Thursday, 8 April 2021


 ஷீர்டி சாய் சத்சரிதம்

'நான் பத்து ரூபாய் கொடுத்திருப்பேன்' என்று ஆப்பா வாய்விட்டுச் சொல்லி இருந்தால், முழுப்பணத்தையும் கொடுக்காது அவர் எப்படித் தம் வாக்கைக் காப்பாற்றமுடியும்; எப்படிக் கடனிலிருந்து விடுபடமுடியும்?

இந்தப் பக்கீர் மற்றவர்களைப் போல் அல்லர். கையில் கிடைத்ததை அப்படியே ஏற்றுக்கொண்டு திரும்பிப்போக, அவர் என்ன ஊர் ஊராகத் திரியும் பிச்சைக்காரரா என்ன?

ஆப்பா வாய்விட்டுச் சொன்ன நாள் அஸ்தமனமாவதற்கு முன்பாகவே அவர் திரும்பி வந்தார். ஆப்பாவுக்குத்தான் அவர் வேறு யாரோ முன்பின் தெரியாத பக்கீர் என்னும் குழப்பம் ஏற்பட்டது.

பக்கீர் தக்ஷிணை கேட்டபோது அவரிடம் ஆறு ரூபாய் இருந்தது. ஆயினும் அவர் தம் வசம் இருந்த முழுப் பணத்தையும் கொடுக்கவில்லை.

ஆப்பாவின்மீது பிரேமை இல்லையென்றால், பக்கீர் வேஷத்தில் பாபா வந்திருப்பாரா? மேலும், மீண்டும் மீண்டும் தக்ஷிணை கேட்டு பாபா நாடகமாடியிருக்கவிட்டால்,  இக் காதை எப்படி ருசியாக இருந்திருக்கும்?

ஆப்பாசாஹேப் நிகழ்ச்சி ஓர் உதாரணம் மாத்திரமே. உங்களுடைய கத்தியும் என்னுடைய கதியும் வேறில்லை! நாம் எல்லாருமே ஆரம்பத்தில் பெரிய திட்டங்கள் போடுகிறோம். ஆனால், சரியான நேரம் வரும்போது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வேறுவிதமாகச் செயல்படுகிறோம்.


வாக்கும் உறுதிமொழியும் அளிப்பதில் நமது உற்சாகத்திற்கு குறையே இல்லை. ஆனால், கொடுக்கவேண்டும் என்று வரும்போது, சந்தேகங்கள் முளைத்தது தடுமாறுகிறோம்; திடமாகாச் செயல்படுவது துர்லபம் (எப்பொழுதோ தான்).

மிதமகாப் பேசி, அதையும் இதமாகப் பேசி, தம்முடைய வாக்கின்படி செயல்பட்டு அதை நிறைவேற்றுபவரை நம்மிடையே காண்பது அரிது.

தம்மிடம் அனன்னியமான பாவத்துடன் பக்தி செலுத்துபவருடைய இவ்வுலக விருப்பங்களையும் மேலுலக விருப்பங்களையும் சமர்த்த சாயி நிறைவேற்றிவைக்கிறார்.

ஆப்பா புத்திசாலி; ஆங்கிலப் படிப்பும் படித்திருந்தார். ஆயினும் ஆரம்பித்தில் அவருக்கு அரசாங்கம் ரூ. 40 /- மட்டுமே மாதச் சம்பளமாகக் கொடுத்தது.

பின்னர், நிழற்படத்தைக் கொண்டுவந்த பிறகு அவருக்குச் சம்பளம் படிப்படியாக உயர்ந்து நாற்பது ரூபாயை போலப் பல மடங்காக ஆயிற்று.

பாபாவுக்கு ஒன்று கொடுத்தால் பத்தாகத் திருப்பி கொடுக்கிறார். - பத்து மடங்கு அதிகாரம் - பத்து மடங்கு சக்தி. சகலமான பக்தர்களும் இந்த அனுபவத்தை அவ்வப்பொழுது அடைந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல், அதுமாதிரியான நிஷ்டையிலிருந்து ஆன்மீக நாட்டம் வளர ஆரம்பிக்கிறது. இது என்ன சாமானியமான லாபமா? பாபாவின் அளிக்கும் திறன் விசித்திரமானது அன்றோ!