ஷிர்டி சாயி சத்சரிதம்
நிமோன் என்னும் கிராமத்தின் வதந்தாரான நிமொன்கருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கௌரவ மாஜிஸ்ட்ரேட் பதவியையும் அதிகாரத்தையும் கொடுத்திருந்தது. ஆகவே, அவர் மிகச் செல்வாக்கு உள்ளவராக இருந்தார்.
மாதவராவ் தேச்பாண்டாவின் ஒன்றுவிட்ட அண்ணன்களிலேயே மூத்தவரான அவர், மிக வயோதிகர்; எல்லாராலும் சிரேஷ்டமாக மதிக்கப் பட்டார். நிமோன்கரின் மனைவியும் ஒரு பக்தை; சாயியே அவர்களுக்கு இஷ்ட தெய்வம்.
தங்களுடைய வதனியை (ஜமீன் கிராமத்தை) விட்டுவிட்டு ஷீரடியில் வாழ வந்து விட்டனர். சாயியின் பாதங்களில் சரணடைந்து, சுகமாகத் தங்களுடைய வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்ததனர்.
விடியற் காலையிலேயே எழுந்து, ஸ்நானம், பூஜை இவற்றைச் செய்து முடித்து விட்டுப் பொழுது விடியும் நேரத்தில் ஹாரதி எடுப்பதற்குச் சாவடிக்கு நாள் தவறாது வந்தனர்.
அதன் பிறகு, சூரிய அஸ்தமன காலம் வரை பாபாவுடனேயே இருந்து கொண்டு மனதுக்கு உள்ளேயே தம்முடைய தோத்திரங்களை ஜெபித்து கொண்டே நிமோன்கர் பாபாவுக்கு சேவை செய்வார்.
தினமும் பாபா லெண்டிக்கு (கிராம எல்லையிலிருந்த ஓடை) போகும் சுற்றில் தாமும் கூடச் சென்று பாபாவை மசூதிக்கு திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பார். அவரால் செய்ய முடிந்த சேவைகள் அனைத்தையும் பிரேமை ததும்பிய மனத்துடன் செய்தார்.
நிமோன்கரின் மனைவியும் மிகுந்த பிரேமையுடன் பகல் நேரத்தில் அவரால் செய்ய முடிந்த உபகாரங்களை உபயோகமான முறையில் செய்து பாபாவுக்கு சேவை செய்தார்.
ஸ்நானம் செய்வதற்கும் சமையல் செய்து கொள்வதற்கும் இரவில் தூங்குவதற்குமே அவர் தம்முடைய இருப்பிடத்திற்கு சென்றார்.
மீதி நேரத்தையெல்லாம் காலையிலும் மதியத்திலும் மாலையிலும் இந்த தம்பதி பாபாவின் அண்மையிலேயே பிரேமையுடன் கழித்தனர்.
இவர்களிருவர் செய்த சேவையை எல்லாம் விரிவாகச் சொல்ல வேண்டுமெனில், இக்காவியம் வெகுவிச்தாரமாக ஆகி விடும். ஆகவே, இந்த அத்தியாயத்திற்கு சம்பத்தப் பட்ட நிகழ்ச்சியை மட்டும் விவரிக்கிறேன்.
தம் மகன் சிறிது உடல் நலமற்று இருந்ததால், நிமோன்கரின் மனைவி பெலாபூருக்கு செல்ல விரும்பினார். கணவரோடு ஆலோசனை செய்த பிறகு, அங்கே போவதற்குத் தயார் செய்து கொண்டார்.
பிறகு, எப்பொழுதும் செய்வது போல் பாபாவிடம் அனுமதி கேட்டார். பாபா சம்மதம் அளித்ததை தம் கணவருக்குத் தெரிவித்தார்.
இவ்வாறாக அம்மையார் பெலாபூருக்கு செல்வதென்பது நிச்சயம் செய்யப் பட்டது. ஆனால், நிமோன்கர் அவரை மறுநாளே திரும்பி வந்து விட வேண்டும் என்று சொன்னார்.
No comments:
Post a Comment