ஷிர்டி சாயி சத் சரிதம்
மாமிசம், இரத்தம் , தசைகள், ஓர் எலும்புக் கூடு, தோல் இவையெல்லாம் ஏற்றப் பட்ட பார வண்டியே மனித வுடல். மலமும் மூத்திரமும் நிறைந்த குழிகளுடன் உயிருக்குக் கவசமாக அமைந்துள்ளது.
தோல், மாமிசம், ரத்தம், சதை, கொழுப்பு, எலும்புகள், மஜ்ஜை, வாயு இவற்றுடன் பிறவி உறுப்பு, குதம் போன்ற அசிங்கமான பாகங்களுடன் சேர்ந்து அமைந்த இம்மனித வுடல் அற்பகாலமே வாழக் கூடியது
இவ்வளவு அமங்கலமானதாகவும் நசித்துப் போகக் கூடிய தாகவும் கண நேரத்தில் முடிந்து போகக் கூடியதாகவும் மனித வுடல் இருப்பினும், சர்வ மங்களங்களுக்கும் இருப்பிடமான பரமேச்வரனை அடைவதற்கு உண்டான கருவி அது ஒன்றே!
ஜனன மரணச் சுழலில் மாட்டிக்கொண்ட மானிடன் மரணத்தைப் பற்றிய கற்பனையிலும் பயத்திலுமே வாழ்நாளைக் கழிக்கிறான். ஆயினும், உயிர் பிரியும்போது கண நேரத்தில் பறந்து விடுகிறது.
இரவிலும் பகலிலும் எத்தனை மக்கள் பிறக்கின்றனர் . இறக்கின்றனர். இதை யார் கணக்கு வைத்துக் கொள்ள முடியும்? மார்கண்டேயரைப் போல் வாழப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களும் ஒருநாள் இறந்து தான் தீர வேண்டும்.
நிலையில்லாத மனித உடலில் வாழும்போது, நினைத்தாலே புண்ணியம் அளிக்கக் கூடிய ஞானிகளின் திவ்வியமான சரித்திரத்தை கேட்கும் நேரமே நன்கு செலவிடப் பட்டதாகும். அதைச் செய்யாத நேரமெல்லாம் வியர்த்தமே.
அம்மாதிரியான விழிப்புணர்வு நிச்சயமாக ஏற்படுவதே மனிதப் பிறவி எடுத்ததன் அனுகூலமாகும். ஆயினும், சுயமாக அனுபவிக்காமல் எவரும் இவ்வுண்மையை உணர முடியாது.
இவ்வனுபவதைப் பெறுவதற்கு மிகுந்த அப்பியாசம் தேவை. ஆகவே, சாசுவதமான ஆனந்தத்தை அனுபவிக்க விரும்பும் ஜீவன், அந்த வைபவத்தை அடைவதற்கு சாதனைகள் பல புரிய வேண்டும்.
மனைவி, மக்கள், சொத்து, புகழ் இவற்றுடன் ஆழிசூழ் உலகத்தையே ஒருவன் இறைவனின் அருளால் அடையலாம். அப்பொழுதும் அவன் மனதில் திருப்தி இல்லாதவனாக இருப்பான்.
ஆனால், சாசுவதமான சுகத்தையும் சாந்தியையும் மனதின் லட்சியமாக கொண்டு, எவ்வுரியிலும் இறைவனைப் பார்ப்பதையே வழிபாடாக அமைத்துக் கொண்டால், அதுவே முக்தியை அளிக்கும்.
தோலையும் ரத்தத்தையும் மாமிசத்தையும் எலும்புகளையும் ஒன்றாகச் சேர்த்துச் செய்யப் பட்ட இம் மனிதவுடல் ஆன்மீக வாழ்க்கைக்குப் பெருத்த தடையாகும். ஆகவே, உடல்மீது கொண்ட பற்றை விட்டுவிட வேண்டும்.
No comments:
Post a Comment