Friday, 12 March 2021


 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆகவே, ஒரு ஞானியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது அவரைப் பிரயத்யக்ஷமாக தரிசனம் செய்வதற்கு சமானம். அனைத்தையும் இயல்பாகவே அறியும் ஞானிகள் நமக்கெல்லாம் அளிக்கும் படிப்பினை இதுவே.


முன்பு சொன்ன காதையை விட்ட இடத்தில் தொடர்வோம். கேட்பவர்கள் கவனமான சித்தத்துடன் கேளுங்கள்.


ஆப்பா, டானே நகரில் வாழ்ந்துவந்தார். ஒரு சமயம் வேலை நிமித்தமாக பிவண்டிக்குப் போக வேண்டியிருந்தது. எட்டு நாள்கள் கழித்துத் திரும்பி வருவேன், என்று சொல்லிவிட்டு வீட்டை வீட்டுக் கிளம்பினார்.


அவர் கிளம்பி இரண்டு நாள்கள்கூட ஆகவில்லை. இங்கு, டானேவில் அபூர்வமான சம்பவமொன்று நிகழ்ந்தது. ஒரு பக்கீர் ஆப்பாவின் வீட்டு வாசலுக்கு வந்தார்!


அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டபோது வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் சாயியே வந்திருக்கிறார் என்று நினைத்தனர். நகத்திலிருந்து சிகைவரை, உருவத்திலும் சாயலிலும் அங்க அமைப்பிலும் அவர்கள் வைத்திருந்த நிழற்படத்தை போலவே பக்கீர் இருந்ததைக் கண்டனர்.


ஆப்பாவின் மனைவியும் குழந்தைகளும் பக்கீருடைய முகத்தையே உற்றுப்பார்த்து வியப்படைந்தனர். பாபாவே வந்திருக்கிறார் என்று நினைத்தனர்.


அவர்களில் யாருமே பாபாவைப் பிரத்யக்ஷமாக தரிசனம் செய்ததில்லை. ஆயினும் நிழற்படத்திற்கும் பக்கீருக்கும் இருந்த உருவ ஒற்றுமையால் அவர்தான் பாபா என்று நினைத்தனர்; உண்மையை அறிந்துகொள்ள ஆர்வமுற்றனர்.


ஆகவே பக்கீரைக் கேட்டனர். "நீங்கள்தான் ஷிர்டியில் வசிக்கும் சாயியா?" பக்கீர் என்ன பதிலுரைத்தார் என்பதைக் கருத்தூன்றிக் கேளுங்கள்.


"நானே ஷீர்டி சாயி பாபா இல்லை. ஆனால், நான் அவருடைய ஆணைக்கு கட்டுப்பட்ட அடிமை. அவருடைய ஆக்ஞயின்படி குழைந்தைகுட்டிகளின் நலன்பற்றி விசாரிப்பதற்காக இங்கு வந்திருக்கிறேன்".


பிறகு பக்கீர் தக்ஷிணை கேட்க ஆரம்பித்தார். குழந்தைகளின் தாயார் உடனே ஒரு ரூபாயை எடுத்து சம்பாவனையாகக் கொடுத்தார். அவரும் உதீ பிரசாதம் அளித்தார்.


சாயி பாபாவின் உதீயை ஒரு பொட்டலத்தில் அப் பெண்மணிக்கு அளித்தபின் பக்கீர் சொன்னார், "இதை பாபாவின் படத்திற்கு அருகில் வைத்துக்கொள்ளுங்கள். சௌக்கியமாக வாழ்வீர்கள்".


இவ்விதமாக, வந்த காரியத்தை முடித்துக்கொண்டு, "சாயி எனக்காக வழிமேல் விழிவைத்துப் பார்த்துக்கொண்டிருப்பர்" என்று சொல்லிவிட்டுப் பக்கீர் விடைபெற்றுக்கொண்டார்.


அங்கிருந்து கிளம்பியவர் தாம் வந்த வழியே சென்றார். ஆப்பாவின் வீட்டில் நடந்த நிகழ்ச்சி, உண்மையில் சாயியின் அபூர்வமான லீலைகளில் ஒன்றே!


ஆபாசாஹேப் பிவண்டிக்கென்னவோ சென்றார். ஆனால், அவருடைய வண்டிக்கு குதிரைகள் நோயுற்றதால், மேற்கொண்டு பயணத்தை தொடரமுடியாமல் வீடு திரும்ப நேர்ந்தது.