ஷீர்டி சாய் சத்சரிதம்
37 . சாவடி ஊர்வல கோலாகலம்
ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்.
பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
சாயியின் சரித்திரம் பாக்கியம் அளிப்பது. அவருடைய நித்திய நடவடிக்கைகள் பாக்கியம் அளிப்பவை. அவருடைய செய்கைகளோ அதியற்புதமானவை. புரிந்துகொள்ளமுடியாதவை. கிரமமாக விவரிக்கமுடியாதவை.
அவருடைய உண்மையான வாழ்க்கைச் சரித்திரம் ஆழங்காணமுடியாதது; பிழைக்கும் வழி பாக்கியம் அளிப்பது. நடைமுறையோ கத்திமுனையில் வேகமாக நடப்பதற்கு ஒப்பானது.
சிலசமயங்களில் ப்ரம்மானந்தத்தில் மூழ்கிய உன்மத்த நிலை; மற்ற சமயங்களிலோ போதனை செய்வதில் திருப்தி, சிலசமயங்களில் எல்லாவற்றையும் செய்துவிட்டு எதிலுமே பட்டுக்கொள்ளாத தன்மை; எதையுமே நிச்சயமாக சொல்லமுடியாத நிலை!
சிலசமயங்களில் செயல் ஏதும் இல்லாத சூனியநிலை; ஆயினும் தூக்கமா என்றால் அதுவும் இல்லை. தம்முடைய நன்மை கருதி ஆத்ம சொரூபத்திலேயே மூழ்கியிருப்பார்.
சிலசமயங்களில், கரையில்லாததும் கடக்கமுடியாததும் அளக்கமுடியாததும் ஆழமானதுமான சமுத்திரத்தை போல் சந்தோஷமாக இருப்பார். இக் கற்பனைக்கெட்டாத ரூபத்தை யாரால் யதார்த்தமாக வர்ணிக்கமுடியும்?
ஆண்களை உறவினர் போலவும் பெண்களைத் தாயாகவோ சகோதரியாகவோ அவர் நடத்தினார். அவர் ஒரு பிரம்மச்சாரி என்பதும் ஊர்த்துவரேதசார் (மேல் நோக்கியே செல்லும் விந்து உடையவர்) என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
அவருடைய சத்சங்கத்தால் விளைந்த நன்மதி உறுதியாகவும் ஆடாதும் அசையாதும் மரணப்பரியந்தம் நிலைக்கட்டும்!
சேவை மனப்பான்மை ஓங்கி வளரட்டும்! அவருடைய பாதங்களில் அனன்னிய பக்தி செழிக்கட்டும்.! அவருடைய நாமத்தில் அகண்டமான பிரீத்தி உண்டாகட்டும்! எல்லா உயிர்களிலும் இறைவனைக் காணும் பாவம் விருத்தியாகட்டும்!
ஒன்றைவிட மற்றொன்று அற்புதமான அவருடைய லீலைகளை பார்த்துவிட்டு காரணத்தை ஆராய விரும்பியவர்கள், கடைசியில், புத்திக்கெதுவும் எட்டாதுபோய் வழியிலேயே சப்பணம் போட்டு உட்கார்ந்துவிட்டனர்.
No comments:
Post a Comment