ஷீர்டி சாயி சத்சரிதம்
ஷிர்டியிலோ, ஜாம்நேரில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பது ஒருவருக்கும் தெரியாது. ஆனால், எங்கும் செல்லும் வல்லமை பெற்ற, எல்லாம் அறிந்த சாயிக்கு இவ்வுலகில் நடப்பது எதுவும் தெரியாமல் இருக்கமுடியாதே!
பக்தனுடைய ஆத்மாவுடன் ஒன்றிவிட்ட பாபாவுக்கு நானாவின் இல்லத்தில் இருந்த அவஸ்தை தெரிந்தது. இளகிய மனத்தினரான சாயி என்ன செய்தார் என்று பாருங்கள்.
நானாவுக்கு உதீ அனுப்பவேண்டும் என்று பாபா விரும்பினார். கோசாவி ராம்கீர் புவாவுக்கு தம்முடைய கிராமத்திற்கு திரும்பவேண்டுமென்ற பலமான எண்ணம் திடீரென்று எழுந்தது!
அவருடைய சொந்த ஊர் காண்தோச் ஜில்லாவில் இருந்தது. ஆகவே, அவர் அங்கே செல்வதற்குண்டான ஆயத்தங்களை செய்துகொண்டு பாபாவை தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார்.
பாபா ஜீவிதமாக இருந்தபோது, யார், எந்த வேலைக்காகச் செல்லவேண்டியிருந்தாலும் பாபாவின் பாதங்களை வணங்கி அனுமதி பெறாமல் யாரும் வெளியில் சென்றதில்லை.
திருமணமோ, உபநயனமோ, விதிமுறைகளின்படி சடங்குகளுடன் செய்யவேண்டிய விழாக்களோ, வேறு ஏதாவது விழாவோ, இவை சம்பந்தமாகச் செய்யப்பட்ட திட்டமிடுதலோ - அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பாபாவின் அனுமதி, தவறாது பெறப்பட்டது.
பாபாவின் மனப்பூர்வமான அனுமதியும் உதீ பிரசாதமும் ஆசிகளும் இன்றி, எந்த விழாவும், விக்கினமின்றி நிறைவேறாது. இதுவே, சகலமான மக்களின் பூரணமான நம்பிக்கை.
இதுவே கிராமத்தின் வாழ்க்கை இயல்பாகிவிட்டது. இதை அனுசரித்து ராம்கீர் புவாவும் மசூதிக்கு வந்து பாபாவின் பாதங்களை வணங்கி, கிளம்புவதற்கு அனுமதி வேண்டினார்.
அவர் சொன்னார், "பாபா, நான் கான்தேச் ஜில்லாவிலுள்ள என்னுடைய கிராமத்திற்குச் செல்ல விரும்புகிறேன். ஆசிகளுடன் உதீயும் அளித்து, உங்கள் சேவகனாகிய எனக்கு அனுமதியளியுங்கள்".
பாபுகீர் என்று பாபா செல்லமாக அழைத்த ராம்கீர் புவாவிடம் பாபா சொன்னார். "போம், உம்முடைய கிராமத்திற்கு குஷியாகப் போய் வாரும். வழியில் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளும்.-
"ஆகவே, முதலில் ஜாம்நேருக்குச் சென்று நானாவின் வீட்டில் தாங்கும். அவருடைய சமாச்சாரங்களை விசாரித்தபின், நீர் உமது வழியில் செல்லலாம்".
பாபா மாதவராவிடம் கூறினார், "சாமா, அக்கா இயற்றிய ஆராதிப்பாட்டை ஒரு காகிதத்தில் எழுது. அதை இந்த கோசாவியின் மூலம் நானாவுக்கு அனுப்பலாம்."
பிறகு அவர் கோசாவிக்கு உதீ கொடுத்தபின், ஒரு சிறிய உதீ பொட்டலமும் கட்டி அவரிடம் கொடுத்தார். இவ்விதமாக பாபா நானாவுக்கு உதீ அனுப்பினார்.
"இந்த உதீ பொட்டலத்தையும் ஆரதிப் பாட்டையும் நானாவிடம் கொடும். அவருடைய குடும்ப க்ஷேமம் பற்றிக் குசலம் விசாரித்துவிட்டு உம்முடைய சொந்த ஊருக்குச் செல்லும்."
No comments:
Post a Comment