ஷிர்டி சாயி சத் சரிதம்
நானா அவ்வாறு சொன்னதற்கு நல்ல காரணங்கள் இருக்கவே செய்தன. ஆகவே, அவர் சொன்னார், "போ, ஆனால் உடனே திரும்பி விடு". இதைக் கேட்ட அம்மையார் குடும்ப விசாரத்தால் சோகமடைந்தார்.
அடுத்த நாள் புரட்டாசி மாதத்து அமாவாசை; அம்மையார் அந்த நாளில் பேலாபூரில் இருக்க வேண்டுமென்று விரும்பினார். இல்லை, மிகத் தீவிரமாக ஆவலுற்றார். ஆனால், நானா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
மேலும் , அமாவாசையன்று பயணம் மேற்கொள்வது அவ்வளவு உசிதமான செயல் அன்று. இந்தப் பிரச்னையை சமாளிப்பது எப்படி என்பது பற்றி அம்மையார் மிகக் கவலையுற்றார்.
பேலாபூருக்கு செல்லவில்லை என்றால் மனம் சமாதானம் அடையாது. ஆயினும், கணவருடைய மனதைப் புண்படுத்தவும் விரும்பவில்லை. எப்படி அவருடைய ஆணையை மீற முடியும்?
எப்படியோ, பெலாபூருக்கு செல்வதற்குத் தம்மை தயார் செய்து கொண்டு, புறப்படுவதற்கு முன் பாபாவை நமஸ்காரம் செய்து விட்டுப் போவதற்காக வந்தார். பாபா அப்பொழுது லெண்டிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.
ஜனங்கள் எப்பொழுது பிரயாணமாகக் கிளம்பினாலும் நிர்விக்கினமாகப் போய்வர வேண்டுமென்று கடவுளை வணங்கிவிட்டு செல்வர். இப்பழக்கம் ஷிர்டியிலும் அனுசரிக்கப் பட்டது.
சாயி ஷிர்டி மக்களுக்கு கடவுள் ஆதலால், எவ்வளவு அவசரமாக பயணப் பட்டாலும், கிளம்புவதற்கு முன்பு பாபாவின் திருவடிகளை வணங்கிவிட்டே சென்றனர்.
இக்கிரமத்தின்படி, அம்மையார், பாபா சாடி வாடாவிற்கு எய்த்ரில் ஒரு கணம் நின்றபோது பாபாவினுடைய பாதங்களுக்கு நமஸ்காரம் செய்தார்.
சிறியவர்களும் பெரியவர்களுமாக நானா சாஹேப் நிமோன்கர் உட்பட, தரிசனத்திற்கு வந்தவர்கள் அனைவரும் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தனர்.
அங்கிருந்த மக்களின் முன்னிலையில், குறிப்பாக நானாவின் முன்பாக, பாபா அவ்வம்மையாரிடம் சமயோசிதமான வார்த்தைகளைக் கூறினார்.
பாபாவினுடைய பாதங்களில் சிரம் தாழ்த்திப் பிரயாணத்திற்கு அனுமதி கேட்ட உடனே, "போம், சீக்கிரமாகப் போம்; அமைதியான மனதுடன் இரும்.
"அவ்வளவு தூரம் போவதால், மூன்று நான்கு நாள்கள் சந்தோஷமாக பேலா பூரில் தங்கி எல்லாரையும் சந்தித்து விட்டு ஷீரடிக்கு திரும்பி வாரும்".
எதிர்பாராதவிதமாக வந்த பாபாவின் திருவாய் மொழியைக் கேட்டுத் திருமதி நிமோன்கர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். நிமோன்கரும் பாபாவின் சூசகத்தை புரிந்து கொண்டார். இவ்விதமாக, இருவருமே சமாதனமடைந்தனர்.
No comments:
Post a Comment