ஷிர்டி சாய் சத்சரிதம்
ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை வாய்க்கு ஏறிவந்த இரத்தம், பாபாவுடன் ஒரு மணி நேரம் உட்கார்ந்து கொண்டிருந்தபோது அடங்கி விட்டது.
பாபா நோயாளியைப் பரிசோதிக்கவில்லை; நோய் எப்படி ஏற்பட்டது என்று காரணமும் கேட்கவில்லை. அவருடைய அருட்பார்வையே கணமாத்திரத்தில் வியாதியுனுடைய வேரை அறுத்து விட்டது.
அவருடைய கிருபை கனிந்த பார்வையொன்று போதும்; பட்டமரம் துளிர்த்துவிடும்; வசந்த காலம் வருவதற்கு முன்னரே மரம் பூத்துக் குலுங்கும்; சுவையான பழங்களின் பளு தாங்காது மரம் தழையும்.
ரோகம் எது, ஆரோக்கியம் எது? ஒருவருடைய புண்ணியமோ பாவமோ தீராமல், கர்மவினை கழியாமல், எந்த வைத்தியமும் பலன் தராது.
கர்மத்தை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும். எதனை ஜன்மம் எடுத்தாலும் இதுவே நிச்சயம். கர்மவினை அனுபவித்து அழிவதற்கு முன்பு, எந்த உபாயமும் எடுபடாது.
இருப்பினும், ஒருவருடைய பாக்கியத்தால் ஞானியின் அருட்பார்வை கிடைத்தால், அது வியாதியைத் துடைத்துவிடுகிறது. பீடிக்கப் பட்டவர் வியாதியை சுலபமாகவும் துன்பமின்றியும் பொறுத்துக் கொள்வார்.
வியாதி பொறுக்க முடியாத வலியையும் கஷ்டத்தையும் கொணர்கிறது. ஞானி தம்முடைய கருணை மிகுந்த பார்வையால் எந்த துக்கமும் ஏற்படாதவாறு வியாதியை நிவாரணம் செய்துவிடுகிறார்.
இங்கே பாபாவின் சொற்களே பிரமாணம். அதுவே ராமபாணம் போன்ற, குறிதவறாத ஒளஷதம். இதுபோலவே, கருப்பு நாய்க்கு தயிர் சோறு போட்டதால் மலேரியா ஜுரம் நிவாரணம் ஆகியது.
இம்மாதிரியான கிளைக்கதைகள் பிரதமமான கதையிலிருந்து விலகிச் செல்வது போலத் தோன்றலாம். கேட்டு, சாராம்சத்தை புரிந்துகொண்டால், அவற்றின் சம்பந்தம் நன்கு விளங்கும். மேலும், என்னுடைய மனதிற்கு இக்கிளைக் கதைகளை கொண்டுவருபவர் சாயிதானே!
'என்னுடைய காதையை நானே விவரிக்கிறேன்' என்று சாயி சொல்லியிருக்கிறார். ஆர்தான் இந்த சமயத்தில் எனக்கு இக்காதைகளை ஞாபகப் படுத்தியிருக்கிறார்.
பாலா கண்பத் என்னும் பெயர் கொண்ட சிம்பி (தையற்கார) ஜாதியை சேர்ந்த தீவிர பக்தரொருவர் ஒருசமயம் மசூதிக்கு வந்து பாபாவின் எதிரில் வந்து நின்று, தீனமான குரலில் வேண்டினார்,-
"நான் என்ன பெரும் பாவம் செய்துவிட்டேன்? ஏன் இந்த மலேரியா ஜுரம் என்னை விட மாட்டேன் என்கிறது? பாபா, எத்தனையோ உபாயங்களை செய்து பார்த்துவிட்டேன்; ஆனால், இந்த ஜுரம் என் உடலை விட்டு நீங்க மாட்டேன் என்கிறது. -
No comments:
Post a Comment