valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 4 August 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆரத்தி ஆரம்பிக்கப் போகிறது என்பதற்கு அறிகுறியாக, பெரிய மணி 'டாங் ', 'டாங்' என்று முழங்கியது.

மத்திய நேரத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே இந்த ஆரத்தியை செய்தனர். பெண்கள் மசூதியின் தளத்தையும் ஆண்கள் சபா மண்டபத்தையும் அடைத்து நிறைத்துக் கொள்வர்.

பிறகு மங்களவாத்தியங்களும் முரசும் முழங்க, மிகுந்த மகிழ்ச்சியுடன் உச்சஸ்தாயியில் (உரத்த குரலில்) ஆரதிப் பாட்டை பாடுவர்.

நாங்கள் சபாமண்டபத்தை நெருங்கியபோது , ஆரதிப் பாட்டு உரக்க முழங்கி கொண்டிருந்தது. படிகளில் எல்லாம் அங்கு வந்து குழுமியிருந்த  ஆண்கள் நின்று கொண்டிருந்தனர். மசூதியின் உள்ளே செல்வதற்கு வழியே இல்லை.

ஆரத்தி முடியும் வரை சபாமண்டபத்திலேயே இருந்துவிட்டு, பிறகு மற்ற பக்தர்களுடன் சேர்ந்துகொண்டு பாபாவிடம் செல்லலாம் என்று நான் நினைத்தேன்.

இவ்வாறு நான் எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டிருந்தபோதே , படிகளில் ஏறிவிட்ட மாதவராவ், என் கையைப் பிடித்து மேலே இழுத்து நேராக பாபாவிடம் அழைத்து சென்றார்.

பாபா சாவகாசமாக சில்லிம் (புகை பிடிக்கும் மண் குழாய்) பிடித்துக்கொண்டு, தம்முடைய வழக்கமான ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கெதிரே ஜோக் நின்று கொண்டு  இடக்கையால் மணியாட்டிக் கொண்டே பஞ்சாரத்தி எடுத்துக் கொண்டிருந்தார்.

ஆரத்தி எழுப்பிய குதூகலத்தின் நடுவே, மாதவராவ் பாபாவுக்கு எதிரில் வலப்பக்கம் உட்கார்ந்துகொண்டு, என்னையும் பாபாவை நோக்கியவாறு உட்காரவைத்தார்.

சாந்தமூர்த்தியும் மஹான்களில் இரத்தினமுமாகிய பாபா இனிமையான குரலில் அப்போது கேட்டார். "சாம்ராவ் (மாதவராவ்) எனக்காகக் கொடுத்த தக்ஷிணையை இங்கே கொண்டு வாரும்."

"பாபா, சாம்ராவே இங்கு இருக்கிறார்; அவர் தக்ஷிணைக்குப் பதிலாக நமஸ்காரங்கள் கொடுத்திருக்கிறார். நமஸ்காரங்கள்தான் பதினைந்து ரூபாய் என்றும் அதையே பாபாவுக்குப் பிரீதியுடன் அர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்." (தபோல்கரின் பதில்)

"சரி, சரி, நீங்கள் இருவரும் பேசிக்கொண்டீர்களா? சம்பாஷணை செய்தீர்களா? நீங்கள் என்ன பேசிக்கொண்டீர்கள் என்பதை எனக்கு இப்பொழுது விரிவாக சொல்லுங்கள்.-

"நமஸ்காரங்களை பற்றிய கதை ஒருபுறமிருக்கட்டும். நீர் அவரிடம் பேசினீரா? எதை பற்றி பேசினீர்? எப்படி பேசினீர்? எல்லாவற்றையும் எனக்குச் சொல்லுங்கள்". (பாபா)

எனக்கு கதையை சொல்லவேண்டுமென்ற ஆர்வம். ஆனால், ஆரத்தியோ உரக்க முழங்கி கொண்டிருந்தது. இருப்பினும் என்னுள் பொங்கி கொண்டிருந்த மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. தங்குகடையின்றி  என் உதடுகளின் வழியாக கதை பிரவாகமாகப் பாய்ந்தது. 


No comments:

Post a Comment