valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 29 November 2012

ஷிர்டி சாயி சத்சரிதம்

அடுத்த ஆண்டு விளைச்சல் குறைந்துபோனால் பற்றாக்குறையைச்  சரிக் கட்ட உதவுமென்ற நோக்கத்தில், விவசாயிகள் நடப்பு ஆண்டின் அறுவடையைப் பெருமளவில் சேமித்து வைக்கிறார்கள்.

அவ்வாறே பாபா ஒரு மூட்டை கோதுமையைக் கொள்முதலாக எப்பொழுதும் வைத்திருந்தார். மாவு அரைப்பதற்கு ஓர் எந்திரமும் சலிப்பதற்கு ஒரு முறமும் ஜல்லடையும் மசூதியில் இருந்தன. வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய பொருள்கள் குறைவில்லாமல் இருந்தன.

முற்றத்தில் ஓர் அழகான துளசி மாடமும் இருந்தது. அவ்விடத்திலேயே அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய மரத்தாலான ஒரு தேரும்  இருந்தது.

பூர்வஜன்மங்களில் செய்த புண்ணியச் செயல்களின்  பயனாகவே நாம் ஓர் அவதார புருஷரை சந்தித்திருக்கிறோம். சாகும்வரை இழந்துவிடாதவாறு, உங்களுடைய மனமென்னும் பெட்டகத்தில் அவரை வைத்து நன்கு பூட்டி விடுங்கள்.

பூர்வ ஜன்மங்களில் சம்பாதித்த பாக்கியமே அவருடைய பொன்னடிகளுக்கு நம்மை இழுத்திருக்கிறது.  இதுவே நமக்கு மனதில் சாந்தியையும் உலகியல் தொல்லைகளில் இருந்து விடுதலையும் அளிக்கிறது.

வருங்காலத்தில் எவ்வளவு செல்வச் செழிப்பும் சந்தோஷமும் வந்தாலும், ஸ்ரீ சமர்த்த  சாயியின் புனித சங்கத்தால் தற்காலத்தில் எனக்கு அருளப்படும் சந்தோஷத்திற்கு எதவுமே இணையாகாது.

தன்னிலேயே மூழ்கி தன்னிலேயே மகிழும் சாயியின் அற்புதமான செயல்பாடுகளை நான் எவ்விதம் முழுமையாக வர்ணிப்பேன்? எவரெவர் அவருடைய பாதங்களிலேயே  மூழ்கி மனதுடன் இருக்கின்றனரோ, அவரவர் சாயியால் விசுவாசம் நிலைபெறும்படி செய்யப் படுகின்றனர்.

தண்டமும் மான் தோலும் ஏந்திய தவசிகள், ஹரித்துவாரம் போன்ற புனிதத் தலங்களில்  வசிப்பவர்கள், சந்நியாசிகள், சாமியார்கள், துறவிகள், உதாசீகள், இம்மாதிரியாகப் பலவகையான சாதுக்கள் பாபாவிடம் வந்தனர்.

பாபா அவர்களிடமெல்லாம் சிரித்துப் பேசி நன்றாகப் பழகினார் 'அல்லாமாலிக்' அவருடைய உதடுகளில் அகண்டமாகத் தவழ்ந்தது, வாதமும் விதண்டையும் அவருக்குப் பிடிக்காது. அவருடைய தண்டம் (சட்கா ) கை வீச்சுக்குள்ளேயே எப்பொழுதும் இருந்தது.

தவத்தை மேற்கொண்ட அவர், சாந்தமும் தாந்தமும் நிறைந்தவராக இருந்தார். அவருடைய பேச்சில் பூரணமான வேதாந்தமும் பொழிந்தது. கடைசி வரை பாபா வினுடைய உண்மையான பண்புகளை எவராலும் எடை போட முடியவில்லை

அரசராயினும் சரி, ஆண்டியாயினும் சரி, எல்லாரும் அவரால் எல்லா விதங்களிலும் ஒரே மாதிரியாக நடத்தப் பட்டனர். இலக்குமியின் புத்திரனாக இருப்பினும் சரி, ஓட்டாண்டியாக இருப்பினும் சரி, அவருடைய அளவுகோல் ஒன்றே!


No comments:

Post a Comment