ஷீர்டி சாய் சத்சரிதம்
21 . அருள் மழை பொழிந்தது!
ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
கடந்த அத்தியாயத்தில் ஏற்கனேவே குறிப்பிட்டவாறு தாகூரும் மற்றவர்களும் இம்மஹா புருஷரை எப்படி தரிசனம் செய்தார்கள் என்பதை விவரிக்கிறேன். ஒருமுகப்பட்ட மனதுடன் கேளுங்கள்.
கேட்பவர்களை ரோமாஞ்சனம் (மயிர்கூச்செறிதல்) அடையச் செய்யாததும் ஆனந்தத்தால் ஊஞ்சலாட செய்யாததுமான, பிரவசனம் செய்பவரின் சொற்கள் வியர்த்தனமானவை அல்லவா?
கேட்பவர்களை மனம் மகிழச் செய்யாததும் உணர்ச்சி வசத்தால் தொண்டையை அடைக்கச் செய்யாததும் ஆனந்தக்கண்ணீர் பெருகி கன்னத்தில் வழியும்படி செய்யாததுமான கதை என்ன கதை? உபயோகமில்லாத கதை.
மனோகரமான பேச்சை உடையவரும் உலகம் காணாத உபதேசமுறைகளைக் கையாள்பவரும் தினந்தினம் புதுப்புது அற்புத லீலைகளை புரிபவருமான பாபாவின் பாதங்களில் என் நெற்றியை வைத்து வணங்குகிறேன்.
தெய்வ அனுக்கிரஹம் இல்லாமல் எவருக்கும் சாதுக்களையும் ஞானிகளையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்காது. அவ்வாறான ஒரு மஹாபுருஷர் அருகிலேயே வந்தாலும் பாவிகளின் கண்களுக்கு அவர் தெரியாமற் போய்விடுவார்.
இது எந்த அளவிற்கு உண்மையென்பதை நிரூபிக்கத் தேசமெங்கும் அலைய வேண்டியதில்லை; அந்நிய தேசத்துக்கும் செல்ல வேண்டியதில்லை. ஏன், கேப்டவர்களுக்கு என்னுடைய அனுபவத்தையே எடுத்துரைக்கிறேன்.
பாந்த்ரா நகரத்தில் பீர் மௌலானா என்ற பிரசித்தி பெற்ற சித்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய புண்ணிய தரிசனத்திற்காக ஹிந்துக்களும் பார்சிக்களும் மற்ற மதத்தை சார்ந்தவர்களும் அறிஞர்களும் பெருமக்களும் வந்தனர்.
நான் அந்த நகரத்தில் அப்பொழுது மாஜிஸ்திரேட்டாக உத்தியோகம் பார்த்துவந்தேன். பீர் மௌலானாவுக்கு இனூஸ் என்ற பக்தரொருவர் சேவை செய்துவந்தார். இந்த இனூஸ் என்னை தரிசனத்திற்கு வருமாறு இரவு பகலாக தொந்தரவு செய்துகொண்டிருந்தார்.
No comments:
Post a Comment