ஷிர்டி சாயி சத்சரிதம்
சிலர் நீண்ட ஆயுளை வேண்டுகின்றனர். சிலர் யானை, பொன், செல்வம், சம்பத்துகள், சொத்து - இவற்றை வேண்டுகின்றனர். வேறு சிலர் புத்திரனையும் பௌத்திரனையும் (பேரனையும்) வேண்டுவர். சிலர் குன்றாத செல்வாக்கையும் பதவியையும் வேண்டுவர்.
ஆனால், பாபாவினுடைய வழிமுறைகள் பிரமிக்கத்தக்கவை. கேலி செய்யவும் வம்பு பேசவும் வந்தவர்கள், அவர்களுடைய துர்புத்தி அழிக்கப்பட்டு பாபாவின் சரணகமலங்களைத் தொழுவதற்கு தங்கிவிட்டனர்.
சிலருக்கு அவ்வளவு பாக்கியம் கிடைக்காவிட்டாலும், தங்களுடைய நடத்தைக்காக அனுதாபமாவது படுவார்கள். நேரடியான அனுபவம் பெற்று, அஹங்காரத்தை விலக்கிவிட்டு நம்பிக்கையை திடமாகிக் கொள்வார்கள்.
இவர்களனைவரும் இவ்வுலக வாழ்க்கையில் உழலும் சாதாரன மக்களே. தக்ஷிணை அளிப்பதால் அவர்கள் மனத்தூய்மை அடையவேண்டுமென்றே பாபா விரும்பினார்.
"யாகத்தால், தானத்தால், தவத்தால்" என்னும் தெளிவான சொற்களால் தக்ஷிணை அழிப்பது ஒரு 'சாதனை யுக்தி' என்று ஆத்மஞானத்தை நாடுபவர்களுக்கு வேதம் போதனை செய்கிறது.
அடியவர், உலகியல் நன்மைகளை விரும்பினாலும் ஆன்மீக முன்னேற்றத்தை விரும்பினாலும், தாம் விரும்பியதை அடைவதற்காகவும் தம்முடைய சொந்த நலனுக்காகவும் தம் குருவுக்கு தக்ஷிணை அளிக்கவேண்டும்.
பிரஜாபதியே தம் சிருஷ்டியான தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மனிதர்களுக்கும் குருகுலவாசம் முடிந்தபின் அவர்கள் உபதேசம் கேட்கும்போது இதைச் சொன்னார்.
பிரஜாபதி அவர்களுக்குத் 'த ' என்ற ஒரே எழுத்தை உபதேசமாக அளித்துவிட்டு, இதிலிருந்து நீங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள் என்றும் கேட்டு, உபதேசத்தை அவர்கள் மனதில் பதிய வைத்தார். குருமார்கள் சிஷ்யர்களிடம் செய்யும் லீலை விநோதமானது! (இது பிரஹதன்யாரக உபநிஷத்தில் இடம் பெறுகிறது)
தேவர்கள் 'த ' வை அடக்கத்துடன் வாழுங்கள் என்று புரிந்துகொண்டனர். அசுரர்கள் அதே 'த ' வை தயை காட்டுங்கள் என்று புரிந்துகொண்டனர்; மனிதர்களோ 'த 'வை தானம் செய்யுங்கள் என்று புரிந்துகொண்டனர். பிரஜாபதி பலே! பலே! என்று மூன்று இனத்தினரையும் பாராட்டினார்! (ஒவ்வொரு இனத்தவரும் தங்களிடம் இல்லாத நற்குணத்தை வளர்த்துக் கொள்ளும்படி குரு உபதேசம் செய்கிறார் என்றே புரிந்து கொண்டனர்.)
தேவர்கள் சுபாவத்தில் வேறுபட்ட மனிதர்களே தவிர வேறெவரும் அல்லர். உத்தமகுண சம்பன்னர்களாக இருந்தாலும் புலனடக்கமில்லாத மனிதர்களே தேவர்கள் என அழைக்கப் படுகின்றனர்.
அசுரர்கள் துஷ்டபுத்தியும் குரூர சுபாவமுள்ள, ஹிம்சையை நாடும் மனிதர்களே. மனித இனமோ அடக்க முயாத பேராசையால் அவதிப்படுகிறது. மனிதர்களில் இவ்வாறு மூன்று வகை! (பிருஹதாரன்யக உபநிஷதம் - 5 ஆவது அத்தியாயம் - ஸ்ரீ சங்கர பாஷ்யம்)
No comments:
Post a Comment