ஷிர்டி சாயி சத் சரிதம்
தயாளமுள்ள துணைவரும் சரணாகதி யடைந்தவர்களைப் பாதுகாப்பவரும் பக்தர்களோடு பிணைந்தவருமான சாயியால் எப்படிப்பட்ட அற்புதம் விளைவிக்கப் பட்டது என்று சற்று பாருங்கள்!
கவனத்தை சிதறவிடாது முழுமையாக ஈடுபட்டு நான் சொல்லப் போகும் புதிய காதையை முழுக்க கேளுங்கள்; செய்வன திருந்தச் செய்தவர்களாகிய நன்மையடைவீர்கள்.
சாயியின் முகத்திலிருந்து வெளிப்படும் அமுதமழை, புஷ்டியையும் திருப்தியையும் அளிக்கும் அருட்புனலாக இருக்கும்போது, தம்முடைய நல்வாழ்வுபற்றிய அக்கறை கொண்டவர் எவராவது ஷீரடிக்கு போகும் யத்தனத்தை கஷ்டமாக நினைப்பாரா?
கடந்த அத்தியாத்தில், சித்தியாகிவிட்ட தம் குருவின் தரிசனம் பெற்றதால் அளவிலா ஆனந்தமடைந்த அக்கினி ஹோத்திரி பிராமணரின் காதை சொல்லப் பட்டது.
இந்த அத்தியாயம் முன்னதை விட இனிமையானது. க்ஷய ரோகத்தால் (காச நோயால்) ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்த பக்தர் ஒருவர் கனவுக் காட்சியால் நிவாரணம் பெற்று நல்லாரோக்கிய மடைந்தார்.
ஆகவே, விசுவாசமுள்ள பக்தர்களே! கல்மஷங்களைஎல்லாம் (மன மலங்களைஎல்லாம்) எரித்து விடும் சக்தியுடைய இவ்வற்புதமான சாயி நாத சரித்திரத்தை முழு கவனத்துடன் கேளுங்கள்.
இச் சரித்திரம் கங்கை நீரைப் போன்று புண்ணியமானது; பவித்திரமானது; இஹத்திலும் பரத்திலும் சாதகங்களை அளிக்கக் கூடியது. இதைக் கேட்பவர்களின் காதுகள் எல்லாப் பேறுகளையும் பெற்றவை!
இச் சரித்திரத்தை தேவாமிர்ததிற்கு உபமானமாக சிலர் சொல்லலாம். ஆயினும் தேவாமிருதம் இவ்வளவு இனிக்குமா என்ன? அமிருதம் உயிரைத்தான் ரட்சிக்கும்; இச்சரித்திரமோ மேற்கொண்டு ஜனனமே இல்லாமல் செய்துவிடும்!
உயிருள்ள ஜீவன்கள் எல்லா சக்திகளும் தங்களுக்கு இருக்கின்றன என்று நினைக்கின்றன. தாம் நினைத்ததைச் செய்ய முடியும் என்று யாராவது நினைத்தால், அவர் இக்காதையை கேட்க வேண்டும்.
மனிதன் வாஸ்தவமாகவே சுதந்திரமுள்ளவனாக இருந்தால், இரவு பகலாக சுகத்திற்காக உழைப்பவன் ஏன் கஷ்டத்தை மட்டுமே அடைகிறான்? அவனுடைய விதி அவனை விடுவதாக இல்லை.
இங்கும், அங்கும், எங்குமே துக்கத்தை தவிர்ப்பதில் சாமர்த்தியம் மிகக் காட்டினாலும், விதி அவனை விடுவதாக இல்லை.
அதை உதறித் தள்ள முயன்றால், அது கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது; விலக்கிவிட முயன்றால், மேலும் அழுத்தமாகத் தழுவிகிறது! இரவு பகலாக மனிதன் நடத்தும் போராட்டமெல்லாம் வீணாகிப் போகிறது.
மனிதன் நிஜமான சுதந்திரம் பெற்றிருந்தால், சுகத்தைத் தவிர வேறெதையும் நாட மாட்டான்; லவலேசமும் (சிறிதளவும்) சந்தேகமிருந்தால் துக்கத்தின் அருகிலேயே செல்ல மாட்டான் அல்லனோ?
No comments:
Post a Comment