Thursday, 16 March 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

"சரி, நீர் இப்பொழுது போகலாம். இந்த நூலைப் படித்துப் பாரும். அவ்வாறு செய்வதால் உம்முடைய மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறும். இதை நினைவில் வைத்துக்கொள்ளும். -

"பிற்காலத்தில் வேலை விஷயமாக வடதேசம் செல்லும்போது, நீர் செய்த மஹாபாக்யத்தால் வழியில் ஒரு மஹாபுருஷரை சந்திப்பீர்.-

"அவர் உமக்கு மார்க்கத்தைக் காட்டுவார்; உம்முடைய மனத்திற்கு உறுதியையும் சாந்தியையும் அளிப்பார். அவரே உமக்கு உபதேசங்களை அளித்து உமது மனதில் நன்கு பதியவைத்து விடுவார்."

அவ்விடத்தில் வேலை முடிந்துவிட்டதால், தாகூர் புனே ஜில்லாவிலுள்ள ஜூன்னருக்கு மாற்றப்பட்டார். அங்கே போவதற்கு மிக உயரமானதும் கடப்பதற்கு அபாயகரமானதுமான நானேகாட்டைக் கடந்துதான் செல்லவேண்டும். 

அந்த வழி ஆபத்துக்கள் நிறைந்தது. எருமை மாட்டின்மேல் சவாரி செய்துதான் கடக்க வேண்டும். போக்குவரத்து வாஹனம் வேறெதுவுமில்லாததால், ஓர் எருமைக்கடா, சவாரி செய்வதற்காக அண்மையில் இருந்து கொண்டுவரப்பட்டது. 

எதிர்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறிய பின், அவருக்கு குதிரையோ மோட்டார் வாகனமோ கிடைக்கலாம். ஆனால், அன்றைய நிலையில் அங்கே கிடைத்த எருமைக்கடாவின் மேல்தான் அவருடைய பிரயாணத்தை சாமர்த்தியமாக சமாளிக்க வேண்டியிருந்தது. 

எருமைக்கடாவின் உதவியின்றி மலையைக் காலால் நடந்து கடக்க முடியாது. வேறு எந்த வாகனமும் அங்கே கிடையாது. இதுவே நானே காட்டின் அற்புதம்; வாகனமும் அபூர்வம்!

ஆகவே, அவர் தம் மனத்தை உறுதிசெய்துகொண்டு  எருமைக்கடாவின் முதுகில் ஒரு சிறுமெத்தையைக் கட்டிச் சேணம் பூட்டச் செய்து, மிகவும் சிரமப்பட்டு ஏறி உட்கார்ந்தார். 

ஏறி உட்கார்ந்துவிட்டாரே தவிர, ஏற்றம் மிகச் செங்குத்தாக இருந்தது. அபூர்வமான வாஹனமாகிய எருமைக்கடாவின் திடீர் அசைவுகளும் ஆட்டமும் குலுக்கலும் சாய்தலுந்தானே என்னே! அவருடைய முதுகு சுளுக்கிக்கொண்டு வலித்தது. 

ஒரு வழியாகப் பயணம் முடிந்தது. ஜூன்னரில் காரியாக்கிரமங்கள் நன்கு நிறைவேறின. பதவியிட மாற்ற ஆணையும் வந்தது. அவ்விடத்தில் இருந்து கிளம்பிவிட்டார். 

பதவி இடமாற்றம் கல்யாண் என்னும் நகருக்கு கிடைத்தது. அங்கு நானா சாந்தோர்கரை சந்தித்தார். சாயிநாதரின் கீர்த்தியை அவரிடமிருந்து கேட்டவுடன் டாகூருக்கும் தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. 

அடுத்த நாளே அதற்கு வேளையும் வந்தது. சாந்தோர்கர் ஷீர்டி செல்ல ஆயுத்தம் செய்துகொண்டே சொன்னார், "வாரும், இம்முறை நாமிருவரும் கூட்டமாகச் செல்லலாம்.-