ஷிர்டி சாயி சத் சரிதம்
உடலைப் புஷ்டியாக வளர்ப்பதற்காகவும் தொண்டுகிழமாகும் வரை மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதர்காகவுமா நாம் இவ்வுலகிற்கு வந்தோம்? மனித ஜன்மம் எடுத்ததன் பயன் இதுதானா ?
பரமாத்மாவை அடைவதே மனித ஜன்மத்தில் செய்ய வேண்டிய முக்கிய கடமையாகும். அவ்வாறு இல்லையெனில் நாய்களும் பன்றிகளும் மற்ற மிருகங்களும் நடத்தும் வாழ்வில் குறை என்ன சொல்ல முடியும்?
நாய்களும் வயிற்றை நிரப்பிக்கொள்கின்றன. யதேஷ்டமாகப் பிரஜைகளை (குட்டிகளை) உற்பத்தி செய்கின்றன. நாய்களும் மனிதர்களும் இவ்விதத்தில் ஒரே நிலையில் இருப்பின் மனித ஜன்மத்தின் சிறப்புதான் என்ன?
உடலைப் பேணிப் போஷாக்காகக் காப்பதும் சிற்றின்பமுமே மனித வாழ்க்கையில் இலட்சியத்தை திருப்தி செய்யுமெனில், இந்த நர ஜென்மத்திற்கு அர்த்தமேதும் இல்லாமல் போகிறது.
ஆகாரம், நித்திரை சிற்றின்பம், பயம் ஆகிய நான்கு செயல்பாடுகளிலேயே வாழ்க்கை கழிந்துவிட்டால், நாய்களுக்கும் மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்? நீங்களே சிந்தித்து முடிவு செய்து கொள்ளுங்கள்.
இதுதான் நரசரீரம் எடுத்ததன் பலன் என்றால், வண்டுகளுக்கும் தாவரங்களுக்கும் வாழ்க்கையில் என்ன குறை? துருத்திகளும் உள்மூச்சு வெளிமூச்சு வாங்குகின்றன. நாய்களும் நன்கு தின்று கொழுக்கின்றன அல்லவோ !
ஆனால், மனிதனோ பரிணாம வளர்சியடைந்தவன்; பயமற்றவன்; சுதந்திரமானவன்; சாசுவதமானவன். இந்த விழிப்புணர்வு இருந்தாலே ஜன்மம் சாபல்யம் அடைகிறது.
நான் எங்கிருந்து வந்தேன்? நான் யார்? நான் ஏன் மனித ஜன்மா எடுத்திருக்கிறேன்? இதன் சூக்குமத்தை அறிந்தவன் வித்துவானாவான். இந்த ஞானம் இல்லையெனில் சகலமும் வீண்.
தூங்காவிளக்கின் சுடர் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஒரே மாதிரியாக தெரிந்தாலும் ஒவ்வொரு கணமும் அது மாறுபாடு அடைந்து கொண்டே இருக்கின்றது. மனித உடலும் அவ்வாறே.
பிள்ளைப் பருவம், இளைமை, முதுமை - இந்த மூன்று நிலைகளும் எல்லாருக்கும் வெளிப்படையாக நன்கு தெரிந்ததே. ஆனால், அவை இயல்பாக வந்து போவதை எவரும் உணர்வதில்லை.
இந்தக் கணத்தில் நாம் பார்க்கும் (தூங்காவிளக்கின்) சுடரின் நிலை இந்தக் கனத்தோடு சரி; ஒவ்வொரு கணமும் மாறுபட்டுக் கொண்டே இருந்தாலும், அது இருக்கும் ஒரே மாதிரியாகத்தான் தெரிகிறது. அதுபோலவே, இந்தக் கணத்தில் மனித உடல் இருக்கும் நிலை அடுத்த கணத்தில் மாறிவிடும்.
மலம், மூத்திரம், சளி, சீழ், எச்சில், அழுக்கு ஆகியவற்றை வெளியிடும், கணத்திற்கு கணம் மரணம் அடைந்து கொண்டிருக்கும் மனித வுடல் துர்லக்ஷனம் நிரம்பியது.
புழுக்களும் கிருமிகளும் வாழும் இடமாகிய மனித வுடல், பல ரோகங்களின் வாசஸ்தலம் (இருப்பிடம்); நிலையற்றது. மரணமடையக் கூடியது.
No comments:
Post a Comment