valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 2 October 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

பாபா மறைமுகமாக விவரித்த வியாதி, ஓரிரண்டு மாதங்களுக்குப் பிறகு நிவிர்த்தியானபோது, பெண்மணியின் அனுபவம் உண்மையை உணர்த்தியது. 

அப் பெண்மணியின் விருப்பம் பின்னர்ப் பூரணமாக நிறைவேற்றப்பட்டது.  ஆனபோதிலும், சபட்னேகர் தரிசனம் செய்யப்போனபோது, 'போ வெளியே' என்ற பழைய வெகுமானத்தையே பாபா மறுபடியும் அளித்தார். 

"பாபா விடாப்பிடியாக என்னை இழிவுபடுத்தும்படியாக நான் என்ன தவறு இழைத்தேன் என்று அறியேன்.  நான் நமஸ்காரம் செய்யும்போது அவர் கூறும் மறுமொழி, மாறமாட்டேன் என்கிறது!

"என் கண்ணெதிரிலேயே மற்றவர்களிடம் மிகுந்த பிரேமை காட்டுகிறாரே; அவர் என்னிடம் மட்டும் கோபங்காட்டுவதற்கு நான் முன்ஜன்மங்களில் என்ன பாவம் சம்பாதித்தேன்?-

"காலையிலும் மாலையிலும் அவரைப் பார்ப்பதற்குச் செல்லும் மக்கள் நித்தியதீபாவளியைப்போல ஆனந்தம் அனுபவிக்கிறார்களே;  என்னுடைய தலையில்மட்டும் 'போ வெளியே' என்றா எழுதியிருக்கிறது?

"என்னுடைய கர்மவினை என்னை அதர்மவழியில் செலுத்தி அளவற்ற பாவங்களைச் செய்யவைக்கும் அளவுக்குக் கொடுமையானதோ? அதனால்தான் பாபா எனக்கு அவகிருபை (கிருபைக்கெடு) காட்டுகிறாரோ?-

"ஆரம்பகாலத்தில் பாபா விஷயமாக நான் குதர்க்கமாகச் சிந்தித்து சந்தேகப்பட்டேன். ஆகவே, பாபாவே இந்த உபாயத்தால் என்னைத் தம்மிடம் நெருக்கமாக இழுக்கிறார் என்று நினைக்கிறேன்".

ஆகவே, பாபாவின்மேல் உறுதிப்பாட்டுடன் மனம் செலுத்தி, பாபாவிடமிருந்து அனுக்கிரஹம் பெறும்வரை ஷிர்டியிலிருந்து நகர்வதில்லை என்று சபட்னேகர் நிர்த்தாரணம் செய்துகொண்டார். 

முவ்வகைத் தாபங்களால் தாக்குண்டபோதிலும், சாயிதரிசனம் செய்யவேண்டுமென்று தாகத்துடன் வந்தவர் யாராவது, மனத்திருப்தி அடையாமல் கூம்பிய முகத்துடன் திரும்பிச் சென்றிருக்கிறாரா?

அந்த நாளில், அன்னமும் பானமும், போவதும் வருவதும் பிடிக்காமல், எதிலும் விருப்பமின்றி சபட்னேகர் சோகமாக இருந்தார். தூக்கம் வராமல் விழித்துக்கொண்டே படுக்கையில் படுத்திருந்தார். 

"யாரும் அருகில் இல்லாத சமயம் பார்த்து, பாபா தனிமையாக ஆசனத்தில் அமர்ந்திருக்கும்போது, அந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி பாபாவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்வேன். "

இவ்வாறு சபட்னேகர் நிச்சயம் செய்துகொண்டார். அவருடைய தீர்மானத்திற்குப் பலனும் கிடைத்தது. மனத்துள்ளே ஏற்பட்ட நல்லெழுச்சியால் பாபாவின் பாதங்களைப் பற்றிக்கொண்டார். 

பாதங்களில் தலையை வைத்து வணங்கியபோது பாபா தம்முடைய கையை சபட்னேகரின் தலையின்மேல் வைத்தார். சபட்னேகர் பாதசேவை செய்ய ஆரம்பித்தார். அப்பொழுது, ஆடு மேய்க்கும் பெண் ஒருத்தி அங்கு வந்தாள்.

 


 

Thursday, 25 September 2025

ஸ்ரீ  ஷீர்டி சாயி சத் சரிதம்  


மனைவி கனவைக் கணவருக்கு விவரித்தார், "அங்கு, ஒரு வேப்பமரத்தடியில், தலையைச் சுற்றி ஒரு துணியைக் கட்டிக்கொண்டிருந்த பக்கீர் ஒருவர் என்னருகில் வந்தார்.-

"கோமளமான குரலில் பக்கீர் இயம்பினார், 'குழந்தாய், ஏன் இப்படி வீணாக சிரமப்படுகிறாய்? நான் உன்னுடைய குடத்தை நிர்மலமான தூய நீரால் நிரப்பித் தருகிறேன்.'-

"எனக்குப் பக்கீரிடம் பீதி ஏற்பட்டது. காலிக்குடத்தை எடுத்துக்கொண்டு சரசரவென்று வீடு திரும்பினேன். பக்கீர் என்னைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். -

"கனவின் இந்தக் கட்டத்தில் நான் விழித்துக்கொண்டேன்."  மனைவி கண்டா கனவின் விவரத்தைக் கேட்ட சபட்னேகர் ஷீர்டி செல்வதென்று முடிவெடுத்தார். 

அதே முஹூர்த்தத்தில் இருவரும் கிளம்பி, மறுநாள் உதயகாலத்தில் ஷீர்டி கிராமத்திற்கு வந்துசேர்ந்தனர்.  உடனே மசூதிக்குச் சென்றனர். அந் நேரத்தில் பாபா லெண்டிக்குச் சென்றிருந்தார். 

ஆகவே, பாபா திரும்பிவரும் வரையில் அவருக்காகக் காத்துகொண்டு உட்கார்ந்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடி பாபாவும் அங்கு வந்தார். 

நகத்திலிருந்து சிகைவரை, கனவில் கண்ட அதே உருவத்தைப் பார்த்த பெண்மணி (சபட்னேகரின் மனைவி ) ஆச்சரியப்பட்டார். மேலும் உன்னிப்பாகப் பார்த்தார். 

பாதங்களை அலம்பும் சேவை முடிந்தது. தரிசனம் செய்த பிறகு பாபாவின் பாதங்களுக்குப் பெண்மணி நமஸ்காரம் செய்தார். ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு பாபாவையே பார்த்துக்கொண்டிருந்தார். 

பெண்மணியின் விநயத்தைக் கண்டு சாயிநாதரின் சித்தம் மகிழ்ந்தது. அவளுடைய வியாதியை நிவாரணம் செய்ய, மெல்லிய குரலில் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார் பாபா. 

வழக்கம்போல, அங்கிருந்த ஒரு மூன்றாவது நபரிடம் தம்முடைய வியாதியைப் பற்றி பிரேமையுடன் விஸ்தாரமாக பாபா தெரியப்படுத்தினார். 

உண்மையில் அது அப் பெண்மணியின் கதை.  அதை அவளிடம் நேரிடையாகவே சொல்லியிருக்கவேண்டும். ஆயினும், அவளுடைய முன்னிலையில், மூன்றாமவர் ஒருவரிடம் அதைச் சொன்னபோது அப் பெண்மணி கண்கொட்டாது கதையைக் கேட்டாள்.

"என்னுடைய கைகள், வயிறு, இடுப்பு, எல்லாம் பல வருஷங்களாக கடுமையாக வலிக்கின்றன.  மருந்துகள் தின்று நான் களைத்துவிட்டேன். வியாதி பரிஹாரம் ஆகவில்லை. (குணமடையவில்லை)

"மருந்துகளை விழுங்கி விழுங்கி என்னுடைய தொண்டை அலர்சியுற்றதுதான் மிச்சம். ஒரு நிவாரணமும் ஏற்படவில்லை. திடீரென்று அந்த வியாதி இப்பொழுது காணாமல் போய்விட்டது. என்னே ஆச்சரியம்!"

இதுதான் அப் பெண்மணியின் கதை.  பெயரைக் கூடாக குறிப்பிடாமல் மூன்றாமவரிடம் சொல்லப்பட்டது. சொல்லப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் அப் பெண்மணி சம்பந்தப்பட்டவையே; அவளுடைய கதையே!


 

Thursday, 18 September 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"இறைவா! இது என்ன சித்திரம்?" பாபா படத்தைப் பார்த்துவிட்டு சபட்னேகரைச் சுட்டிக்காட்டியவாறு  பதிலளித்தார், "இது அவர் நண்பரின் படம்"

இவ்வாறு சொல்லிக்கொண்டே பாபா நகைத்தார். கூடியிருந்தவர்களுக்கும் சிரிப்பு வந்தது. "பாபா, இதன் இங்கிதம் (குறிப்பு) என்னவோ?" என்று பாலா சிம்பி பாபாவை வினவினார். (பாபாவிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை).

உடனே பாலா சிம்பி சபட்னேகரிடம்  சொன்னார், " தரிசனம் செய்துகொள்ளுங்கள்; சீக்கிரம்."  ஆனால், நமஸ்காரம் செய்தபொழுது ,, "போ வெளியே " என்ற முழக்கத்தை சபட்னேகர் செவிமடுத்தார். 


"அய்யகோ! அதே 'போ வெளியே ' இன்னும் என்னைப் பின்தொடர்கிறதே! இப்பொழுது நான் எவ்வழி செல்வேன்?" இதுவே சபட்னேகரின் பெருவியப்பு. 

அவர்கள் இருவரும் பாபாவின் எதிரில் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தபோது பாபா அவர்களுக்கு ஆணையிட்டார், "இங்கிருந்து உடனே வெளியே போய்விடுங்கள்!"

"சமர்த்த ஸ்வாமியே! உம்முடைய ஆணையை எப்பொழுதும் எவராலும் தாண்டமுடியாது.  இவ்வாறிருக்கையில், பாமரர்களாகிய எங்களுடைய கதை என்ன! இக்கணமே நாங்கள் வெளியேறிவிடுகிறோம். -

"பெரும் உதாரகுணம் படைத்தவரென்று கேள்விப்பட்டு தரிசனம் செய்ய வந்தோம். ஆனால், "போ வெளியே " என்ற வார்த்தைகளால் வரவேற்கப்பட்டோம்! இதில் பொதிந்துள்ள ரகசியம் என்னவென்றும் அறியோம்.-

"எங்களைக் கருணையுடன் நோக்குங்கள். நாங்கள் கூடிய சீக்கிரம் மறுபடியும் வந்து உங்களை தரிசனம் செய்ய வேண்டுமென்று ஆசியளியுங்கள்."  அவர்கள் வேண்டிக்கொண்ட ஆறுதல் மேற்கண்டவாறு. 

பாபாவின் மனத்தில் என்ன எண்ணம் இருக்கிறது என்பதை அறியும் சக்தியுடைய ஞானியும் உண்டோ ! ஆகவே, ஆணைக்கு அடிபணிந்து இருவரும் அவரவர் வசிப்பிடங்களுக்குச் சென்றனர். 

பாபாவின் முதல் தரிசனம் இவ்வாறு நிகழ்ந்தது, இருவரையும் வருத்தமடையச் செய்தது. தாமதம் ஏதும் செய்யாமல், இருவரும் அவரவர் கிராமத்தைச் சென்றடைந்தனர். 

மேலும் ஓராண்டு கழிந்தது.  ஆனபோதிலும், சபட்னேகரின்  மனம் உறுதிப்படவில்லை. மறுபடியும் கண்காபூருக்குச் சென்றார்.  மனக்கலக்கம் அதிகரித்தது. 

ஓய்வெடுப்பதற்காக மாடேகாங்விற்குச்  சென்றார். கடைசியில் காசி க்ஷேத்திரத்திற்குச் செல்வதென்று முடிவெடுத்தார்.  அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். 

காசிக்குப் புனிதப் பயணமாகக் கிளம்புவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அவர் மனைவிக்கு ஒரு தெய்வீகக் காட்சி கிடைத்தது.  காசிப் பயணம் நிறுத்தப்பட்டது!

ஆச்சரியமளிக்கக்கூடிய அந்த தெய்வீகக் காட்சி ஏற்பட்டது  எப்படியென்ற புதினத்தை விவரிக்கிறேன்.  சாயியின் லீலைகளைக் கவனத்துடன் கேளுங்கள். 

சபட்னேகரின்  மனைவி படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு குடத்தை எடுத்துக்கொண்டு 'லக்கட்சா ' வின் கிணற்றுக்குத் தாம் செல்வதுபோல் கனவொன்று கண்டார். 


 

Thursday, 11 September 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

அந்த ஞானியை தரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவல் மூண்டது. ஷீர்டி செல்வதென்று முடிவெடுத்தார். உறவினர் ஒருவருடன் கிளம்பினார். 

தம்முடைய பாதங்களில் பணிவதற்காக அவரை ஷிர்டிக்கு இழுத்தவர் சாயியே! சேவடே  எப்பொழுதோ சொன்ன வார்த்தைகள் அப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது ஒரு நிமித்த காரணமே (சாக்குபோக்கே)! நான் இப்பொழுது சொல்லப்போவதைக் கவனத்துடன் கேளுங்கள். 

தம் இளையசகோதரர் பண்டித ராவையும் கூட்டிக்கொண்டு சபட்னேகர் ஞானி தரிசனத்திற்காக ஷிர்டிக்குக் கிளம்பினார். 

அவர்கள் இருவரும் ஷிர்டிக்கு வந்து சேர்ந்தவுடனேயே சாயிதரிசனத்திற்குச் சென்றனர். தூரத்திலிருந்து பாபாவை தரிசனம் செய்தபோதே மனங்குளிர்ந்தனர். 

தூரத்திலிருந்து பாபாவின் கண்களைச் சந்தித்தவுடன் இருகைகளையும் கட்டிக்கொண்டு விரைவாக அவரருகில் சென்று நின்றனர். 

இருவரும் மிகுந்த பணிவுடன் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தனர். தூய்மையான உள்ளதுடனும் பிரேமையுடனும் ஒரு தேங்காயை பாபாவின் பாதங்களில் சமர்ப்பணம் செய்தனர். 

தேங்காயை பாபாவின் பாதங்களில் சபட்னேகர் சமர்ப்பித்தபோது, "போ வெளியே" என்று சத்தம் போட்டு பாபா அவரை விரட்டியடித்தார். 

பாபா கோபங்கொண்டதை கண்ட சபட்னேகர் மனக்கலக்கம் அடைந்தார். 'இதற்கு என்ன பொருள் என்பதை, குறிப்பறிந்தவர் யாரையாவது நான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.' இவ்வாறு தமக்குள்ளேயே சொல்லிக்கொண்டார். 

தரிசனம் செய்து மனமகிழ்ச்சி அடைந்திருக்கவேண்டியவர், சுடுசொல் கேட்டுத் துணுக்குற்றுப் பின்வாங்கினார். வருத்தத்துடன் முகங்கவிழ்ந்து உட்கார்ந்தார். 

'இப்பொழுது யாரிடம் செல்வது? பாபாவின் சுடுசொல்லுக்கு அர்த்தம் என்னவென்று எந்த பக்தரைக் கேட்பது? பாபாவின் என்ன ஓட்டம் என்னெவென்று யாரைக் கேட்பது ?"

அவருடைய நிலைமையைப் புரிந்துகொண்ட யாரோ ஒருவர், அவரை சமாதானப்படுத்தும் வகையில் பாலா சிம்பியின் பெயரை சிபாரிசு செய்தார்.  ஆகவே, சபட்னேகர் பாலா சிம்மியைத் தேடிச் சென்றார். 

விருத்தாந்தத்தை முழுமையாக பாலா சிம்பியிடம் விவரித்தபின், சபட்னேகர் வேண்டினார், "பாபா உக்கிரமான வார்த்தை பேசி என்னை விரட்டிவிட்டார்.-

"தாங்கள் என்னுடன் வந்தாலாவது எனக்கு சாந்தமான தரிசனம் கிடைக்கலாம். பாபா கோபப்படாமல் நம்மீது கிருபைகனிந்த பார்வையைச் செலுத்த வாய்ப்பு உண்டு".

பாலா சிம்பி இதற்கு ஒத்துக்கொண்டார். சபட்னேகர் சஞ்சலத்திலிருந்து விடுபட்டார். பாபாவின் படம் ஒன்றை வாங்கிக்கொண்டு பாபாவை தரிசனம் செய்வதற்கு கிளம்பினார். 

பாலா சிம்பியும் உடன் சென்றார். படத்தைத் தம்முடைய கையில் வாங்கிக்கொண்டபின், பாபாவிடம் அதைக் கொடுத்துப் பணிவன்புடன் பாலா சிம்பி கேட்டார், -

 


Thursday, 4 September 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"பிரசித்தி பெற்ற அஹமத் நகர ஜில்லாவில் ஷீர்டி என்னும் கிராமத்தில் மசூதியில் ஒரு பக்கீர் வாழ்ந்துவருகிறார். அவர் ஒரு புகழ்பெற்ற சத்புருஷர்-

"எங்கெங்கோ எத்தனையோ ஞானியர் இருக்கின்றனர். ஆயினும், அமோகமான புண்ணியம் சேர்த்திராவிட்டால், எவ்வளவு முயன்றாலும் அவர்களை தரிசனம் செய்யும் நல்வாய்ப்பு நேராது.-

"அவரிடம் எனக்குப் பூரணமான விசுவாசம் இருக்கிறது. அவர் சொன்னபடிதான் எல்லாம் நடக்கும். அவர் சொல்லும் வார்த்தைகள்தாம் நடந்தேறும்.  நடக்காமல் தடுக்க எச் சக்தியாலும் யுக முடிவுவரை முயன்றாலும் இயலாது.-

"நான் எவ்வளவு பிரயாசை செய்தாலும் இவ்வாண்டு பரீட்சையில் தேர்ச்சி அடையப்போவதில்லை. ஆனால், அடுத்த ஆண்டு நான் பிரயாசையின்றியே தேர்ச்சி பெறுவேன். இது முவ்வகையிலும் சத்தியம். 

"இது அவர் எனக்களித்த வாக்குறுதி. எனக்கு அவரிடம் முழுநம்பிக்கை உண்டு. அவருடைய வார்த்தைகள் என்றும் பொய்யாகா.  இதை நான் உறுதியாக முடிவுகட்டிவிட்டேன். -

"நான் அதிசயம் ஏதும் இன்றி இந்தப் பரீட்சை மட்டுமின்றி, இதற்கடுத்த பரீட்சையிலும் வெற்றி  பெறப் போகிறேன்."  இந்த வார்த்தைகள் வெறும் பிதற்றல் என்றும், கேலிக்குரியவை என்றும் சபட்னேகர் சந்தேகமற நினைத்தார். 

சபட்னேகர் விகற்பமாகச் சிந்தித்தார், " இவர் சொல்வதை எப்படி நம்ப முடியும்?" இது இவ்வாறிருக்க, சேவடே அங்கிருந்து சென்று விட்டார். பிற்காலத்தில் என்ன நடந்ததென்பதைக் கேளுங்கள். 

சிலகாலம் கடந்த பிறகு, சேவடே  சொன்னது அனுபவ பூர்வமாக உண்மையாகியது. சேவடே  இரண்டு பரீட்சைகளிலும் வெற்றி பெற்றார். சபட்னேகர் ஆச்சரியத்தில் மூழ்கினார்!

அதன்பின் பத்தாண்டுகள் கழிந்தன. சபட்னேகருக்கு கெட்ட காலம் துவங்கியது. துரதிர்ஷ்டம் அவரை திடீரென்று தாக்கித் துயரத்தில் ஆழ்த்தியது.  அவர் சோகமானார். 

1913  ஆம் ஆண்டு சபட்னேகரின் ஒரே மகன் டிப்தீரியா ஜுரம் கண்டு இறந்து போனான்.  அவருக்கு வாழ்க்கையே வெறுத்தது. 

ஆகவே, அவர் பண்டர்பூர், கண்காபூர் போன்ற தலங்களுக்கு புனித பயணம் சென்றார். எங்கே சென்றும் மனம் நிம்மதியடையவில்லை. பின்னர் அவர் வேதாந்தம் படிக்க ஆரம்பித்தார்.

இவ்வாறு சிலகாலம் கழிந்தது.  மனச்சாந்தி பெறுவது எவ்வாறு என்று யோசித்துக்கொண்டிருந்தபோது  திடீரென்று அவருக்கு ஒரு பாதை தென்பட்டது.  சேவடே  பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன விருத்தாந்தம் ஞாபகத்திற்கு வந்தது. 

சாயிபாதங்களில் சேவடேவுக்கு  இருந்த விசுவாசமும் நம்பிக்கையும் உறுதியும் அவருக்கு ஞாபகம் வந்தது. தாமும் சாயீ தரிசனத்திற்குப் போக வேண்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் உதித்தது. 


 

Thursday, 28 August 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அற்பஞானம் விளைவிக்கும் அகந்தையால், சிலர் ஆரம்பகாலத்தில் ஞானிகளின் திருவாய்மொழியை மனக்கோணலுடன் அணுகி நஷ்டத்திற்கு ஆளாவர்.  ஆயினும், பின்னர் விசுவாசம் ஏற்பட்டால், மங்களங்கள் விளையும். 

ஓர் உண்மையான ஞானியின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர் தூயவரானாலும் சரி, கபடரானாலும் சரி, கடைசியில் கரையேற்றப்படுவார். ஞானியரின் ஆற்றல் அளவிடற்கரியது!

இந்தக் கருத்தைப் போதிக்கும் காதையொன்றை இப்பொழுது கவனத்துடன் கேளுங்கள். கேட்பவர்கள் ஆனந்தத்தால் நிரம்புவர்; அவ்வாறே, சொல்பவருக்கும் உற்சாகம் ததும்பும். 

அக்கல்கோட்வாசியும் சபட்னேகர் என்ற பெயர் கொண்டவருமான ஒரு வக்கீலின் அனுபங்களைக் கேளுங்கள். உங்களுடைய மனம் மகிழ்ச்சியடையும். 

சட்டபடிப்பை முழுமுயற்சியுடன் இரவுப்பகலாகப் படித்துக் கொண்டிருந்தபோது, சேவடே என்ற சக மாணவரை இவர் சந்தித்தார். இருவரும் படிப்பு விஷயமாகப் பரஸ்பரம் கருத்துக் பரிமாற்றம் செய்துகொண்டனர். 

மேலும் சில சக மாணவர்களும் அங்கு வந்தனர். எல்லாரும் ஒரே அறையில் உட்கார்ந்தனர். யார், எந்த அளவிற்குப் படித்துத் தெளிவடைந்திருக்கிறார் என்பது அறிந்துகொள்ள ஒருவரையொருவர் கேள்வி கேட்டுக்கொண்டனர்.

யாருடைய விடை சரியானது என்பதையும், யார் எந்த இடத்தில எவ்விதமாகத் தவறு செய்கிறார் என்பதையும் தெரிந்துகொண்டு, சந்தேகங்களை நிவிர்த்தி செய்துகொண்டு மனநிறைவு பெறுவதே நோக்கம். 

சேவடேவின் விடைகள் அனைத்தும் தவறானவையாக இருந்தன. கடைசியில் எல்லா மாணவர்களும் சொன்னார்கள், "இவர் எப்படிப் பரீட்சையில் வெற்றி பெறப்போகிறார்?" படித்ததெல்லாம் அரைகுறையாக இருக்கிறதே!"

சக மாணவர்கள் இவ்வாறு இளக்காரமாக பேசிய போதிலும், சேவடே முழுநம்பிக்கையுடன் கூறினார், "படிப்பு அரைகுறையாக இருந்தாலும், முழுமையாக இருந்தாலும், வேளை வரும்போது நான் பரீட்சையில் தேர்ச்சி பெற்றுவிடுவேன்.-

"நான் முழுமையாக அப்பியாசம் செய்திராவிட்டாலும், என் பாபா எனக்குப் பரீட்சையில் வெற்றியளித்துவிடுவார். நான் எதற்காக கவலைப்பட வேண்டும்?"

இந்த வார்த்தைகளைக் கேட்ட ஸபத்னேகர்  ஆச்சரியமடைந்தார்.  சேவடேவைத் தனியாக அழைத்துச் சென்று கேள்வி கேட்கத் தொடங்கினார். 

"அடடா! நீர் வானளாவப் புகழும் இந்த சாயி பாபா யார் ஐயா? அவர் மீது பூரணமான விசுவாசம் வைத்திருக்கிறீரே; அவர் எங்கு வாசம் செய்கிறார்?"

இதற்கு விடையாக சேவடே சாயி பாபாவின் மகத்துவத்தை எடுத்துரைத்தார். கூப்பிய கைகளுடன், தாம் அவர்மீது வைத்திருந்த ஆத்ம விசுவாசத்தை ஒளிவுமறைவின்றித் தெரிவித்தார். 



Thursday, 21 August 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

சத் சரித்திரத்தைச் சொற்பொருள் அறிந்து பயபக்தியுடன் கேட்பவர்களுக்கு ஆத்மஞானம் அனாயசமாக கைகூடும். 

பக்திபாவத்துடன் சாயியின் பொன்னடிகளைத் தொழுவதாலும், சாயியை மனத்தில் நிலைபெறச் செய்வதாலும், புலன்கள் இஷ்டம்போல் செயல்படுவதை நிறுத்திவிடுகின்றன. பிறவிக்கடல் சுலபமாகவும் விரைவாகவும் கடக்கப்படுகிறது. 

சாயி சத் சரித்திரத்தைப் படிப்பதும் கேட்பதும், பக்தர்களாகிய சாதகப் பறவைகளுக்கு ஜீவனளிக்கும் நீராகும். கேட்பவர்கள், கேட்டதை மனத்தில் இருத்துவதால் இறைவனின் கிருபையைப் பெறுவதற்கு ஆயத்தமாகின்றனர். 

இந்தக் கதையை எந்நிலையிலும் கருத்தூன்றிக் கேட்பவர்களின் கர்மபந்தங்கள் அறுந்து, விழும்.  அவர்கள் பிறவிக்கடலை இயல்பாகக் கடந்துவிடுவார்கள். 

இப்பொழுது, கதைகேட்பவர்கள், "கதை எப்பொழுது ஆரம்பிக்கப்போகிறது?" என்று தங்களுக்குள்ளேயே கேள்வி எழுப்புவது எனக்குப் புரிகிறது.  பீடிகையை ஆரம்பித்து அவர்களுடைய சஞ்சலத்தை நிவிர்த்தி செய்கிறேன். 

விரோதம், கொலை, கடன் ஆகிய பாவங்களிலிருந்து விடுபடுவதற்காகப் புனர்ஜன்மம் எடுத்தாக வேண்டும் என்பதும், கர்மவினைகளை அனுபவித்தே தீரவேண்டும் என்பதும் கடந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டன. 

மக்களுக்கு முன்ஜன்ம ஞாபகம் இருக்காது. ஆனால், ஞானிகளோ அதை மறப்பதில்லை. பக்தர்கள் எங்கு மறுபிறவி எடுத்தாலும் அவர்களை சங்கடங்களிலிருந்து ஞானிகள் விடுவிக்கின்றனர். 

கொடுப்பதிலும் வழங்குவதிலும் உட்காருவதிலும் எழுந்திருப்பதிலும் (எல்லாச் செயல்களிலும் எல்லா நேரங்களிலும்) ஞானிகளின் பாதங்களில் நம்பிக்கை வைக்கும் அடியவர்கள், வாழ்க்கையில் 
எவ்வாறு வெற்றியடைகிறார்கள் என்பதை விளக்கும் காதை ஒன்று இப்பொழுது சொல்லப்படும். 

ஒரு காரியத்தைத் தொடங்கும்போது இறைவனின் பாதங்களை நினைப்பவர்களுடைய மனக்கவலையை இறைவனே நிவாரணம் செய்கிறான். பக்தர்களும் தங்களுடைய கருமத்தில் கண்ணாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

'செயல் புரியும் கடமை மாத்திரம் என்னுடையது; பலனை அளிப்பவர் எல்லாம் வல்ல இறைவன்' என்னும் திடமான நம்பிக்கை எவரிடம் உள்ளதோ, அவருடைய செயல்கள் அனைத்தும் வெற்றி அடையும். 

ஞானிகள் கடுமையும் கண்டிப்பும் மிகுந்தவர்களாகத் துவக்கத்தில் தோன்றலாம். ஆயினும், அவர்களுடைய அன்பு, லாபம் எதையும் எதிர்பார்க்காதது.  பொறுமையாகவும் தைரியமாகவும் உறவைத் தொடர்ந்தால், நமக்கு மங்களங்கள் விளைவிப்பார்கள். 

சாபங்களும் தாபங்களும் சுயநல நோக்கத்தால் ஏற்படும் ஆசாபாசங்களும், ஞானிகளின் சத் சங்க நிழலில் நாம் புகும்போது ஒவ்வென்றாக மறைந்துவிடும். இதன் பொருட்டு நாம் ஞானிகளின் பாதங்களை வணங்க வேண்டும். 

அகந்தையை விடுத்து, விநயத்துடன் ஞானிகளை சரணாகதி அடையவேண்டும்.  நம் மனத்தில் புதைந்து கிடக்கும் ரகசிய விருப்பதைப் பிரார்த்தனையாக அவர்களிடம் வெளிப்படுத்தவேண்டும்.  ஞானிகளின் நம்முடைய மனத்துக்குப் பெரும் திருப்தியை அளிப்பார்கள்.