ஒருவர் சொல்லலாம், "நான் ஒருவனே சர்வ ஐசுவரங்களையும் பெற்ற உயர்ந்த மனிதன்" என்று. கர்வத்தால் தலைவீங்கிக் கெட்டவழிகளில் செல்ல ஆரம்பிக்கலாம்.
திருஷ்டி வந்துவிடுமோ என்று பயந்து, ஒரு தாய் குழந்தைக்குத் தாடையில் தம்முடைய விரலால் கறுப்பு பொட்டு இட்டுவிடுவதுபோல், இறைவனும் அப்பழுக்கற்ற நற்குணவான்களுக்கும் கண்ணேறு வாராத வகையில் ஏதோoru சிறிய குறையை வைத்துவிடுகிறான் என்பது நிதரிசனமாகத் தெரிகிறது.
ரத்தன்ஜி அனுபவித்த பொன்னும் பொருளும் வருபவர்களுக்கெல்லாம் அன்னமிடும் தருமசிந்தனையை அளித்தது. ஏழை எளியவர்களின் துயர் துடைக்க உதவிகளையும் செய்துவந்தார். எப்பொழுதும் மலர்ந்த முகத்துடன் இருந்தார்.
இவ்வாறு, வெளியுலக பார்வைக்கு அவர் சந்தோஷமாக வாழ்பவராக தெரிந்தார். ஆனால், ஆன் சந்ததி இல்லாதவர்களுக்குச் செல்வத்தின் மகிழ்ச்சி ஏது?
ஒன்றன்பின் ஒன்றாக அவருக்குப் பன்னிரண்டு மகள்கள் இருந்தனர். எப்படி அவரால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? எப்படி அவருடைய மனம் சாந்தியடைய முடியும்?
பக்தியில்லாத பஜனை, சுருதியும் தாளமும் இல்லாத இசை, பூணுல் அணியாத பிராமணன், சோபை எங்கே இருக்கிறது?
சகலகலாவல்லவர், ஆனால் விவேகமற்றவர்; ஆசாரசீலர், ஆனால் ஜீவராசிகளின் மேல் தயையோ கருணையோ இல்லாதவர்; இவர்களிடம் சோபை எங்கே இருக்கிறது?
நெற்றியில் கோபி சந்தனம், கழுத்தில் துளசிமாலை, ஆனால் நாக்கு ஞானிகளைப் பற்றி அவதூறு பேசுகிறது, சோபை எங்கே இருக்கிறது?
பாவ மன்னிப்பு கோராத தீர்த்த யாத்திரை, அட்டிகை இல்லாத நகை அலங்காரம், ஆண் குழந்தை இல்லாத இல்லம், சோபை எங்கே இருக்கிறது?
"நாராயணன் எனக்கு ஒரு மகனையாவது கொடுப்பாரா?" அனுதினமும் இதுவே அவருடைய சிந்தனையாக இருந்தது. மனம் அமைதியாக இருக்க மறுத்தது.
இதனால் சேட்ஜி சதா சோகமாகவே இருந்தார். அன்னமும் பானமும் பிடிக்கவில்லை. எப்பொழுதும் உடைந்த மனதுடன் இரவுபகலாக கவலையில் மூழ்கியவராக இருந்தார்.
"இறைவனே! என்னுடைய மகிழ்ச்சியிலிருக்கும் இக்குறையை நீக்கி, என்னைக் களங்கமில்லாதவனாக ஆக்குவீராக. என்னுடைய வம்சவிருத்திக்காக ஒரு மகனையாவது அளிப்பீராக, ஓ பிரபுராயா! இந்த அவப்பெயரிலிருந்து என்னைக் காப்பாற்றும்".
கவி தாஸ்கனுவிடம் அவருக்கு மிகுந்த விசுவாசமிருந்தது. தம்முடைய இதயத்தில் இருந்த ரகசியமான ஆசையை அவரிடம் தெரிவித்தார். தாசகனு கூறினார், "ஷீரடிக்கு போய்வாருங்கள்; உங்களுடைய மனோரதம் நிறைவேறும்.-
"பாபாவை தரிசனம் செய்யுங்கள்; அவருடைய பாதங்களில் வந்தனம் செய்யுங்கள்; உம்முடைய உள்ளத்து ஆசையை அவரிடம் விளக்கமாகச் சொல்லுங்கள். அவர் உங்களை ஆசீர்வாதம் செய்வார். -
No comments:
Post a Comment