Thursday, 5 February 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அர்த்தத்தைத் தெளிவுப்படச் சொல்ல நானாவுக்கு ஜீவன் இல்லை. ஆகவே, அவர் சுற்றிவளைத்து ஏதேதோ பதில் சொன்னார்.  மாதவராவின் சந்தேகம் மேலும் வலுத்தது!  அவருடைய மனம் நிம்மதியாக இருக்க மறுத்தது. 

பின்னர், மாதவ்ராவ் செய்த நிர்பந்தத்தால், நானா இதயம் திறந்தார்.  மசூதியில் நடந்ததனைத்தையும் விவரமாக எடுத்துரைத்தார்.  மாதவராவுக்குப் புதிர் விடுபட்டது! 

பாபா எவ்வளவு உஷாராக இருந்தார்!  யாருடைய சிந்தனை எங்கே சிதறினாலும், எவர் அனைவருக்கும் சாட்சியாக நிறைந்திருக்கிறாரோ, அவருக்கு எல்லா நிகழ்வுகளும் பிரத்யட்சமாகத் (கண்கூடாக) தெரிகின்றன!

இந்த வியப்பூட்டும் விருத்தாந்தத்தை கேட்டு நீங்கள் ஆச்சரியம் அடைந்திருப்பீர்கள்.  இதன் சாராம்சத்தின்படி ஒழுகினால் மிகச் சிறந்த உடைமைகளை ஆகாத சமநிலையும் கம்பீரமும் பெருகும். 

மனம் சஞ்சல ஜாதியைச் சேர்ந்தது.  அதைக் கட்டவிழ விடக்கூடாது.  புலன்கள் கட்டுக்கடங்காமல் தலைதெறிக்க ஓடலாம்.  ஆனால், சரீரம் பொறுமை காக்க வேண்டும். 

புலன்களை நம்பக்கூடாது.  ஆகவே, புலனின்பங்களில் நாட்டம் வைக்கக்கூடாது.  கொஞ்சம்கொஞ்சமாக அப்பியாசம் செய்தால் மனத்தின் சஞ்சலம் போய்விடும். 

புலன்களுக்கு என்றும் அடிமையாகாதீர். அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்.  ஆயினும், நியமிக்கப்பட்ட விதிகளின்படியும் முறையாகத் திட்டமிட்டும் சரியான சமயத்தில் அவற்றைக் கட்டுப்படுத்துதல் அவசியம். 

ரூபம் என்னும் விஷயம் கண்களின் பார்வைக்குச் சொந்தம்.  அழகை பயமின்றி ரசிக்க வேண்டும். இங்கு நாணத்திற்கு என்ன வேலை?  ஆனால், துர்புத்திக்கு (கெடுமதிக்கு) இடம் கொடுக்கக்கூடாது. 

இறைவனின் படைப்பில் உள்ள அழகை அப்பழுக்கற்ற மனத்துடன் ரசிக்கலாம்.  தூயமனம் இயல்பாகவே புலன்களைக் கட்டுக்குள் கொண்டுவரும்.  இன்பங்களைத் துய்ப்பதென்பது மறந்துபோகும். 

தேரைச் சரியான இலக்குக்கு ஓட்டிச்செல்வதற்குத் தேரோட்டிதான் மூலகாரணம். அதுபோலவே, நமக்கு நன்மை செய்யும் புத்தி, உஷாராகச் செயல்பட்டு புலங்களின் இழுப்புகளைக் கட்டுக்குள் வைக்கும். 

தேர் எங்கே செல்லவேண்டும் என்பதைத் தேரோட்டிதான் நியமனம் செய்கிறான்.  அவ்வாறே, புத்தி, புலன்களைக் கட்டுப்படுத்தி, சரீரம் தன்னிஷ்டம்போல் செயல்படாமலும், மனம் சஞ்சலத்திலேயே மூழ்கிப்போகாமலும் நம்மைக் காப்பாற்றுகிறது. 

சரீரம், புலன்கள், மனம், ஆகியவற்றுடன் கூடிய ஜீவன், இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவித்து முடித்த பிறகு, விஷ்ணுபதத்தை அடைகிறது. இவ்வாறு நிகழ்வது புத்தியின் சாமர்த்தியத்தினால்தான்!

 


 

No comments:

Post a Comment