ஷிர்டி சாயி சத்சரிதம்
13. பிணி தீர்த்த பெம்மான்
வெளிப்படும் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பீரமானது; வெகு விஸ்தீரணமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது;-
பாபாவினுடைய திருவாய் மொழி இத்தகையதே; அர்த்தத்திலும் தத்துவத்திலும் மிகவும் ஆழமானது; சமசீரானது; விலைமதிப்பற்றது; காலத்தின் எல்லைவரை அர்த்தமுள்ளது. வீண் போகாதது.
"ஏற்கனவே என்ன நடந்ததோ, என்ன நடக்கப் போகிறதோ, அதற்கேற்றவாறு வாழ்க்கை நடத்து! எது பிராப்தமென்று விதிக்கப் பட்டிருக்கிறதோ, அதை அறிந்து கொண்டு நட! எப்பொழுதும் திருப்தியுள்ளவனாக இரு! சஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்பொழுதும் இடம் கொடுக்காதே! -
"கவனி ! வீடு, குடும்பம் போன்ற தளைகளில் மாட்டிக்கொள்ளாமல் தொந்தரவுகளிலிருந்து முழுமையாக விடுபட்டு, வாழ்க்கையின் தொல்லைகளையும் சலிப்புகளையும் அறவே தியாகம் செய்துவிட்டு ஒரு பக்கீராக நான் அமைதியாக ஒரேயிடத்தில் உட்கார்ந்திருக்கும் போதே, -
"எதற்கும் அடங்காத மாயை என்னை விடாது துன்புறுத்துகிறது. நான் அவளை உதறிவிட்டாலும், அவள் என்னை உதறாது என்னுடன் நிரந்தரமாக ஒட்டிகொள்கிறாள்!-
"அவள் ஸ்ரீஹரியின் ஆதிமாயை; பிரம்மவாதி தேவர்களையே நிலை தடுமாறுமாறு செய்திருக்கிறாள்! இந்நிலையில் அவள் முன்னிலையில் இந்த பலவீனமான பக்கீரின் கதி என்னவாக இருக்க முடியும்?
"ஸ்ரீ ஹரியே விருப்பப்படும்போதுதான் மாயை ஒழியும். இடைவிடாத ஹரிபஜனையின்றி மாயையிலிருந்து விடுதலை கிடைக்காது."
பாபா, பக்தர்களுக்கு விளக்கம் செய்த மாயையின் மகிமை இதுவே. மாயையின் பிடியிலிருந்து நிவிர்த்தி பெறுவதற்கு, இறைவனுடைய பெருமைகளை பாடும் சேவையையே பாபா பரிந்துரை செய்தார்.
"ஞானிகள் என்னுடைய உயிருள்ள உருவங்கள்" என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பாகவத்தில் கூறியிருக்கிறார். ஸ்ரீ ஹரியால் உத்தவருக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்ட இவ்வார்த்தைகளை அறியாதவர் யார்?
No comments:
Post a Comment