ஷிர்டி சாயி சத்சரிதம்
அப்போது அவருக்கு 20 வயது; அடுத்த 60 ஆண்டுகள் அவர் ஷிர்டியிலேயே தங்கிவிட்டது எல்லாருக்கும் தெரிந்ததே!
சக வருஷம் 1840ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் விஜயதசமியன்று (கி.பி.1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி) பாபா மகாசமாதி அடைந்தார்.
பாபாவினுடைய வாழ்நாள் 80 ஆண்டுகள். இதிலிருந்து பாபா பிறந்த ஆண்டு, சக வருஷம் 1760 (கி.பி. 1838) ஆக இருக்க வேண்டும் என்று அனுமானிக்கலாம்.
மரணத்தை வென்ற ஞானிகளின் ஜீவித காலத்தை நிர்ணயிக்க முடியுமா? அது செயற்கரிய செயலாகுமன்றொ !
சூரியன் உதிக்காமலும் அஸ்தமிக்காமலும் நிலையாக ஓரிடத்திலேயே இருக்கும் உலகத்தில், பிறப்பும் இறப்பும் அற்ற நிலையில், மகான்கள் அவர்களுடைய இடத்திலேயே இருக்கின்றனர்.
கி.பி. 1681 ஆம் ஆண்டு ஞானி ராமதாசர் சமாதியடைந்தார். அதிலிருந்து இருநூறு ஆண்டுகள் முடிவதற்கு முன்பே இந்த மூர்த்தி அவதரித்தார்.
பாரத பூமி மொகலாயர்களின் படைகளால் தாக்கப்பட்டது. ஹிந்து அரசர்கள் தோற்கடிக்கப் பட்டனர். பக்தி மார்க்கம் படிப்படியாக நசித்துப் போயிற்று; மக்கள் அறவழியில் இருந்து புரண்டனர்.
அந்த சமயத்தில் ஞானி ராமதாசர் அவதரித்தார். சிவாஜி மஹாராஜின் உதவியுடன் ராஜ்யத்தையும் பிராமணர்களையும் பசுக்களையும் முஸ்லீம்களின் தாக்குதல்களிலிருந்து அவர் காப்பற்றினார் .
இது நடந்து இரு நூற்றாண்டுகள் முடிவதற்குள்ளாகவே மறுபடியும் அதர்மம் தலை தூக்கியது; ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டது; பாபா இப்பிளவை சரிக்கட்ட முயன்றார்.
ராமனும் ரஹீமும் ஒன்றே. அவர்கள் இருவருக்குள் ஒரு வித்தியாசமும் இல்லை. இவ்வாறிருக்கும்போது அவர்களைப் பின்பற்றுபவர்கள் ஏன், ராமன் வேறு, ரஹீம் வேறு என வற்புறுத்த வேண்டும்? ஒருவரை ஒருவர் ஏன் வெறுக்க வேண்டும்?
ஓ! என்ன மூடத்தனமான குழந்தைகள் நீங்கள்.! நட்புறவின் பந்தங்கள் ஹிந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒன்று சேர்க்கட்டும். பரந்த மனப்பான்மையும் தர்ம சிந்தனையும் உங்களுடைய மனதில் ஆழமாக வேர்விடட்டும்.
வாதப் பிரதிவாதங்களும் சண்டையும் சச்சரவும் நமக்கு வேண்டா; ஒருவரோடொருவர் போட்டி போடுவதும் வேண்டா. அவரவர் அவரவருடைய ஷேமத்தை பற்றியோ விசாரம் செய்யட்டும். ஸ்ரீ ஹரி நம்மைக் காப்பார்.
யோகமும் யாகமும் தவமும் ஞானமும் ஸ்ரீ ஹரியை அடைவதற்குண்டான வழிகள். இவையனைத்தும் ஒருவரிடமும் இருந்தாலும், இதயத்தில் இறைவன் இல்லாவிட்டால் அவருடைய பக்தியும் வீண்; வாழ்க்கையும் வீண்.
"யாராவது உனக்கு அபகாரம் (கெடுதல்) செய்தாலும், அவர்களுக்குப் பிரதிகாரம் செய்ய வேண்டா; உபகாரமே செய்ய வேண்டும்." இதுதான் பாபாவின் உபதேச சாரம்.
No comments:
Post a Comment