ஷிர்டி சாயி சத்சரிதம்
சாமாவிடம் என்னை அனுப்பி இந்த யோசனை, மசூதியில் இருந்தபோது சஞ்சலம் அடைந்திருந்த என் மனத்தை அமைதிப்படுத்துவதற்காகவோ? பாபாவினுடைய வழிமுறைகள் விசித்திரமானவை!
அப்படி இருப்பினும், என் மனத்தே உதித்த இந்த எண்னத்தை நான் அமுக்கிவிட்டேன். ஏனெனில், கதையைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் அதிகாமாக இருந்தது. அதை சீக்கிரமாக தணித்துகொள்ள வேண்டுமென்று விரும்பினேன்.
பிறகு லீலைகள் பற்றிய கதைகள் ஆரம்பிக்கப்பட்டபோதே, பாபாவின் பக்தவத்சல அருள் வெளிப் போந்து , என் மனம் ஆனந்தமடைந்தது.
பிறகு, அவர் இன்னுமொரு கதை சொன்னார். தேச்முக் என்னும் குடும்பப் பெயர் கொண்ட பெண்மணி ஒருவர் இருந்ததாகச் சொன்னார். அப் பெண்மணி, திடீரென்று சாதுக்களின் சங்கத்தில் வாழ வேண்டும் என்று உணர்ந்தார்.
பாபாவினுடைய கீர்த்தியைக் கேள்விப்பட்டு அவரை தரிசனம் செய்ய வேண்டுமென்ற தீவிரமான ஆவலுடன், சங்கம்னெரிலிந்து வந்த மக்களுடன் ஷீரடிக்கு வந்தார்.
அப்பெண்மணி காசாபா தேச்முக் என்பவரின் தாயார்; ராதாபாய் என்று பெயர். சாயி பாதங்களின்மேல் நிஷ்டை (பக்தியும் விசுவாசமும்) கொண்டு பாபாவை தரிசனம் செய்தார்.
அவருக்கு அருமையான தரிசனம் கிடைத்ததால் பயணம் செய்த சோர்வெல்லாம் மறைந்து விட்டது; மனதில் சாயியின் மீது அன்பு மலர்ந்தது. 'எதற்காக இங்கு வந்தோம்' என்பதும் ஞாபகம் வந்தது!
அவருடைய மனத்தில் சமர்த்த சாயியை குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அவரிடம் உபதேசம் பெற்றுப் பரமார்த்த மார்க்கத்தில் முன்னேற்றமடைய வேண்டும் என்றும் தீவிரமான ஆவல் இருந்தது.
அப்பெண்மணி மிக வயது முதிர்ந்தவர். பாபாவினிடம் அளவுகடந்த விசுவாசமும் நம்பிக்கையும் வைத்திருந்தார். பாபாவிடம் இருந்து உபதேசம் பெறவேண்டி, மனதுள்ளே ஓர் உறுதி செய்துகொண்டார்.
"பாபாவிடம் இருந்து பிரத்யேகமாக காதில் மந்திர உபதேசம் பெற்று அவருடைய அருளுக்குப் பாத்திரமாகாமல் ஷிரிடியில் இருந்து நகரமாட்டேன்.-
"அந்த மந்திரம் சாயியினுடைய திருவாய் மொழியாகத்தான் வரவேண்டும். வேறு எவரிடம் இருந்தாவது பெற்றால் அது பவித்திரமானது ஆகாது. புனிதர்களில் புனிதரும் ஞானிகளில் சிறந்தவருமான சாயி, அவருடைய அருளுக்கு என்னைப் பாத்திரமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்."
இவ்வாறு திடமாக மனத்தில் நிச்சயம் செய்துகொண்டு, அம் மூதாட்டி அன்னத்தையும் பானத்தையும் நீத்துத் தம்முடைய உறுதிமொழியை கெட்டியாகப் பிடித்துகொண்டு அமர்ந்துவிட்டார்.
No comments:
Post a Comment