ஷிர்டி சாயி சத் சரிதம்
ஒருவரை ஷிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பி விடுவார். மற்றவரை ஷிர்டியிலேயே தனிமையில் வாழச் செய்வார். மற்றொருவரை வாடாவை விட்டு வெளிவராமலேயே இருக்கச் செய்து, தாம் நியமித்தவாறு புராணங்களை பாராயணம் செய்யச் சொல்வார்.
பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாசங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்துகொண்டிருக்கும் போதும் உறங்கும்போதும் உணவருந்தும் போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள். இச் செயல்பாடுகளின் நோக்கம் இதுவே.
நசித்துப் போகும் தன்மையையுடைய இவ்வுடல் என்றோ ஒருநாள் மரணத்தை சந்திக்கப் போகிறது. ஆகவே, பக்தர்கள் மரணத்தை நினைத்து சோகமடையாமல், ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனிடமே மனதை நிலைக்கச் செய்ய வேண்டும்.
பலவிதமான செழிப்புகளுடன் நம்முன் தோன்றும் காட்சிகள், தோன்றா நிலையில் இருக்கும் இறைவனிடமிருந்து தோன்றியவை அனைத்தும் அவனிடமே திரும்பிச் சென்று விடும்.
பிரம்மாவிலிருந்து புல் பூண்டு வரை, சிருஷ்டி அனைத்தையும் நாம் நோக்கினும் தோன்றா நிலையில் இருக்கும் இறைவனிடமிருந்து தோன்றியதால், மறுபடியும் அவை தோன்றா நிலையிலேயே சென்றடைய வேண்டும்.
ஆகவே, யாரும் எப்பொழுதும் மரணமடைவதில்லை. பாபா விஷயத்தில் மரணம் எப்படி உண்மையாக இருக்க முடியும்? ஸ்ரீ சாயி நித்திய சுத்தர்; புத்தர்; மரணமற்றவர்.
சிலர் அவரை இறைவனுடைய அடியார் என்று சொல்லலாம்; சிலர் அவரை மகா பாஹவதர் என்று சொல்லலாம். ஆனால், நமக்கு அவர் சாக்ஷாத் கடவுளின் அவதாரமே!
அவதார புருஷர்களின் நிலையும் இதுவே. அவர்கள் தோன்றுகின்றனர். மறைகின்றனர். அவர்களுடைய வாழ்க்கை நெறிமுறைகளால் உலகத்தை தூய்மையாக்குகின்றனர்.
No comments:
Post a Comment