Thursday, 20 August 2020

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சாமர்த்தியசாலிகளான வித்தைகாட்டிகள் வந்தனர். பவானி அம்மனின் பெயரில் தானியங்கள் பிச்சையெடுத்து, 'கோந்தல் திருவிழா' நடத்தும் கோந்தலிகளும் மிகுந்த பிரேமையுடன் பாபாவை தரிசனம் செய்ய வந்தனர்.

குருடர்கள், நொண்டிகள், கான்பாடேக்கள், ஆண்டிகள், குருநானக் பக்தர்கள், நாடோடிப் பாடகர்கள், தீவட்டி யேந்திகள் - இவர்களனைவரும் பக்தியும் அன்பும் நிறைந்து சமர்த்த சாயியிடம் பறந்தோடி வந்தனர்.

முரசு கொட்டுபவர்கள், குறி சொல்பவர்கள், முடவர்கள் - கழைக் கூத்தாடிகளுங் கூட அங்கு வந்து தங்களுடைய திறமையைக் காட்டினார். பாபாவின் சமூகத்திற்குத் தக்க தருணத்தில் பிரேமை மிக்க வண்ஜாரியும் வந்து சேர்ந்தார்!

வைராக்கியமே உருவெடுத்தவர்; பற்றற்றவர்; ஏகாந்தி; சங்கம் விரும்பாதவர்; சுயநலமில்லாதவர்; விருப்பு வெறுப்பற்றவர்; பக்தர்களின்பால் செலுத்தும் அன்பில் இணையில்லாதவர். சாயியின் ஆகிருதியைக் (உருவத்தைக்) காணக் கண் கோடி வேண்டும்.

இப்பொழுது, ஏற்கெனவே நடந்த நிகழ்ச்சிகளின் பின்னணியில் பிரதமமான காதையை விட்ட இடத்திலிருந்து தொடருவோமாக, கேட்பவர்கள், சிதறாத கவனத்தைக் கொடுங்கள்.

பாபா என்றும் பட்டினி கிடந்ததில்லை; மற்றவர்களையும் பட்டினி கிடக்க அனுமதித்ததில்லை. பட்டினி கிடப்பவரின் மனம் சாந்தமாக இருக்காது; அவர் எப்படி பரமார்த்த (ஆன்மீக) சாதனைகளை ஏற்கமுடியும்?

வெறும் வயிற்றுடன் தேவனை அடையமுடியாது. ஆகவே, முதலில் ஆத்மாவைத் திருப்திசெய்யுங்கள். இந்த உபதேசத்தை அளிக்கும் மற்றுமொரு கதை சொல்கிறேன்.

உச்சிவெயில் வேளையில் சூடு தாங்காமல் புழுதி புரளும்போது, 'அன்னம் பிரம்மம்' என்னும் உபநிஷத வாக்கியம் பளிச்சென்று மனதிற்கு விளங்குகிறது.

அந்தக் கடுமையான வேளையில் சில கவளங்களாவது அன்னம் கிடைக்கவில்லையென்றால், உடலுறுப்புகள் பலமிழந்துபோய் அவற்றின் கடமையைச் செய்ய மறந்துவிடுகின்றன.

பசிக்கு உணவளித்து ஜீவனை சாந்தப்படுத்தாமல் கண்கள் எப்படி இறைவனைக் காண முடியும்? வாய் எப்படி இறைவனின் புகழைப் பாடும்? காதுகள் எப்படி அதைக் கேட்கும்?

சாராம்சம் என்னவென்றால், உடலின் சகல அங்கங்களும் சக்தி பெற்றிருந்தால்தான் பக்தி பண்ணமுடியும். அங்கங்கள் அன்னமின்றி சீர்குலைந்து போகும்போது ஆன்மீகப் பாதையில் நடைபோட முடியாது.

ஆனால், தேவைக்கு அதிகமாக உண்பதுவும் நன்றன்று. மிதமான போஜனமே நன்மையை விளைவிக்கும். கடுமையான உபவாசம் எப்பொழுதும் பயங்கரமான சுகவீனத்தையே விளைவிக்கும்.

சாயிதரிசனம் செய்யப் பேராவல் கொண்டு தாதா கேள்கருக்கு ஓர் அறிமுகக் கடிதம் வாங்கிக்கொண்டு ஒரு பெண்மணி ஷிர்டிக்கு வந்தார்.