valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 26 June 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


கௌரியும் என்னிடம் பக்தி செலுத்தினாள்.  ஒருநாள் பூஜாரி என்னிடம் கேட்டார். "கௌரிக்கு ஏற்ற நல்ல வரன் கிடைப்பானா என்று தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் வெற்றி கிடைக்கவில்லை.-

"பாபா, மாப்பிள்ளை தேடித் தேடி நான் களைப்படைந்ததுதான் மிச்சம். எந்த முயற்சியும் பயன் தரவில்லை; மேற்கொண்டு என்ன செய்வதென்றும் தெரியவில்லை." நான் பதிலுரைத்தேன். "நீர் எதற்காகக் கவலைப்படுகிறீர்? மாப்பிள்ளை வழி நடந்து வந்து கொண்டிருக்கிறான்!-

"உம் மகள் பாக்கியசாலி, பெரும் பணக்காரியாக ஆவாள். அவளைத் தேடிக்கொண்டுதான் மாப்பிள்ளை வருகிறான்; தன்னிச்சையாகவே வருகிறான். -

"அவன் கூடியசீக்கிரத்தில் உமது வீட்டுக்கு வருவான். உமது விருப்பத்தைப் பூர்த்தி செய்வான். உம்முடைய வார்த்தையை மதித்து கௌரியைப் பாணிக்கிரஹணம் (திருமணம்) செய்துகொள்வான்."

அங்கு, பரிதாபகரமான வறுமையில் வாடிய வீரபத்ரன் பெற்றோர்களுக்குத் தைரியமளித்துவிட்டு வீட்டை வீட்டுக் கிளம்பினான். 

கிராமம் கிராமமாகப் பிச்சையெடுத்துக்கொண்டு திரிந்தான். சிலசமயம் சிறுபணி செய்து பிழைத்தான். கிடைத்ததை உண்டு திருப்தியடைந்தான். 

அலைந்து திரிந்து தெய்வாதீனமாக இந்தப் பூஜாரியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். நிகழமுடியாதவற்றை நிகழவைக்கும் அல்லாமியாவின் லீலைதான் என்னே ! எல்லாருக்கும் அவன்மீது பிரியம் ஏற்பட்டது. 

கொஞ்சங்கொஞ்சமாகப் பூஜாரியின் அன்பை வென்றான். பூஜாரியும் கௌரியை அவனுக்குக் கன்னிகாதானம் செய்யவேண்டுமென்று விரும்பினார். கோத்திரம், நாடி, கணம், யோகம் முதலியன பொருத்தமாக இருந்தன. பூஜாரி ஆனந்தமடைந்தார்!

ஒருநாள் தம்முடன் வீரபத்ரனை அழைத்துக்கொண்டு பூஜாரி வந்தார். அந்த சமயத்தில் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்தவுடன் எனக்கொரு எண்ணம் உதித்தது. 

எண்ணம் உடனே சொல்லாக மலர்ந்தது, "ஒரு நல்ல முகூர்த்த நாளாகப் பார்த்து கௌரியை இவனுக்கு மணம் முடித்துவிடும்; உமது கடமையிலிருந்து விடுபடும்.

பூஜாரி தம் மனைவியின் சம்மதத்தைப் பெற்றபின், வீரபத்ரனை மாப்பிள்ளையாக நிச்சயம் செய்தார். ஒரு சுபமுகூர்த்த நாளில் கலியாணம் சிறப்பாக நடந்தேறியது. 

திருமணச் சடங்குகள் நடந்து முடிந்த பிறகு மணமக்கள் என்னை தரிசனம் செய்ய வந்தனர். சகல சௌபாக்கியங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ என்னுடைய ஆசீர்வாதங்களை வேண்டினர். 

நான் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு ஆசியளித்தேன். 'சுகமாக அன்னம் கிடைக்கும்' என்ற ஆசியைக் கேட்ட வீரபத்ரனின் மனக்கண்முன் சுகபோகங்களை பற்றிய எண்ணங்கள் விரிந்தன; முகம் மலர்ந்தது. 

அவனுக்கும் என்னிடம் பக்தி ஏற்பட்டது. சில நாள்களுக்குப்பின் அவர்கள் தனிக்குடித்தனம் வைத்தனர். ஆயினும், கையில் காசில்லை என்று குறைசொல்லாத பாக்கியசாலி எவனும் இவ்வுலகில் உளனோ! 


 

Thursday, 19 June 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


புலனின்பங்களை அனுபவிப்பதற்குச் செல்வம் தேவை.  செல்வத்தைத் தேடுவதற்கு வானளாவிய முயற்சிகள் எடுக்கப்படும்போது சுகபோகங்களுக்கான தாகம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. அதிலிருந்து விடுபடவே முடிவதில்லை!

நிலம் தரிசு என்பதில் சந்தேகமே இல்லை. பெரும்பாடுபட்டாலும் ஒன்றும் விளையாத நிலம். அந்த நிலத்தை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யச் சொன்னான் கஞ்சன்! இந்த தானத்தால் என்ன புண்ணியம்? 

மனத்தால் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது நிர்விகற்பம்  (தூய்மையான செயல்), கஞ்சன் செய்தது போன்ற தானம் முழுபாவச் செயல். கடைசியில் துக்கத்தையே  தரும். 

சிவன் கோவிலில் பூஜை செய்துவந்த ஏழை அந்தணர், கோயில் மானியமாக நிலம் சம்பாதிக்கப்பட்டது குறித்துப் பெருமகிழ்ச்சி அடைந்தார். 

ஆனாலும், சிறிது காலம் கழிந்த பிறகு ஒரு விபரீதமான சம்பவம் நிகழ்ந்தது. ஒரு கிருத்திகை நட்சத்திர நாளன்று பயங்கரமாகப் புயல் அடித்தது. அடைமழை பெய்தது. பெருஞ்சேதத்தை விளைவித்தது. 

மின்னலுக்குமேல் மின்னலாக அடித்தது. வீடுகள் நாசமாயின. உரிமையாளர் எவர் என்று தெரியாதுபோயினும், வீடுகள் இருந்த பூமி மட்டும் ஆபத்துக்குள்ளாகாமல் தப்பியது. மற்றதனைத்தும் மிச்சம் மீதமின்றி எரிந்துபோயின. 

பணக்காரனும் வீழ்ச்சிக்குள்ளானான்.  அவனும் மனைவியுடன் இறந்து போனான். டு ப கீயும் பஞ்சபூதங்களுடன் கலந்துவிட்டாள். மூவரின் வாழ்க்கையும் முடிந்துபோயிற்று. 

பின்னர் அப் பணக்காரன் மதுரா நகரத்தில் ஓர் ஏழைப் பிராமணனுக்கு மகனாகப் பிறந்தான். பக்தையான அவன் மனைவி ஒரு பூஜாரியின் குடும்பத்தில் பிறந்தாள். 

அவள் கௌரி என்று பெயரிடப்பட்டாள். டுபகீயின் விதியோ வேறுவிதமாக அமைந்தது. அவள் ஒரு சிவன் கோயில் 'குரவரின்' (கோயிலில் சுற்றுவேலை செய்பவரின்) மகனாகப் பிறந்தாள். 

நாமகரண தினத்தன்று இந்தப் பையன் சனபசப்பா என்று பெயரிடப்பட்டான். இவ்வாறாக இம்மூவரும் அவரவரின் கர்மபலனுக்கேற்ப  நிலைமாறினர். (அடுத்த ஜென்மம் எடுத்தனர்).

புனர்ஜன்மம் எடுத்த பணக்காரன் வீரபத்ரன் என்று பெயரிடப்பட்டான். பிரார்ப்த கர்மத்தின் (பழவினையின்) செயல்பாடு இவ்வாறே. முற்றிலும் நாம் அனுபவித்த பிறகுதான் வினைதீரும். 

சிவன் கோவில் பூஜாரியின் மேல் எனக்கு மிகுந்த பிரியம். அவர் தினமும் என்னுடைய வீட்டுக்கு வருவார். என்னுடன் சேர்ந்து புகை (சிலீம்) குடிப்பார். 

பிறகு நாங்கள் இருவரும் ஆனந்தம் நிரம்பியவர்களாய் இரவு முழுவுதும் பேசிக்கொண்டிருப்போம். ஆண்டுகள் கடந்தன. கௌரி வளர்ந்து மணப்பருவம் எய்தினாள். அவளையும் பூஜாரி தம்முடன் அழைத்துக்கொண்டு வருவார். 


 

Thursday, 12 June 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பின்னர்த் தன்னுடைய தீர்மானத்தைக் கணவனிடம் தெரிவித்தாள். கணவன் இந்தத் திட்டத்தைக் கேட்டான். உள்ளுக்குள்ளே பெருங்கலவரமடைந்தான். 

பேராசை கோலோச்சுமிடத்தில் விவேகம் எப்படி இருக்கும்? அதுவும் இறைப்பணிக்குத் தர்மம் அளிக்கும் விவேகமா? அவன் மனத்துக்குள் எண்ணினான், 'ஐயோ! எவ்வளவு விவேகமற்ற செயல்! தவறான நம்பிக்கை கொண்டு முழுக்க ஏமாறிவிட்டாள்.-

'அவளுடைய ஆபரணங்கள் அனைத்தையும் மதிப்பீடு செய்து ஓராயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்தபின், ஒரு நிலத்தை அவள் பெயரில் எழுதிவைத்துவிட வேண்டும்.'

ஆகவே, மனைவியின் ஆபரணங்களைக் கஞ்சனே விலைக்கு வாங்கினான். கடுமையான உழைப்பால் மேடுபள்ளம் திருத்தப்பட்ட சிறிய நிலம் ஒன்று யாராலோ அவனிடம் அடமானமாக வைக்கப்பட்டிருந்தது. பணத்திற்குப் பதிலாக அந்த நிலத்தை கஞ்சன் மனைவிக்கு கொடுத்தான். 

அந்த நிலமும் ஒரு தரிசு; மழை பெய்தாலும் எதுவும் விளையாத நிலம். அவன் மனைவியிடம் சொன்னான், "இதை சிவனுக்கு சமர்ப்பணம் செய். -

"இந்த நிலத்தின் மதிப்பு ஓராயிரம் ரூபாய். உன் கனவுக்காட்சியின்படி இதை நீ கடவுளுக்கு தானம் செய்யலாம். கடவுள் மகிழ்ச்சியடைவார். நீயும் உன் கடனைச் செலுத்தியவளாவாய்".

கணவனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து கஞ்சனின் மனைவி அந்த நிலத்தை சங்கரருக்கு சந்தோஷத்துடன் சமர்ப்பணம் செய்தாள்.

உண்மை நிலை என்னவென்றால், அந்த நிலம் டுபகீ என்னும் பெண்மணிக்குச் சொந்தமானது. அவள் இருநூறு ரூபாய் கடனுக்காக அந்த நிலத்தைப் பணக்காரக் கஞ்சனிடம் அடமானம் வைத்திருந்தாள். 

டுபகீ ஓர் அனாதைப் பெண்மணி; நிலம் அவளுடையது. ஆபத்துக்கு காலத்தில், அந்த நிலத்தையும் பணத்துக்காக அடமானம் வைக்கவேண்டியதாயிற்று. 

ஆயினும், பணக்காரனோ ஒரு மஹாலோபி. அவன் சங்கரரையும் ஏமாற்றுவதற்கு பயப்படவில்லை. கபடமான வழியில் மனைவியின் சீதனத்தை ஜேபியில் போட்டுக் கொண்டான். எனினும், லாபமடைந்தது பற்றி மகிழ்ச்சியடைந்தான். 

புலன்களின் வலிய ஆசைகள் மிகக் கெட்டவை. அவற்றைத் தேடி ஓடுபவனை புலனின்பங்கள் நாசம் செய்துவிடும். நல்லபடியாக வாழவேண்டுமென்று விரும்பும் மனிதன் புலனின்பநாட்ட  வலையில் மாட்டிக்கொள்ளலாகாது. 

வேடனின் புல்லாங்குழல் இசையின்மீது ஏற்படும் மயக்கத்தால் மான் மடிகிறது. அதனுடைய தலையில் இருக்கும் அழகிய மாணிக்கம் நாகப்பாம்பின் அழிவுக்குக் காரணமாகிறது. விளக்கொளியின் கவர்ச்சி விட்டில் பூச்சியை எரித்துவிடுகிறது. புலனின்பங்களின் அழிக்கும் இயல்பு இவ்வாறானது. 




Thursday, 5 June 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

"அதை உண்மையென்று ஏற்றுக்கொண்டால், நாம் முற்றும் ஏமாறிப்போவோம். தூக்கம் கெட்டதால் ஏற்பட்ட கனவை யாராவது வாஸ்தவமானதாக ஏற்றுக்கொள்வார்களா?" பணக்காரன் கடைசியில் வந்தடைந்த சித்தாந்தம் (முடிந்த முடிவு) இதுவே!

இதைக் கேட்ட மனைவி பேச்சிழந்துபோனாள்.  அவளால் கணவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. மக்கள் நிதி திரட்டியது என்னவோ உண்மைதான்; ஆயினும், சந்தோஷத்துடன் கொடுத்தவர்கள் மிகச் சிலரே. 

தெய்வக்குற்றம் நேருமென்று பயந்தோ, சமூகத்தின் உந்துதலுக்கு இணங்கியோ, தர்மசங்கடத்திலிருந்து விடுபடவோ, அன்பின்றி அளிக்கப்படுவதை இறைவன் விரும்புவதில்லை. அன்புடன் அளிக்கப்படுவது எத்துனைச் சிறியதனாலும் அதை விலையுர்ந்த பொருளாகக் கருதி ஏற்றுக்கொள்கிறான். 

எப்போதெல்லாம் நிதி திரட்டப்பட்டதோ அப்போதெல்லாம் வேலை முன்னேறியது. பணம் வருவது நின்றபோது வேலையும் நின்றது. இவ்வாறாக வேலை தாமதமாகிக்கொண்டே போயிற்று. 

பணக்காரக் கஞ்சன் தன்னுடைய பணப்பையிலிருந்து ஒரு பைசாவும் செலவழிக்க மறுத்த நிலையில், அவன் மனைவிக்கு மறுபடியும் ஒரு கனவுக்காட்சி ஏற்பட்டது. எப்படியென்று சொல்கிறேன்; கேளும். 

"கோயிலுக்காகப் பணம் செலவிட வேண்டுமென்று உன் கணவனைத் தொந்தரவு செய்யாதே. உன்னுடைய பக்தியும் விசுவாசமும் இறைவனுக்குப் போதும். நீ கொடுக்க விரும்புவதைக் கொடு. -

"உன்னுடையை பணத்திலிருந்து நீ மனமுவந்து ஒரு பைசா கொடுத்தாலும் அது ஒரு லக்ஷத்திற்கு ஈடாகும். கணவனைக் கலந்தாலோசித்த பிறகு அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய். -

"வீணாகச் சலிப்படையாதே. கொடுப்பதை மனமுவந்து கொடுக்கவேண்டும். தனக்கு எது சொந்தமோ அதிலிருந்து எவ்வளவு சிறியதானாலும், அதை அர்ப்பணம் செய்யவேண்டும்.-

"இது விஷயத்தில் பாவமே பிரதானம். அது உனக்கு இருப்பது கடவுளுக்குத் தெரிந்திருப்பதால், உன்னைக் 'கொடு, கொடு' என்று சொல்கிறார். இறைவனுடைய உந்துதலைச் சரியாகப் புரிந்துகொள். -

"ஆகவே, உன்னிடம் எவ்வளவு சிறிய தொகை இருந்தாலும் சரி, அதைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இரு. அன்பில்லாமல் எதையும் அளிப்பது உசிதமானதன்று. இறைவன் அதைச் சிறிதும் விரும்புவதில்லை. 

"பாவம் இல்லாது எவன் கொடுக்கிறானோ, அவன் தருவது எந்த மதிப்பையும் பெறாது. கடைசியில் அதற்கு அடியோடு பயனில்லாமல் போய்விடும். அதை அவன் தாமதமேதுமின்றி அனுபவப்பூர்மவாக அறிந்து கொள்வான்."

கனவுக்காட்சியில் இந்தச் சொற்களைக் கேட்ட பிறகு, தன் தந்தையால் சீதனமாக அளிக்கப்பட்ட அலங்கார ஆபரணங்களை விற்று, இந்தத் தேவையைப் பூர்த்திசெய்வது என்று அவள் நிச்சயம் செய்துகொண்டாள். 


 

Thursday, 29 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இவ்வாறாக, மேற்கொண்டும் நிதி திரட்டப்பட்டு நேர்மையான முறையில் கஞ்சனின் கைக்கு வந்துசேர்ந்தது. அப்படியும் ஒரு பயனும் ஏற்படவில்லை. பணக்காரன் ஒன்றும் செய்யாமல் நிம்மதியாக உட்கார்ந்துவிட்டான்.

இவ்வாறு சில நாள்கள் கழிந்தபின் மனம் வைத்தான். அந்த சமயத்தில் கஞ்சனின் மனைவிக்கு ஒரு சொப்பனக்காட்சி ஏற்பட்டது.

"நீயாவது எழுந்துபோய்க் கோயிலின் கோபுரத்தைக் கட்டு. நீ செலவழிப்பதைப்போல நூறுமடங்கு நீலகண்டன் (சிவன்) உனக்கு அளிப்பான்."

மறுநாள் காலையில், தன கனவுக்காட்சி விவரங்களை அவள் தன கணவனின் காதில் போட்டாள்.  கணவனோ ஒரு பைசா செலவழிப்பதற்கும் உயிரை விடுபவன். ஆகவே, இச் செய்தி அவனைக் கலவரமடையச் செய்தது.

இரவுபகலாகப் பணம் பண்ணுவதைத் தவிர வேறு விஷயம் எதைப்பற்றியும் சிந்திக்காதவன், பணம் செலவழிக்கும்படி வந்த சொப்பனச் செய்தியை எப்படி ஏற்றுக்கொள்வான்?

அவன் தன் மனைவியிடம் சொன்னான், "நான் இந்தக் கனவுக்காட்சியை நம்பமாட்டேன். இது விஷயமாக எனக்கு அறவே விசுவாசம் இல்லை."  மேலும் அவளை பரிகாசம் செய்யவும் ஆரம்பித்தான்.

ஒருவருடைய மனப்போக்கு எப்படியோ, அப்படியே அவருக்கு உலகம் காட்சியளிக்கன்றதன்றோ ! வஞ்சக இயல்பு உடையவனுக்கு மற்றவர்களும் வஞ்சகர்களாகவே தெரிகின்றனர்!

"கடவுள் என்னிடமிருந்துதான் தானம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தாரானால், நான் என்ன உன்னிடமிருந்து வெகுதூரத்திலா இருந்தேன்? ஏன் அவர் உனக்கு மட்டும் கனவில் தோன்றினார்?-

"உனக்கு மட்டும் ஏன் கனவுக்காட்சி ஏற்பட்டது? எனக்கு ஏன் கடவுள் காட்சியளிக்கவில்லை? ஆகவே, இது ஏதும் பொருள் பொதிந்ததாக எனக்குத் தெரியவில்லை. கனவுக்காட்சியின் முக்கியத்துவமும் எனக்குப் பிடிபடவில்லை. -

"இந்த சொப்பனம் ஒரு போலி; அல்லது, கணவன் மனைவிக்கிடையே பிளவு ஏற்படுத்த விரும்பும் ஒரு தெய்வ எத்தனம். எனக்கு இந்த அறிகுறிதான் தெரிகிறது. -

"ஜீரணோத்தாரணப் பணியில் என்னுடைய நன்கொடை கம்மியா என்ன? மாதந்தோறும் நாம் நிரப்பிவைக்கும் பணப்பை காலியாகிவிடுகிறது. -

"மக்கள் ஏராளமான நிதியைக் கொண்டுவருவதுபோல வெளிபார்வைக்குத் தோன்றலாம். ஆனால், உண்மை என்னவென்று பார்த்தால், இந்தப் பத்ததியில் (முறையில்) கணக்கு வைத்துக்கொள்வது என்பது எனக்குப் பெருநஷ்டம்.-

"ஆயினும், மக்களுக்கே விளங்காததை நீ எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறாய்? ஆகவே, நீ கண்ட சொப்பனக்காட்சியை யதார்த்தமென்று ஏற்றுக்கொள்ள முடியாது.-


 

Friday, 23 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"சரி, சரி; முதலில் நாம் ஒரு மரத்தடிக்குச் செல்வோம். கொன்ஜம் சிலீம் பிடிப்போம். பிறகு நான் உம்முடைய விஷய ஆர்வத்தைப் பூர்த்திசெய்கிறேன். அதன் பிறகு நான் என்னுடைய வசிப்பிடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்."

நாங்கள் இருவரும் ஒரு நிழலடர்ந்த மரத்தடிக்கு வந்து சேர்ந்தோம். இதமான குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. மறுபடியும் சிலீம் பற்றவைக்கப்பட்டது.

வழிப்போக்கர் முதலில் புகைக்குடித்தார். பிறகு சிலீமை என் கையில் கொடுத்தார். நான் புகைக்குடித்துக்கொண்டே அவருக்கு அந்தக் கவர்ச்சியான கதையைச் சொன்னேன்.

என்னுடைய இடத்திலிருந்த ஐந்து அல்லது ஆறு மைல் தூரத்தில் ஒரு மஹிமை வாய்ந்த, பவித்திரமான புண்ணியத்தலம் இருந்தது.

அங்கே புராதனமான, பாழடைந்த சிவன் கோயில் ஒன்று இருந்தது. அதை ஜீரணோத்தாரணம் (பழுதுபார்த்துப் புதுப்பித்தல்) செய்யவேண்டுமென்று எல்லா மக்களும் விரும்பினர்.

மக்கள் அதன்பொருட்டு நன்கொடை வசூலித்தனர். ஒரு பெரிய நிதி வசூலாகியது. நித்திய பூஜை, அர்ச்சனை ஆகிய வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வரைபடங்களுடன் முழுமையான திட்டம் தயாரிக்கப்பட்டது.

அவ்வூரிலிருந்த ஒரு பெரிய பணக்காரன் நிர்வாகியாக நியமிக்கப்பட்டது. முழுப்பணமும் பூரணமான, முடிவெடுக்கும் அதிகாரமும் அவனிடம் அளிக்கப்பட்டன.

கோயிலுக்கென்று அவன் தனிக்கணக்கு வைத்துக்கொள்ளவேண்டும். அவனுடைய நன்கொடையைப் பணமாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இச்செயல்களை அவன் நேர்மையாகவும் பிழையின்றியும் செய்வான் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அம்மனிதன் இயல்பாகவே ஒரு பெருங்கஞ்சன். எச்சிற்க்கையால் காக்காய் ஓட்டாதவன். அதே தோரணையில் வேலையை நடத்த முயன்றான். இதன் விளைவாக, வேலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

எல்லாப் பணமும் செலவழிந்துவிட்டது. அனால், வேலையோ அரைகுறையாகத்தான் முடிந்திருந்தது, தன்னுடைய ஜேபியிலிருந்து எதையும் அவன் செலவழிக்கவில்லை. ஒரு பைசாகூடக் கொடுக்கவில்லை.

அவன் ஒரு பெரிய லேவாதேவிக்காரன்; ஆயினும், கஞ்சத்தனத்தின் பூரணமான அவதாரம். பேச்சிலோ எப்பொழுதும் இனிமை; ஆனால், வேலை நடக்கவில்லை.

ஒரு கட்டத்தில், பணம் வசூலித்த மக்கள் எல்லாரும் அவனுடைய வீட்டில் கூடினர். "உமது வட்டிக்கடை வியாபாரத்தால் என்ன பயன்?-

"உமது கையால் பாரம் தூக்காமல், சிவன் கோயிலைப் புதுப்பிக்கும் பணி எவ்வாறு நிறைவேறும் என்று எங்களுக்குத் தெரியவில்லையே! இதைபற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். -

"மக்களை இசையச் செய்து, மறுபடியும் நிதி வசூல் செய்கிறோம். அந்தத் தொகையையும் உம்மிடம் தருகிறோம். ஆனால், நீங்கள் சிவன் கோயில் வேலையை முடித்துக்கொடுக்க வேண்டும்."

 


 

Thursday, 15 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"நான் என்னுடைய இடத்தை விட்டுவிட்டு, இவ்வளவு தூரம் நடந்துவந்து இங்கு உட்கார்ந்துகொண்டு தவளையைப் பாம்பு விழுங்கும்படி விட்டுவிடுவேனா என்ன? நான் அவனை எப்படி விடுவிக்கிறேன் என்று பாரும்.-

"இப்பொழுது, நான் அவர்கள் இருவரையும் பிரித்த பிறகு, நீர் உமது வீட்டிற்குச் செல்லும்; நான் என் வசிப்பிடத்திற்குச் செல்கிறேன். போம், போம், சிலீமை மறுபடியும் நிரப்பும். பாம்பு அடுத்ததாக என்னதான் செய்கிறது என்று பார்த்துவிடுவோம்!"

சிலீம் உடனே தயார் செய்யப்பட்டது. வழிப்போக்கர் அதைப் பற்றவைத்துத் தாம் ஒரு தடவை புகை உறிஞ்சினார். பின்னர் என்னிடம் அளித்தார். நான் புகைகுடிப்பதற்காகச் சிலீமைக் கையில் வாங்கிக்கொண்டேன்.

நான் இரண்டு தடவைகள் புகை உறிஞ்சினேன். பின்னர் வழிப்போக்கனை என்னுடன் அழைத்துக்கொண்டு, குறிப்பிட்ட இடத்தை அடையும்வரை தருப்பைப் புதர்களின் ஊடே புகுந்து நடந்து சென்றேன்.

மறுபடியும் பாம்பைப் பார்த்த வழிப்போக்கர் பீதியடைந்தார். "ஓ, எவ்வளவு பயங்கரமான பிராணி!" என்று சொல்லி வியந்தார். பயமடைந்த அவர், நான் முன்னேறிச் செல்வதைத் தடுக்க முயன்றார்.

அவர் கூறினார், "ஆ, தயவுசெய்து இதற்குமேல் போக வேண்டா.  அந்தப் பாம்பு நம்மை நோக்கி வரும். இந்த இடம் குறுகலாகவும் இடக்குமுடக்காகவும் இருக்கிறது. தப்பித்து ஓடவும் இயலாது. மேற்கொண்டு அடியெடுத்து வைக்கவேண்டா."

அந்தக் காட்சியைப் பார்த்த வழிப்போக்கர் மரணபீதி அடைந்தார். அவர்கள் இருவருக்குமிடையே இருந்த விரோதபாவம் சம்மந்தமாக அப்பொழுது நான் நிகழ்த்திய உபதேசத்தைக் கேளுங்கள்.

"அடே, அப்பா, வீரபத்ரா, உன் விரோதியான சனபசப்பா தவளையாகப் பிறந்த பின்னரும் நீ அனுதாபம் (கழிவிரக்கம்) கொள்ளவில்லையா?-

"நீயும் ஒரு பாம்பாகப் பிறந்திருக்கிறாய். இன்னுமா இந்த கொலை விரோதம்? இப்பொழுதாவது உன்னுடைய செய்கைகளுக்காக வெட்கப்படு! விரோதத்தை விடுத்து சாந்தமாக இரு!"

என்னுடைய வாயிலிருந்து வெளிவந்த இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன் பாம்பு சட்டென்று தவளையை விடுவித்தது.  சரசரவென்று நழுவியோடித் தண்ணீருக்குள் நுழைந்து கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தது.

மரணத்தின் வாயிலிருந்து விடுபட்டு எகிறிக் குதித்த தவளை சட்டென்று அங்கிருந்த செடி கொடிகளிடையே புகுந்து தன்னை மறைத்துக்கொண்டது. வழிப்போக்கர் ஆச்சரியத்தில் மூழ்கினார்.

அவர் சொன்னார், "இது என்னவென்றே எனக்கு விளங்கவில்லை! உங்களுடைய வாயிலிருந்து வெளிப்பட்ட சொற்களைக் கேட்டவுடன் எப்படி அந்தப் பாம்பு தவளையை விடுவித்தது! பாம்பு எப்படி மறைந்துபோயிற்று!-

"இவ்விருவரில் யார் வீரபத்ரப்பா? அதுபோலவே, யார் இவ்விருவரில் சனபசப்பா? இவர்களுடைய விரோதத்துக்குக் காரணம் என்ன? எனக்கு அனைத்து விவரங்களையும் சொல்வீர்களா?"