Thursday, 27 July 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

சுதந்திரத்தை விரும்பிய அவர் இன்னொருவரைச் சார்ந்து வாழ்வதை எப்படி விரும்புவார்? 'ஓ, போதும், போதும், இந்த அடைபட்ட வாழ்வு' என்னும் உந்துதல் அமீர் மனத்தில் ஏற்பட்டது.

பாபாவினுடைய அனுமதியின்றித் தமக்கு நியமிக்கப்பட்ட இடத்தைத் துறந்துவிட்டு புறப்பட்டார். கோபர்காங்கவிற்குச் சென்று, ஒரு தருமசத்திரத்தில் தாங்கினார்.

அங்கு விளைந்த அற்புதத்தை கேளுங்கள். அங்கு மரண தாகத்தினால் தவித்துக் கொண்டு இறக்கும் தருவாயில் இருந்த பக்கீர் ஒருவர் அமீர் சக்கரை குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்கும்படி வேண்டினார்.

அமீர் தயை கூர்ந்து அவருக்குத் தண்ணீர் கொடுத்தார். தண்ணீர் குடித்து முடித்தவுடன் பக்கீரின் உடல் அங்கேயே அப்பொழுதே உயிர் பிரிந்து தரையில் சாய்ந்தது.

பக்கீர் இறந்துவிட்டார். வேறு யாருமே அங்கில்லை; மேலும் அது இரவு நேரம்; அமீர் கலவரமடைந்தார்.

'பொழுது விடிந்தால் இந்த திடீர் மரணத்தைப் பற்றி விசாரணை நடக்கும்; சிலர் கைது செய்யப்படுவர்; சர்க்கார் விசாரணை நடக்கும்.-

'முழுமையான உண்மையைச் சொன்னாலும், உடனே யார் அதை நிர்த்தாரணம் செய்யப்போகிறார்கள்? சாட்சிகளையும் அவர்கள் சொல்லும் சாட்சியங்களையும் பொறுத்தே தீர்ப்பு அமையும். சட்டத்தின் இயக்கம் அவ்வாறே.-

'அந்தப் பக்கீருக்கு நான்தான் குடிக்க நீர் கொடுத்தேன். அவரோ திடீரென்று உயிரிழந்துவிட்டார்.  இந்த சத்தியத்தை சொல்லப்போனால் எக்கச்சக்கமாக மாட்டிக்கொள்வேன். -

'நேரிடையாக சம்பந்தப்பட்டவன் என்று தெரிந்தவுடன் என்னை முதலில் கைது செய்வார்கள். மரணத்திற்கு உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே, நான் நிரபராதி என விடுவிக்கப்படுவேன். -

'காரணம் கண்டுபிடிக்கப்படும் வரையிலான இடைக்காலம், சகிக்க முடியாத துன்பத்தை அழித்துவிடும்.' இவ்வாறு நினைத்து, கணமும் தாமதியாது வந்த வழியே திரும்பிவிட வேண்டுமென்று அமீர் முடிவு செய்தார்.

இவ்வாறு முடிவு செய்து இரவோடு இரவாக அவ்விடத்தை விட்டகன்றார். வழியில் தம்மை யாராவது பார்த்துவிடப் போகிறார்களே  என பயந்துகொண்டு அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டே நடையை காட்டினார். -

எப்படிச் சாவடிக்குப் போய்ச் சேருவது? அதுவரை நிம்மதி ஏது? மனம் கலங்கியவாறே அமீர் ஷிர்டியை நோக்கி விரைந்தார்.

அமீர் தமக்குத் தாமே பேசி கொண்டார், "பாபா, என்ன காரியம் செய்தீர்கள்! நான் செய்த எந்தப் பாவம் என்னை இப்பொழுது தாக்குகிறது? ஓ, என்னுடைய வினையே என்னைச் சுடுகிறது. இது எனக்கு இப்பொழுது சம்பூர்ணமாகத் (முழுமையாகத்) தெரிகிறது.