Thursday, 13 August 2020

 ஷீர்டி சாயி சத்சரிதம்

தாய், தந்தை, குரு இவர்களிடமிருந்து பாடம் பெறாமல் தருமவழிபற்றிய ஞானத்தைப் பெறமுடியாது. அதுவும் ஒருவருடைய கல்வி முயற்சியைச் சார்ந்தது. அனுஷ்டானம் (கற்றபின் அதற்குத் தக்க நிற்றல்) இல்லையெனில் கற்றதனைத்தும் வீண்.

அவர்களுடைய ஆசிமொழிகள் அவசியம் தேவை. 'தாயைத் தெய்வமாக வழிபடு; தந்தையைத் தெய்வமாக வழிபடு; குருவைத் தெய்வமாக வழிபடு; இந்த உபநிஷத வசனம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே;

இம்மூவரையும் வழிபடுவது; யாகங்களை செய்வது, வேதம் ஓதுவது, தானம் செய்வது - இவையே ஜனன மரணச் சுழலைத் தாண்டுவதற்கு உயர்ந்த சாதனங்கள்.

இவையனைத்தும் மனத்தைப் பரிசுத்தமாக்கி கொள்ளும் சாதனைகள். இவற்றைச் செய்யாமல், ஆத்மாவெனும் வஸ்துவை அடையமுடியாது. இவையில்லாது நடத்தும் வாழ்க்கை வியர்த்தம்.

உடலும் மனமும் ஐம்புலன்களும் புத்தியும் காட்டமுடியாது மகத்தான ஆத்ம சொரூபத்தை குருவருள் காட்டமுடியும்.

பிரத்யக்ஷமாகப் பார்ப்பதையும் அனுமானம் செய்வதையும் பிரமாணமாக ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில், குருவைத் தவிர வேறெவரால் அதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாகக் காண்பித்து கொடுக்கமுடியும்?

அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று புருஷார்த்தங்களை  சிரமப்பட்டால் அடைந்துவிடலாம். நான்காவதாகிய உச்ச புருஷார்த்ததை (வீடு / மோட்சம்) குருவின் அருளின்றி எவ்வளவு முயன்றாலும் அடையமுடியாது.

ஷீர்டி ஞானியின் தர்பாருக்கு ஜோசியர்கள் வணக்கம் செலுத்த வந்தனர். செல்வர்களுக்கும் பெருங்குடி மக்களுக்கும் ஆயுள்பற்றியும் நடக்கப்போவதை பற்றியும் வரும்பொருள் உரைத்தனர்.

செல்வச் செழிப்பிலும் அதிகாரத்திலும் புரண்ட அரசர்கள், கோமான்கள் - துறவேற்றுப் பிச்சையெடுத்து பிழைத்த பைராகிகள், கோசாவிகள் - அனைவரும் பாபாவை தரிசனம் செய்ய ஆவலுடன் வந்தனர்.

ஜபம் செய்பவர்கள், தவம் செய்பவர்கள், விரதம் ஏற்றுக்கொண்டவர்கள், சந்நியாசிகள், யாத்திரிகர்கள், புனிதத் தலைவாசிகள், பரிவாரங்களுடன் பாட்டுக்காரர்களும் நாட்டியக்காரர்களும்  - இவர்களனைவரும் ஷிர்டிக்கு தரிசனத்திற்காக வந்தனர்.

"இவரே, எங்களுக்குத் தாயும் தந்தையும் ரட்சகரும் ஆவார்; இவரே எங்களை ஜனனமரணச் சுழலிருந்து விடுவிப்பார்" என்று சொல்லிக்கொண்டு மஹார்களும் சாயி தர்பாருக்கு வந்து, வணக்கம் செலுத்தினர்.

நெற்றியில் பட்டையாக விபூதியணிந்து லிங்கத்தைக் கழுத்தில் கட்டிக்கொள்ளும் ஜங்கமரும், பிச்சை வாங்கும் சோளத்தின்மீதே கண்ணாக வருவார். அவர் அளிக்கும் காட்சி பார்ப்பதற்கு சுவாரசியமானது.  



No comments:

Post a Comment