ஷிர்டி சாயி சத்சரிதம்
எது சகல விஞ்ஞானங்களையும் சுபாவத்தினாலேயே அறிந்திருக்கிறதோ, எது பெயரையும் உருவத்தையும் இழந்து நிற்கிறதோ, எதற்கு சம்சார தர்மம் என்பது இல்லையோ, அதுவே பகுதியும் விகுதியும் இல்லாத பிரம்மம் (முழு முதற்பொருள்).
சுபாவத்தினால் 'தான் வேறு' என்று நினைத்துக் கொள்வதாலும், அஞ்ஞானத்தாலும் மோகத்தாலும் விளையும் தவறுகளாலும், துவைத மாயையால் தடம் புரண்ட மனம், ஏகத்துவ போதனையால் அமைதியையும் சாந்தியையும் அடைகிறது.
இவ்வுலகத்தையே ஒன்றாகவும் ஒரே சக்தி நிரம்பியதாகவும் நினைத்து, 'நான் வேறு மற்ற ஜனங்கள் வேறு' என்று நினைக்காதவர், தன்னிலிருந்து வேறுபட்டதாக எதையும் காண்பதில்லை.
பெயரையும் உருவத்தையும் செயல்புரிவதையும் தடங்கல்களாக கருதி, துவைத பாவனையை அடியோடு விட்டுவிடுவதே முழு முதற்பொருள் உடன் ஐக்கியமாவதேயாகும்.
"நான் ஒருவனே இருக்கிறேன்; நான் இல்லாத இடமே இல்லை; பத்துத் திசைகளிலும் நான் வியாபித்திருக்கிறேன். என்னைத் தவிர வேறு எதுவுமே இல்லை; (அத்துவைதத்தின் சிகரம்)
இந்த பாவனையை திடமாகப் பற்றிக் கொள்; மயக்கம் தரும் மாயையை உதறித் தள்ளி விடு. 'என்னைத் தவிர வேறெந்த வஸ்துவும் இங்கில்லை' என்பதை மனதிற்கொண்டு உன்னையே அறிவாயாக!
எங்கிருந்து இந்த துவைத பாவனை எழுகிறது? கதை கேட்பவர்களுக்கு இந்த சந்தேஹம் எழுவது சகஜமே. பிரம்மம, அறிந்துகொள்ளப்பட வேண்டியது; ஜீவன், அறிந்துகொள்ள முயல்பவன். எந்த உபாயத்தினால் துவைத பாவனையை விலக்கிவிட முடியும்?
பேதபுத்தி சிறிதளவு இருந்தாலும், 'ஒன்றைத் தவிர வேறொன்றுமில்லை' என்னும் நம்பிக்கையை அழித்துவிடும். மேலும், பிரித்து பார்க்கும் மனப்பான்மையை வளர்த்து ஜனனமரணச் சுழலுக்கு காரணமாகிவிடும்.
அஞ்ஞான நோக்கை அகற்றிவிட்டால், சகல சிருஷ்டியும் கரைந்துபோய்த் 'தானும் பிறவும் ஒன்றே' என்ற காட்சி தோன்றும்; துவைத மாயை உடனே அகன்றுவிடும்.
சுத்தமான நீரில் சுத்தமான நீரைக் கலந்தால், இரண்டும் ஒன்றாகிவிடுகின்றன. முன்பு இருந்த நிலையம் பின்பு ஏற்பட்ட நிலையும் எவ்வித வித்தியாசமுமின்றி ஒன்றேயாகிவிடுகிறது.
விறகு கட்டைகள் உருவத்தில் வேறுபடலாம். ஆனால், அக்கினி சொரூபத்தில் எந்த வேறுபாடும் இல்லை. அவற்றின் தனித்தன்மையும் உருவ வேறுபாடுகளையும் இழந்துவிட்டு அக்கினி சொரூபமாகவே ஆகிவிடுகின்றன.
அதுபோலவே, ஆத்துமா ஐக்கிய விஞ்ஞானத்திற்கு வேறேந்தே நிரூபணமும் தேவையில்லை. ஆத்மா எல்லா உயிர்களிலும் உறைகிறது; ஆனால், எப்பொழுதும் உருவமற்ற நிலையில்தான் இருக்கிறது.
No comments:
Post a Comment