ஷிர்டி சாயி சத்சரிதம்
மழை முழுக்க நின்றுவிட்டது; இதமான காற்று வீச ஆரம்பித்தது. வானத்தின் உறுமல்கள் சுத்தமாய் நின்றுவிட்டன. பறவைகளும் மிருகங்களும் தைரியமடைந்தன.
வீடுகளின் சார்புகளில் ஒண்டிக் கொண்டிருந்த ஆடுமாடுகள் குட்டிகளுடன் கன்றுகளுடனும் வெளியே வந்து தைரியமாகவும் சுதந்திரமாகவும் உலாவின. பறவைகள் வானத்தில் உயரப் பறந்தன.
பயங்கரமான இந்நிகழ்ச்சியை அனுபவித்த மக்கள், பாபாவினுடைய உபகாரத்திற்கு மனதார நன்றி therivithuvittu தம் தம் வீடுகளுக்கு சென்றனர். உறுதியான சமநிலையை அடைந்த ஆடுமாடுகள் கால்போன போக்கில் நடமாடின.
இவ்விதமாக, இந்த சாயி தயையே உருவானவர். தாய் தன் குழந்தையின் மீது செலுத்தும் பாசத்தை போன்று அவர் பக்தர்களின் மீது செலுத்தும் பாசம் மிக உயர்ந்தது. அதுபற்றித் திருப்தியான அளவிற்கு நான் எவ்வாறு பாடுவேன்?
அக்கினியின் மீதும் அவருக்கு அம்மாதிரியான ஆதிபத்தியம் இருந்தது. இது விஷயமாக ஒரு சுருக்கமான காதையை கவனத்துடன் கேளுங்கள் செவிமடுப்பவர்களே! அது பாபாவினுடைய அபூர்வமான சக்தியை விளக்கும்.
ஒருநாள் நடுப்பகல் வேளையில் துனியின் தீ பலமாக எழும்பியது. அந்நேரத்தில் துனிக்கு பக்கத்தில் நிற்பதற்கு எவருக்கு தைரியம் இருந்தது? ஜுவாலைகள் திகுதிகு வென்று உயரமாக எரிந்தன.
தீ பயங்கரமாக எரிந்து, பல சிகரங்கள் உயரமாக கிளம்பிக் கூரையின் மரப்பலைகைகளை தொட்டன. தீ விபத்தில் மசூதியே எரிந்து சாம்பலாகி விடும் போலத் தோன்றியது.
பாபா என்னவோ அமைதியாகவே இருந்தார். முற்றும் வியப்படைந்த மக்கள் கவலையால் பீடிக்கப்பட்டு உரக்கக் கூவினர், "ஐயோ, எவ்வளவு அமைதியாக படபடப்பின்றி இருக்கிறார்!"
யாரோ ஒருவர் அலறினார், "ஓடிப் போய் தண்ணீர் கொண்டுவாருங்கள்!" மற்றவர் சொன்னார், "யார் அதைத் துனியில் கொட்டுவது? கொட்ட முயன்றால் சட்கா (பாபாவின் கைத்தடி) பலமாக உம்மீது விழும். யார் இதச் செய்ய தைரியமாக முன்வருவார்?"
எல்லாரும் தைரியத்தை இழந்து தத்தளித்தனர்; ஆனால், யாருக்குமே கேட்பதற்கு தைரியம் இல்லை. பிறகு பாபாவே தாமிருந்த நிலையிலிருந்து சிறிது நெளிந்து சட்காவின் மீது கரத்தை வைத்தார்.
கொழுந்துவிட்டு எரியும் தீயைப் பார்த்துக்கொண்டே சட்காவைக் கையில் எடுத்துக் கொண்டு, "நகரு, பின்வாங்கு, போ" என்று சொல்லிக் கொண்டே அடிமேல் அடியாக அடித்தார்.
துனியிலிருந்து ஒரு கை தூரத்தில் இருந்த கம்பத்தை சட்காவால் அடித்துக் கொண்டும் துனியை முறைத்து பார்த்துக்கொண்டும், "சாந்தம் அடை; சாந்தம் அடை!" என்று திரும்ப திரும்ப சொன்னார்.
ஒவ்வொரு அடிக்கும் துனி தன்னுடைய ஆக்ரோஷத்தை இழந்து பின் வாங்கியது. படிப்படியாக துனி சாந்தமடைந்தது. மக்களுடைய பீதியும் அடியோடு தொலைந்து போயிற்று.
No comments:
Post a Comment