ஷிர்டி சாயி சத்சரிதம்
விபரீதமான, எதிர்மறையான, அபிப்ராயங்கள் சித்தத்தில் குழப்பத்தையே விளைவிக்கின்றன. ஜனன மரண சூழலில் மாட்டிக்கொண்டு எப்பொழுதும் மனம் கொந்தளித்தவாறே இருக்கிறது.
நாம் ரூப் தடங்கல்களை தாண்டியவர், மாயையால் பாதிக்கப்படாதவர், நிஜமான ஆனந்தத்தில் மூழ்கியவர். இறையனுபவம் பெற்றவர் - ஒரு சித்த புருஷராவார்.
இந்நிலைக்கு சிறந்த உதாரணம் ஸ்ரீ சாயி. இந்த மூர்த்தியின் பாதங்களை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள் எல்லாப் பேறும் பெற்றவர்கள். எல்லாபேறும் பெற்றவர்கள்.
சந்திரன் தண்ணீரில் இருப்பதுபோல் தெரியலாம்; ஆனால், அது வானில்தான் இருக்கிறது. அதுபோலவே ஞானிகள் பக்தர்களால் சூழப்படிருப்பதை போலத் தோன்றலாம்; ஆனால், அவர்களுக்கு எந்த வஸ்துவின்மீதும் ஒட்டுதலில்லை.
எந்நேரமும் பக்தர்களுக்கிடையில் இருந்தாலும் அவர்களுக்கு எவர்மீதும் ஒட்டுதலில்லை. அவர்கள் தங்களுக்குள்ளேயே மூழ்கியிருப்பதால் அவர்களுக்கு வெளிக்காட்சிகள் தெரிவதில்லை.
மகாசாதுக்களும் ஞானிகளும் இவ்வாறே; அவர்கள் மூலமாக இறைவன் பேசுகிறார். அவர்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. அவர்களால் அடையமுடியாததும் ஏதுமில்லை.
ஆன்மீக போதனையைப் பெறுவதும் அளிப்பதுமாகக் கணக்கற்ற சிஷ்யர்களும் குருமார்களும் இவ்வுலகில் இருக்கின்றனர்; ஆனால், ஞானத்துடன் அனுபவத்தையும் சேர்த்து அளிக்கும் குரு அபூர்வமே.
பூர்வாங்கமான வர்ணனை போதும்; முக்கியமான காதைக்குப் போவோம். ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கும் கதை கேட்பவர்கள் நன்மை பெறுவர்.
நிஜாம் சமஸ்தானத்தில் உள்ள நாந்தேட் நகரில் பிரக்தியாதி (புகழ்) பெற்ற பார்சி வியாபாரி ஒருவர் வசித்து வந்தார். தார்மீகமாகவும் உலகத்தினால் விரும்பப் பட்டவராகவும் வாழ்ந்து வந்தார். அவருடைய பெயர் ரத்தன்ஜி. (முழுப் பெயர் ரத்தன்ஜி சாபூர்ஜி வாடியா)
அவருக்கு ஏராளமான செல்வமும் வண்டி, குதிரை, விளைநிலங்கள், காடுகள் ஒன்று பலவகையில் சொத்துக்களும் இருந்தன. அவருடைய வீட்டின் கதவுகள் எல்லாருக்கும் திறந்திருந்தன. எவருமே அவருடைய வீட்டிலிருந்து முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரும்பவில்லை.
வெளிப்பார்வைக்கு அவர் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருந்தாலும், இரவு பகலாக அவருடைய மனதை கவலையென்னும் பெரிய முதலை கடித்துத் தின்றுகொண்டிருந்தது.
எவருமே பூரணமான, குறையோன்றுமே இல்லாத, ஆனந்தத்தை அனுபவிக்கமுடியாது என்பது இறைவனின் ஆணை போலும்! ஒருவருக்கு ஒரு குறை; மற்றொருவருக்கு வேறு குறை; ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கவலை அல்லது ஏக்கம் இருக்கவே செய்கிறது.
No comments:
Post a Comment