Thursday, 20 April 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஏழாவதாக, தாஸ்யம் (அடிமைபோல் சேவை செய்தல்),
எட்டாவதாக, சக்யம் (தோழமை கொள்ளுதல்),
ஒன்பதாவதாக, ஆத்மநிவேதனம் (தன்னையே இறைவனுக்கு அர்ப்பணம் செய்தல்).-

"நவ வித பக்திகளில் ஏதாவது ஒன்றையாவது பூரணமான பாவத்துடன் கடைபிடித்தால், வேறெதையும் வேண்டாத ஸ்ரீஹரி, பக்தனுக்கு தம்மை வெளிப்படுத்துவார்.-

"பக்தியில்லாத ஜபமும் தவமும் விரதங்களும் யோகசாதனைகளும் வேதங்களையும், உபநிஷதங்களையும் பரிசீலனை செய்வதும் பலமாக ஆத்ம ஞானப் பிரவசனம் செய்வதும் (இவையனைத்தும்) வீண்.-

"வேத சாஸ்திரங்களில் ஆழ்ந்த ஞானமோ ஞானி என்கிற உலகளாவிய கீர்த்தியோ வறண்ட, அன்பில்லாத பக்தியோ உபயோகமில்லை. அன்பு நிறைந்த பக்தியே தேவை. -

"உம்மை அந்த வியாபாரியாக அறிந்து கொள்வீராக! அந்த நிகழ்ச்சியின் உட்பொருளை புரிந்து கொள்வீராக! ஒன்பது விதமான பக்தி என்னும் கோடி ஏற்றப்படும்போது இறைவன் உல்லாசமடைகிறான்.-

"குதிரை ஒன்பது லத்திகள் சாணமிட்டது. வியாபாரி அதை ஆவலுடன் ஓடிப் பிடித்தான். அம்மாதிரியாகவே நீர் நவவித பக்தியைக் கெட்டியாக பிடித்துக் கொண்டால், உமது மனம் சாந்தியில் திளைக்கும். -

"அதுவே உம்முடைய மனத்தை உறுதிப்படுத்திக் கம்பீரமாக்கும்; எல்லா உயிர்களிடத்தும் நல்லுணர்வை ஊட்டும். அது இல்லையெனில், மனம் சஞ்சலப் பட்டுக்கொண்டு  அலைபாயும். இவ்வாறு குருவரர் பிரேமையுடன் கூறுகிறார்."

அடுத்த நாள் சாயி பாதங்களுக்கு வந்தனம் செய்யச் சென்றபோது, "என்ன, குதிரைச் சாணி லத்திகளை உம்முடைய அங்கவஸ்திரத்தில் (மேல்துண்டில்) கட்டிவிட்டீரா?"  என்று பாபா கேட்டார்.

அனந்தராவ் பிரார்த்தனை செய்தார், "இந்த தீனனின்மேல் உங்களுக்கு தயவிருந்தால் அவற்றை சுலபமாகச் சேர்த்துக் கட்டிவிட முடியும். அப்படியென்ன முடியாத விஷயமா  அது?"

பாபா அவரை ஆசீர்வதித்து, 'மங்களமுண்டாகும்' என்று உறுதி அளித்தார். அவ்வார்த்தைகளை கேட்ட அனந்தராவ் மகிழ்ச்சி கடலில் மூழ்கினார்; சுகத்தை அனுபவித்தார்.

செவி மடுப்பவர்களே! இப்பொழுது இன்னுமொரு சிறுகதையை பயபக்தியுடன் கேளுங்கள். பாபாவினுடைய அந்தர் ஞானத்தை (எங்கு நடப்பதையும் அறியும் சக்தியைப்) பற்றியும் பக்தர்களை நல்வழிப்படுத்தும் முறையையும் அறிந்துகொள்வீர்கள்.

ஒருசமயம் ஒரு வக்கீல் ஷிர்டிக்கு வந்தவுடனே மசூதிக்கு சென்றார். சாயிநாதரை தரிசனம் செய்துவிட்டு பாதங்களில் வணங்கினார்.

தாம் கொண்டு வந்திருந்த தக்ஷிணையை கொடுத்துவிட்டு உடனே ஒரு பக்கத்தில் அமர்ந்தார். அங்கு நடந்து கொண்டிருந்த சாயியின் சம்பாஷணையை கேட்க ஆவல் கொண்டார். 


No comments:

Post a Comment