்களால் பரமார்த்த (ஆன்மீக) வாழ்வுக்கு எப்படி உதவி செய்யமுடியும்? சம்பந்தியானாலும் சரி, மாப்பிள்ளையானாலும்  சரி, மனைவியேயானாலும் சரி, நம்முடன் சேர்ந்து பாரம் சுமப்பார்கள் என்று யாரையுமே எதிர்பார்ப்பதற்கில்லை.

அன்னையும் தந்தையும் 'இவன் என் மகன்' என்று சொந்தம் கொண்டாடுவர். புத்திரனோ சொத்தின்மேல் கண்வைப்பான்.  கணவன் நெடுங்காலம் வாழவேண்டுமென்று மனைவி கண்ணீர் சிந்தி பிரார்த்தனை செய்வாள். ஆனால், பரமார்த்த வாழ்வில் கூட்டுச் சேர்ந்து செயல்பட யாருமே இல்லை!

பரமார்த்த வாழ்வில் உதவுவதற்கு இன்னும் வேறு யார் இருக்கிறார் என்று நிதானமாகச் சிந்தனை செய்து பார்த்தீரானால், கடைசியில் கிடைப்பது நீங்களே, நீங்கள் ஒருவரே!

நித்தியம் எது, அநித்தியம் எது என்பதை அறிந்து, இவ்வுலக சம்பந்தமாகவும் மேலுலக சம்பந்தமாகவும் செய்யும் செயல்களுக்குப் பலன் நாடுவதைத் துறந்தபின், அஷ்டாங்க யோகம் பயின்று மோக்ஷம் அடைபவர் பாக்யசாலியாவார்.

வேறொருவர்மேல் சார்ந்து இருப்பதை விடுத்துத் தம்மிலேயே பலமான நம்பிக்கை வைத்துக் கச்சைகட்டிக்கொண்டு எவர் செயலில் இறங்குகிறாரோ, அவரே பரமார்த்த வாழ்வில் வெற்றி பெறுகிறார் (மோக்ஷம் அடைகிறார்).

பிரம்ம நித்தியம்; உலகவாழ்வு அநித்தியம். குருவே சத்தியமான பிரம்மம். அநித்தியமான விஷயங்களைத் துறந்து விடுங்கள்; குருவைப்பற்றியே சிந்தியுங்கள்; இந்த பாவனையே ஆன்மீக சாதனை மார்க்கம்.

அநித்தியங்களைத் துறந்துவிடின் வைராக்கியம் (உலகப்பற்று இன்மை) பிறக்கிறது. சத்குரு  பிரபஞ்ச பேருணர்வால் நிரம்பியிருப்பது தெரிகிறது. எல்லா உயிர்களிலும் இறைவன் உறைவது உணரப்படுகிறது. இதற்கு 'அபேத வழிபாடு' என்று பெயர்.

பயத்தாலோ, பிரேமையாலோ யார், யார்மீது இடைவிடாது தியானம் செய்துவந்தாலும், தியானம் செய்பவர் தியானிக்கப்பட்டவரே மாறிவிடுகிறார். கம்சனும் ராவணனும் கீடமும் (வண்டின் புழுநிலை) இதற்கு உதாரணங்கள்.

தியானம் ஒருமுகப்படவேண்டும். தியானத்திற்கு இணையான ஆன்மீக சாதனை வேறெதுவும் இல்லை. யார் இந்த சாதனையைத் தாமாகவே ஏற்றுக்கொண்டு செய்கிறாரோ, அவர் தம்மைத் தாமே உயர்த்திக்கொள்கிறார்.

அதன் பிறகு, ஜனனமும் மரணமும் இங்கு எப்படி இருக்கும்? ஜீவ பாவமும் அறவே மறந்துபோகிறது. மனம் பிரபஞ்ச உணர்வில் மூழ்குகிறது. ஆத்மாவுடன் லயித்த சுகம் ஒன்றே மிஞ்சுகிறது. 



Thursday, 24 October 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


தேஹ நிர்யாணம் முடிந்த பிறகும் லீலைகள் தொடர்கின்றன! இதை அனைவரும் அறிவர்.

இது சம்பந்தமான கதைகள் அநேகம் உண்டு. விவரிக்கப் புகுந்தால் காவியம் வீடு விஸ்தாரமாகிவிடும். ஆகவே, அவற்றின் சாரத்தை மட்டும் பிழிந்தெடுத்துக் கேட்பவர்களுக்கு  பயபக்தியுடன் அளிப்போமாக.

எந்தக் காலத்தில் சாயி அவதரித்தாரோ அந்தக் காலத்திலேயே வாழ்ந்து, அவருடைய சத்சங்கத்தை சுலபமாகவும் திரும்பத் திரும்பவும் அனுபவித்த நாமெல்லாரும் மஹா பாக்கியசாலிகள்.

இவ்வாறு பாக்கியம் பெற்ற போதிலும், சத்து இல்லாத விஷயங்களிலிருந்து விடுபட்டு, சம்சாரத்திலிருந்து நிவிர்த்தியடைந்து, பகவானிடம் பிரீதி கொள்ளவில்லையெனில் நமக்கு நரகத்தை தவிர வேறென்ன கிடைக்கும்?

எல்லா இந்திரியங்களிலும் சாயிபக்தி நிரம்பியிருப்பதைத் தவிர, வேறு எது வழிபாட்டு ஒழுக்கம்? இல்லையெனில், கண்கள் சாயியின் உருவத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது வாய் திறக்காது; பேச்சு அடைத்துவிடும்.

சாயி பஜனையைக் கேட்டுக்கொண்டிருப்போம்; நாக்கோ தித்திப்பான மாம்பழச் சாற்றில் மூழ்கியிருக்கும். கைகள் சாயிபாதங்களைத் தொட்டுக் கொண்டிருக்கும்; அதே சமயம், சுற்றியிருக்கும் ரத்தினக் கம்பளத்தின் வழுவழுப்பைத் தொட்டுப் பார்க்கவும் துடிக்கும்.

ஒருகணம் சாயியிடமிருந்து பிரிந்திருப்பதை சகித்துக் கொள்ளக்கூடியவர் எப்படி சாயிபக்தர் ஆகமுடியும்? உலகியல் வாழ்வில் விரக்தி (பற்றின்மை) ஏற்படாத மனிதரை சாயிபாதங்களின்மேல் காதல் கொண்டவர் என்று எப்படிச் சொல்லமுடியும்?

பதிவிரதையான பெண்மணி, தன் வழியில் எதிர்ப்படும் மற்ற ஆடவரை மாமனாராகவோ மைத்துனராகவோ சகோதரராகவோ கருதியே வணக்கம் செலுத்துவாள்.

பதிவிரதையின் மனம் நிச்சலமானது; எக்காரணம் கொண்டும் தன்னுடைய குடும்பத்தைக் கைவிடமாட்டாள். தன்னுடைய ஜென்மத்தின் ஒரே ஆதாரமான கணவனின்மீது அபாரமான பிரேமை செலுத்துவாள்.

கற்புநெறியில் ஒழுகும் பெண்மணி எந்த அன்னியரையும் கனவிலும் கணவனாக பாவிக்க மாட்டாள். அன்னியர்களை சந்திக்கவேண்டுமென்ற எண்ணமே அவளுக்கு எழாது.

அவளுக்குத் தன் கணவனே தெய்வம். வேறெவரையும் எப்பொழுதும் கணவனுக்கு நிகராக ஒப்பிடமாட்டாள். அவளுடைய இணைபிரியாத அன்பு கணவனிடம் மட்டுமே. சிஷ்யன் குருவிடம் இந்த ரீதியிலேயே அன்பு காட்டவேண்டும்.

பதிவிரதை கணவனிடம் கொள்ளும் பிரேமை, குருவிடம் சிஷ்யன் கொள்ளவேண்டிய பிரேமைக்கு உபமானமாக ஒப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், சிஷ்யன் குருவிடம் கொள்ளக்கூடிய பிரேமைக்கு எல்லையே இல்லை. அதன் மஹிமையை, ஒழுக்கத்தில் சிறந்த சிஷ்யனே அறிவான். 



Thursday, 17 October 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

அவதார காரியம் பூரணமானவுடனே அவருடைய ஆகிருதி நம் கண்பார்வையிலிருந்து மறைந்துவிட்டது. ஆயினும், 'சாயி சொல்லோவியமான' இந்தக் காவியத்தின் ஒவ்வொரு பதமும் அவரை நினைவுக்குக் கொண்டுவரும்.

மேலும், கதைகளைக் கேட்பதால் மனத்திற்கு ஒருமுனைப்பட்ட நிலை லாபமாகும். அதிலிருந்து பிறக்கும் சாந்தி அபூர்வமானது. அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

கதைகேட்கும் நீங்கள் சர்வ ஞானம் படைத்தவர்கள்; உங்களுடைய முன்னிலையில் நான் ஓர் அற்ப ஞானமுடையவன். அவ்வாறு இருந்தபோதிலும், இது சொல்லால் சாயிக்குச் செய்யப்பட்ட யக்ஞம் (யாகம்). ஆகவே, நன்றியுணர்வுடனும் பயபக்தியுடனும் கேளுங்கள்.

இந்த வாக்கு யக்ஞம் மங்களங்களை விளைவிக்கக்கூடியது. என்போன்ற அஞ்ஞானியால் செய்யப்படும் இந்த யாகத்தை, 'செய்வது அறிந்து செய்யும்' திறமை படைத்த சாயி வெற்றிகரமாக நிறைவு செய்வார். அனைத்துமறிந்த கதைகேட்பவர்கள் இதையும் அறிவர்.

எவர் முதலில் சாயி பாதங்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, ஒருமுகப்பட்ட மனத்துடன் இந்த மகா மங்களமானதும் பரம பாவனமானதுமான (ஒப்பில்லாத தூய்மைளிப்பதுமான) கதையைச் செவிமடுக்கிறாரோ,-

எந்த பக்தர் தமக்கு நன்மைகள் ஏற்படவேண்டுமென்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு பக்திபாவத்துடனும் ஒருமுனைப்பட்ட மனத்துடனும் இந்தக் கதாமிருதத்தைச் சுவைக்கிறாரோ, அவருடைய வழிபாடு என்றுமே வியர்த்தம் ஆகாது.

சாயி அவருடைய வேண்டுகோள்களை நிறைவேற்றுகிறார். உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் பூர்த்திசெய்கிறார். அவர் செய்யும் வழிபாடு என்றுமே வீண்போவதில்லை. கடைசியில் அவர் எல்லாப் பேறுகளையும் பெற்றவர் ஆகிறார்.

நாற்பத்துநான்கு அத்தியாயங்களின் முடிவில், சாயியின் நிர்யாணம் (கடைசிப்பயணம்) பரிசீலனை செய்யப்பட்ட பிறகும், இந்தக் காவியம் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே போகிறது. இந்த அற்புதத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

கடந்த அத்தியாயத்தில் சாயியின் நிர்யாணம் கிரமமாக நிறைவு செய்யப்பட்டது. ஆயினும், சாயிலீலையும் காதின் பூச்சியும் ஒருகணமும் ஓய்வு அறியமாட்டா.

ஆழ்ந்து பார்த்தால், இதில் வியப்பு ஏதுமில்லை; நிர்யாணம் (பூதவுடலைத் துறப்பது) என்பது உடலுக்கு மட்டும்தான். இந்த சாயி ஜனனமரணங்களுக்கு அப்பாற்பட்டவர்; முன்பிருந்தது போலத் தோன்றாநிலையில் இருக்கிறார்.

தேகம் மறைந்துவிட்டது; உருவமும் மறைந்துவிட்டது. ஆனால், அவர் தோன்றாநிலையில் முன்பு எப்படி இருந்தாரோ அப்படியே இப்பொழுதும் இருக்கிறார். 




Thursday, 10 October 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


45 . குருபாத மஹிமை


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

ஒன்றுமறியாதவர்போல மாவரைக்கும் எந்திரத்தை இயக்கி பக்தர்களை நல்வழிப்படுத்துவதற்காக தம்முடைய சத் சரிதத்தை என்னை எழுதத் தூண்டியவரின் நுண்திறன் உலகநடைக்கு அப்பாற்பட்டதன்றோ!

நான்கு புருஷார்த்தங்களில் (அறம், பொருள், இன்பம், மோட்சம்) கடைநிலை மோட்சம். ஆயினும் அதுவும் குருபாதங்களின் சக்திக்கு ஒப்பாகாது. அத்தகைய குருவின் பாததீர்த்ததை அருந்தியவனின் வீட்டைத் தேடிக்கொண்டு மோட்சம் சத்தம் செய்யாமல் வரும்.

குரு கருணாமூர்த்தியாக அமைந்துவிட்டால், சம்சார வாழ்க்கை சுகமாக இருக்கும். நடக்காததெல்லாம் நடக்கும்.  அரைக்கணத்தில் உம்மை அக்கரை சேர்ப்பார்.

இந்தப் போதி இவ்வளவு நீளம் எழுதப்பட்டிருப்பினும், கதைகளை மிகச் சுருக்கமாகவே சொல்லியிருக்கிறேன். ஓ! சாயியின் வானளாவிய கீர்த்தியை நான் எப்படித்தான் வர்ணிப்பேன்!

எந்த உருவத்தின் தரிசனம் நித்தியதிருப்தியை அளித்ததோ, எந்த உருவத்தின் சகவாசத்தில் ஆனந்தத்தை அனுபவித்தோமோ, எந்த உருவம் நமக்குப் பிறவி பயத்திலிருந்து சுலபமாக விடுதலையளித்ததோ, அந்த தெய்வீகமான சாயியின் உருவம் மறைந்துவிட்டது.

எந்த உருவம் நம்மை ஆன்மீக மார்க்கத்தில் செலுத்தியதோ, எந்த உருவம் நமக்கு மாயையிலிருந்து மோஹத்திலிருந்தும் நிவிர்த்தி அளித்
ததோ, எந்த உருவம் நமக்கு அத்தியந்த க்ஷேமலாபங்களைக் கொணரந்ததோ, அந்த தெய்வீகமான சாயியின் உருவம் மறைந்துவிட்டது.

எந்த உருவம் வாழ்க்கையின் பயங்களையும் பீதிகளையும் நாசம் செய்ததோ, எந்த உருவம் நியாயம் / அநியாயம் பற்றிய விழிப்புணர்வை ஊட்டியதோ, எந்த உருவம் சங்கடங்கள் வந்தபோது மனத்திற்குத் தைரியத்தைக் கொடுத்ததோ, அந்த தெய்வீகமான சாயியின் உருவம் மறைந்துவிட்டது.

தியானம் செய்வதற்காக அவருடைய சொரூபத்தை நம்முடைய மனத்தில் ஸ்தாபனம் செய்துவிட்டு, அவதாரத்தை முடித்துக்கொண்டு தம்முடைய என்றும் நிலையான இருப்பிடத்திற்கு சாயி சென்றுவிட்டார். அவருடைய யோகா நிலை கற்பனைக்கெட்டாதது அன்றோ! 

 



Thursday, 3 October 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


இதுவரை சொன்ன கதைகளைப்பற்றி ஹேமாட் பந்துக்கு என்ன தெரியும்? கதைகளைச் சொன்னவர் சமர்த்த சாயி! அவற்றை எழுதியவரும் எழுதவைத்தவரும் அவரே!

எத்தனை கதைகள் சொல்லியும் அந்த மனம் திருப்தியடையவில்லை; சமர்த்த சாயியின் கதை அத்தகையது! மேலும் மேலும் சொல்லவேண்டுமென்ற ஆசை என் சித்தத்தில் குடிகொண்டுள்ளது. கேட்பவர்களும் ஆனந்தமாக கேட்கின்றனர்.

மேலும், சாயியின் கீர்த்தியைப் பாடுபவர்கள், சத்பாவத்துடன்  கேட்பவர்கள், இரு சாராருமே சாயி சொரூபம் ஆகிவிடுகின்றனர். இதை திடமான சித்தத்துடன் அறிந்துகொள்வீராக!

இத்துடன் இந்த அத்தியாயத்தை நிறைவு செய்து சாயிக்கு சமர்ப்பணம் செய்கிறேன்; பிரேமையுடன் சாயியின் பாதங்களைப் பற்றிக்கொள்கிறேன். மேற்கொண்டு விவரணம் அதன் வழியே தொடரும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'மகாசமாதி' என்னும் நாற்பத்துநான்காவது அத்தியாயம் முற்றும்.


ஸ்ரீ சத்குரு  சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும். 



Thursday, 26 September 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"நீரும் நானும் ஒன்றே என்று பார்க்க ஆரம்பித்து, அப்பார்வையை விஸ்தாரப்படுத்தினால், உலகில் உள்ளதனைத்தும் உம் குருவாகத் தெரியும். நான் இல்லாத இடமாக எதுவும் தெரியாது.-

"இவ்வாறான ஆன்மீகப் பயிற்சியைத் தொடர்ந்து செய்துவந்தால், நான் எங்கும் வியாபித்திருக்கும் அனுபவம் உமக்குக் கிட்டும். பின்னர் நீர் என்னில் கலந்துவிடுவீர். அந்நியம் என்று ஒன்று இல்லை என்ற உணர்வை அனுபவிப்பீர்.-

"பிரபஞ்சப் பேருணர்வீன்மீது  தியானம் செய்வீராக. உம்முடைய அந்தக்கரணம் (மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் ) சுத்தமடையும். கங்கை நீரைத் தொடாமலேயே கங்கை ஸ்னானம் செய்துவிடுவீர்!-

"இயற்கையான  கர்மாக்களின்மேல் ஏற்படும் அபிமானம் திடமான பந்தங்களைக் கொண்டுவரும். ஆகவே, ஞானமுள்ளவர்கள் மனத்தளவில் இதுபற்றிக் கவனத்துடன் இருந்து அபிமானத்தை ஒட்டிக்கொள்ள விடமாட்டார்கள். -

"தம்முடைய சொரூபத்திலேயே மூழ்கி அனுப்பிரமானமும் அதிலிலிருந்து விலகாமல் இருப்பவருக்கு, சமாதிநிலைக்குப் போவதாலும் அதிலிருந்து திரும்பி வருவதாலும் எந்தப் பிரோயஜனமும் இல்லை".

(போதனை இங்கு முடிகிறது)

ஆகவே, கதைகேட்பவர்களே! உங்களுடைய பாதங்களில் மிகுந்த அன்புடன் வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன். தேவர்கள், ஞானிகள், பக்தர்கள், சமத்த மக்கள் - அனைவரிடமும் பிரேமை காட்டுங்கள்.

"யாராவது யாரையாவது மனம் நோகும்படி பேசினால், அவர் என்னைத்தான் மர்மஸ்தானத்தில் தாக்குகிறார்; என்னுடைய இதயத்தில்தான் வேல் பாய்ச்சுகிறார்.-

"யாராவது யாரையாவது கெட்ட வார்த்தைகளால் திட்டும்போது அது உடனே என்னைத் துன்பத்தில் ஆழ்த்துகிறது. அதை ஒருவர் தைரியத்துடன் சகித்துக் கொண்டால், அச் செய்கை என்னை வெகுகாலத்திற்குத் திருப்தியுள்ளவனாகச் செய்கிறது." இவ்வாறு பாபா நமக்கு அடிக்கடி சொல்லியிருக்கிறார்.

இவ்வாறாக, சாயி அனைத்து உயிர்களிலும் உள்ளும் புறமும் நிரம்பியிருக்கிறார். பிரேமையைத் தவிர அவர் வேறெதையும் நாடவில்லை!

சாயியின் முகத்திலிருந்து எந்நேரமும் வெளிவந்த பரம மங்களங்களை அளிக்கக்கூடியதும், தேவாமிருதம் போன்றதுமான திருவாய்மொழி இதுவே. பக்தர்களிமீது சாயீ அத்தியந்த (மிகுந்த) பிரேமை வைத்திருந்தார். இதை அறியாத பாக்கியவானும் உளனோ!

அவருடன் சேர்ந்து அமர்ந்து உணவுண்ணும் லாபம் அடைந்தவர்கள் - எவர்களுடன் அவர் சிரித்தும் விளையாடியும் பழகினாரோ அவர்கள் - அவர் திரும்பி வரமாட்டாரா என்று ஏங்குபவர்கள் - ஓ! அவர்களுடைய உணவர்வுகள் தாம் எப்படியிருக்கும்!

அந்தச் சான்றோர்களுக்கு உணவளிப்பதற்காக நான் மீந்ததைத்தான் தொகுத்து வைத்திருக்கிறேன். ஒவ்வொரு மணியாகப் பொறுக்கிச் சேர்த்துவைத்ததை இப்பொழுது அவர்களுக்கு விநியோகம் செய்கிறேன். 



Thursday, 19 September 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"இவ்வாறான சமரசநிலையைக் கண்டவுடன் சித்தம் உருவத்தையும் பெயரையும் மறந்துவிடுகிறது. தன நிஜமான இயல்பால் சுய இயக்கத்தாலேயே என்னைப் பார்க்கிறது. என்னைத் தவிர அதற்கு வேறு இடம் இல்லாமற்போகிறது. -

"நான் ஸ்பர்சவேதி (பரிசனவேதி) இல்லை என்றும், சாதாரணக் கல்தான் என்றும், மக்களுக்கு நிரூபிப்பதற்காக புத்தகப் பண்டிதர்கள் ஆரவாரம் செய்துகொண்டு இரும்புக் கடப்பாரைகளைத் தூக்கிக்கொண்டு வந்தனர். -

"கடப்பாரைகள் என்னைத் தாக்கியபோது, பண்டிதர்களுடைய விருப்பத்திற்கு எதிர்மாறாக அவை பொன்னாக மாறின. நான் வெறும் கல் இல்லை என்பது நிரூபணமாகியது. அந்த அனுபவத்தால் அவர்கள் திகைப்பில் மூழ்கினர்.-

"அணுப் பிரமாணமும் 'நான், எனது' என்ற உணர்வின்றி, உமது இதயத்தில் உறைகின்ற என்னிடம் சரணடைந்துவிடும்.  உடனே, உம்மிடமிருந்து அவித்யை (அறியாமை - மாயை) விலகும். சொற்பொழிவுகளை மேலும் கேட்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.-

"தேகபுத்தி (உடல்தான் நான் எனும் உணர்வு) அவித்யையின் பிரசவம். தேகபுத்தியிலிருந்துதான் எல்லா மனோவியாதிகளும் உடலுபாதிகளும் தோன்றுகின்றன.  தேகபுத்திதான் மனிதனைச் 'செய்ய உகந்தது எது , செய்யத் தகாதது எது' என்னும் சட்டதிட்டங்களின்மீது மோதச் செய்கிறது.  இம் மோதல் ஆத்மசுத்திக்குத் தடையாகும். -

"நான் இப்பொழுது எங்கிருக்கிறேன்? உம்மை எப்படி சந்திக்க வருவேன்? என்றெல்லாம் நீர் கேட்கலாம். ஆனாலும், நான் உமது இதயத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். ஆகவே, பிரயாசை ஏதுமின்றியே உம்மை சந்திப்பேன். -

"நீர் கேட்கலாம், 'யார் இந்த இதயத்தில் வசிப்பவர்? அவர் எப்படி இருப்பார்? அவருடைய லக்ஷங்கள் (அடையாளங்கள்) யாவை? எந்த சாடையை, குறிப்பை வைத்து நான் அவரை அடையாளம் காணமுடியும்' என்று.-

"இப்பொழுது , யாரிடம் சென்று சரணடைவது? உம்முடைய இதயத்தில் வசிப்பவர் யார்? என்பனபற்றிய தெளிவு நிரம்பிய வியாக்கியானத்தைக் கவனத்தைக் கொடுத்துக் கேளும். -

"இந்த சிருஷ்டி நானாவிதமான உருவங்களாலும் நானாவிதமான பெயர்களாலும் நிரம்பியிருக்கிறது. இவற்றை எவராலும் கணக்கெடுக்கமுடியாது. இவை அத்தனையும் மாயையின் சொரூபங்கள். -

"அதுபோலவே, சத்துவம், ராஜரசம், தாமசம்  ஆகிய முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட எந்த மெய்ப்பொருளை உள்ளூர்வால் உமது மனத்தில் உணர்கிறீரோ, அப்பொருளின் உருவத்தையே உமது இதயவாசியமாக அறிவீராக!-

"பெயருக்கும் உருவத்துக்கும் அப்பால் உம்முல் ஒன்று இருக்கிறதே, அதுவே இதயவாசியின் (இறைவனின்) அடையாளம். இதையறிந்து அவனிடம் சரணடைவீராக. -







Thursday, 12 September 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சாயீ எவ்வாறெல்லாம் கூறியிருந்தாரோ அவ்வாறெல்லாம் ஜோக் குக்குப்  பரிணாம முன்னேற்றம் ஏற்பட்டது. சாயியின் வார்த்தைகள் அர்த்தமுள்ளதாயின. ஜோக் பெரும் பாக்கியசாலி அல்லரோ.

தாத்பர்யம் என்னவென்றால் பாபா தீனதயாளர், ஷிர்டியில் இருந்தபடியே பக்தர்களுக்கு மங்களம் விளைவிப்பதைக் கருத்திற்கொண்டு அமிர்தம் போன்ற போதனையைச் சரியான சமயத்தில் காலை , மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் அளித்தார். அவற்றை இப்பொழுது கேளுங்கள்!

(போதனை இங்கு ஆரம்பம்)

"யான் என்னை பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில் நான் அகண்டமாக (இடைவிடாது) இருக்கிறேன். நான் இல்லாது அவருக்கு சிருஷ்டியனைத்தும் சூனியமாகத் தெரியும். அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும். -

"அவர் என்னையே அகண்டமாக தியானம் செய்வார்; நாக்கு என்னுடைய நாமத்தையே ஜபம் செய்யும். எங்கே போனாலும் எங்கிருந்து வந்தாலும் என்னுடைய சரித்திரத்தையே பாடிக் கொண்டிருப்பார்.

"இவ்வாறு என்னுடன் ஒன்றிய பிறகு, செயல்புரிவது, செயல்புரியாதிருப்பது இரண்டையுமே மறந்துவிடுவார்.  எங்கே என்னுடைய சேவையில் இந்த அளவிற்கு பயபக்தி இருக்கிறதோ, அங்கேதான் நான் நிரந்தரமாக காத்திருக்கிறேன். -

"என்னிடம் அனன்னியமாக சரணடைந்து என்னையே அகண்டமாக எவர் நினைத்துக் கொண்டிருக்கிறாரே, அவருடைய ருணத்தை (கடனை) என்னுடைய தலையில் ஏற்றிக்கொள்கிறேன்.  அவரைக் கைதூக்கிவிடுவதன் மூலம் அக் கடனைத் திரும்பிச் செலுத்துகிறேன்.

"எவர் எனக்கு முதலில் சமர்ப்பணம் செய்யாமல் உணவுண்பதில்லையோ - பானங்கள் அருந்துவதில்லையோ எவர் என்னை நிதித்யாஸனம் (திரும்பத் திரும்ப நினைத்தல்) செய்கிறாரோ, அவருடைய ஆதீனத்தில் (வசத்தில்) நான் வாழ்கிறேன்.-

"எவர் எனக்குப் பின்னரே பசியாறி தாகம் தீர்த்துக்கொள்கிறாரோ, எவர் எனக்கு சமானமானவர்  என்று எவரையும் அறியமாட்டாரோ, அவரையே நான் எப்பொழுதும் தியானத்தில் வைக்கிறேன்; நான் அவருடைய ஆதீனத்தில் வாழ்கிறேன். -

"தந்தை, தாயார், உறவினர்கள், நண்பர்கள், மனைவி , மக்கள் இவர்களிடமிருந்து எவர் பிரிந்துவிட்டாரோ , அவ்வகையானவர் என்னுடைய பாதங்களின்மீது காதல் கொள்கிறார். -

"மழைக்காலத்தில் பல்வேறு நதிகள் பெருக்கெடுத்துக் கரைபுரண்டு ஓடி சமுத்திரத்தை சந்திக்கின்றன. நதிகள் என்னும் அடையாளத்தைத் துறந்துவிட்டு மஹா சமுத்திரமாகவே ஆகிவிடுகின்றன. -

"நதிகளின் உருவங்கள் மறைந்துபோகின்றன; பெயர்களும் மறைந்துபோகின்றன. நீர்பெருக்கு மாத்திரமே சமுத்திரத்துடன் கலந்துவிடுகிறது.  நதிக்கும் சமுத்திரத்துக்கும் திருமணம் நிகழ்கிறது. இரண்டென்னும் நிலை, ஒருமையில் காணாமற்போகிறது. -

 


 

Thursday, 5 September 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


இந்த விவரணத்தில் ஜோக்கின் பெயர் எழுந்ததால், பிரதானமான காதையைச் சொல்லும்போது, ஓர் உபகாதை ஞாபகத்திற்கு வருகிறது. காதையை கேட்டால், அதன் அபூர்வத்தையும் சாயியின் பிரேமையையும் காண்பீர்கள் .

சுருக்கமான உரையாடலாக இருப்பினும், குருபக்தர்களுக்குச் சிறந்த போதனையான அமைந்திருக்கிறது. துறவு மனப்பான்மை உள்ளவன் பாக்கியசாலி. சம்சார பந்தத்தில் உழல்பவன் அபாக்கியவான்.

ஒருசமயம் ஜோக் பாபாவைக் கேட்டார், "நான் ஏன் இன்னும் இந் நிலையில் இருக்கிறேன்? ஏன் என்னுடைய தலையெழுத்து இவ்வளவு விசித்திரமாக அமைந்திருக்கிறது? எப்பொழுது நான் நல்ல நிலையை அடைவேன்?-

"தேவா! பல ஆண்டுகளாக வேறெதிலும் நாட்டமின்றி உங்களுக்கு சேவை செய்யும் நல்வாய்ப்பை பெற்றிருக்கிறேன். இருந்தபோதிலும் சஞ்சலப்படும் என் சித்தத்திற்கு ஓய்வும் இல்லை; அமைதியும் இல்லை. இது ஏன்?

"நான் எப்படி இவ்வளவு துர்ப்பாக்கியம் பிடித்தவனாக இருக்கமுடியும்? ஒரு ஞானியின் சங்கத்தில் நான் எப்பொழுது பெற்ற பேறு இதுதானா? சத்சங்கத்தால் விளையும் பரிணாம நற்பயனை நான் எப்பொழுது அனுபவிப்பேன்?

பக்தரின் விநயமான வேண்டுகோளைக் கேட்டபின் சமர்த்த சாயி பரம பிரீதியுடன் என்ன பதில் கூறினார் என்பதை அமைதியான மனதுடன் கேளுங்கள்.

"உம்முடைய கெடுவினைகள் அனைத்தும் எரிந்துபோனபின், புண்ணிய பாவங்கள் அனைத்தும் பொடிப்பொடியானபின், உமது தோளிலிருந்த ஒரு ஜோலி (பிச்சையெடுக்கும் பை) தொங்குவதைக் காணும்போது தான், நான் உம்மை பாக்யசாலியாக கருதுவேன்.-

"உலகியல் பற்றுகளைத் துறந்து, எந்நேரமும் பகவத் - பக்தியில் மூழ்கி, கடைசியில் ஆசாபாசங்களை முழுக்கத் துண்டித்துவிட்டு நிலையில்தான், உம்மை நான் பாக்யசாலியாக கருதுவேன்.-

"உலக விஷயங்களில் அபரிமிதமான ஆசை அறவே ஒழிக்கப்படவேண்டியது என்பதை ஏற்று, நான், நீ என்று பேதம் பார்ப்பதை அயோக்கியமான செயலாகக் கருதி விலக்கி, சுவையுணர்வையும் காமத்தையும் வெல்லுவதை எப்பொழுது யோக்கியமான செயலாக ஏற்றுக்கொள்கிறீரோ, அப்பொழுதுதான் உம்மை நான் பாக்கியசாலியாக கருதுவேன்".

இவ்வாறாக, சிறிது காலத்திற்குப் பிறகு பாபாவின் திருவாய்மொழி உண்மையாயிற்று. உரையாடலில் விவரிக்கப்பட்ட துறவு மனப்பான்மை ஜோகிற்கு சதகுருவின் கிருபையால் ஸித்தியாகியது.

புத்திர, சந்ததி பாசங்களிலிருந்து ஏற்கெனெவே விடுபட்டிருந்த அவருக்கு, மனைவியும் நற்கதியடைந்தாள். துறவு மனப்பான்மை இயல்பாக மலர்ந்தது. தேகத்தைச் சாய்ப்பதற்கு முன்னரே சந்நியாசம் ஏற்றுக்கொண்டார்.

இந்த ஜோக் ஒரு பாக்கியவான். சாயியின் திருவாய்மொழி சத்தியமாயிற்று. சந்நியாச தர்மத்தை ஏற்றுக் கடைசியில் பிரம்மத்துடன் ஐக்கியமானார். 



Thursday, 29 August 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பக்த சிரேஷ்டரான (தலைசிறந்த பக்தரான) உபாஸனி, ஜோக் குடன் பவித்திரமான பாகீரதி (கங்கை ) நதிக்கரைக்குச் சென்று ஹோமங்களையும் ஹவன்களையும் செய்தார்.

சாஸ்திர விதிகளின்படி பிராமணர்களுக்கு போஜனம் சீவித்து, அண்ணா சந்தர்ப்பணம் (பல ஜனங்களுக்கு அன்னமளித்து மகிழ்வித்தல்) செய்து, தக்ஷிணையும் அளித்தனர். பின்னர் இருவரும் திரும்பி வந்தனர்.

இப்பொழுது பாபாவும் இல்லை; சம்வாதமும் (உரையாடலும்) இல்லை. இந்த பேதம் நிகழ்ந்துவிட்ட போதிலும், மசூதியின் மேல் பார்வை பட்டவுடன் கடந்த காலத்தில் சுகமான உரையாடல்கள் ஞாபகத்திற்கு வருகின்றன.

பாபா எப்பொழுதும் அமர்ந்த யோகாசன நிலையில் அவரை மறுபடியும் பார்த்து, ஆனந்தத்தில் மெய்மறக்கச் செய்யும்படியாக, உத்தமோத்தமமான (சிறந்தவற்றில் சிறந்த) பாபாவின் உருவப்படம் ஒன்று வண்ண ஓவியமாக மசூதியில் பிரேமையுடன் நிறுவப்பட்டுள்ளது.

சாயி தேக நிவிர்த்தி அடைந்துவிட்ட போதிலும், இந்த உருவப்படத்தை தரிசனம் செய்தால் அவரை நேரில் காணும் திருப்தி ஏற்படுகிறது. பாவமுள்ள பக்தர்களுக்கு, பாபா திரும்பி வந்துவிட்டது போன்ற உணர்வும் ஏற்படுகிறது.

ஜயகர் என்ற குடும்பப் பெயர் கொண்ட சாம்ராவ் இந்த அழகிய ஓவியத்தை வரைந்தார். நிரந்தரமான நினைவை அளிக்கும்படியாக இந்த மனோஹரமான வண்ண ஓவியம் அமைந்திருக்கிறது.

பிரசித்தி பெற்ற சித்திரக்காரரான சாம்ராவ் ஜயகர் பாபாவிடம் மிகுந்த பக்தி வைத்திருந்தார். பாபவின் ஆக்கினையை அனுசரித்துச் சிந்தித்துச் செயல்பட்டிருக்கிறார்.

அவர் இம்மாதிரியான பல அழகிய சித்திரங்களை தம்முடைய கைகளால் வரைந்திருக்கிறார். அவையனைத்தும் பக்தர்களின் இல்லங்களில் தியானம் நிலைப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

ஞானிகள் என்றும் மரணமடைவதில்லை. இது முன்னரே அநேக முறைகள் விவரணம் செய்யப்பட்டுவிட்டது. இது உங்களுக்கு ஞாபகமிருக்கும். மேலும் தெளிவு படுத்தவேண்டிய அவசியம் இல்லை.

இன்று பாபா தேகத்துடன் இல்லை. ஆயினும், அவரை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு, தேகத்துடன் இருந்தபோது செய்தது போலவே நன்மைகள் பல செய்து பாதுகாத்துவைக்கிறார்.

அவர் யாரிடமாவது ஏதாவது சொல்லியிருக்கலாம்; அது இன்னும் அனுபவமாகாமலும் இருக்கலாம், அவர் தேகத்தை விடுத்துவிட்டதால், அவை வெறும் வார்த்தைகள் என்று நினைக்க வேண்டா.

ஏனெனில், பாபாவின் திருவாய்மொழி பிரம்மதேவரின் எழுத்துக்கு (தலையெழுத்துக்கு) ஒப்பாகும்.  நம்பிக்கையுடன் அனுபவத்திற்காகக் காத்திருங்கள். உடனே நடக்காவிட்டாலும் காலப்போக்கில் நிச்சயமாக நடக்கும்.

 


 

Thursday, 22 August 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் சாயீ நிரம்பியிருக்கிறார். சாயீ எல்லாருடைய அகத்திலும் புறத்திலும் இருக்கிறார். உம்முள்ளேயும் என்னுள்ளேயும் நிரந்தரமாக வசிக்கிறார்.

சமர்த்த சாயீ தீனதயாளர்; பாவத்துடன் பக்தி செய்து வணங்குபவர்களைப் பாலனம் செய்பவர் (பாதுகாப்பவர்); பிரேமைக்காகப் பசியோடிருப்பவர்; அனைத்து மக்களுக்கும் சிநேகிதர்.

நம் ஊனக்கண்களுக்குத் தெரியாதபோதிலும், அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். தம்மளவில் சூட்சுமமாக இருந்தபோதிலும், நம்மை அவர்பால் வசீகரித்து இழுக்கிறார்.

அவருடைய மரணம் ஒரு பாசாங்கு மட்டுமே; நம்மை ஏமாற்றும் ஓர் உத்தியே. பூரணத்துவம் பெட்ரா அவர் பல வேஷங்களில் நடிக்கிறார். உடலை இழந்த நிலையிலிருந்து அவர் அழிவற்ற நிலைக்குச் சென்றுவிட்டார்.

அவருடைய இதயத்தில் கனிந்த அனுராகத்தை (அபரிமிதமான அன்பை - காதலை) கெட்டியாகப் பற்றிக்கொள்வோமாக ! அவருடைய மார்க்கத்தை நன்கு புரிந்துகொண்டு காரிய சாதனை பெறுவோமாக!

சிறந்த மனோபாவத்துடன் அவரைப் பூஜை செய்வோம். பக்திபாவத்துடன் அவரை நினைவில் இருத்துவோம்.  சகலமான பக்தர்களுக்கும் அனுபவம் கிட்டும். அவர் எங்கும் வியாபித்திருப்பதை பக்தர்கள் உணர்வார்கள்.

ஸ்ருஷ்டி (ஆக்கல்), ஸ்திதி (காத்தல்), லயம் (அழித்தல்) ஆகியவற்றால் ஆத்மாவுக்குப் பயம் ஏதுமில்லை. அது சதாசர்வகாலமும் ஞானமயமாக இருக்கிறது. விகாரங்களுக்கு (தீக்குணங்களுக்கு ) இடமளிப்பதில்லை.

ஆத்மா சுவர்ணம் (பொன்) போன்றது. அலங்காரம் ஏதும் இல்லாவிட்டாலும் சுவர்ணமாகவே இருக்கும். பலவிதமான ஆபரணங்களாக மாற்றப்பட்டாலும் தன்னுடைய 'பொன் தன்மையை' இழக்காது.

எப் பெயர்கொண்ட நகையையும் உருத்தெரியாமல் உருக்கிப் பொன்னாக ஆக்கிவிடலாம். ஆனாலும், பொன்னின் குணம் மாறுபடாது. பொன்னுக்கென்னவோ (பொன்னுக்கு உபமானம் செய்யப்பட்ட ஆத்மாவுக்கென்னவோ) உருவமும் இல்லை; உருவத்தால் ஏற்படும் பெயரும் இல்லை.

அந்தப் பொன்னில் இந்த ஹேமாட் பந்த் முழுக்க முழுக்கக் கரைந்து சீரிய பண்புகள் நிறைந்த சாயீ பாதங்களில் அமிழ்ந்து பிரளயகாலம் வரை வசிப்பானாக!

பின்னர், பதின்மூன்றாவது நாள் ஈமச்சடங்கு செய்யப்பட்டது. பக்த ரத்தினமாகிய பாலா சாஹேப் பாடே, கிராமத்துப் பிராமணர்களைக் கூட்டி உத்தரகிரியைச் செய்ய ஆரம்பித்தார்.

ஆடைகளுடன்  ஸ்நானம் செய்துவிட்டுத் தம்முடைய கைகளாலேயே திலாஞ்சலி, தில (எள்) தர்ப்பணம், பிண்டப்பிரதானம் ஆகிய கிரியைகளைச் செய்தார்.

சபிண்டீகரணம் (12 ஆம் நாள் சடங்கு) போன்ற உத்தரகிரியைகளும் மாசிகங்களும் (ஒரு வருடம் முடியும்வரை மாதாமாதம் செய்யவேண்டிய சடங்குகளும்) சாஸ்திர விதிகளின் படியும் தர்மநியாயப் பிரமாணத்தின்படியும் சரியான சமயங்களில் செய்யப்பட்டன. 



Thursday, 15 August 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


வெறும் தேஹந்தான் சாயி என்று கருதினால், உள்ளுறையும் பொருளுக்கும் பெயரில்லாமல் போகிறது; அந்த வஸ்துவுக்கு உருவமும் இல்லை. ஸ்ரீ சாயி உருவத்திற்கு அப்பாற்பட்டவர்.

தேகம் நசித்துப் போகக்கூடியது. தேகத்தில் உறையும் வாஸ்து சுதந்திரமுள்ளது அழிவிற்கு அப்பாற்பட்டது. தேஹம் பஞ்சபூதங்களால் ஆனது; உள்ளுறையும் வஸ்துவோ ஆதியந்தமில்லாதது.

தேஹத்தினுள்ளே இருப்பது சுத்த சத்துவ சைதன்யம். அதுவே பௌதீக இந்திரியங்களை இயக்கம் பிரம்மம். அந்த வஸ்துவுக்கு சாயீ என்று பெயர்.

அதுவென்னவோ இந்திரியங்களுக்கு அப்பாற்பட்டது. ஜடமான இந்திரியங்கள் அதை அறிந்துகொள்ளமுடியாது. ஆனால், அதுதான் இந்திரியங்களை செயல்படும்படி ஊக்குவிக்கிறது.  பிராண ஓட்டத்தைச் சுழலச் செய்கிறது.

அந்த சக்தியின் பெயர் சாயீ.  அது இல்லாத இடமேயில்லை. அது பத்துத் திசைகளிலும் நிரம்பியிருக்கிறது. நகரும் நகராப் பொருள்கள் அனைத்தையும் வியாபித்திருக்கிறது.

சாயியின் அவதார நிலைமையும் இதுவே. ஆதியில் எது தோன்றாநிலையில் இருந்ததோ, அது ஒரு பெயரையும் உருவத்தையும் ஏற்றுக்கொண்டு தோன்றிய நிலைக்கு மாறியது. வேலை முடிந்த பிறகு மீண்டும் தோன்றாநிலைக்குத் திரும்பிவிட்டது.

அவதாரம் ஏற்றுக்கொண்டு வந்தவர்கள் எல்லாரும் எவ்வாறு ஒரு காலகட்டத்தில் அவதார தேஹத்தைத் துறந்து ஆதியந்தமில்லாத இருப்பிடத்திற்குத் திரும்பினரோ, அவ்வாறே சாயியும் செய்தார்.

மறைந்துவிடவேண்டும் என்ற எண்ணம் மனத்தில் தோன்றியவுடன், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி, 'பர்வத யாத்திரையாகச் செல்கிறேன்' என்று சொல்லிவிட்டுச் சட்டென்று காண்காபூரிலிருந்து கிளம்பிவிட்டார்.

பக்தர்கள் தடுக்க முயன்றபோது அவர்களுக்கு ஆறுதல் சொன்னார், "நான் போவது உலகியல் ரீதியில்தான்; காண்காபூரை விட்டு நான் போகமாட்டேன்.-

"கிருஷ்ணா நதியில் காலையில் நீராடிவிட்டு பிந்து க்ஷேத்ரத்தில் அனுஷ்டானத்தை (சந்தியா வந்தனம், ஜபம் போன்ற தினமும் செய்யவேண்டிய தொழுகைகளை) முடித்துக்கொண்டு மடத்திற்கு வந்து என்னுடைய பாதுகைகளை பூஜைசெய்யுங்கள். நான் அங்கு நிரந்தரமாக வாசம் செய்கிறேன்".

அவ்வாறே சாயிபாபாவின் வழியும்! அவருடைய மரணம், லோகாசாரம் (உலகியல் நடப்பு) மட்டுமே. பார்வை பெற்றால், நகரும் நகர பொருள்கள் அனைத்தினுள்ளும் ஸ்ரீசாயியைப் பார்க்கலாம்.

ஒருவருடைய வழிபாட்டு நிலை எப்படியோ, அப்படியே அவருக்குக் கிடைக்கும் நித்திய அனுபவமும் அமைகிறது. உள்ளத்தில் சந்தேகம் எதையும் வைக்கவேண்டா; சாயி மரணத்திற்கு அப்பாற்பட்டவர். 



Thursday, 8 August 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


கொஞ்சங்கொஞ்சமாகக் கண்கள் மலர்ந்தன. உடலின் அங்கங்கள் மெதுவாக அசைய ஆரம்பித்தன. சுவாசமும் திரும்பியது; வயிறு மேலும் கீழும் போய்வருவது நன்கு புலனாகியது.

முகத்தில் மலர்ச்சி உதயமாகியது. கண்கள் முழுமையாகத் திறந்தன. அசைவற்ற நிலை மறைந்தது. உயிர்த்து எழுந்ததன் லக்ஷணங்கள் (அடையாளங்கள்) நன்கு தெரிந்தன.

மறந்துபோன தேகவுணர்வு மறுபடியும் ஞாபகத்திற்கு வந்தது போலவும், காணாமற்போன புதையல் திரும்பக் கிடைத்தது போலவும், இந் நிகழ்ச்சி தோன்றியது. பொக்கிஷம் மறுபடியும் திறந்துகொண்டது!

சாயி  விழித்தெழுந்ததுகண்டு எல்லாரும் மகிழ்ச்சியடைந்தனர். தெய்வாதீனமாக ஒரு விக்கினம் உடைந்தது கண்டு ஜனங்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

பகத் (மகால்சாபதி) பாபாவின் முகத்தைக் குதூகலத்துடன் பார்த்தார். சாயியும் மௌனமாகத் தலையை அசைத்தார். மௌலவீயும் பக்கீரும் முகம் வெளுத்தனர். இவ்வாறாக, ஒரு பயங்கரமான நிகழ்வு தவிர்க்கப்பட்டது.

மௌலவீயின் துராக்கிரஹத்தைக் (அத்து மீறும் செயலைக்) கண்டு, பாபாவின் ஆணையைப் பாலனம் செய்யாது பகத் விட்டிருந்தாலோ, அல்லது தமது உறுதிப்பாட்டிலிருந்து லவலேசம் (சிறிதளவு)தளர்ந்திருந்தாலோ, பயங்கரமான விளைவு ஏற்பட்டிருக்கும்.

43 வருஷங்களுக்கு முன்னரே சமாதி நடந்துவிட்டிருக்கும். அவருடன் உரையாடுவது எங்கே? மனோஹரமான தரிசனந்தான் எங்கே?

உலகத்திற்கு உபகாரம் என்ற காரணத்துக்காகவே சாயீ சமாதி நிலையை விடுத்து சாதாரண நிலைக்குத் திரும்பி வந்தார். பக்த ஜனங்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

பக்தர்களின் நன்மைக்காக உழைத்துக் களைப்படைந்தவர் பரமானந்தத்துடன் லயிப்பதற்காகச் சென்றார். ஆர் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே விழித்தெழுவது எப்படி சாத்தியம்? அவருடைய லீலை அளப்பறியது!

பாபா இவ்வாறு இயல்பான நிலைக்குத் திரும்பியது கண்டு பக்த ஜனங்கள் ஆனந்தமடைந்தனர். தரிசனம் செய்யக் குதித்தோடி முண்டியடித்தனர். இவ்வாறாக, புனருஜீவினம் (மீண்டும் உயிர்பெற்று எழுதல்) அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

ஆக, பாபாவின் நிர்யாணம்பற்றிய நிறைவுபெறாத காதை, இன்று என் நினைவுக்கு எட்டியபடி சம்பூர்ணமாக எடுத்துரைக்கப்பட்டுவிட்டது.

கதைகேட்கும் எல்லாருக்கும் சொல்கிறேன். ஒருகணம் உங்கள் மனத்தையே கேள்வி கேளுங்கள். நாம் ஏன் மகிழ்ச்சியடையவோ சோகமடையவோ வேண்டும்? இரண்டுமே ஆதாரமற்றதும் விவேகமற்றதுமான செயல்கள் அல்லவோ?

தேகமும் இந்திரியங்களும் பொருந்திய ஓர் அமைப்பு - மூன்றரை முழ நீளமுள்ள பாரவண்டி - இது மட்டும்தானா நமது சாயி? இந்த பிரமையை வேருடன் களைந்தெறியுங்கள். 



Thursday, 1 August 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


மூச்சும் இல்லை: நாடித் துடிப்பும் இல்லத்தில். உயிர் உடலைத் துறந்துவிட்டாற்போல இருந்தது. மக்களுக்கு அது ஒரு பயங்கரமான நிலைமையாகத் தெரிந்தது. பாபாவுக்கோ அது சுகம் நிறைந்த நிலைமையாக அமைந்தது.

இதன் பிறகு, எப்பொழுதுமே உஷார் மிகுந்த மகால்சாபதி பாபாவின் தலையை மடியில் வைத்துக்கொண்டு இரவுபகலாக விழித்திருந்து பாபாவைப் பாதுகாத்தார்.

'சமாதிக்குழி தோண்டுங்கள்' என்ற சாயியின் திருவாய்மொழியாகவே வந்திருந்தபோதிலும், எவருக்கும் அந்தக் காரியத்தை செய்ய மனம் வரவில்லை.

கிராமத்து சமத்த மக்களும் பாபாவின் சமாதி நிலையைப் பார்க்க அங்கே குழுமினர்; பார்த்து வியப்படைந்தனர். மகால்சாபதி பாபாவின் தலையை மடியிலிருந்து கீழே இறக்க மறுத்துவிட்டார்!

'திடீரென்று பிராணன் போய்விட்டதைப் பார்த்து நாமெல்லாம் அதிர்ச்சியுற்றுக் கல்லாய்ச் சமைந்துபோய்விடுவோம் என்று நினைத்து, மூன்று நாள்களுக்குத் தம்மைப் பாதுகாக்கும்படி சொன்னார். சாயி நம்மை ஏமாற்றிவிட்டார்.' மக்கள் இவ்வாறு நினைத்தனர்;

சுவாசம் நின்றுவிட்டது; இந்திரியங்கள் சம்பந்தம் இழந்துவிட்டன; உயிரோட்டத்தின் அறிகுறியே இல்லை; உயிரொளி மங்கிவிட்டது.

வெளியுலகத்தைப்பற்றிய உணர்வே இல்லை; வாக்கு திட மௌனம் சாதித்தது. 'எப்படி மறுபடியும் பிரக்ங்கை  திரும்பப்போகிறது!' என்று வியந்து எல்லாரும் ஆழ்ந்த கவலையுற்றனர்.

சரீரம் உணர்வு பெறவில்லை. இரண்டு நாள்கள் இவ்வாறு கழிந்தன. மௌலவீ, முல்லா, பக்கீர் - அனைவரும் அங்கு வந்து அடுத்து என்ன செய்வதென்று யோசித்தனர்.

ஆப்பா குல்கர்னியும் காசீராமும் வந்தனர். பாபா நிஜமான சுகம் தரும் இடத்திற்குச் சென்றுவிட்டார் என்று உறுதியான முடிவெடுத்தனர். ஆகவே, தேகத்தை நல்லடக்கம் செய்யவேண்டும்.

யாரோ ஒருவர் சொன்னார், "கொஞ்சம் பொறுங்கள்; இந்த அவசரம் நன்றன்று; பாபா மற்ற மனிதர்களைப் போல அல்லர்; பாபாவின் வார்த்தைகள் குறி தவறாதவை ".

உடனே மற்றொருவர் பதில் சொன்னார், "சில்லிட்டுப்போன உடம்பில் உயிர் எப்படித் திரும்பவும் நுழையும்? எவ்வளவு, சிந்திக்கும் திறமையற்ற மக்கள் இவர்களெல்லாம்!-

"சுட்டிக்காட்டப்பட்ட இடத்தில் சவக்குழி தோண்டுங்கள். எல்லா மக்களையும் கூட்டிவாருங்கள். நேரங்கடத்தாது  நல்லடக்கம் செய்யுங்கள். வேண்டியவை அனைத்தையும் தயார் செய்யுங்கள்."

இவ்விதமான வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. மூன்று நாள்கள் கழிந்தன. பின்னர், அதிகாலை 3 மணிக்கு பாபா உயிர்த்தெழும் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. 




Thursday, 25 July 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


முதற்பார்வையில் இந்த சந்தேகம் எவருடைய மனத்திலும் எழலாம். முதலில் பாபாவுக்கு வணக்கம் செலுத்திவிட்டு விளக்கம் அளிப்பதற்கு முயல்கிறேன்.

உலகை எவ்வாறு உத்தாரணம் செய்யலாம். தீனர்களையும் பாமரர்களையும் எப்படிக் கரை சேர்க்கலாம், என்ற நோக்கத்துடன்தான் ஞானிகள் அவதாரம் செய்கின்றனர். செய்யவேண்டியது வேறொன்றும் அவர்களுக்கு இல்லை.

ஞானிகள் சிரிப்பதும் அழுவதும் ஆடுவதும் பாடுவதும் உலகியல் நாட்டியம். இதுவே இங்கே சாரம்.

முனிவர்கள் பூரண ஞானிகள்; எல்லா சங்கல்பங்களும் நிறைவேறியவர்கள். ஆயினும், உலகமக்களை உய்விப்பதற்காகக் கர்ம மார்க்கத்தில் (செயல் புரிய) உந்தப்படுகின்றனர்.

1918 ஆம் ஆண்டு நடந்த நிர்ணயத்திற்கு 32 ஆண்டுகளுக்கு முன்னரே சமாதி நடந்துவிட்டிருக்கும். ஆனால், மகல்சாபதியின் மிக்கது தெளிவான சித்தம் அந்த அமங்கல நிகழ்ச்சியை நடக்காமல் தடுத்து நிறுத்திவிட்டது.

அந்த அமங்கல நிகழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டிருக்கவிட்டால், மக்கள் எங்கனம் சாயியின் நலந்தரும் கூட்டுறவை அனுபவித்திருப்பர்? அந்தக் கெட்டவேளையின் விளைவாக இன்றைக்கு 43  ஆண்டுகளுக்கு முன்பாகவே பாபா நம்மிடமிருந்து பிரிந்துவிட்டிருப்பார்.

அன்று மார்கழி மாதத்துப் பௌர்ணமி நாள். பாபா ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். தேகத்தின் வேதனையை சகித்துக்கொள்வதற்காக ஆத்மாவை பாபா பிரம்மாண்டத்தில் வைத்தார் (நிர்விகல்ப சமாதி நிலை).

பாபா எல்லாரிடமும் சொல்லியிருந்தார், "நான் இப்பொழுதிலிருந்து மூன்று நாள்களுக்கு என்னுடைய பிராணனை பிரம்மாண்டத்தில் வைக்கப்போகிறேன். என்னை எழுப்ப முயலாதீர்".

சபாமண்டபத்தின் ஒரு மூலையை விரலால் சுட்டிகாட்டிச் சொன்னார், "அங்கு சமாதிக்குழி தோண்டி, என்னை அவ்விடத்தில் வைத்துவிடுங்கள்".

தாமே மகால்சாபதியிடம் அழுத்திருத்தமாகச் சொன்னார், "மூன்று நாள்கள்வரை என்னைப் பிரிந்துவிடாதீர்; சிரத்தை தவறாதீர்.-

"அந்த இடத்தை சமாதியென்று அடையாளம் காட்ட இரண்டு கொடிகளை ஏற்றும்". இவ்வாறு கூறியபடியே பாபா பிராணனை பிரமாண்டத்தில் வைத்தார்.

திடீரென்று ஏற்பட்ட மயக்கத்தால் தேகம் அசைவற்றுக் கீழே விழுந்தது. மகால்சாபதி பாபாவின் தலையைத் தம் மடியில் ஏந்திக்கொண்டார். இதர மக்கள் அனைவரும் ஆசையைத் துறந்தனர். (நம்பிக்கை இழந்தனர்.)

இது இரவு நேரத்தில் நிகழ்ந்தது. அப்பொழுது மணி பத்து. 'அய்யகோ! இதென்ன திடீரென்று வந்த பெருந்துன்பம்!' என்று நினைத்து மக்கள் ஸ்தம்பித்துப் (செயலிழந்து) போயினர்.   



Thursday, 18 July 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

எத்தனையோ ஆண்டுகளாக பாபாவிடம் ஒரு செங்கல் இருந்து வந்தது. யோகாசனமாக அமரும்போது பாபா அச் செங்கல்லின் மீது ஒரு கையை வைத்துக்கொள்வார்.

ஏகாந்தமான இரவுநேரத்தில் அச் செங்கல்லின்மீது ஆதாரமாக ஒரு கையை ஊன்றிக்கொண்டு அமைதியான மனத்துடன் யோகாசனத்தில் பாபா அமர்ந்திருப்பார்.

இந்த கிரமம் எத்தனையோ ஆண்டுகளாக சிரமமின்றியும் தடங்கலின்றியும் நடந்துவந்தது. கிரமம் உடையவேண்டுமென்றும் எதிர்பாராதது நடக்கவேண்டுமென்றும் விதிக்கப்பட்டிருக்கும்போது, எவ்வளவு முறைதவறாத நியமமாயினும், அது சொல்லாமற் போகிறது!

ஒரு சமயம் பாபா மசூதியில் இல்லாதிருந்தபோது ஒரு பையன் தரையைப் பெருக்கிக்கொண்டிருந்தான். அடியில் சுத்தமாகப் பெருக்கவேண்டும் என்பதற்காகச் செங்கல்லைக் கொஞ்சம் தூக்கினான்.

உடையவேண்டிய வேளை வந்துவிட்டபடியால், செங்கல் பையனுடைய கையிலிருந்து நழுவியது. தடாலென்று கீழே விழுந்து உடனே இரண்டு துண்டுகளாக உடைந்தது.

இதுபற்றிக் கேள்வியுற்ற பாபா சொன்னார், "உடைந்தது செங்கல் அன்று; என்னுடைய விதி உடைந்துவிட்டது." இவ்வாறு கூறியபின் பாபா மிகவும் கொந்தளிப்படைந்தார். நேத்திரங்களிலிருந்து துக்கக்கண்ணீர் வடிந்தது.

கையை ஊன்றிக்கொண்டு தினமும் யோகாசனத்தில் அமரும் செங்கல் உடைந்தபோது, அவருடைய இதயமும் உடைந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது.

எத்தனையோ ஆண்டுகளாக யோகாசனத்திற்கு மூலபீடமாக விளங்கிய பழைய செங்கல் இவ்வாறு திடீரென்று உடைந்தது கண்டு, அவருக்கு மசூதியே வெறிச்சோடிப்போனது போலத் தெரிந்தது.

தம்முடைய பிராணனைவிட அதிகமாக நேசித்த செங்கல்லை அந்த நிலையில் பார்த்த பாபா மனமுடைந்துபோனார். அவருடைய சித்தம் கலங்கியது.

அந்தச் செங்கல்லின்மீது தான் பாபா கையை ஊன்றிக்கொண்டு யோகாசனத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் யோகம் பயில்வார். அதனிடம் அவர் பெரும்பிரேமை வைத்திருந்தது இயல்பே.

"எதனுடைய கூட்டுறவில் ஆத்மசிந்தனை செய்தேனோ, எதை என் உயிருக்குயிராக நேசித்தேனோ, எது என்னுடைய சங்கத்திலிருந்து விடுபட்டுவிட்டதோ, அது இல்லாமல் நானும் இருக்கமுடியாது.-

"அந்தச் செங்கல், இந்த ஜென்மத்து நண்பன், என்னைப் புறக்கணித்துவிட்டுப் போய்விட்டது". இவ்வாறு அதன் நற்குணங்களை ஞாபகப்படுத்திக்கொண்டு பாபா அழ ஆரம்பித்தார்.

ஒரு சந்தேகம் இங்கு எழுவது சகஜமே (இயல்பே). செங்கல் ஒருகணத்தில் அழியக்கூடிய பொருள்தானே? சோகப்படுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ன பேசுவார்கள்?

 


 

Thursday, 11 July 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"மேலும், இங்கு நாம் உட்கார்ந்து, எழுந்து, நடமாடும்போது நம்முடைய சுகதுக்கங்கள்பற்றி உரையாடுவோம். இவ்விடத்திலேயே ஆண் பெண் அனைத்து மக்களும் மன அமைதி பெறுவர்."

பாபா இதைச் சொன்ன காலத்தில், ஏதோ பேசவேண்டுமென்பதற்காக பாபா இவ்வாறு பேசினார் என்றே அனைவரும் நினைத்தனர். பிற்காலத்தில் நேரிடை அனுபவம் ஏற்பட்டபோது அவ் வார்த்தைகளின் சூக்குமப் பொருளைப் புரிந்துகொண்டனர்.

பாபா காலமானதால் முரளீதரர் சிலை ஸ்தாபனம் நடக்கவில்லை. அதற்குப் பதிலாக சாயீ என்னும் பொக்கிஷத்தைப் பாதுகாக்க அவ்விடமே உத்தமமான தலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

"இந்த சரீரத்தை வாடாவில் வையுங்கள்" என்ற பாபாவின் கடைசி உத்தரவே இறுதி முடிவாயிற்று. பாபாவே முரளீதரர் ஆனார்!

ஸ்ரீமான் புட்டி  இந்த முடிவை விரும்பினார். இந்துக்களும் முசல்மான்களும் அனைத்து மக்களும் இந்தத் திட்டத்தில் ராஜியாயினர்  (சமாதானமாகி ஒன்றுபட்டனர்), புட்டிவாடா  ஒரு நல்ல காரியத்திற்கு உபயோகமாயிற்று.

அவ்வளவு விலையுயர்த்த மாளிகை இருந்தபோது, பாபாவின் தேகத்தை வேறெங்காவது அடக்கம் செய்திருந்தால், அந்த மாளிகை சூனியமாகிப் போயிருக்கும், பாழடைந்த காலிக் கட்டடமாக காட்சி அளித்திருக்கும்.

இன்று அங்கு நடக்கும் பூஜைக்கும் பஜனைக்கு கதாதீர்த்தனத்துக்கும் ஆன்மீகப் பேருரைக்கும், அதிதியாக அங்கு வரும் பக்தர்களுக்கு செய்யப்படும் அன்னதானத்திற்கும், அனைத்திற்கும் சாயியே காரணம்.

இன்று அங்கு நடக்கும் அன்னசந்தர்ப்பணம் (பல மக்களுக்கு அன்னமிட்டு மகிழ்வித்தல்), நாட்டின் பல பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் செய்யும் லகுருத்ர-மஹாருத்ர பாராயணம், ஹோமங்கள், இவையனைத்திற்கும் சாயியே காரணம்.

ஆகவே, ஒரு ஞானியின் திருவாய்மொழியைக் காதுகளால் கேட்டு ஒவ்வொரு எழுத்தையும் கவனத்தில் வைக்கவேண்டும். ஏதோ சொல்கிறார் என்றெண்ணி அச் சொற்களை அவமதிக்கவோ கைவிடவோ செய்யாதீர்.

ஆரம்பத்தில் முட்டாள்தனமாகவும் துர்போதனையாகவுங்க்கூட தோன்றலாம். காலம் செல்ல செல்ல அவற்றின் உட்கருத்து விளங்கும்.

தேகம் விழுவதற்கு சில நாள்களுக்கு முன்னர், ஷிர்டியின் மசூதியில், வரப்போகும் நிகழ்ச்சியைக் கோடிகாட்டும்  வகையில் சில துர்ச்சகுனங்கள் நிகழ்ந்தன.

அவற்றில் ஒன்றை மட்டும் கேட்பவர்களுக்கு தெரியப்படுத்துகிறேன். ஏனெனில், அவை அனைத்தையும்  விவரமாகச் சொல்லப் புகுந்தால் இந்த நூல் மிக விஸ்தாரமானதாக ஆகிவிடும். 




Thursday, 4 July 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

அவ்வாறான சூழ்நிலையிலும் உள்ளுக்குள் விழிப்புணர்வுடன் இருந்த பாபா, மீண்டும் தேஹவுணர்வு பெற்று மக்களின் கவலையை அகற்றியதும், இப்பொழுது விரிவாக எடுத்துரைக்கப்படும்.

கதைகேட்பவர்களே, இந்தக் கதைகள் அனைத்தையும் கேட்கும்போது பிரேம பாவத்துடன் கேளுங்கள். கேட்கும்போது உணர்ச்சி தொண்டையை அடைக்கும்; உங்களுடைய சித்தம் ஆனந்தமடையும்.

இவை வெறும் கதைகளல்ல. சாயீ என்னும் விலைமதிப்பற்ற ரத்தினத்தைக் காப்பதில் வைத்திருக்கும் பெட்டகம். பிரேமபூர்வமாகத் திறந்து உள்ளே பாருங்கள்; சுகத்தை அளிக்கும் தரிசனத்தை அனுபவியுங்கள்.

இந்த அத்தியாயங்களுக்குள் சாயிநாதர் பூரணமாக நிறைந்திருப்பதைக் காண்பீர்கள். காது கொடுத்துக் கேட்டால், மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறும். நினைவுக்கு கொண்டுவருவதால், நாதன் (காப்பாற்றுவோன்) உடையவர்கள் ஆவீர்கள்.

பரம உதாரத்துவத்துடன் (பெருங்கொடை தன்மையுடன்) எவர் நடந்துகொண்டாரோ அந்த சாயியின் சரித்திரம் இது. பிரேமையுடனும் ஒருமுகப்பட்ட மனத்துடனும் கேட்பதற்குத் தயாராகுங்கள்.

இந்தப் புனிதமான கதைகளைக் கேட்கும் பக்தர்களின் மனம் திருப்தியடையாது. காரணம், கதை கேட்கும்போது உலகவாழ்வின் அல்லல்களிலிருந்து விடுபட்டு இளைப்பாறி ஆனந்தத்தால் நிரம்புகின்றனர் அல்லரோ!

மலர்ந்த மனத்தின் மகிழ்ச்சியும் சுயானந்தமும் அவர்களை எதிர்கொள்கின்றன. சர்வ சுகங்களிலும் மேன்மையான, தூய்மையான சுகம் சாயியின் கதைகள்.

எத்தனை தடவைகள் கேட்டாலும் தினமும் ஒரு நூதனம் (புதுமை) தென்படுகிறது. ரமணீயமான விஷயங்களுக்கு இது அடையாளம். ஆகவே, இந்த ஞானியின் புனிதமான கதையை வேறெதிலும் நாட்டமின்றிக் கவனத்துடன் கேளுங்கள்.

இவ்வாறாக, பூதவுடலுக்கு நற்கதியளிப்பதுபற்றி வாதித்து, வாதித்து அனைவரும் களைப்படைந்தனர். கடைசியில் என்ன நடந்ததென்று பாருங்கள்.

புட்டீ வாடாவின் பெரிய கூடத்தில் முரளீதரர் சிலையை ஸ்தாபனம் செய்வதற்காக கட்டப்பட்டிருந்த கர்ப்பகிருஹம் பாபாவின் தலம் என்று முடிவுசெய்யப்பட்டது.

ஒருகாலத்தில், கட்டடத்திற்கு அஸ்திவாரம் போடும் வேலை நடந்துகொண்டிருந்தது. அச்சமயம் பாபா லெண்டிக்குப் போனபொழுது மாதவ்ராவ் (சாமா) விநயத்துடன் விடுத்த வேண்டுகோளுக்கு பாபா தலையசைத்து அங்கீகாரம் அளித்தார்.

முரளீதரர் சிலையை ஸ்தாபனம் செய்ய கர்ப்பகிருஹ (கருவறை) வேலை நடந்துகொண்டிருந்தபோது மாதவ்ராவ் ஒரு தேங்காயை பாபாவின் கையில் வைத்து, அவருடைய அருட்பார்வையை அதன்மேல் செலுத்தும்படி வேண்டினார்.

அது சுபமுகூர்த்த வேளை என்றறிந்து பாபா சொன்னார், "தேங்காயை உடை. நாமும் அனைத்து பாலகோபாலர்களும் இவ்விடத்திலேயே காலத்தைக் கழிப்போம்.- 




Thursday, 27 June 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


இந்த வஸ்துவுக்கு மரண அவஸ்தை உண்டு என்று சொல்வது அடியோடு மாயை. காலனை வென்றவர்களை மரணம் எப்படித் துன்புறுத்த முடியும்?

பிரார்த்தம் (பிராப்தம்) என்றாலோ, சஞ்சிதம் என்றாலோ, என்னவென்று யான் அறியேன். கிரியமாணம் என்றாலும் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆயினும், குருராஜரான சாயி கருணாகரர் என்பது நன்கு தெரியும். அவரிடம் கருணை வேண்டவும் தெரியும்.

வாசனைகளின் அலைகள் நானாவிதமாகப் பொங்குவதால் மனம் சாந்தியடையமாட்டேன் என்கிறது. தேவரீர் கருணை காட்டாவிடின் இந்த ஜீவன் நிலைகொள்ளாது.

கடந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் அளித்த வாக்கை என்னால் பாலனம் (பாதுகாப்பு) செய்யமுடியவில்லை. ஆகவே, விவரணம் நிறைவடையவுமில்லை. ஆதியிலிருந்து அந்தம் வரை இப்பொழுது சம்பூர்ணமாகக் கேளுங்கள்.

அந்திமகாலம் நெருங்கிவிட்டதென்று அறிந்து ஒரு பிராமணரை ராமாயணம் வாசிக்கச் சொல்லி, பதினான்கு நாள்கள் இரவுபகலாக இடையறாது பாபா செவிமடுத்தார்.

இவ்வாறு இரண்டு ராமாயண சப்தாஹங்கள் கேட்டு முடிந்த பிறகு, விஜயதசமி நாளன்று பாபா பூதவுடலை உதிர்த்தார்.

பாபா உயிர்நீத்த பிறகு லக்ஷ்மன் மாமா பூஜை செய்ததும் ஜோக் நீராஞ்சன ஆரத்தி செய்ததும் கடந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டன.

அதன் பிறகு, பாபாவின் பூதவுடலுக்கு எங்கு, எவ்வாறு நற்கதி அளிப்பது என்பதுபற்றிய பேச்சுவார்த்தை இந்துக்களுக்கும் முஸல்மான்களுக்கும் இடையே 36  மணி நேரம் நிகழ்ந்தது.

சமாதி செய்யப்படவேண்டிய இடம் முன்கூட்டியே (பாபாவால்) திட்டப்பமிடப்பட்டது பற்றியும், எதிர்பாராதவிதமாக செங்கல் கீழே விழுந்து உடைந்த சங்கதியும், பாபா ஒருசமயம் மூன்று நாள்களுக்கு நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்த விஷயமும்,-

அது சமாதி நிலையா மரணமா என்று எல்லாரும் சந்தேகப்பட்டதுபற்றியும், சுவாசம் நின்றுபோனதைக் கண்டு மீண்டும் உயிர்பெறுதல் நடக்காத காரியம் என்று அனைவரும் தீர்மானம் செய்த விவரமும்,-

அவ்வாறு மூன்று நாள்கள் கழிந்த பிறகு பாபா மரணமடைந்துவிட்டார் என்ற முடிவுக்கு அவர்கள் வந்ததும், உத்தரகிரியை பற்றிய பேச்சு சமத்த (எல்லா) மக்களிடையே இயல்பாக எழுந்ததும்,-


 

Thursday, 20 June 2024

 44.  மஹாசமாதி


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள்.  பூஜ்ய குரு ஸ்ரீ சாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

பிரபஞ்சம் அனைத்தும் வியாபித்திருக்கும் தெய்வீகப் பேருணர்வே ! சௌக்கியங்களின் அடித்தளமே ! சகல சம்பத்துகளின் களஞ்சியமே ! கிருபை கூர்ந்து வறுமையை ஒழிப்பவரே! ஓம் நமோ ஸ்ரீ சாயி!

ஒரு தடவை உமது பாதங்களை வந்தனம் செய்தாலே எல்லாப் பாவங்களும் அழிந்துபோகின்றன . இவ்வாறிருக்கையில், பாவத்துடன் பஜனையும் பூஜையும் செய்பவர் - ஆஹா ! எவ்வளவு பாக்கியவான் ஆகிவிடுவார் !

எவருடைய புன்னகை தவழும் முகத்தைப் பார்த்தால் எல்லா சம்சார துக்கங்களும் மறந்துபோகின்றனவோ, பசியும் தாகமும் அப்பொழுதே அங்கேயே தணிந்துவிடுகின்றனவோ , அவருடைய தரிசனம் அற்புதமானதன்றோ !

எந்நேரமும் 'அல்லா மாலிக்' தியானம் செய்பவர், ஆசைகளோ அபிமானமோ இல்லாதவர், மனத்தில் பேராசையோ வாசனைகளோ (பூர்வ ஜன்ம அனுபவங்களால் ஏற்பட்ட பற்றுகள் ) இல்லாதவர், அவருடைய மஹிமையை யான் எங்கனம் வர்ணிப்பேன்?

கேடு செய்தவர்களுக்கும் நன்மை செய்யுமளவிற்கு சாந்தி எவருடைய மேல்துண்டிலும் இருக்கிறதோ, அவரை ஒரு கணமும் மறக்கலாகாது, அவரை இதயத்தில் குடிவைத்துத் தியானம் செய்யவேண்டும்.

ராமனும் கிருஷ்ணனும்  தாமரைக்கண் படைத்தவர்கள். ஞானிகளுக்கோ ஒரு கண் இருக்கலாம்; கண்களே இல்லாமலும் இருக்கலாம். தேவர்கள் உருவத்தில் சுந்தர சொரூபமானவர்கள்; ஞானிகளோ ஆனந்த சொரூபமானவர்கள்.

தேவர்களின் பார்வைக்கும் கேள்விக்கும் (அருள் வீச்சுக்கு) ஓர் எல்லையுண்டு. ஞானிகளின் கடைக்கண்பார்வைக்கு முடிவென்பது இல்லை. 'யார் எங்களை எவ்வாறு அணுகிக்கின்றனரோ, அவ்வாறே அவர்களை நாங்கள் எதிர்கொள்கிறோம்' என்பது தேவர்களின் கூற்று. ஞானிகளோ நிந்தனை செய்பவர்களுக்கும் கருணை காட்டுவர்!

ராமன், கிருஷ்ணன், சாயி. இம்மூவருள் பேதம் ஏதுமில்லை. பெயர்கள் மூன்றாயினும் வஸ்து (பொருள்) ஒன்றுதான். காலத்தால் வேறுபடினும் இம் மூவரும் ஒருவரே!

 


 

Thursday, 13 June 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பூஜைக்குத் தகுதியான சரீரம் ஜீவனுடன் இருந்தபோது பூஜை ஓர் உற்சவம் போல் நடத்தப்பட்டது. அவ்வுடல் ஜீவனை இழந்துவிட்ட போதிலும், பூஜை வைபவம் வெறும் உபசாரம் ஆகிவிடக்கூடாது.

மேலும், பாபாவை அந்த நிலையில் பார்த்த லக்ஷ்மன் மாமா ஏற்கெனவே துக்கத்தால் தாக்கப்பட்டிருந்தார். மறுபடியும் தரிசனம் செய்வது முடியாதகாரியமாதலால், கடைசிப் பூஜையைச் செய்வதற்காக வந்திருந்தார்.

கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது. சாயியின் நிலையைப் பார்த்து அவரால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. கைகளும் கால்களும் நடுங்கின. மாமாவின் மனம் உடைந்து சுக்குநூறாகியது.

ஆனபோதிலும், மூடியிருந்த கையை விரித்து பீடாவையும் தக்ஷிணையையும் அதில் வைத்தார். உடலை முன்பிருந்தவாறே மூடிவிட்டு மாமா அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர், தகுந்த நேரத்தில் பாபாசாஹேப் ஜோக் தினமும் செய்ததுபோல் மசூதியில் சாயியின் மதியநேர ஆரதியைச் செய்தார். மற்றவர்களும் அவருடன் இருந்தனர்.

இப்பொழுது, இதன் பின்னர் என்னென்ன நடந்தது என்பது அடுத்த அத்தியாயத்தில் சொல்லப்படும். மிகவும் சிறப்பான இடத்தில பாபாவின் பூதவுடலுக்குச் செய்யப்பட்ட சம்ஸ்காரங்கள் (இந்துமத சடங்குகள்) பற்றியும்,-

அவருடன் பல ஆண்டுகள் கூட்டுறவு கொண்டதும், அவரால் ஒரு நினைவுச் சின்னமாக மிகவும் நேசிக்கப்பட்டதுமான செங்கல் உடைந்து, தேகத்திற்கு முடிவு வரப்போவதை சூசகமாக காட்டிய அபசகுன நிகழ்ச்சியைப்பற்றியும்,-

கொடுமையான தேஹ அவஸ்தை காரணமாக, முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாபா பிரமாண்டத்தில் பிராணனை வைத்தார். இப்பொழுது நடந்தது போல் அப்பொழுது நடந்திருந்தால் எவ்வளவு மகத்தான பேரிழப்பு நேர்ந்திருக்கும் என்பதுபற்றியும்,-

அந்த சமயம், பக்தர் மகால்சாபதி எவ்வாறு பாபாவின் உடலை இரவுப்பகலாகப் பாதுகாத்தார் என்பதுபற்றியும், எல்லாரும் நம்பிக்கை இழந்தபோதிலும், பாபா எதிர்பாராதவிதமாக மீண்டும் உயிர்பெற்று எழுந்ததுபற்றியும் விவரிக்கப்படும்.

மரணபரியந்தம் பிரம்மச்சரியம் அனுஷ்டித்தவர் - யோகாச்சாரியார் - ஞானிகளின் சிகரமான ஞானி - அவருடைய ஐசுவரியத்தை (ஈசுவரத் தன்மையை) யாரால் விவரிக்க முடியும்?

எவருடைய மகத்துவம் அத்தகையதோ, அவரை சத்துவ பாவத்துடன் வணங்குவோமாக ! இந்த தீனன் ஹேமாட் அனன்னியமாக அவரை சரணடைகிறான்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு , சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயீ சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'மஹாசமாதி' என்னும் நாற்பத்துமூன்றாவது அத்தியாயம் முற்றும்.


ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும். 


 


Thursday, 6 June 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"பாபுசாஹெப் ஜோக் இன்று வர மாட்டார். நான் இறந்துபோய்விட்டேன் என்று அவர் புரிந்து கொண்டிருக்கிறார்.  ஆகவே, நீராவது வந்து எனக்குக் காக்கட் ஆரத்தியையும் காலப்பூஜையையும் செய்வீராக!"

லக்ஷ்மண் மாமா உடனே எழுந்து நித்தியக் கிரமங்களை முடித்துக்கொண்டு பூஜைக்கு உண்டான சாமான்களை எடுத்துக்கொண்டு பூஜை செய்வதற்குச் சரியான நேரத்தில் வந்துசேர்ந்தார்.

அவர்  ஷிர்டியின் கிராம ஜோதிடர்; தினமும் காலைநேரத்துப் பூஜையைச் செய்த மாதவராவின் (சாமாவின்) தாய்மாமன்.

லக்ஷ்மண் மாமா வைதீக நெறிகளின்படி செம்மையாகக் கர்மாக்களைச் செய்த ஒரு சிறந்த பிராமணர்.  தினமும் விடியற்காலையில் ஸ்நானம் செய்துவிட்டு தூய ஆடைகளை அணிந்துகொண்டு பாபாவை தரிசனம் செய்துகொள்வார்.

பிறகு, அவர் பாபாவின் பாதங்களை அலம்பியபின் சந்தனமும் அக்ஷதையும் இட்டு மலர்களாலும் துளசி இலைகளாலும் அர்ச்சனை செய்வார். அதன்பிறகு தூபம், தீபம், நைவேத்தியம், நீராஞ்சனம் (மஞ்சள் நீர் ஆரத்தி) ஆகிய பூஜை விதிமுறைகளைச் செய்வார். கடைசியாக தக்ஷிணையும் சமர்பிப்பார்.

பிரார்த்தனை மந்திரங்களை ஓதிக்கொண்டே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வார். பாபாவின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்ட பிறகு, எல்லாருக்கும் பிரசாதம் அளித்துவிட்டு  நெற்றியில் திலகமும் இடுவார். பின்னர் அங்கிருந்து சென்றுவிடுவார்.

அங்கிருந்து சென்று விநாயகர், சனி தேவர், உமாரமணர் (சிவன்), அஞ்சனையின் புத்திரரான ஹனுமார் ஆகிய தெய்வங்களுக்குப் பூஜை செய்வார்.

இவ்வாறாக, இந்த கிராம ஜோதிடர் கிராமதேவதைகள் அனைத்திற்கும் நித்திய பூஜை செய்தார். இப்பொழுது பாபாவின் பூதவுடலுக்கு மிகுந்த பிரேமையுடன் சடங்குகளுடன் கூடிய பூஜையைச் செய்தார்.

லக்ஷ்மண் மாமா ஆதியிலிருந்தே நிட்டையுடன் பணி செய்வார். அதோடு கூட அவருக்கு ஒரு கனவுக் காட்சியும் கிடைத்திருந்தது. ஆகவே, அவர் காகட ஆரதிக்கு வேண்டிய பொருள்களைக் கையில் எடுத்துக்கொண்டு வந்தார். சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

முகத்தை மூடியிருந்த துணியை விலக்கிவிட்டுப் பிரேமையுடன் முகத்தை உற்றுப் பார்த்தார். பிறகு, சாயியின் கைகளையும் பாதங்களையும் அலம்பியபின், ஆசமனத்துக்கும் நீரும் அளித்துவிட்டு விதிமுறைகளின்படி பூஜைசெய்தார்.

மௌலவியும் மற்ற முஸ்லீம்களும் உடலைத் தொடக்கூடாது என்று ஆட்சேபித்தனர். லக்ஷ்மண் மாமா அதை பொருட்படுத்தாது சந்தனம் இட்டபின் பூஜையை முழுமையாகச் செய்து முடித்தார்.

பூதவுடலோ, மாமா ஆராதனம் செய்துவந்த தேவர் சமர்த்த சாயியினுடையது; அது இந்துவின் உடலா, முஸ்லீமின் உடலா என்ற எண்ணம் மாமாவுக்கும் கனவிலும் ஏற்பட்டிருக்காது.