Friday, 8 November 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

"சஞ்சலங்களால் அலைபாய்ந்து கொண்டிருந்த என்னுடைய மனம், தரிசனத்தால் அமைதியுற்றது. இவ்வுலகுக்கப்பாற்பட்ட சந்தோஷத்தை நான் அடைந்திருக்கிறேன். இது தரிசன மகிமையே அன்றி வேறெதுவும் இல்லை!"

சாயி பாதங்களில் பார்வை குத்திட்டது; வார்த்தைகள் வெளிவர மறுத்தன. பாபாவின் லீலையை எண்ணியெண்ணி ஆனந்தம் பொங்கி வழிந்தது.

உபாத்தியாயர் (காகாஜி) பாவத்துடன் சாயியின் பாதங்களில் சரணடைந்தபோது அகத்தில் ஆனந்தம் பொங்கியது. பழைய சஞ்சலங்களை அறவே மறந்துவிட்டார்.

இவ்விதமாகக் காகாஜி பன்னிரண்டு நாள்கள் ஷிர்டியில் தாங்கினார். மனம் சாந்தியடைந்து நிலைபெற்று, சப்தசிருங்கிக்குத் திரும்பினார்.

விடியற்காலையில் (சூரிய உதயத்திற்கு 48 நிமிடங்களுக்கு முன்) தோன்றும் கனவுகள் உண்மையாகிப் பலனளிக்கும். மற்ற நேரங்களில் தோன்றும் கனவுகளால் பலனேதும் இல்லை.

இதுவே மக்களின் பொதுவான நம்பிக்கை. ஆயினும், ஷீர்டி சம்பந்தப்பட்ட கனவுகள் எங்கே தோன்றினாலும் எப்பொழுது தோன்றினாலும் சித்தியாகும். இதுவே பக்தர்களின் இடையூறற்ற அனுபவம்.

இது சம்பந்தமாக இப்பொழுது ஒரு சிறுகதை சொல்கிறேன். செவிமடுப்பவர்கள் மனமகிழ்ச்சியடைந்து மேலும் கேட்க ஆவலுறுவார்கள்.

ஒருநாள் பிற்பகல் நேரத்தில் பாபா தீக்ஷிதரிடம் சொன்னார், "குதிரை வண்டியில் ராஹதாவுக்குச் சென்று குசால்பாவுவை அழைத்துக்கொண்டு வாரும்.-

"அவரைச் சந்திக்க மனம் ஏங்குகிறது; பார்த்துப் பல நாள்கள் ஆகிவிட்டன. 'பாபா உங்களைச் சந்திக்க விரும்புகிறார்; ஆகவே, வரச் சொல்கிறார்' என்று அவரிடம் சொல்லும்".

பாபாவின் ஆணைக்கு வந்தனம் செலுத்திவிட்டு, தீக்ஷிதர் ஒரு குதிரைவண்டியில் போனார். குசால்பாபுவை சந்தித்து, உடனே தாம் வந்த காரணத்தை தெரிவித்தார்.

பாபாவின் செய்தியைக்கேட்ட குசால்பாபு ஆச்சரியமடைந்தார். அவர் சொன்னார், "நான் இப்பொழுதுதான் தூக்கத்திலிருந்து எழுந்தேன். கனவில் பாபா எனக்கு இதே ஆணையைத்தான் இட்டார். -

"மதிய உணவு முடிந்தபின் இப்பொழுதுதான் சிறிது நேரம் ஓய்வாக படுத்தேன். கண்களை மூடியவுடன் பாபா இதைத்தான் என் கனவில் சொன்னார். -

"அவர் என்னிடம் சொன்னார், 'உடனே கிளம்பி ஷிர்டிக்கு வாரும்' என்று. எனக்கும் அவரை சந்திக்கவேண்டுமென்ற தாபம் இருந்தது. என்னுடைய குதிரை இங்கு இல்லாமல் நான் என்ன செய்வது? ஆகவே, என் மகனிடம் இச் செய்தியைச் சொல்லி அனுப்பினேன். -

"ஆனால், அவன் கிராம எல்லையைத் தாண்டுவதற்கு முன்னரே உங்களுடைய குதிரைவண்டி வந்துவிட்டது". தீக்ஷிதர் கேலியாகச் சொன்னார், "ஆமாம், அதற்காகத்தான் பாபா எனக்கு ஆணையிட்டு இங்கு அனுப்பினார்!-
 
 

No comments:

Post a Comment