Thursday, 5 January 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

"ஆஹா, இவள்தான் அந்த வேலைகாரச் சிறுமியா! யாருடைய கிராமியமான, செம்மையடையாத வாக்கிலிருந்து நான் ஈசாவாஸ்யத்திற்கு தெளிவு பெற்றேனோ அச்சிறுமியை நான் காண வேண்டும்". (தாச ணு)

அவர் வெளியில் வந்து பார்த்தபோது, வீட்டின் புறக்கடையில் பாத்திரங்களை தேய்த்துக்கொண்டிருந்த ஒரு குணபிச் சிறுமியையே கண்டார்.

தீக்ஷிதருடைய வீட்டில் நாம்யா என்று அழைக்கப்பட்ட வேலையாள் ஒருவன் இருந்தான். இச் சிறுமி அவருக்குத் தங்கை. விசாரணையில் இது தெரிய வந்தது.

ஆகவே இச் சிறுமிதான் காகா வீட்டின் வேலைகாரப் பெண்! அவருடைய சந்தேகங்கள் சிறுமியின் பாட்டினால் நிவாரணம் அடைந்தன. ஞானிகளால்  செய்ய முடியாதது ஏதும் உண்டோ! ஓர் எருமைமாட்டை வேதம் ஓத வைத்தார் ஞானேச்வர்! மஹராஜ்!

சிறுமியின் பாட்டு அவ்வாறிருந்தது; தாசகணுவின் மனம் திருப்தியடைந்து சமாதமானாகியது. பாபா விளையாட்டாகச் சொன்னார் என்று நினைத்த வார்த்தைகளின் மஹிமையை எல்லாரும் உணர்ந்தனர்.

சிலர், காகாவின் வீட்டுப் பூஜையறையில் அமர்ந்து தாசகணு பூஜை செய்து கொண்டிருந்தபோது இந்தப் பாட்டை கேட்டதாகச் சொல்கின்றனர்.

அப்படியேயிருந்தாலும் சரி, தாத்பரியம் ஒன்றுதான். பாபா தம் பக்தர்களுக்கு பலவிதமான யுக்திகளின்மூலம் போதனை செய்தார் என்பதையே நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

"நீ எங்கிருக்கின்றாயோ அங்கேயே இருந்துகொண்டு என்னைக் கேள்வி கேள்! தேவையில்லாது எதற்காக காட்டிலும் வானத்திலும் திரிந்து விடைகளை தேடுகிறாய்? நான் உன்னுடைய ஞான நாட்டத்தை திருப்தி செய்கிறேன். அந்த அளவிற்கு என்னை நம்புவாயாக.-

"நான் அனைவருள்ளும் வியாபித்திருக்கிறேன். நான் இல்லாத இடமே இல்லை; பக்தர்களுடைய பாவத்திற்காக நான், எங்கும், எப்படியாவது தோன்றுவேன்."

அந்த எட்டு வயதுச் சிறுமி ஒரு கிழிந்துபோன மேலாக்கை அணிந்துகொண்டு ஆரஞ்சு நிறப் புடவையின் மேன்மையான தோற்றத்தை பற்றிக் கேட்பதற்கு இனிமையான பாட்டைப் பாடினாள்.

ஆஹா! தங்கச்சரிகை போட்ட அந்தப் புடவை எவ்வளவு அற்புதமாக இருந்தது! எவ்வளவு அழகான கரை! கண்கவரும் தலைப்பு வேறு! பாட்டை பாடிக்கொண்டே புடவையின் அழகில் மூழ்கிப்போனாள் அச்சிறுமி.

அவளுக்குச் சாப்பாட்டுக்கே  தகராறு; உடம்பை முழுமையாக மூடிக்கொள்ளவும் தேவையான உடை இல்லை. ஆயினும் அவள் எங்கோ பார்த்த ஆரஞ்சு நிற புடவையின் அழகை நினைத்துக் குதூகலம் நிரம்பியவளாக இருந்தாள்.