valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 18 February 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஜீவாத்மா எது, பரமாத்மா எது, என்பதை குருவைத் தவிர வேறெவராலும் விளக்க முடியாது. சிஷ்யன் பூரணமாக சரணமடையா விட்டால் குருவும் ஞானத்தை அளிக்கமாட்டார்.

குருவைத் தவிர வேறெவரும் ஞானம் அளித்தால் மனதில் பதியாது; சம்சாரத்தில் இருந்து நிவிர்த்தியை தராது; மோக்ஷத்தையும் அளிக்காது.

ஆகவே, குருவின்றி ஞானம் இல்லை; எல்லா வித்வான்களும் அறிவாளிகளும் இதை நன்கு அறிவர். பிரம்மமும் (முழு முதற்பொருளும்) மனிதனுடைய ஆத்மாவும் ஒன்றே என்னும் அனுபவத்தை அளிக்க குருவைத் தவிர வேறெவருக்கும் சாமர்த்தியம் இல்லை.

தயக்கமும் கூச்சமும் இங்கு வேண்டா. கர்வத்தையும் அஹங்காரத்தையும் அறவே ஒழித்து விட்டு பூமியில் விழுந்து தண்டனிடுங்கள்; குருவின் பாதங்களில் பணிவுடன் தலையை வையுங்கள்.

திடமான மனதுடன் இவ்வுறுதி மொழியைக் கூறுங்கள், "நான் உங்களுடைய அடிமைக்கு அடிமை; உங்களிடம், உங்களிம் மாத்திரமே, விசுவாசம் வைப்பதில் நான் நிறைவு பெறுகிறேன்."

பிறகு அவர் செய்யும் அற்புதங்களைப் பாருங்கள்!  தயாசாகரமான குரு, உம்மீது கருணை கூர்ந்து உம்மை அலைகளுக்கு மேலே தூக்கிப் பிடித்துக் கொள்வார்.

உம்முடைய தலைமேல் தம் அபயகரத்தை வைத்து, எல்லா இன்னல்களையும் துயர்களையும் அழித்துவிடுவார்; பாவ மூட்டைகளை எரித்து விடுவார்; உம்முடைய நெற்றியில் உதீ அணிவிப்பார்;

'ஜீவனும் சிவனும் ஒன்றே' என்பதை பக்தர்களுக்கு விரிவாக பாபா விளக்கிய நிகழ்ச்சிக்கு, 'பிரம்ம ஞானம் கொடு' என்று கேட்டுக்கொண்டு வந்தவர் ஒரு சாக்குப் போக்குதான்.

சாயி மகாராஜ் ஈடிணையற்ற அறிவும் ஞானமும் படைத்திருந்த போது, அவர் பரிஹாசதிற்கும் நகைச்சுவைக்கும் ஏன் இவ்வளவு இடம் கொடுத்தார்? தமாஷில் இவ்வளவு ஆர்வம் ஏன்?

இந்த சந்தேகம் மனதில் எழுவது இயற்கையே. ஆயினும் ஆழமாகச் சிந்தித்தால், அதற்கு ஒரே ஒரு நல்ல காரணம் இருப்பது தெளிவாக விளங்கும்.

நாம் குழந்தைகளுடன் பேசி அவர்களுடைய மழலையை கேட்டு மகிழும்போது, அறிவு முதிர்ந்த மும்முரமான பேச்சுக்கு இடமேது?

இதனால் நாம் குழந்தைகளிடமும் அன்பு காட்டவில்லை என்றா பொருள்? இவ்வாறே, பாபாவினுடைய பரிஹாசமும் நகைச்சுவையும் கோமாளிக் கூத்தும் என்றறிய வேண்டும்.  


Thursday, 11 February 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்
வழி தவறிப் போவது வாழ்க்கையில் பிரமிப்பை அதிகமாக்குகிறது. தேஹாபிமானமும் 'நான்' 'என்னுடையது' என்னும் உணவர்வுகளும் மாயைகள்; கானல் நீரைப் போன்ற ஏமாற்றுத் தோற்றங்கள். ஆகவே, 'நான்' 'என்னுடையது' என்னும் எண்ணங்களை வென்று விடுங்கள்.

'நான்' 'என்னுடையது' என்னும் வலைகளில் ஏன் மாட்டிக் கொள்ளவேண்டும் என்பது பற்றித் தீவிரமாகச்  சிந்தனை செய்யுங்கள். உன்னுடைய தளைகளில் இருந்து விடுபடு; கிளியே! வானத்தில் சிறகடித்து உயரமாகப் பறக்கலாம்!

முக்தியை நாடினாலே பந்தபட்டிருக்கிறாய் என்று பொருள்! பந்தத்தில் இருந்துதானே விடுதலை பெறமுடியும்? பந்தமும் வேண்டா, முக்தியும் வேண்டா என்று ஒதுக்கி விட்டு, உன்னுடைய சுத்தமானதும் உண்மையானதுமான நிலையில் ஒடுங்கு.

எல்லா ஞானங்களும் ஒன்றுக்கொன்று சார்புடையவையே; சுகமும் துக்கமும் அஞ்ஞானத்தின் விளைவுகளே. இவற்றையெல்லாம் உதறித்தள்ளி விட்டு உள்ளுணர்வு அனுபவத்தை விருத்தி செய்து கொள்; பிரம்ம ஞானம் கைக் கெட்டிய தூரத்தில் வந்துவிடும்.

'உன்னுடையது ' 'என்னுடையது' என்னும் உணர்வுகள் இருக்கும்வரை எது உண்மையான நன்மை என்பதி நீ பொருட்படுத்தவில்லை என்றே அறிக. இவ்வுணர்வுகளைத் தூக்கி எறிந்து விட்டு, உடலின் மேல் உள்ள பேராசையை உதறிவிட்டு உன்னுடைய உண்மையான சொரூபத்தை நோக்கித் திரும்பு.

குபேரனை போன்ற ஒரு பணக்காரர் பிச்சை எடுக்கப் போவது துர்ப்பாக்கியம் அன்றோ! அஞ்ஞானத்தால் ஏற்பட்ட எதிர்மறை விளைவன்றோ?

தினமும் நல்ல சாஸ்திரங்களை காதால் கேளுங்கள்; குருவினுடைய திருவாய் மொழிக்கு விசுவாசத்துடன் கீழ்ப்படிந்து நடங்கள்; எந்நேரமும் பிரதமமான இலட்சியத்தை அடைவதைப் பற்றி விழிப்புடன் இருங்கள்.

இவ்வாழ் நெறியைக் கடைபிடிப்பதால் மக்கள் சுய முயற்சியால் மேன்மையுறும் பாதையைக் காண்பர். இவ்விதமாக எண்ணற்ற ஜீவர்கள் எழுச்சியுற்று உயர்வு பெறுவர்.

எவர் இரவு பகலாக 'எப்பொழுது சம்சார பந்தங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்' என்று ஏங்குகிறாரோ, அவர் பந்தங்களை சீக்கிரமே அறுத்து விடுவார்.

இவ்வுலக வாழ்க்கை சாரமற்றது என்பதை உறுதியாக உணர்ந்துகொண்டு, எப்பொழுது எல்லாம் தனிமை கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் அத்ய யனமும் (சிறந்த நூல்களை கற்றல்) ஆத்மா சிந்தனையும் செய்யுங்கள்.

சிஷ்யன் பக்தியுடனும் சிரத்தையுடனும் விநயத்துடனும் பூரணமாக சரணாகதி அடைந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யா விடின் குரு ஞானக் கருவூலத்தை அளிக்க மாட்டார்.

உங்களை முழுமையாக குருவிடம் சரணாகதி ஆக்கிவிட்டு, குருவிற்கு சிசுருஷை (பணிவிடை) செய்யுங்கள். குருவினிடம் இருந்து முழுப்பலனையும் அடையும் வகையில் பந்தங்களை பற்றியும் விடுதலையைப் பற்றியும் கேளுங்கள்; ஞானம் எது, அஞ்ஞானம் எது என்று கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். 

Thursday, 4 February 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

சாஸ்திரங்கள் திரும்பத் திரும்ப, "இதமான வார்த்தைகளைப் பேசுங்கள்; பரோபகாரம் செய்யுங்கள்" என்று உபதேசம் செய்கின்றன. பாபாவும் சாஸ்திர விதிகளின்படியே நடந்தார்.

'இது பொருத்தமா, பொருத்தமில்லாததா?' என்பதெல்லாம் ஒருவருக்கொருவர் வேறுபடும்  அபிப்பிராயங்கள். இக்காவியமோ சாமானிய மக்களுக்கு பிரீதியையும் நன்மையையுமே குறிக்கோளாக  ஏற்றுக் கொண்டிருக்கிறது.

அதுதான் இங்கே பிரயோஜனம். பாபாவுக்கு காரண காரிய சம்பந்தம் நன்கு தெரியும். பாபாவின் மனதில் என்ன தோன்றுகிறதோ, அது நடந்து விடும் என்பதை உறுதியாக அறியவும்.

குருவினுடைய  திருவாய் மொழியாக வெளிவரும் கதைகளைக் கேட்க வேண்டும். ஆராய்சிக்கு அப்பாற்பட்ட அவருடைய லீலைகளை அனுபவிக்க வேண்டும். எத்தனை லீலைகளைச்  சேகரிக்க முடியுமோ அத்தனையையும் சேகரித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

சாயியின் அற்புதமான சரித்திரம் பக்தியுடன் கேட்கப்பட்டால், எடுத்துச் சொல்பவர், கேட்பவர்கள், இவர்களுடைய இன்னல்களும் துயரங்களும் ஒழிந்து  போகும்; இவர்களுடைய கெட்டகாலம் ஒரு முடிவுக்கு  வந்து விடும்.

பாபாவினுடைய  அற்புதமான லீலைகளைக் கேட்டு ஆச்சரியப்படாதவரோ, அவருடைய தரிசனத்தால் மன அமைதி பெற்று, அவருடைய பாத கமலங்களில்  பணிவுடன் சரணடையாத அபாக்கியசாலியோ எவரும் உண்டோ?

புனிதமானதும் தூய்மையானதுமான  சாயியின் சரித்திரம் திறந்த மனதுடன் கேட்கப்பட வேண்டும். அவ்வகை சந்தோஷமான நல்வாய்ப்புக் கிடைக்கும்போது யார் அதை நழுவ விடுவார்?

புத்திரன், மித்திரன் (நண்பன்), மனைவி இவர்களெல்லாம் சம்சாரக் கடலின் சுழல்கள். இக்கடலில் காமம், குரோதம், போன்ற முதலைகள் அநேகம். இக்கடலின் அலைகள் பலவிதமான நோய்கள் என்னும் திமிங்கலங்களாலும் எதிர்பார்ப்புகளாலும் ஆசைகளாலும் உயரமாக எழுப்பப்பட்டு ஆர்ப்பரிக்கின்றன.

சில சமயங்களில் மனிதன் சலிப்பிலும் துயரத்திலும் மாட்டிகொண்டு  தவிக்கிறான், இரட்டைச் சுழல்கள் (இன்பம் / துன்பம் - குளிர் / வெப்பம்) வாழ்க்கையில் அடிப்படை சந்தேகங்களை எழுப்பகின்றன. ஆயினும் மனிதனால் பற்றறுக்கும் நிலைக்கு உயர முடிவதில்லை.

'நான் சுத்தமான பிரம்மம்; ஒரு மனித உடலில் மாட்டிக்  கொண்டிருக்கிறேன்; கூண்டுக்குள் இருக்கும் குறுக்குத் தண்டைக் கெட்டியாக கால்களால் பிடித்துக் கொண்டு தலை கீழாக தொங்கும் கிளி நான்' என்னும் கருத்தை அடிக்கடி உங்களுக்கே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

மாயையின் மோகத்தில் நீங்கள் வழி  தவறி விட்டீர்கள்; அதன் காரணமாக உங்களுக்கு எது சாசுவதமான நன்மை என்பதை மறந்து விட்டீர்கள். சுய முயற்சியாலேயே விழித்தெழுந்து, உஷாராக ஆகி, உங்களுடைய உண்மையான சொரூபத்தை நாடுங்கள்.  


 

Thursday, 28 January 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஆதிதைவிகம், ஆத்யாமிகம், ஆதிபௌதிகம், ஆகிய மூவகைத் துன்பம் என்னும் ஊழியத்தீயின் ஜுவாலைகளால் கொதித்துக் கொண்டிருக்கும் சம்சாரக் கடலில் யாரால் சந்தோஷமாக வாழ முடியும்?

இத் துன்பங்களில் இருந்து விடுபட, சாயியுனடைய அருளை நாடுங்கள். அவருடைய சுந்தரமான சரித்திரத்தை பய பக்தியுடன் கேளுங்கள்; பாராயணம் செய்யுங்கள்; மனத்திரையில் ஓட விடுங்கள்.

மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் சேந்து கொண்டு இந்த 'ஸ்ரீ சாயிநாத சரித்திரம்' செவிமடுக்கப் பட்டால் அவர்களுக்கு இவ்வுலகிலும் மேலுலகிலும் விரும்பினவெல்லாம் கிடைக்கும். பாபாவின் லீலைகள் விசித்திரமானவை!

பாக்கியம் செய்தவர்களே இக்காவியத்தை சிரத்தையுடன் கேட்பார்கள். பக்தியுடன் கேட்பவர்கள் சாந்தமயமாகிவிடுவீர்கள்.

இக்காதையின் அருவி ஓட்டத்தில் கர்மமென்னும் உப்பு (நர்செயலோ , தீச்செயலோ) கரைந்து விடும். கேட்கக் கேட்க, சாயியின் சுந்தரமான உருவம் கண்முன்னே தோன்றும்.

சாயியின் காதைகளைக் கேட்டால் பாவங்கள் அழியும். இக்காதைகளைக் கேட்பவர்கள் போராடி மரணத்தையும் வெல்லும் சக்தி பெறுகிறார்கள்; ஆயாசம் ஏதுமில்லாமல் பரம உல்லாசத்தையும் அடைகிறார்கள்.

சாயி சரித்திரத்தை கேட்பது மனதைத் தூய்மை அடையச் செய்கிறது. ஜனன மரணச் சுழலில் இருந்து விடுபட செய்கிறது. செயல்களின் பலனை பிரம்மத்திற்கு அர்ப்பணம் செய்யும்படி செய்து, உயர்ந்த பதவியான பிரம்ம பதத்தை அடைய வழிகோலுகிறது.

இவ்வாறாக, சாயினாதருக்கு சேவை செய்ய வேண்டுமென்கிற ஆசை, சேவகர்களை நிரந்தரமாக மற்ற ஆசைகள் அற்றவர்களாக ஆக்கி விடுகிறது. ஸ்ரீ சாயிராமன் அவர்களுக்கு சதா சர்வகாலமும் (எந்நேரமும்) அடைக்கலம் அளிக்கிறார்.

செவிமடுப்பவர்களே! இக்காவியத்தின் ஒரு பகுதியையாவது தினந்தோறும் பாராயணம் செய்யுங்கள்; அல்லது காதால் கேளுங்கள்; படித்தபின் பரிசீலனை செய்யுங்கள்; படித்ததை சிந்தனை செய்யுங்கள்; மறுபடியும் மறுபடியும் படித்த விஷயத்தை தியானம் செய்யுங்கள்.

தைத்ரிய உபநிஷதத்தின் சித்தாந்தமான, "ஆனந்தமே பிரம்மம்; இதை நான் உறுதியுடன் அறிகிறேன்" என்பதை பக்தர்களுக்கு பாபா திரும்ப திரும்ப உபதேசம் செய்தது போல் தோன்றியது.

"சிறிதளவும் கவலைக்கு இடம் கொடாதீர்கள்; எப்பொழுதும் ஆனந்தம் நிரம்பியவராக இருங்கள்; மரண பரியந்தம் கவலை வேண்டா; கவலையே வேண்டா". இதைத்தான் பாபா எப்பொழுதும் உபதேசம் செய்தார்.

இந்த அத்தியாயத்தின் லட்சியம் பிரம்ம தத்துவத்தை நிர்த்தாரணம் செய்வதே. சாயியிடம் சரணமடைபவர்களுக்கு அதுவே சம்சாரக் கடலைக் கடக்கும் நாவாயாக அமையும்.    


Thursday, 21 January 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

இவ்விதமாகவே, 'பிரம்மத்தைக் காட்டு' என்று கேட்டுக்கொண்டு வந்தவர் பாபாவினுடைய ஆசீர்வாதங்களை பெற்றுத் திருப்தி அடைந்துவிட்டனர். நீங்களும் நானும் நாமெல்லோருமே, ஒரேவிதமாகத்தான் செயல்படுகிறோம்; பாதை கடினமாகும் போது பயணத்தையே கைவிட்டுவிடுகிறோம் !

ஒளியின் இனிமையையும் தொடும் உணர்வின் சுகத்தையும் நறுமணத்தை மோத்தலையும்  (மூக்கால் நுகர்தலையும்) வெளிக்காட்சிகளைக் காணும் மகிழ்ச்சியையும் நாம் நாடிச் சென்று இன்பம் தேடும் வரை புலன்களை அடக்க முடியாது.

புலன்களை ஒடுக்காமல் புலனின்பங்களில் இருந்து விடுபட முடியாது, ஆத்மாவினுடைய குணாதிசயங்களை தெரிந்து கொள்ள முடியாது. ஆத்ம ஞானம் பெற முடியாது.

முதலாவதாக, ஒருவர் எல்லா ஆசைகளில் இருந்தும் விடுபட வேண்டும்; பிறகு வேறெதிலும் நாட்டமின்றி குருவை சரணடைய வேண்டும். திடமான சிரத்தையுள்ளவரே ஆத்மா விஞ்ஞானம் பெறுவதற்கு தகுதியான பாத்திரம் ஆவார்.

ஐந்து ஞானேந்திரியங்களும் தங்களுடைய புலன்களின்மேல் உண்டான நாட்டங்களை விட்டு விடும்போதும், தீர்மானங்கள் செய்வது, தேவையில்லாத கற்பனைகள் செய்வது போன்ற நடப்புகளை மனம் தானாகவே நிறுத்தி விடும்போதும்; -

இவ்வாறு மனம் அடங்கிவிட்ட நிலையில், புத்தியும் தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்தி விடும்போது, அதுவே மிக உன்னதமான நிலை அல்லது மோக்ஷம்; அதுவே நிர்விகாரமான பிரம்மத்தை அடைதல்.

தீர்மானங்கள் செய்யும் விஷயத்தில் எவருடைய புத்தி சூனியமாகி விட்டதோ, எவர் 'நான் யார்' என்று உணர்ந்து கொண்டவரோ, அவரே புண்ணியசாலி; அவரே ஆத்ம ஞானம் பெறுவார்; மற்றவர்கள் பெறமாட்டார்கள்.

உலக சுகங்களுக்குப் பாரா முகம் காட்டுபவருடைய புலன்கள் ஆத்மாவையே நாடும்; பேரின்பம் விளையும். இதன் பிறகு வேறெதுவுமே மகிழ்ச்சியைத் தராது.

ஆத்மா சூக்குமமானது; உணர்ந்து கொள்வதற்கு மிகக் கடினமானது. உலக விவகாரங்களாலும் புலன்களின் ஆசையாலும் மறைக்கப்பட்டு, அறிந்து கொள்ள முடியாததாக ஆகிவிடுகிறது. ஆத்ம ஞானத்தை பெறுதலே பரமானந்தத்தை அடையும் வழியாகும்.

எவர் இவ்வுலகத்திலும் மேலுலகத்தில் இருக்கும் எப்பொருளின் மீதும் ஆசை வைக்காதவரோ, நான்முகனாகப் (படைக்கும் கடவுளாகப்) பதவி பெறுவதற்கும் ஆசை இல்லாதவரோ, அவரே பிரம்ம பதத்தை அடைகிறார். அவரையே முக்தியடைந்தவராக கருத வேண்டும்.

மெதுவாகவும் படிப்படியாகவும் மனதைப் புலனின்பங்களில் இருந்து விடுபட செய்து, ஆத்ம ஞானம் பெறுவதற்காக 'நான் யார்' என்ற சிந்தனையில் செலுத்த வேண்டும்.

புத்திமான்களால்தான் இவ்வுலக வாழ்விலும் மேலுலக வாழ்விலும் செயல்களின் பலன்களில் இருந்து விடுபட முடியும்; சுகம் / துக்கம் போன்ற இரட்டைச் சுழல்களில் இருந்தும் விடுபட முடியும். அத்யாத்ம யோகத்தின் உண்மையான வழி இதுவே.  


Thursday, 7 January 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

"இதை கவனமாகச் செவிமடுத்தால் உங்களுக்கு மங்களம் உண்டாகும். புனிதமான இம்மசூதியில் உட்கார்ந்துகொண்டு நான் ஒரு போதும் சத்தியம் இல்லாததை பேசமாட்டேன். "

இதயத்தில் முழுநம்பிக்கையுடன் ஞானிகளின் திருவாய்மொழி என்னும் அமிருதம் பெருகும் ஆற்றில் நீராடினால், எல்லா மலங்களும் கழுவித் துடைக்கப் பட்டு உள்ளும் புறமும் தூய்மை அடையும்".

இதுவே சாயினாதரின் மகிமை; வர்ணிக்க முடியாதது. ஒப்பு நோக்க முடியாத விஷயத்திற்கு எதை உதாரணமாக கூறுவேன்? தூய்மையான பிரேமையினால்தான் அதை அடைய முடியும்.

எல்லாருக்கும் அன்னையாகிய ஆர், துக்கத்தாலும் வலியாலும் அவதிப்படுவர்களுக்கும் வாழ்க்கையில் இன்னல்படுபவர்களுக்கும் அடைக்கலம் ஆவார். தீனர்களுக்கும் பலஹீனர்களுக்கும், குளிர் நிழலும் அடைக்கலமும் தரும் கற்பகத் தருவாவார்.

ஒருவர் ஆன்மீக முன்னேற்றம் கருதி, உலக வாழ்வைத் துறந்து ஏகாந்தமாக தியானம் செய்ய மலைகளுக்கோ பள்ளத்தாக்குகளுக்கோ செல்லலாம்.

அவ்வாறு சுயநலமாக ஆன்மீக லாபம் அடைந்து வெற்றி கண்ட ஞானியர் எத்தனையோ பேர்; ஆனால், அவர்களால் மற்றவர்களுக்கு என்ன பிரயோஜனம்?

சாயி பாபா அத்தகைய மகான் அல்லர். நண்பர்கள், உற்றார், உறவினர், வீடு, மனைவி, மக்கள், குடும்பம் ஆகியன ஏதுமில்லாமல் இருந்தும் அவர் ஜனங்களிடையே வாழ்ந்தார்.

ஐந்து இல்லங்களின் வாயிற் படிகளில் நின்று கையேந்தி பிச்சை எடுத்த உணவை உட்கொண்டு, தம்முடைய உடைமையான ஒரு சில பொருள்களைத் தம்மைச் சுற்றிலும் வைத்துகொண்டு, உலகத்தாருக்கு வாழும் நெறியைப் பயிற்றுவிக்கும் வகையில் எந்நேரமும் ஒரு மரத்தடியில் வாழ்ந்தார்.

தாம் பிரம்ம ஐக்கிய நிலையில் இருந்த  போதிலும், உலக மக்களின் க்ஷேமதிற்காகவும் மங்களத்திற்காகவும் அநேக சிரமங்களை ஏற்கும் பேருள்ளமும் மன்னிக்கும் பெருந்தன்மையும் உடைய இதுபோன்ற சாதுக்களை காண்பதரிது.

இந்த நிர்மலமான ரத்தினத்தை வயிற்றில் சுமந்த அன்னை மஹா புண்ணியசாலி; தூய்மையான பெற்றோர்கள் புண்ணியசாலிகள்; பிறந்த  குலம் புண்ணியம் செய்தது; பிறந்த தேசம் புண்ணிய பூமி.

எம் முயற்சியும் செய்யாமலேயே இந்தத் 'தொட்டதைப் பொன்னாக்கும் ரத்தினம்' அவர்களுக்கு கிடைத்தது; ஆனால், அவர்களோ இதை ஒரு சாதாரனமான கல் என்று தவறாக எண்ணித் தூக்கி எறிந்துவிட்டனர். வெகு காலத்திற்கு ஷிர்டி மக்களுக்கு இப் பரமபாகவதரின் அருமை தெரியாது போய்விட்டது.

சாணக்குவியலில் கிடந்த ஒரு விலைமதிப்பற்ற மாணிக்கத்தைச் சிறுவர்கள் எடுத்து, ஒரு சாதாரணக் கல்லைப்போல் எறிந்து உதைத்து ஏறிநின்று விளையாடுவதை போன்று, ஷிர்டி மக்கள் இம்மாணிக்கத்தின் அருமை தெரியாது இருந்துவிட்டனர். 


Thursday, 31 December 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

"மக்கள், மாடு கன்று , பொருள் தேடுதல், முதலியவற்றிலேயே  மூழ்கிப் போனவருக்கு பிரம்ம ஞானம் எங்கிருந்து கிடைக்கும்? செல்வம் என்னும் முட்டுக்கட்டையை அகற்றாதவரையில், ஞானம் எப்படிக் கிடைக்கும்?-

"பணத்தாசையை வெல்வது மிகக் கடினம். அது துக்கமும் இன்னல்களும் நிரம்பிய ஆழமான நதியைப் போன்றது. அந்நதியில் பல பேராசைச் சுழல்களும் திமிர், பொறாமை போன்ற எதிர்த்துப் போராட முடியாத பல முதலைகளும் இருக்கின்றன. ஆசையைத் துறந்தவனே அதில் இருந்து தப்பிக்க முடியும். -

"பேராசை பிரம்மத்தின் அகண்ட வைரியாகும்; மனக் குவிப்பிற்கோ தியானத்திற்கோ  நேரம் இருப்பதில்லை. பிறகு விரக்தியோ முக்தியோ எங்கிருந்து வரும்? பேராசை பிடித்தவர் ஆசாரங்களை அனுஷ்டிப்பதில்லை .-

"பேராசைக்கு சாந்தியில்லை; திருப்தி இல்லை; நிம்மதியில்லை. பேராசை மனதுள்ளே புகுந்துவிட்டால், ஆன்மீக முன்னேற்றத்திற்கு உண்டான அத்தனை கதவுகளையும் மூடிவிடும்.-

"சுருதிகளாலும் ஸ்மிருதிகளாலும் 'செய்யக் கூடாது' என்று விதிக்கப்பட்ட காரியங்களையே  முழுதும் செய்து கொண்டிருக்கும் மனிதருக்கு சாந்திஎன்பதே இருக்காது. -

"இதற்குக் 'குழம்பிய அல்லது பிரமித்துப் போன மனம்' என்று பெயர். புலனின்ப சேற்றில் உழன்று கொண்டு, கெடுதலான செயல்களையே எந்நேரமும் செய்துகொண்டு, தமக்கு எது நன்மை என்று தெரியாமலேயே இம் மனிதர் வாழ்கிறார்.-

"அவர் பல விஷயங்களில் உயர்ந்த ஞானம் பெறலாம்; ஆயினும் செயல்களின் பலனைத் துறக்காவிட்டால், ஆத்ம ஞானத்திற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீண். ஆருக்கு ஆத்ம ஞானம் கிடைக்காது.-

"யார் வந்து எதை வேண்டினாலும், ஞானிகள் முதலில் அவருடைய (ஆன்மீக) அதிகாரத்தையே நோக்குகின்றனர். பிறகு, யாருக்கு என்ன யோக்கியதை இருக்கிறதோ அதற்கேற்றவாறே கொடுக்கின்றனர். -

"இரவு பகலாக தேஹாபிமானத்திலும் புலனின்பங்களிலும் மூழ்கிப் போனவருக்கு குருவின் உபதேசம் வீணாகிப் போகிறது. அவர் உலக வாழ்விலும் தோற்றுப் போகிறார்; ஆன்மீக வாழ்விலும் தோற்றுப் போகிறார்.-

"இதயத்தை தூய்மை செய்து கொள்ளாமல் ஆன்மீக வாழ்வில் நுழைபவர் தம்முடைய ஞான கர்வத்துடன் ஊர்வலம் வருகிறார். உண்மையில் அது பலனேதும் தராத முயற்சி .-

"ஆகவே, எது தேவையோ அதைப் பேசுங்கள்; எவ்வளவு ஜீரணிக்க முடியுமோ அவ்வளவே சாப்பிடுங்கள். இல்லையெனில், அஜீரணம் ஏற்படும். இது அனைவரும் அறிந்ததே.-

"என்னுடைய கஜானா நிரம்பியிருக்கிறது; யார் வந்தாலும் எதை வேண்டினாலும் கொடுக்கிறேன். ஆனால், வாங்கிக் கொள்பவருடைய தகுதியை நிர்ணயித்து அவரால் சமாளிக்க முடிந்த அளவே கொடுப்பேன். -