ஷிர்டி சாயி சத்சரிதம்
சில சமயங்களில் திடீரென்று கோபாவேசம் கொண்டு, தம் கோபத்தை பக்தர்கள் மீது காட்டுவார். மற்ற சமயங்களில் மெழுகைவிட இளகியவராகவும், சாந்தமும் மன்னிக்கும் சுபாவமும் உருவெடுத்து வந்தவர் போலவும் இருப்பார்.
சில நேரங்களில் காலாகினியைப் போன்று பயங்கரமாகத் தோன்றி, பக்தர்களை வாள்முனையில் நடக்கச் செய்தார். சில சமயங்களில் வெண்ணையை விட இளகியவராக உற்சாகமும் மகிழ்ச்சியுடனும் இருந்தார்.
வெளிப்பார்வைக்கு கோபத்தால் அவர் நடுங்கலாம். கண் விழிகளை வேகமாகச் சுழற்றலாம்; ஆனால், இதயத்திலோ தாய்க்கு குழந்தையின் மேல் இருப்பது போன்ற கருணை ஊற்று பொங்கியது.
அடுத்த கணமே தம்முடைய சுய சாந்தி நிலையை மீண்டும் அடைந்து பக்தர்களை தம்மிடம் வருமாறு உரக்க அழைப்பார், "நான் யார்மீதாவது கோபப் படுவது போலத் தெரிந்தாலும், என்னுடைய இதயத்தில் கோபமே கிடையாது. -
"தாய் தன் குழந்தையை எட்டி உதைத்து தள்ளினால்தான், கடல் ஆற்றை வாராதே என்று திருப்பியடித்தால்தான், நான் உங்களை வெறுத்து ஒதுக்கி இன்னல் செய்வேன். -
"நான் என் பக்தர்களின் பிடியில்தான் இருக்கிறேன்; அவர்களின் பக்கத்தில் நிற்கிறேன். எப்போழுதும் அவர்களுடைய அன்பை தாகத்துடன் நாடுகிறேன்; துன்பத்தில் அவர்கள் கூப்பிடும்போது ஓடி வருகிறேன்".
காதையின் இந்தப் பாகத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, இன்னொரு மிகப் பொருத்தமான காதலி ஞாபகத்திற்கு வருகிறது. அதைச் சொல்கிறேன். கதை கேட்பவர்களே ! கவனமாகக் கேளுங்கள்.
கல்யாணில் வசித்த சித்திக் பால்கே என்ற முஸ்லீம், மெக்கா- மெதினா யாத்திரையை முடித்தவுடன் ஷிரிடிக்கு வந்தார்.
வயது முதிர்ந்த இந்த ஹாஜி வடக்கு நோக்கிய சாவடியில் தங்கினார். முதல் ஒன்பது மாதங்களுக்கு பாபா இவரை கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. ஏதோ மனஸ்தாபம் இருந்ததுபோல் தெரிந்தது.
நேரம் இன்னும் பழுக்கவில்லை. மசூதிக்குச் செல்வதற்கு அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீண்; அலுப்பையும் சலிப்பையுமே தந்தன. அவர் பல வழிமுறைகளை கையாண்டும், பாபா அவரைத் திரும்பி பார்க்கவும் மறுத்து விட்டார்.
மசூதியின் கதவுகள் எல்லாருக்கும் திறந்திருந்தன. யாருமே ரஹசியமாக எப்படியாவது உள்ளே நுழையவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சித்திக் பாலகேவுக்கு மசூதியின் படிகளில் ஏற அனுமதி கிடைக்கவில்லை.
No comments:
Post a Comment