ஷிர்டி சாயி சரிதம்
இவ்வகையான காவியம் எழுவதற்கு ஆன்மீக பலம் மிகுதியாகத் தேவை. நானோ சாயியின் பணியாள்; அவருடைய ஆக்ஞைக்கு கட்டுப்பட்ட அடிமை. அவருடைய ஆணையின் படி குறிப்பெடுத்துக் கொள்கிறேன்.
என்னிடம் கதை கேட்பவர்கள் தாகம் மிகுந்த சாதகப் பறவைகள்; சமர்த்த சாயியோ ஆனந்தத்தால் கனத்த கருமேகம். இக்காதைகளின் மூலமாக மழையைப் பொழிந்து, அவர்களுடைய தாகத்தை தீர்த்துவைக்கிறார்.
எந்த சக்தியின் திவ்விய சரித்திரத்தை விவரிக்கிறேனோ, எந்த சக்தி என்னுடைய எழுத்தை உந்துகிறதோ, அந்த சக்தியின் பாததூளியில் என்னுடைய உடல் புரண்டு, புரண்டு எழட்டும்.
என்னுடைய பேச்சை உந்துபவர் அவரே; தம்முடைய காதையைத் தாமே சொல்கிறார். என்னுடைய சஞ்சலபுத்தி ஒருமைப்படட்டும்; அவருடைய பாதங்களை கெட்டியாகப் பற்றிக் கொள்ளட்டும்.
இந்த பஜனை (காதைகளை எழுதும் செயல்) வெறும் பௌதிக செயலாகவும் சொர்கட்டாகவும் மட்டுமின்றி மானசீகமாகவும் ஆகட்டும்; எனக்கு அழியாத ஆனந்தத்தை அளிக்கட்டும். நான் சாயியின் செய்தியைக் கொண்டு வரும் தீனனான தபால்காரனே.
சரித்திர எழுத்தாளரும் சரித்திர நாயகரும் சாயியே! இருப்பினும், கேட்பவர் அவரிடமிருந்து வேறுபட்டவரா என்ன? இல்லவே இல்லை; சாயியிடமிருந்து பிரிந்து இருப்பவர் இல்லை.
மேலெழுந்தவாரியாக பார்த்தல் இது ஒரு காவியம்; ஆனால், உண்மையில் இது சாயி லீலையே! அவரே பிரேமையுடன் அரங்கில் இறங்கி இந்த சக்தி வாய்ந்த விளையாட்டை ஆட ஆரம்பித்துவிட்டார்.
சாயிபாபாவினுடைய சரித்திரம் ஆராய்ச்சிக்கப்பாற்பட்டது. என்னைக் கருவியாக மாத்திரம் ஒண்டு, பக்தர்களுக்கு விசித்திரமான அனுபவங்களை கொடுத்திருக்கிறார். இவ்விதமாக கணக்கற்ற அடியவர்களுக்குத் திருப்தியை அளிக்கிறார்.
இது சரித்திரமன்று; ஆனந்தக் கிடங்கு; நிஜமான பரமாமிருதம். பக்தி பாவத்துடன் அணுகும் பாக்கியசாலிகளால்தான் இதை அனுபவிக்க முடியும்.
பக்தர்களுடைய சாந்திக்காகவும் மகிழ்ச்சிக்காகவும், குருவினுடைய கிருபையின் மகிமையை அடியார்களாகிய நாமெல்லாரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காகவும் நான் சிரமப்பட்டு இக்காவியத்தை எழுதியிருக்கிறேன்.
பக்தியுடனும் பிரேமையுடனும் சொல்லப்படும்போது இக்காதை, கேட்பவர்களுடைய மகிழ்ச்சியை அதிகரிக்கும். திரும்ப திரும்பப் படித்து, இந்நிகழ்ச்சிகளின் ஆன்மீகப் படிப்பினையை நடைமுறைக்குக் கொண்டு வந்தால் பக்தியும் பிரேமையும் பெருகும்.
No comments:
Post a Comment