Thursday, 5 October 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

23 . பக்தர்களின்பால் லீலைகள்

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!

இந்த ஜீவாத்மா முக்குணங்களுக்கு அப்பாற்பட்டதே. ஆயினும், மாயையின் மோகத்தால், தான் சச்சிதானந்த சொரூபம் என்பதை மறந்து, வெறும் தேகமே என்று நினைத்துக் கொள்கிறது.

இது நேர்ந்தபின், தேஹத்தின்மீது உண்டான அபிமானத்தினால் 'நானே செயல்புரிபவன், நான் அனுபவிப்பவன்' என்ற நம்பிக்கை பெருகுகிறது. ஒன்றின் பின் ஒன்றாக தொடர்ந்து வரும் துன்பங்களால் வாழ்க்கையில் வெறுப்பேற்பட்டு தப்பிக்க வழி தெரியாமல் விழிக்கிறது.

குருபாத பக்தியே இந்த ஈனமான நிலையிலிருந்து விடுபடும் மார்க்கமாகும். மாபெரும் நடிகராகிய ஸ்ரீரங்கசாயி பக்தர்களைத் தமது லீலையெனும் அரங்கத்துள் இழுக்கிறார்.

நாம் சாயியை ஓர் அவதார புருஷராக ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில், அவரிடம் அவதார புருஷருக்குரிய லட்சணங்கள் அனைத்தும் உண்டு. ஆனால், அவரோ, 'நான் அல்லாஹ்வின் உடுப்புத் தலைப்பில் கட்டப்பட்டவன்' என்றே சொல்லிக்கொண்டார்.

அவதார புருஷராக இருந்தபோதிலும் , உலக நியமங்களுக்கு கட்டுப்பட்டே வாழ்க்கை நடத்தினார்.

அவர் யாரோடும் எவ்விதத்திலும் போட்டியிட்டதேயில்லை; மற்றவர்களையும் போட்டியிட ஊக்குவித்ததில்லை. இவ்வுலகில் இயங்கும் இயங்காப் பொருள்களனைத்திலும் இறைவனைக் கண்ட அவர், அடக்கமும் பணிவும் உருவானவர்.

அவர் யாரையும் இகழ்ந்து பேசியதில்லை; எவரையும் துச்சமாக கருதியதில்லை. எல்லா உயிர்களிலும் இப் பிரபஞ்சத்தின் உணர்வான நாராயணனையே கண்டார்.

'நான் இறைவன்' என்று அவர் ஒருபொழுதும் சொன்னதில்லை. 'நான் இறைவனுடைய அடிமை' என்றும் 'நான் இறைவனை எப்பொழுதும் மனத்தில் இருத்திக் கொண்டிருக்கும் ஏழை' என்றுமே சொல்லிக்கொண்டார். 'அல்லாமலிக், அல்லா மாலிக்' (அல்லாவே எஜமானர்) என்று சதா ஜபம் செய்து கொண்டிருந்தார்.