"ஓ, நான் இப்பொழுது என் செய்வேன்? எத்தனையோ மருந்துகளையும் கஷாயங்களையும் அருந்தி பார்த்துவிட்டேன்! நீங்களாவது இந்த ஜுரம் நீங்குவதற்கு ஒரு நிவாரணம் சொல்லுங்கள்!"
பாபாவினுடைய இதயம் கனிந்தது. பதில் சொல்லும் வகையில் மலேரியா நீங்க வினோதமான ஓர் உபாயம் சொன்னார். அது என்னவென்று கேளுங்கள்!
"லக்ஷ்மி கோயிலுக்கருகில் இருக்கும் கருப்பு நாய் தின்பதற்குச் சில கவளங்கள் தயிர்சோறு கொடு; உடனே உன்னுடைய ஜுரம் குணமாகி விடும்!"
பாலா உணவு தேடுவதற்காகச் சிறிது பீதியுடன் வீடு திரும்பினார்; அதிர்ஷ்டவசமாக, ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் சோறு இருப்பதை பார்த்தார்; அருகிலேயே தயிரும் இருந்தது;
'தயிரும் சோறும் கிடைத்தது மிக்க நன்று. ஆயினும், இந்த வேளையில் கோயிலுக்கருகில் கறுப்புநாய் இருக்குமா? என்று பாலா யோசனை செய்துகொண்டே போனார்.
தேவை இல்லாத கவலை! குறிப்பிட்ட இடத்தை அவர் சென்றடையுமுன்பே ஒரு கறுப்பு நாய் வாலை ஆடிக் கொண்டு தம்மை நோக்கி வருவதை பார்த்தார்.
பாபா குறிப்பிட்டவாறே அனைத்தும் நடப்பது பற்றி பாலா கண்பத் மிக்க ஆனந்தமடைந்தார். உடனே அவர் நாய்க்கு தயிர் சோறு போட்டார். பிறகு, பாபாவிடம் சென்று நடந்தது அனைத்தையும் சொன்னார்.
யார் இந்த நிகழ்ச்சியை பற்றி என்ன சொன்னாலும், சாராம்சம் என்னவென்றால், அப்பொழுதே மலேரியா ஜுரம் பாலாவை விட்டு நீங்கியது. பாலா நிவாரணம் அடைந்தார்.
அதுபோலவே, பாபுசாஹெப் புட்டிக்கு ஒரு சமயம் குடல் சீதலத்தினால் பேதியும் வாந்தியும் கண்டது.
அலமாரி பூராவும் பலவகையான மருந்துகளால் நிரம்பி இருந்தது. ஆயினும், அம்மருந்துகளில் எதுவமே நிவாரணம் அளிக்கவில்லை. பாபு சாஹேப் மனத்தில் கலவரம் அடைந்தார். கவலைப்பட ஆரம்பித்தார்.
பல தடவைகள் பேதியும் வாந்தியும் ஆகி, பாபுசாஹீப் க்ஷணமடைந்து போனார். தினப்படி பழக்கமான 'பாபா தரிசனத்திற்கு ' செல்வதற்கு கூட சக்தியற்று இருந்தார்.
இச் செய்தி பாபாவின் காதுக்கு எட்டியது; அவர் புட்டியை அழைத்து வரச் சொல்லி, தம்மெதிரில் உட்கார வைத்தார். பாபா கூறினார், "இதோ பார், இப்பொழுதிலிருந்து நீ மலம் கழிக்கப் போகமாட்டாய்!-
"அத்தோடு, ஞாபகம் இருக்கட்டும், வாந்தியும் நின்று விட வேண்டும் ." புட்டியை நேருக்கு நேராகப் பார்த்து, ஆட்காட்டி விரலை ஆட்டிக் கொண்டே அதே வார்த்தைகளை மறுபடியும் கூறினார்.
அவ்வார்த்தைகளின் தாத்பரியத்தை கேட்டு பயந்து போய், வியாதி உடனே ஓட்டம் பிடித்தது! ஸ்ரீமான் புட்டி சொஸ்தமடைந்தார்.
No comments:
Post a Comment