Thursday, 6 December 2012

ஷிர்டி சாயி சத்சரிதம்

நற்செய்கையோ  அல்லது துற்செய்கையோ, எல்லாருடைய செய்கைகளும் மற்றும் பக்தருக்கு மட்டுமே தெரிந்த மர்மங்களும் பாபாவுக்குத் தெரிந்திருந்தன. அதைப் பற்றியோ சூசகமோ குறிப்போ சொல்லி பக்தரை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவார்.

ஒன்றுமறியாதவர்  போன்று நடித்த ஞானக்கடல் அவர். உலகம் தம்மை ஏற்றுக் கொள்வதற்காகவும் புகழுக்காகவும் பாடுபடுவதென்பது அவருக்கு மகா எரிச்சலூட்டிய விஷயம். இதுவே சாயியின் லக்ஷணம்.

மனித தேஹத்தில் இருந்தாலும் அவருடைய செய்கைகள் தெய்வங்களுடையதைப் போன்று அபூர்வமானவை. பாபா ஷீரடியில் வாழும் பிரத்யக்ஷமான தெய்வம் என்றே அனைத்து  மக்களும் பாவித்தனர்.

பாபாவினுடைய அற்புதச் செயல்கள் என்னே ! பாமாரனாகிய நான் அதை எவ்வளவுதான் வர்ணிக்க முடியும்! மூர்த்திகளுக்கும் கோயில்களுக்கும் பாபா செய்த புனருத்தான பணிகள் அபாரமானவை.

ஷிர்டியிலிருந்த சனி, கணபதி, சங்கர் - பார்வதி, கிராம தேவி, மற்றும் மாருதி கோயில்களினுடைய சீரமைப்பு தாத்யா பாட்டீல்  மூலம் செய்யப் பட்டது.

மக்களிடமிருந்து பாபா தக்ஷிணை ரூபமாக வாங்கிய பணத்தில் ஒரு பகுதி தர்ம காரியங்களுக்காகச் செலவிடப்பட்டது. ஒரு பகுதி மக்களுக்கு வழங்கப் பட்டது.

சிலருக்கு 30 ரூபாய், சில பேருக்கு 10 ரூபாய், 15 ரூபாய் அல்லது 50 ரூபாய் என்று, பாபா யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டுமென்று விரும்பினாரோ அவர்களுக்கெல்லாம் வழங்கினார்.

இந்தப் பணம் அனைத்தும் தருமத்திலிருந்து வந்ததே; வாங்கிக் கொண்டவர்களும் அதை தருமம்  என்றே கருதினர். பாபாவும் அத்  தொகைகள் நல்ல காரியங்களுக்காகச் செலவிடப் படவேண்டுமென்று விரும்பினார்.

இவ்விதமாக சாயி தரிசனத்தால் சிலர் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் ஆனார்கள். பலர் குஷ்டரோகத்திலிருந்து நிவாரணமடைவார்கள் . பலர் ஷேமத்தை அடைந்தார்கள்.

பாபாவின் பாதங்களை பணிந்ததாலேயே மை ஏதும் இட்டுக்கொள்ளாமல்  பல குருடர்கள் கண் பார்வை பெற்றனர். மூலிகைத் தைலம் ஏதும் தேய்க்காமலேயே முடவர்கள் கால்களில் சக்தி பெற்றனர்.

பாபாவினுடைய  மகிமை அபாரமானது. எவராலும் அளவிடமுடியாதது. நான்கு திசைகளிலிருந்தும் மக்கள் அவருடைய தரிசனத்திற்காக ஷிர்டியை நோக்கி வந்தனர்.

காலைகடன்களை முடித்த பின், சில நாள்களில் குளித்து விட்டும், சில நாள்களில் குளிக்காமலும் துனியின்  அருகில் ஒரே இடமாக தினமும் தியானத்தில் அமர்ந்திருப்பார்.

இடுப்பைச் சுற்றி ஒரு சுத்தமான  வேட்டியை கட்டிக் கொண்டு, நீளமான சட்டையை போட்டுக்கொண்டு, தலையில் அழகான வெள்ளை நிறத் தலைப் பாகை அணிந்து கொண்டிருப்பார். ஆரம்ப காலத்தில் இதுவே அவருடைய உடை.