ஷீர்டி சாயி சத்சரிதம்
ஷீர்டி மக்கள் எல்லாரும் துக்கம் தாங்கமுடியாமல் வீதிகளிலும் சந்துகளிலுமாக நான்கு திசைகளிலும் சிதறி ஓடினர்.
ஷிர்டியின் புனிதத்திற்கு சாயியே மூலம். ஷிர்டியின் வரலாற்றுக்கும் சாயியே வேர். ஷீர்டி புனிதத் தலம் ஆனதும் சாயீயால்தான். சாயியே எல்லாருக்கும் நிழல் தந்த குடை!
சிலர் கோவென்று கதறி அழுதனர்; சிலர் பூமியில் புரண்டனர்; சிலர் மூர்ச்சையடைந்தனர்; அனைவருமே துக்கத்தால் தாக்கப்பட்டனர்.
துக்கக்கண்ணீர் கண்களிலிருந்து பெருக, ஆடவரும் பெண்டிரும் பெருந்துயரமுற்றனர். அன்னத்தையோ பானத்தையோ தொடமுடியவில்லை. அவர்களுடைய முகங்கள் பரிதாபகரமாகத் தோன்றின.
பாபா கிடந்த கோலத்தைப் பார்த்த கிராம மக்கள் சொல்லொணாத வேதனை அடைந்தனர். சிறுபிள்ளைகளிலிருந்து முதியோர்கள்வரை சமத்த பக்தர்களும் பெருங்கவலையில் மூழ்கினர்.
எங்கே இனிய உன்னதமான கதைகள் கிடைத்தனவோ, எங்கே பல வழிகளிலும் ஆனந்தம் பொங்கியதோ, எங்கே சட்டென்று நுழைந்துவிட முடியாதோ, அங்கே, அதே மசூதியில் இப்பொழுது வெற்றிடந்தான் தெரிந்தது.
ஷிர்டியில் நிலவிய சகல நித்திய லட்சுமிக்கும் நித்திய மங்களத்திற்கும் பாபாவே மூலகாரணம். ஆதலால், கிராம மக்கள் கலகலத்துப் போனது இயல்பே.
ஓ சாயிநாதரே! ஆனந்தத்தின் மூலமே! ஆனந்த தெய்வத் திருமேனியே! பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக உருவம் ஏற்றீர். அந்தச் செல்வத்தை சம்பாதித்த பிறகு, அய்யகோ! ஷிர்டியிலேயே உடலை உகுத்தீர்!
புத்திதடுமாறிப்போன எங்களுக்கு, சோர்வேதுமில்லாமல், இரவு பகல் பாராமல், 24 மணி நேரமும் எங்கள் நன்மை கருதி உபதேசங்களை அளித்தீர்.
எங்களுக்கு அளிக்கப்பட்ட அத்தனை உபதேசங்களும் கவிழ்த்து வைக்கப்பட்ட பானையின்மேல் ஊற்றப்பட்ட நீரைப் போல வீணாகிப்போயின. ஒரு துளி நீர்கூட நிலைக்கவில்லை.
"நீங்கள் யாரையாவது அவமரியாதையாகப் பேசினால் உடனே எனக்கு வலிக்கிறது" என்று ஒவ்வொரு படியிலும் எங்களுக்கு அறிவுறுத்தினீர்கள். ஆயினும், நாங்கள் தங்களுடைய வார்த்தைகளை மதிக்கவில்லை.
உங்களுடைய நல்லுபதேசங்களை கடைபிடிக்காத நாங்கள் அபராதிகள் (குற்றவாளிகள்). அவ்வாறு நாங்கள் ஆக்ஞய்க்கு பங்கம் விளைவித்த பாவத்திற்குப் பிராயச்சித்தமாகவோ இவ்வாறு செய்துவிட்டீர்?
பாபா, இதுதான் நாங்கள் செய்த பாவங்களின் ஒருமித்த விளைவோ! ஆயினும், இப்பொழுது இவ்வாறு வருந்துவதால் என்ன பயன்? அத்தனை தீவினைப் பலன்களையும் அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும்.
மேலும், இக் காரணத்தால்தான் தேவரீர் எங்களின்மீது சலிப்புற்றுத் திரைமறைவாகச் சென்றுவிட்டிரோ! அய்யகோ! காலன் எங்களை மரண அடியாக அடித்துவிட்டானே!
No comments:
Post a Comment